முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீட்சே - “நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்” குறிப்புகள் (2)

                                                Beyond Good and Evil by Friedrich Nietzsche | Goodreads 

அத்தியாயம் 1
தத்துவவாதிகளின் மனச்சாய்வுகள்
பிரிவு - 1


இங்கு நீட்சே “உண்மையை நோக்கி விழைவை” அடையாளம் காணத் தொடங்கியிருக்கிறோம், இது ஒரு முக்கியமான துவக்கம் என்கிறார். இதை அவர் சாராம்சமான உண்மையொன்றை நம்மைச் சுற்றிய விசயங்களிலும் (தோற்றப்பாடுகள்) நம் அனுபவங்களிலும் தேடுவதில் இருந்து வேறுபட்டது என்கிறார். நீங்கள் ஒரு அழகிய பெண்ணின் கன்னத்தைத் தொடுகிறீர்கள் (அவளுக்கு உங்களைப் பிடிக்காவிடில் உங்கள் கன்னத்தில் அவள் அறைகிறாள்.). அங்கு ‘தொடும்’ அனுபவமும் உங்கள் இருத்தலுமே உங்களைச் செலுத்துகிறது. அது கன்னம் என்பதோ, அதைத் தொடுவதே நல்லது என்பதல்ல. எந்தப் பெண்ணும் தன் கழுத்தில் அத்தகைய வழிகாட்டும் குறிப்புகளை தொங்கப்போட்டுக் கொண்டு வருவதில்லை. ஆனாலும் அக்கன்னம் உங்களை ஈர்க்கிறது. அந்த ஈர்ப்பு வெறுமனே ‘காமம்’ அல்ல. காமம் என்றால் உடலின்பத்துக்கும், இனப்பெருக்கத்துக்குமான விழைவு என்று அதற்கு ஒரு உத்தேசத்தை டார்வினும் பிற உளவியலாளர்களும் கொடுத்திருக்கிறார்கள் (teleological reason). ஆனால் நமக்குத் தெரியும் அதையும் மீறிய ஒரு பெரும் அகவிழைவே நம்மைச் செலுத்துகிறது என்று. இதையே நீட்சே will என்கிறார். அது கன்னத்தை நோக்கிய உதடுகளிலோ குத்தும் பையை நோக்கிய முஷ்டிகளிலோ தன்னைச் செலுத்துக் கொள்கிறது. நம் உடலே அங்கு விழைவாகிறது. நம் உடலுக்கு இன்பத்தையும் கடந்து வேறெதுவோ தேவையுள்ளது. ஏனென்றால் பல சமயங்களில் நாம் துன்பத்தையும்தான் நாடுகிறோம் (பலூனைப் பார்த்தால் அதை உடைக்கலாமா என்று தோன்றுகிறது; வேகமாய் விரையும் ரயிலின் கதவைத் திறந்து சில வினாடிகள் தொங்கினால் என்ன என்று ஆசை வருகிறது; ஜிம்மில் பல நாட்களாய் உடலை வலுத்திப் பெருக்கிக் கொண்டு அதனால் எந்த பயனும் இல்லாத வாழ்க்கையை வாழ்கிறோம்.) ஆகையால் இந்தப் பிரிவில் நீட்சே கேட்கிறார்: நாம் ஏன் உண்மையை நாடுகிறோம், ஏன் உண்மையற்றதை நாடவில்லை? என் நிச்சயமின்மையை நாடவில்லை, ஏன் அறியாமையை நாடவில்லை?
நாம் ஒன்றை அறிய விழைகையில் நாம் நம் அறிதலின் இலக்காக புறமே உள்ள ஒன்றை வைக்கிறோம். ஒரு மலரைக் கையில் எடுத்து இது என்ன என்று கேட்கிறோம். இது இப்படியான அணுக்களால், பாகங்களால் உருவானது, இயற்கையில் இது இப்படியான உத்தேசம் கொண்டது என அறிவியல் விளக்குகிறது. நீட்சே நாம் இங்கு விசாரணையைத் தவறாக நடத்துகிறோம் என்கிறார். உண்மையில் நாம் விசாரிக்க வேண்டிய புதிர் நம்மில் இருந்து தொடர்பற்ற ஒரு புறவுலக விசயம் அல்ல. நாம் நிஜத்தில் தீர்க்க வேண்டிய புதிர் நாம்தான். ஈடிபஸ் தொன்மத்தில் ஸ்பின்ஸ் என்கிற ஒரு ராட்சஸ விலங்கு வருகிறது. அதற்கு பெண்ணின் முகமும், சிங்கத்தின் தேகமும், பெரிய சிறகுகளும் உண்டு. கிரேக்க தெய்வங்கள் அதை தீப்ஸுல் உள்ள மக்களைத் துன்புறுத்த அனுப்புகிறது. அது வழிபோக்கர்களிடம் புதிரிடும். பதில் சொல்லாதவர்களை சாப்பிட்டு விடும். ஈடிபஸ் அதனிடம் செல்கிறான். புதிருக்கு விடையளித்து அதை வீழ்த்தி மக்களைக் காப்பாற்றுகிறான். மக்கள் அவனை தீப்ஸின் மன்னன் ஆக்குகிறது. ஆனால் இந்த ஈடிபஸுக்கு தன் வாழ்வில் உள்ள அடிப்படையான புதிர் தெரியாது (அவன் தன் தகப்பனைக் கொன்று அம்மாவை மணந்து சாபத்தை நிறைவேற்றி இறுதியில் துன்புற்று இறக்கப் போகிறான்). ஒருவன் ஒரு புதிரை விடுவிக்கும்போதும் தன் வாழ்வே ஒரு புதிர் தான் எனப் புரியாமல் இருப்பதையே நீட்சே தத்துவத்தின் நகைமுரண் என்கிறார். ஒருவர் தத்துவ விசாரணைக்குள் செல்லும்போது தன் இருத்தல் அங்கு எப்படி உள்ளது, தான் என்னைத் தானாக இவ்வுலகில் காலத்தில் இருக்கிறேன், தான் நம்பும் கருத்தாக்கங்களுக்கு தனது இருத்தலுடன் முரண் உள்ளதா எனும் கேள்வியைக் கேட்க வேண்டும். இங்கு “ஈடிபஸ் யார், ஸ்பின்ஸ் யார்?” என்று கேட்கும் நீட்சே ஈடிபஸே ஒரு ஸ்பின்ஸ்தான் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...