செய்தி: இந்தியாவின் முக்கிய மின் உள்கட்டமைப்பு திட்டங்களில் பங்கேற்க நான்கு சீன நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.
என் கருத்து: 2020இல் லடாக்கை சீனப் படையினர் ஆக்கிரமித்ததுடன் இந்திய வீரர்களைத் தாக்கிக் கொன்றார்கள். இதன்பிறகே சீன எதிர்ப்பு இந்தியாவில் குறிப்பாக இணையதளங்களில் வலுத்தது. அப்போது அமேசானில் பொருட்களின் ரெய்வ்யூக்களில் தொடர்ச்சியாக தேசபக்தர்கள் தோன்றி "இது சீனப் பொருள். இதை எதிர்க்க வேண்டும்" என்பார்கள். ஆனால் மோடியின் அரசு சீன எதிர்ப்பை பிடிக்காத மனைவியை பார்க்கும்போதெல்லாம் டார்லிங் எனக் கொஞ்சுகிற கணவரைப் போலத்தான் கையாண்டது. போகப்போக சீன எதிர்ப்பை அது கைவிட்டது. பல சீனப் பொருட்களே நம் சந்தையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் அமெரிக்காவுக்கு கடும் எதிரியாக ஆசிய ராட்சசனாக சீனா உருவாகி வந்ததால் மோடி கொஞ்சம் தயங்கித் தயங்கித்தான் சீனாவைக் கையாண்டார். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் டிரம்பிடம் போய் வணக்கம் வைத்தார், கட்டிப் பிடித்தார், வாய்நிறைய சிரித்தார். பாகிஸ்தான் உடனான யுத்தம் இதற்கு முக்கிய திருப்புமுனை - சீன தளவாடங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் இந்திய ராணுவத்தைத் திணறடித்தது. அப்போர் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கக் கூடிய நிலையில் சீனா வென்றுவிடக் கூடாதே எனும் பயத்தில் டிரம்ப் குறுக்கிட்டு இந்தியாவையும் பாகிஸ்தானையும் போர் நிறுத்தம் பண்ணச் சொன்னதாகப் பத்திரிகைகள் எழுதின. இந்தக் கட்டத்தில் சீனாவும் ரஷ்யாவும் ஒரு பக்கமாக நின்று அமெரிக்காவுக்குச் சமமாகத் தம்மைக் காட்டிக் கொண்டன. அமெரிக்கா ஈரான் மீது தொடுத்த போர் அடுத்த முக்கியத் திருப்புமுனை. இப்போரிலும் சீனாவின் பங்கு பெரிது. அது அமெரிக்காவை ஈரான் கடுமையாக எதிர்க்கவும், தோல்வியின் விளிம்புக்குத் தள்ளவும் உதவியது. இப்போரின் முடிவில் சீனா ஒரு வலுவான ராணுவ தேசமாக அமெரிக்காவை சில அடிகள் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஏனென்றால் சீனாவுக்கு எதிராகப் (ரஷ்யாவுக்கு எதிராகவும்தான்) பேச டிரம்பே தயங்குகிறார். அது போக கனிமவளத்துக்காக அவர் அங்கு சென்று ஒப்பந்தங்களும் போட்டார். ஆக தராசு சீனா, ரஷ்யா பக்கமாய் சரியத் தொடங்கிவிட்டது. ஹிந்து போன்ற நாளிதழ் நடுப்பக்கங்களில் இப்போதே இந்தியாவின் அமெரிக்கச் சார்பு வெளியுறவு தவறானது, ஈரான் போரில் இந்தியா நடந்து கொண்ட விதம் தவறு எனக் கூறும் கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. மோடியும் மாறிவிடத் தீர்மானித்திருக்கிறார். அதற்குச் சான்றுதான் மேற்சொன்ன மின் உள்கட்டமைப்பு திட்டங்களில் சீனா பங்கேற்கும் ஒப்பந்தத்தை இந்தியா போட்டுள்ளது. அதாவது இந்திய உற்பத்திக்கே முதலிடம், ஆத்ம நிர்பண் என நெஞ்சை விரித்துக் கூவி வரும் பாஜகவினர் தடாலடியாக கரணம் அடித்திருக்கிறார்கள்.
இங்கு மற்றொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும்: சீனா பக்கம் இந்த அரசு இதற்கு முன்பே சாய்ந்திருந்தால் 20 ராணுவ வீரர்கள் மட்டுமல்ல பாகிஸ்தானுடனான போரில் இறந்த மக்களின் உயிர்களையும் காப்பாற்றியிருக்கலாம். சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்தி பாகிஸ்தானைக் கட்டுக்குள் வைத்திருந்திருக்கலாம். அது பாகிஸ்தானை அமெரிக்கா பக்கம் சாய்த்திருக்கும். ஒருபக்கம் மட்டுமே இருக்க வேண்டிய நிர்பந்தம் பாகிஸ்தானின் நிலையை பலவீனப்படுத்தி இருக்கும். நடந்து முடிந்த அமெரிக்க-ஈரான் போரில் பாகிஸ்தான் ஒரு இடைத்தரகர் அந்தஸ்தைக் கொண்டு தன் உலக அந்தஸ்தைப் பெருக்கியது. இதை இந்தியா தடுத்திருக்க முடியும். சீனா, ரஷ்யா, ஈரான் நட்பைப் பயன்படுத்தி ஈரான் போரின்போது கச்சா எண்ணெய், பெட்ரோல் விலை உயர்வு இந்தியாவைப் பாதிக்காமல் பார்த்திருக்க முடியும். ஈரான் போருக்கு முன் இஸ்ரேலுடன் இந்தியா பாராட்டிய நல்லுறவும் இப்போது கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. இஸ்ரேலை இப்போது அமெரிக்காவும் கைவிடத் தொடங்கி உள்ளது. இந்தியாவுக்கு இஸ்ரேல் தரும் உளவு மென்பொருட்களைத் தவிர வேறெந்த பலனும் இல்லை என்றாலும் மோடிக்கு ஏதோ தனிப்பட்ட சில உறவுகள் இஸ்ரேல், அமெரிக்காவிடம் உள்ளது என ராகுல் காந்தியும், பிற எதிர்க்கட்சியினரும் சொல்லி வருவதில் சிறிது உண்மை இருக்க வேண்டும். அல்லாவிடில் அவர் இப்படி விழுந்து விழுந்து அமெரிக்காவை ஆதரிக்கவும் இப்போது கால தாமதமாக சீனாவையும் அடிபணியவும் அவசியம் இல்லை. யோசித்துப் பாருங்கள் - இப்போதைய ஒப்பந்தம் நமது உள்கட்டமைத் திட்டங்களில் சீனாவுக்கு இடம் அளிக்கிறது. இது நமது பாதுகாப்புக்குப் பாதகமாகும். இதைக் குறித்து சங்கிளுக்குக் கவலை இல்லையா?
உள்ளூரில் வாக்கு எந்திர மோசடி, வாக்காளர் பட்டியல் திருத்தம், தொகுதி மறுவரைவு என தேர்தல்களை வெல்வதில் காட்டுகிற புத்திசாலித்தனத்தை மோடி வெளியுறவுத் துறை விசயங்களில் காட்டுவதில்லை. ரொம்பவே திக்குமுக்காடுகிறது.
கருத்துகள்