திவா ராஜேந்திரன் என்னுடைய நாவல் வகுப்பில் இருக்கும்போது ஒரு திருமண உறவில் பாலுறவு முரணால் ஏற்படும் சண்டை எப்படிப் பிரிவை நோக்கி இட்டுச் செல்கிறது என்பதே இந்நாவலின் ஒற்றை வரிக் கதை என்றார். நான் அவருடன் அனேகமாக தினமும் கதையமைப்பு பற்றி உரையாடுவேன் என நினைவு. எந்தப் பரிந்துரையைக் கொடுத்தாலும் அதை எடுத்துக் கொண்டு தன்னளவில் யோசித்து சில காட்சிகளை உருவாக்குவார். என்னிடம் சொல்லுவார். எழுதிக் காட்டுவார். குறிப்பாக மனைவி ஏன் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், கணவன் ஏன் போதுமான பாலியல் அறிவின்றி இருக்க வேண்டும் என்றெல்லாம் யோசித்து அதை கதைக்குள் அங்கங்கே பின்கதையாகவோ நினைவுகூரலாகவோ சேர்க்கக் கேட்டேன். நாயகன் தனது இளமையில் எம்மாதிரி அனுபவங்களைப் பெற்றார், அவரது உபமனத்தில் அதனால் எப்படியான சிக்கல்கள் தோன்றியிருக்க முடியும், அதை அவர் எப்படிப் பின்னர் தீர்க்கிறார் எனக் காட்ட வேண்டும் என்பதே என் விருப்பம். நான் அதை திவா மீது திணிக்கவில்லை. அவராகவே முடிவெடுத்து தன் நம்பிக்கையின்படி கதையை வளர்க்க வேண்டும் எனக் கருதினேன். அவர் தினமும் கிட்டத்தட்ட எழுதிவிடுவார். சில மாதங்களில் முடித்து சில திருத்தங்களையும் செய்தார். நல்ல உழைப்பாளி. என் வகுப்பில் மூன்று பேர்கள் முழுமையாக எழுதி முடித்தார்கள் என நினைவு. இருவர் பதிப்பித்தார்கள். குறைந்த காலத்தில் அதெல்லாம் பெரிய சாதனைதான். திவாவிடம் அவர் அடுத்தடுத்த நாவல்களை எழுத வேண்டும் எனச் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் தொடர்ந்து எழுதி மட்டுமே நாவல் கலையை மேம்படுத்த முடியும்.
மற்றொரு மாணவரான மேரியை அண்மையில் திருவண்ணாமலை முகாமில் சந்தித்தேன். அவரும் தான் முடித்த நாவலை ஒரு பதிப்பகத்திடம் கொடுத்திருப்பதாகவும் இவ்வருடம் வெளியாகும் என்றும் சொன்னார். அவரிடமும் வகுப்பு நாட்களில் நிறைய விவாதித்தாக நினைவு. அவரது நாவல் காதல் கதையாகையால் பிரதான பெண் பாத்திரத்தின் வாழ்க்கைச் சவால்கள், தீர்மானங்கள், அவற்றை தர்க்கரீதியாக நியாயப்படுத்துவதைப் பற்றிப் பேசினோம். அவரது கதையே உணர்வுவயப்பட்ட நடையில் இளம் பெண்ணில் இருந்து இருபதுகளை அடையும் பெண்ணொருவரின் திருமண காலத்தின்போதான முதிர்ச்சியைக் காண்பிப்பது என்பதால் அதில் மனப்போராட்டங்களைச் சித்தரிப்பதே சவால் என்று சொன்னேன். திவாவுடையது பண்பாட்டுக் கூறுகள் கொண்ட உளவியல் எதார்த்தம் என்றால் இது அகப்போராட்டத்தை உறவுகளின் மாற்றங்கள் வழியாகச் சொல்லும் உணர்ச்சிகரமான ரொமான்ஸ். மேரிக்கு என் வாழ்த்துக்கள்.
கருத்துகள்