நேற்று மனம் கொஞ்சம் உடைந்து விட்டது. காலை முதல் என் நாவலில் அமர்ந்து சில பகுதிகளைத் திருத்திக் கொண்டிருந்தபோது 30% பக்கங்களை அழிக்க வேண்டும் என ஒரு அனுமானம் தோன்றியது. நிச்சயமில்லைதான். ஆனாலும் அதை நினைத்ததும் மனம் உடைந்துவிட்டது. எவ்வளவு நேரம் செலவழித்து ரசித்து எழுதிய பகுதிகள். ஆனால் வேறு வழியில்லை எனத் தோன்றுகிறது.
சில நாவல்கள் நாம் எழுத எழுதத் தோன்றுகின்றன. அப்போது தேவையானவற்றை வைத்துக் கொண்டு தேவையில்லாதவற்றை நீக்கத் தேவையேற்படும். பல்வேறு பாதைகள் கொண்ட ஒரு வரைபடத்தைக் கற்பனை செய்யுங்கள். எந்தப் பாதையில் சென்று இலக்கை அடையலாம் என்றாலும் சிறந்த பாதையை நாம் பயணித்தே கண்டுபிடிக்க முடியும். அச்சிறந்த பாதை சில நேரங்களில் இலக்குக்கு அப்பால், முழுக்க வேறு ஒரு திசைக்கு நம்மை இட்டுச் செல்லக் கூடும். இப்போது நாம் வந்த வழியை மறந்துவிட்டு இன்னொரு சிறந்த வழியைக் கண்டுபிடிப்போம். சில நேரங்களில் நாவல் எழுதுவதும் அப்படித்தான். பத்து தவறுகளில் இரண்டு சரிகளே ஒரு நல்ல நாவலுக்கான வெளிச்சத்தைத் தரும். அதுவும் அந்த இலக்கு இதற்கு முன் அதிகமாகச் சென்றடையாததாக இருக்கையில்.
நேற்று நள்ளிரவு வரையில் இந்தச் சோகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கையில் இன்னொன்றும் தோன்றியது: ஒரு நாவலை எழுதி முடித்து பல மாதங்கள் ஆகும் வரைக்கும் நான் அதைக் குறித்த ஒரு கனவில்தான் இருக்கிறேன். அதைக் குறித்த வருத்தங்களும் மகிழ்ச்சிகளும் வெறும் கற்பனையே. கற்பனையாக ஒன்றை அடைந்து மகிழ்ந்து, கற்பனையாக அதை இழந்து மனம் உடைந்து ....
இப்படிச் சுழல்கிறது என் உலகம்.
கருத்துகள்