
ஆ. ராசா ஊடகச் சந்திப்பில் விஜய்யைக் குறித்துப் பேசுவதைக் கேட்டேன். அதில் விஜய் மீது அவர் வைக்கும் ஒரு குற்றச்சாட்டு அபாண்டமானது - ஏன் பிரதமரிடம் மாநில நலனை வலியுறுத்தி விஜய் பேசவில்லை, ஏன் பதுங்குகிறார் என ஆ. ராசா கேட்கிறார். யோசித்துப் பாருங்கள் ஆ. ராசா, இதெல்லாம் சாத்தியமா?
முதலில், ஒன்றுமே இல்லாத இடத்தில் இருந்து எந்திரத்தை டியூன் செய்து வைத்து அவரை வெல்ல வைத்து முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்திருக்கிறார்கள். அவர்களை விஜய்யால் பகைக்க முடியுமா?
அடுத்து, அவர் மின்னனு வாக்கு எந்திரத்தின் 'உதவியை' இடைத்தேர்தலிலும் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் நம்பியிருக்கிறார். அவரால் பாஜகவை பகைக்க முடியுமா?
அடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்களில் ஒரு கும்பல் கூட்டணிக்குள் வந்ததும், வேறு சில எம்.எல்.ஏக்கள் பதவியைத் துறந்து தவெகவில் சேர்ந்ததும் பாஜகவின் கைக்குள் தவெகவின் குடுமி போய்விட்டது. மயிரிழையில் ஆட்சி தொங்குகிறது. அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவை பாஜக தலைமை எதிர்த்தால் விஜய் முழுக்க முன்னாள் திமுக கூட்டணிக் கட்சியினரை நம்பியிருக்க வேண்டியிருக்கும். அவர்கள் விலகினால் ஆட்சி கவிழும்.
அடுத்து, கரூர் வழக்கை சி.பி.ஐ விசாரித்தால் விஜய்யின் கதி என்னவாகும்?
அதிமுக, திமுகவைக் கூட பாஜக அமலாக்கத்துறை, சிபிஐ என்று பயமுறுத்தியிருக்கலாம். ஆனால் விஜய்யின் வெற்றியே பாஜகவால் உருவாக்கப்பட்டது, அவர் தொடர்ந்து அவர்களுடைய உதவியை நம்பியிருக்கிறார். திமுகவையும் அதிமுகவையும் போல அவர் முழுமையாகத் தன் ஆதரவாளர்களை மக்களை நம்பி ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர்.
இது போதாதென்று பாஜக ஒரு பக்கம் ஊடகங்களை முடுக்கி விட்டும் இன்னொரு பக்கம் அண்ணாமலையை ஒரு புது கட்சி ஆரம்பிக்க வைத்தும் விஜய்யின் ஆட்சியை அடுத்து அடித்தாடப் போகிறது. அவர் இதைக் குறித்த நடுக்கத்தில் இருக்கிறார். அவர் அல்லுசில்லு என்று சாடியது அவர்களையே.
கடைசியாக, அவருக்கு அசலான எதிர்ப்பரசியலில் நம்பிக்கை இல்லை. சொல்லப் போனால் எந்த அரசியலும் அவருக்கு நம்பிக்கையில்லை. அவரது பேச்சைக் கேட்கிற யாருக்கும் இது புரியும் - தன் மீதுள்ள நம்பிக்கையில் மக்கள் வாக்களித்ததாகச் சொல்லுகிறாரே தவிர தன்னுடைய இதுவரையிலான செயல்பாடுகளை நம்பியோ தன் அரசியலுக்காகவோ வாக்களித்ததாக அவர் நம்பவில்லை.
தவெக ஒரு அரசியல் கட்சி அல்ல. அது ஒரு கல்ட் அமைப்பு. ஜக்கியின் ஈஷா மையத்தை போன்ற ஒன்று. ஜக்கி வாசுதேவ் முதல்வர் ஆனால் என்னவெல்லாம் பண்ணுவாரோ அதுவே விஜய்யாலும் முடியும்.
ஒரு சிறு அணிலால் ஒரு குட்டிக் கல்லைத்தான் தூக்க முடியும். அதன் முதுகில் பெரிய மலையைத் தூக்கி வைக்கக் கூடாது. ஆ.ராசா அவர்களே நீங்கள் செய்வது ஒரு சாடிஸச் செயல். அவர் எங்குமே தன்னால் இயலும் என்று கோராததையெல்லாம் அவரைச் செய்யக் கேட்கிறீர்கள். அவர் சில வசனங்களைப் பேசி தன் ரசிகர்களைக் கவர்ந்து வாக்கு எந்திர உதவியுடன் ஆட்சிக்கு வந்தார். அதற்காக அவரிடம் அநியாயமான எதிர்பார்ப்புகளை வைக்கக் கூடாது. அவர் தான் தேர்தல் பரப்புரையில் செய்த பணிகளை இப்போதும் செவ்வனே செய்கிறார். எதைப் பார்த்து வாக்களித்தார்களோ அதைச் செய்கிறார். அதில் என்ன தப்பு? எனக்கு சத்தியமா புரியல!
கருத்துகள்