சட்டமன்றத்தில் ஏதோ மியூசிக் செயர் விளையாட்டு போல சுற்றி சுற்றி ஓடிக்கொண்டிருந்த மேகாதது / நீர்ப்பங்கீடு விவாதங்களைப் பார்த்தபோது தோன்றியது:
1) மேகதாது விவகாரம் பற்றிப் பேசிய ஆதவ் அர்ஜுனா விரிவாக கடந்த சில ஆண்டுகளில் திமுகவின் சட்டப் போராட்டங்களையும் அவர்களை அடுத்து தவெக ஆட்சியில் செய்ய நினைக்கிற ஒரு குறிப்பிட்ட மாற்றத்தையும் தெளிவாக விளக்க்கினார். யார் அதைக் குறித்து என்ன சொன்னாலும் உடனே எழுந்து ஏற்கனவே சொன்னதையே மேலும் விளக்க முற்பட்டார். அடுத்து யாராவது மேகதாது என்று உச்சரித்தாலே எழுந்து மீண்டும் சொன்னதையே புள்ளிவிபரத்துடன் சொன்னார். எனக்கு அவரைப் பார்த்தபோது ஆறு மாடி பிராத்தல் ஜோக் ஒன்று நினைவுக்கு வந்தது.
2) ஆதவ் அர்ஜுனாவிடம் ஒரு நல்ல விசயம் அவருக்கு எதையும் பெரிதாக மறைத்துப் பேசத் தெரியாது. (அவர்தான் தவெகவின் உண்மையான 'சில்க் ஸ்மிதா'.) கர்நாடகா இப்போது விவசாயிகளின் தேவைக்காக நீரைக் கோரவில்லை, பெங்களூர் மக்களுக்கான குடிநீரைக் கோரி வழக்காடுமன்றம் செல்கிறது. அதனால் அதற்கு ஏற்ப தம் அரசும் நடவடிக்கைகளை எடுக்கும் என்றார். ஏற்கனவே அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் சரியாக வேலை செய்யவில்லை, பாரபட்சமாக நடந்துகொள்வது என்பதைக் காட்டி புதியதொரு நடுவர் மன்றத்தை அமைக்கக் கோருவதாகவும், இதன் மூலம் மேகதாது அணை கட்டுவதை சிறிது காலத்துக்குத் தள்ளிப் போட முடியும் என்றார். அதாவது இவர்களுடைய அரசின் உத்தேசம் பிரச்சினையை சரிசெய்வதில்லை, இப்படியே வாய்தா கேட்டு இழுத்தடிப்பதுதான். கர்நாடகா தண்ணீர் தராவிட்டால் அறிக்கை விடுவது, மேலும் முறையிட்டு இழுத்தடிப்பது என்று செய்வார்கள் எனத் தோன்றுகிறது. இதனால் மக்கள்தாம் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள்.
3) எடப்பாடியாருக்கு ஆதவ் அர்ஜுனாவின் இந்த திமுக புகழ்பாடுதல் பிடிக்கவில்லை. அவர் எழுந்து ஏதோ விதி 110 என்று ஏதோ சொல்லி இந்த திமுக திருத்தத்தை தாம் எதிர்ப்பதாகத் தெரிவித்தார். இதெல்லாம் ஒரு மேம்போக்கான விளையாட்டுதான். கேட்டிருப்பவர்களுக்கு இது மாமன்றம் அல்ல இது ஒரு 'மாமா மன்றம்' என உணர வைக்கிற விசயங்கள். தண்ணீர் எங்களுக்கு உயிர்ப்பிரச்சினை என்றெல்லாம் கதைவிடுவது, வழக்குப் போடுவது என்று ஆளாளுக்கு ஏதோ "காப்காவின்" விசாரணை நாவலைப் போல மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
4) தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் தண்ணீர்ப் பிரச்சினை உள்ளது. நான் எட்டாண்டுகளுக்கு மேலாக பெங்களூரில் வசித்ததால் எனக்கு அவர்களுடைய நெருக்கடி நன்றாகப் புரிகிறது. கர்நாடக விவசாயிகள் சிலரிடம் பேசி வருவதால் வறட்சியால் அவர்கள் படும் பாடும் புரிகிறது. தமிழ்நாட்டில் உள்ள சிக்கலை ஏற்கனவே அறிந்து வைத்திருக்கிறேன். இது ஒரு நதிநீர் பங்கீடு பிரச்சினை அல்ல. மழை நீரை சேகரிப்பதில் அரசுகளுக்கு நீண்ட காலமாக ஆர்வம் இல்லை - அதுதான் பிரச்சினையின் மையம்.
நகரமயமாக்கலில் மட்டுமே ஆட்சியாளர்கள் தீவிரம் காட்டுகிறார்கள். ஏனென்றால் அதில்தான் அவர்கள் வளர்ச்சி, புள்ளிவிபரம் எனக் காட்டி ஓட்டு வாங்க முடியும் என நினைக்கிறார்கள். தொழிலதிபர்களிடம் கட்சி நிதியும் சொந்த நிதியும் வாங்க முடியும். அமைச்சர்களில் பலரும் பெரும் தொழிலதிபர்கள். விவசாயிகள் அல்லர். முந்தைய அரசுகள் - அதாவது அந்த காலத்து மன்னர்கள் - நீர் மேலாண்மையை இன்னும் திவிரமாக முன்னெடுத்தார்கள். அவர்களுடைய பொருளாதார ஆதாரமே வேளாண்மையும் வணிகர்களிடம் இருந்து பெறும் வரியுமே. ஆகையால் அன்று அவர்கள் நீர்நிலைகளைப் பராமரித்தைப் போல இன்று யாரும் செய்ய மாட்டார்கள். இன்று இது அதன் அடியாழத்தில் ஒரு நதிநீர்ப் பங்கீடு பிரச்சினை அல்ல. நதியில் நீர் வரத்து குறைந்து கொண்டு போக, மழை பொய்த்துக்கொண்டே இருக்க, நீரைச் சேகரித்து வைக்கும் கட்டமைப்புகளும் மறைந்து கொண்டிருக்கின்றன. இது ஒரு பாரபட்சமான பொருளாதார அணுகுமுறைப் பிரச்சினை. காந்தி 80 ஆண்டுகளுக்கு முன் சொன்னதுதான் இன்று இத்தகைய வடிவம் எடுத்திருக்கிறது: வளர்ச்சியை ஒற்றைப்பட்டையாக நாம் அணுகினால் அதனால் மக்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையான கட்டமைப்புகள் சிதைந்து போகும்.
மேலும், அதிமுகவினரும் பாமகவினரும் கண்ணீர் ஒழுகப் பேசுவதைப் போல இது விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை மட்டும் அல்ல. இது நகரமயமாக்கலுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான போராட்டம். சமச்சீரான வளர்ச்சியின்மைதான் இங்கு வில்லன். எல்லா வேலைகளையும் நகரத்தை நோக்கி இழுக்க நினைப்பதும், ரியல் எஸ்டேட்டில் கறுப்புப்பணத்தை முதலீடு செய்ய வைப்பதுமே பிரச்சினை. அதனாலே இன்று விவசாயம் என்பதைத் தாண்டி மக்களின் பயன்பாட்டுக்காக அணைகட்டி நீரை பெங்களூருக்கு அனுப்ப கர்நாடக அரசு நினைக்கிறது. தமிழ்நாட்டிலும் நிலத்தடி நீர் காலியாக ஆக இது ஒரு பொதுப்பிரச்சினை ஆகும். இதை நகரம் / சமச்சீரற்றவளர்ச்சி vs பொதுமக்கள் எனப் பார்பதே சரி.
நமது பொருளாதாரப் பார்வை காந்தியம் சார்ந்ததாக மாறாமல் தண்ணீர்ப் பிரச்சினை வெறுமனே அரசியலாகப்பட்டு, கார்ப்பரேட் பொருளாதாரம் சார்ந்ததாக மட்டுமே இருக்கையில் அது மக்களை ஏமாற்றும் உத்தியாகவே முடியும். அதை ஆதவ் அர்ஜுனாவும் - நாங்க ஏமாற்றத்தான் போகிறோம் என்று - ஒப்புக் கொண்டது நல்லது.
கருத்துகள்