ஒரு எழுத்தாளராக இணையத்தில் நான் ஒரு முக்கியமான பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறேன்: நீங்கள் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் நவீன இலக்கியம் குறித்த நல்ல வலைப்பூக்களைப் படித்திருக்க முடியும். நான் என் முனைவர் பட்ட ஆய்வுக்கு புத்தகங்களையும் இதழ்களையும் படித்ததற்கு இணையாக இந்த வலைப்பூக்களில் வந்த கட்டுரைகளையும் விமர்சனங்களையும்தாம் படித்தேன். ஆனால் அண்மையில் நான் தேடும்போது பல வலைப்பூக்கள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். நீங்களும் இதை முயன்று பாருங்கள்: எதாவது ஒரு செவ்வியல் நாவலை இணையத்தில் தேடுங்கள். முதலில் இணைய புத்தகக் கடைகளின் தொடுவழிகளும் விக்கிபீடியா பக்கங்களும் நாளிதழ் பக்கங்களும் வரும். அதன்பிறகு நாம் பார்ப்பதெல்லாம் மீண்டும் மீண்டும் விற்பனைத் தளங்களையே. சில பக்கங்களிலேயே இந்த தேடல் விளைவுகள் முடிந்து போகின்றன. சில வருடங்களுக்கு முன் வரைக்கும் நூற்றுக்கணக்கான வலைப்பூக்களை நான் படித்திருக்கிறேன். எந்த எழுத்தாளர், புத்தகம் பற்றியும் எத்தனையோ கருத்துக்களும் வாசிப்புகளும் இருக்கும். அவை இன்று மறைந்து விட்டன. எங்கே போயின?
நான் இதைக் குறித்து ஆய்வு செய்தபோது கூகிள் உள்ளிட்ட தேடல் எந்திரங்கள் அதிகமாக பார்வையிடப்படாத இணையதளங்களை யார் பார்வைக்கும் படாதபடி மிகவும் பின்னால் தள்ளிவிடுகிறது என அறிந்து கொண்டேன். நீங்கள் எவ்வளவுதான் தேடினாலும் அந்த தொடுவழிகளைக் கண்டடைய முடியாது. இதை நினைத்தால் அச்சமாக உள்ளது. அற்புதமான நேர்முகங்கள், விமர்சனங்கள், உரையாடல்கள் இனி நம் விரல் சொடுக்கில் வரப் போவதில்லை. இணையம் நிரந்தரமானது என்பது உண்மையல்ல என்பதை அறிய அதிர்ச்சியாக இருந்தது. அதாவது இணையம் கிட்டத்த சமூகவலைதளம் போல மாறிவிட்டது. அதிகப் பார்வைகளைத் தொடர்ந்து பெறாதவை கண்ணுக்குப் படாதபடி மாயாவி ஆக்கப்படுகின்றன. ஒன்றின் மீது மற்றொன்று என்று புதுத் தகவல்கள் அவற்றின் மீது விழுந்து பாலையில் மணற் துகள்கள் கற்பாறைகளை மூடுவதைப் போல மூடி மொழுகி விடுகின்றன. ஆகையால் இனி முக்கியமான எழுத்துக்களை ஒன்று தொடர்ந்து புதுப்பிக்கப்படும் இணையதளத்தில் வைத்திருக்க வேண்டும். அல்லது புத்தகமாக வெளியிட வேண்டும். இணைய தளத்தை நீங்கள் புதுப்பிக்காவிட்டால் எழுத்துக்கள் மறைக்கப்படும் என்பதால் அச்சுநூல்களே நிரந்தரம் எனத் தோன்றுகிறது.
இலக்கியம் மீண்டும் அச்சுக்குத் திரும்பும் காலம் அண்மித்து விட்டது.
கருத்துகள்