செய்தி: //தமிழகம் முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம்வரை அமைச்சர்கள் லஞ்சம் பெறுவதாக தவெக பெண் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக விழுப்புரத்தை சேர்ந்த தவெக வழக்கறிஞரணி நிர்வாகியான எம்.ஞானசவுந்தரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு கடந்த ஜூன் 5-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.//
இதை சுமார் 120 கோடி மதிப்பிலான ஊழல் என்கிறார்கள். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. தவெக மாவட்டச் செயலாளர்களைக் கொண்டு எல்லா மாவட்டங்களிலும் பட்டியலில் உள்ள வழக்கறிஞர்களிடம் பேசி வாங்கியிருக்கிறார்கள். ஒரு கட்சியின் ம.செக்கள் தலைமைக்கு - அமைச்சர்களுக்கு - தெரியாமல் இதைச் செய்ய முடியாது என்பது பொது அறிவு. இம்மாதிரி ஊழல்கள் ஒவ்வொரு துறைக்கும் மாதாமாதம் நடந்தால் வருடத்திற்கு எவ்வளவு வரும்?
நான் என்றுமே தவெக ஒரு தூய ஆட்சியை நடத்துகிறது என நம்பியதில்லை என்பதால் எனக்கு இது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. இது இயல்பு. ஊழலுக்குத் தீர்வு புதிய கட்சியல்ல. அது வேறொரு விவாதம். இங்கு கவனிக்க வேண்டியது இம்மாதிரி குற்றங்களை விமர்சித்துப் போராட வேண்டியது திமுகவும் அதிமுகவும்தான், ஆனால் களத்தில் நின்று ஆடுவது அவர்கள் அல்லர், பாஜகதான் என்பதே.
ஒரு படத்தில் ஒரு சின்னப் பையனை அனுப்பி கவனத்தைத் திருப்பி வடிவேலுவிடம் சிறுநீரகத்தைத் திருடுவார்களே அந்த உத்தியைத்தான் தவெக திமுகவிடம் செய்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக அற்ப பிரச்சினைகளுக்குக் கைது, பல்வேறு ஊழல் புகார்கள், முன்னாள் அமைச்சர்களை இந்நாள் அமைச்சர்களை வைத்து இழிவுபடுத்துவது, திமுக தலைவரை சட்டமன்றத்திலேயே விஜய் இழிவுபடுத்துவது என ஒரு பக்கமும் அதிமுகவின் எம்.எல்.ஏக்களை பதவி விலக வைத்து அபகரிப்பது என அவர்களை இன்னொரு பக்கமும் பரபரப்பாகவே வைத்திருக்கிறார்கள். பாஜகதான் நிறைய அவகாசத்துடன் ஜாலியாக இருக்கிறார்கள் - அவர்கள் மீது விஜய்யால் கை வைக்க முடியாது. ஆட்சியைக் கலைப்பார்கள் அல்லது கைது பண்ணி உள்ளே தள்ளுவார்கள்.
தமது நிர்வாக சீர்கேடுகளை, குழப்படிகளை, ஊழல்களை திமுக பேசக் கூடாது, அவர்களை எதையாவது செய்து பதிலடி கொடுப்பதிலும் பிணை வாங்குவதிலும் அலைய விட வேண்டும் என்பதே தவெக அமைச்சர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் விஜய்-லாட்டரி கும்பல் தந்துள்ள இடுபணி. அதற்காக அடுத்தடுத்து ஜோக்கர்களைக் களமிறக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தைரியமிருந்தா வாடா என தெருவில் நின்று சவடால் விட்டுக்கொண்டே இருப்பார்கள். தெருவில் இறங்கினால் ஓடிவிட்டு அதை ஒரு செய்தியாக்கி சிறுநீரகத்தை உருவுவார்கள். முந்தைய ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டு வழக்கைச் சந்தித்து வருவோர், கட்சி மாறி தவெக வந்தவர்களை வைத்து திமுக மீது தனியார் பள்ளிகளிடம் இருந்து பணம் பெற்றதாக குற்றச்சாட்டை வைக்கும்படி ஒரு தவெக அமைச்சர் கேட்டார் என ஜூனியர் விகடனில் செய்தி வந்ததாக ஒரு காணொளியில் கண்டேன். இந்தக் குற்றச்சாட்டு உண்மையா என்பதை விட இதன் உத்தேசமான தம் மீதான ஊழல் புகார்களை திமுக பேசக் கூடாது என்பதே சுவாரஸ்யமானது. ஒரு வழக்கை எதிர்கொண்டு அது பொய் என நீங்கள் நிரூபிக்கும் முன்பு இவர்கள் பல லட்சங்களைக் கொள்ளையடிப்பார்கள்.
இந்த தெருச்சண்டைகளை விவாதிக்க வேண்டும் என்பதே டிவி அலைவரிசைகளின் எடிட்டர்களுக்கும் அவர்கள் தந்துள்ள இடுபணி.
அதிமுகவையும் தொடர்ந்து செங்கல் செங்கல்லாக உருவாகி பலவீனப்படுத்துவது அடுத்த இடுபணி. இந்த கவனம் திருப்பித் திருடுவது ஜேப்படித் திருடர்களின் பழைய பாணி. மேலும் தம் ஊழலை, நிர்வாகக் கேட்டைப் பற்றிப் பேச எதிர்க்கட்சிக்குத் தகுதியே இல்லையென ஒரு நரேட்டிவ்வை உருவாக்குவார்கள். இந்த விளையாட்டை தம்மையே உருவாக்கி விட்ட பாஜகவிடம் விஜய்யால் ஆட முடியாது. ஆகையால் இனி அவர்கள் தெளிவாக இவர்களை அடிப்பார்கள்.
இப்படித்தான் நடக்கப் போகிறது, தவெக vs பாஜக என களத்தை மாற்றப் போகிறார்கள், தவெக தன்னை தூய திமுகவாக பாவிக்கும், பாஜக தன்னை எதிர்க்கட்சி திமுகவெனக் காட்டும்படி நாடகம் ஆடும், திமுகவோ அதிமுகவோ களத்திலே இல்லாதது போல ஊடகங்கள் சித்தரிக்கும் என நான் இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தபோதே எழுதினேன். அது நடக்கத் தொடங்கிவிட்டது. திமுகவை கட்டம் கட்டி வைக்க இப்படி ஒரு மலிவான ஆட்டத்தை ஆடுவார்கள் என்று மட்டும் கணிக்கவில்லை. ஏனென்றால் யாருமே எதிர்பார்க்காதபடிக்கு திருடர்களைப் போல அரசியல் செய்யும் கட்சி இது. இவர்கள் ஆண்டு முடிக்கும்போது இப்படியெல்லாம் செய்ய முடியுமா என நம்மை மூக்கில் விரல் வைக்கும்படிப் பண்ணுவார்கள்.
கருத்துகள்