அத்தியாயம் 1 தத்துவவாதிகளின் மனச்சாய்வுகள்பிரிவு - 1
இங்கு நீட்சே “உண்மையை நோக்கி விழைவை” அடையாளம் காணத் தொடங்கியிருக்கிறோம், இது ஒரு முக்கியமான துவக்கம் என்கிறார். இதை அவர் சாராம்சமான உண்மையொன்றை நம்மைச் சுற்றிய விசயங்களிலும் (தோற்றப்பாடுகள்) நம் அனுபவங்களிலும் தேடுவதில் இருந்து வேறுபட்டது என்கிறார். நீங்கள் ஒரு அழகிய பெண்ணின் கன்னத்தைத் தொடுகிறீர்கள் (அவளுக்கு உங்களைப் பிடிக்காவிடில் உங்கள் கன்னத்தில் அவள் அறைகிறாள்.). அங்கு ‘தொடும்’ அனுபவமும் உங்கள் இருத்தலுமே உங்களைச் செலுத்துகிறது. அது கன்னம் என்பதோ, அதைத் தொடுவதே நல்லது என்பதல்ல. எந்தப் பெண்ணும் தன் கழுத்தில் அத்தகைய வழிகாட்டும் குறிப்புகளை தொங்கப்போட்டுக் கொண்டு வருவதில்லை. ஆனாலும் அக்கன்னம் உங்களை ஈர்க்கிறது. அந்த ஈர்ப்பு வெறுமனே ‘காமம்’ அல்ல. காமம் என்றால் உடலின்பத்துக்கும், இனப்பெருக்கத்துக்குமான விழைவு என்று அதற்கு ஒரு உத்தேசத்தை டார்வினும் பிற உளவியலாளர்களும் கொடுத்திருக்கிறார்கள் (teleological reason). ஆனால் நமக்குத் தெரியும் அதையும் மீறிய ஒரு பெரும் அகவிழைவே நம்மைச் செலுத்துகிறது என்று. இதையே நீட்சே will என்கிறார். அது கன்னத்தை நோக்கிய உதடுகளிலோ குத்தும் பையை நோக்கிய முஷ்டிகளிலோ தன்னைச் செலுத்துக் கொள்கிறது. நம் உடலே அங்கு விழைவாகிறது. நம் உடலுக்கு இன்பத்தையும் கடந்து வேறெதுவோ தேவையுள்ளது. ஏனென்றால் பல சமயங்களில் நாம் துன்பத்தையும்தான் நாடுகிறோம் (பலூனைப் பார்த்தால் அதை உடைக்கலாமா என்று தோன்றுகிறது; வேகமாய் விரையும் ரயிலின் கதவைத் திறந்து சில வினாடிகள் தொங்கினால் என்ன என்று ஆசை வருகிறது; ஜிம்மில் பல நாட்களாய் உடலை வலுத்திப் பெருக்கிக் கொண்டு அதனால் எந்த பயனும் இல்லாத வாழ்க்கையை வாழ்கிறோம்.) ஆகையால் இந்தப் பிரிவில் நீட்சே கேட்கிறார்: நாம் ஏன் உண்மையை நாடுகிறோம், ஏன் உண்மையற்றதை நாடவில்லை? என் நிச்சயமின்மையை நாடவில்லை, ஏன் அறியாமையை நாடவில்லை?
நாம் ஒன்றை அறிய விழைகையில் நாம் நம் அறிதலின் இலக்காக புறமே உள்ள ஒன்றை வைக்கிறோம். ஒரு மலரைக் கையில் எடுத்து இது என்ன என்று கேட்கிறோம். இது இப்படியான அணுக்களால், பாகங்களால் உருவானது, இயற்கையில் இது இப்படியான உத்தேசம் கொண்டது என அறிவியல் விளக்குகிறது. நீட்சே நாம் இங்கு விசாரணையைத் தவறாக நடத்துகிறோம் என்கிறார். உண்மையில் நாம் விசாரிக்க வேண்டிய புதிர் நம்மில் இருந்து தொடர்பற்ற ஒரு புறவுலக விசயம் அல்ல. நாம் நிஜத்தில் தீர்க்க வேண்டிய புதிர் நாம்தான். ஈடிபஸ் தொன்மத்தில் ஸ்பின்ஸ் என்கிற ஒரு ராட்சஸ விலங்கு வருகிறது. அதற்கு பெண்ணின் முகமும், சிங்கத்தின் தேகமும், பெரிய சிறகுகளும் உண்டு. கிரேக்க தெய்வங்கள் அதை தீப்ஸுல் உள்ள மக்களைத் துன்புறுத்த அனுப்புகிறது. அது வழிபோக்கர்களிடம் புதிரிடும். பதில் சொல்லாதவர்களை சாப்பிட்டு விடும். ஈடிபஸ் அதனிடம் செல்கிறான். புதிருக்கு விடையளித்து அதை வீழ்த்தி மக்களைக் காப்பாற்றுகிறான். மக்கள் அவனை தீப்ஸின் மன்னன் ஆக்குகிறது. ஆனால் இந்த ஈடிபஸுக்கு தன் வாழ்வில் உள்ள அடிப்படையான புதிர் தெரியாது (அவன் தன் தகப்பனைக் கொன்று அம்மாவை மணந்து சாபத்தை நிறைவேற்றி இறுதியில் துன்புற்று இறக்கப் போகிறான்). ஒருவன் ஒரு புதிரை விடுவிக்கும்போதும் தன் வாழ்வே ஒரு புதிர் தான் எனப் புரியாமல் இருப்பதையே நீட்சே தத்துவத்தின் நகைமுரண் என்கிறார். ஒருவர் தத்துவ விசாரணைக்குள் செல்லும்போது தன் இருத்தல் அங்கு எப்படி உள்ளது, தான் என்னைத் தானாக இவ்வுலகில் காலத்தில் இருக்கிறேன், தான் நம்பும் கருத்தாக்கங்களுக்கு தனது இருத்தலுடன் முரண் உள்ளதா எனும் கேள்வியைக் கேட்க வேண்டும். இங்கு “ஈடிபஸ் யார், ஸ்பின்ஸ் யார்?” என்று கேட்கும் நீட்சே ஈடிபஸே ஒரு ஸ்பின்ஸ்தான் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.
கருத்துகள்