முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதை சொல்ல வாழ்கிறேன்: அத்தியாயம் 3



தடக்காற்று கடுமையாய் வீசியதால், ஆற்றுத்துறைமுகத்தில் அம்மாவை படகில் ஏற சம்மதிக்க செய்ய நான் சிரமப்பட வேண்டியிருந்தது. அம்மாவிடம் நியாயமில்லாமலும் அல்ல. நியு ஓர்லியன்சிலிருந்து வரும் நீராவிப் படகுகளின் குறுகிய மாதிரி வடிவமான இந்த படகுகளின் கேசொலின் எந்திரம் ஜுர நடுக்கத்தை படகின் மேலுள்ள எல்லாவற்றின் மேலும் கடத்தி விடக் கூடியவை.
 அங்கிருந்த வரவேற்பறையில் ஊஞ்சற் படுக்கைகள் மாட்டுவதற்கான கொக்கிகள் வெவ்வேறு உயரங்களில் இருந்தன; மேலும், நீள்-மர இருக்கைகளில் இடம் பிடிக்க மக்கள் தங்கள் எல்லா பயண மூட்டைகள், சரக்குப் பொட்டலங்கள், கோழிக்கூடைகள் மட்டுமில்லாமல் உயிருள்ள பன்றிகளையும் வேறு எடுத்தவாறு முட்டி மோதிப் போயினர்.

அங்கு மூச்சுத் திணறடிக்கும் சில சிற்றறைகள் உண்டு; ஒவ்வொன்றும் பயணத்தின் போதும், அவசர கால சேவைகள் வழங்கும், நைந்து நூலாய்ப் போன, இளம் வேசிகளால் அவை ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். அவை இரு ராணுவப் படுக்கைகள் கொண்டவை. எந்த சிற்றறையிலும் இடமில்லாததால், நானும் அம்மாவும் இரு இரும்பு இருக்கைகளை அதிரடியாய் ஆக்கிரமித்தோம்; மேலும் அங்கேயே இரவைக் கழிப்பதற்கு தயாரானோம். முகத்துவாரத்திற்கு மிக அருகே சமுத்திர குணம் கொள்ளும் மெக்டலீனா ஆற்றை கடந்ததும், நாங்கள் பயந்தது போலவே கடுங்காற்று முன்னேற்பாடுகள் அற்ற அந்த கப்பலை திடீரென்று தாக்கியது. துறைமுகத்திலிருந்து நான் கறுப்புப் புகைலிலையாலும், சிப்பம் கட்ட பயன்படுத்தப்படும் மலிவான காகிதத்தாலும் செய்யப்பட்ட மிகவும் விலைகுறைவான சிகரெட்டுகளை நிறைய வாங்கி வைத்திருந்தேன்; ஆகஸ்டில் ஒளி நூலை மறுவாசிப்பு செய்தவாறு, அந்நாட்களில் நான் புகைக்கும் பாணியில், ஒரு சிகரெட்டின் நுனியில் மற்றொன்றை பற்ற வைத்து, புகைக்க ஆரம்பித்தேன். அக்காலத்தில், வில்லியம் பாக்னர் தான் என் காவல் பூதங்களில் மிகவும் விசுவாசமானவர்.

என் அம்மா தன் ஜெபமாலையை அது ஏதோ ஒரு எந்திரக் கலப்பையை இழுப்பதற்கோ அல்லது ஒரு விமானத்தை வானில் பிடித்து வைக்க முடிகிற கம்பி வடத்தை சுற்றியிழுக்கும் எந்திரம் என்பது போல் இறுக்கப் பற்றியிருந்தாள். அவள் தனக்காக எதையும் வேண்டிக் கொண்டதில்லை; அனாதையாகப் போகும் தன் பதினொரு குழந்தைகளுக்கு நீண்ட வாழ்வையும், செல்வ செழிப்பையுமே கேட்டாள். அவளது பிரார்த்தனை போய் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்க வேண்டும்; ஏனெனில் நாங்கள் கால்வாயை அடைந்த போது, மழை மெனமையாகவே பெய்தது. மேலும், கொசுக்களை விரட்டும் அளவிற்கு காற்றும் பலமாய் வீசவில்லை. பிறகு அம்மா தன் ஜெப மாலையை கீழே வைத்து விட்டு, சுற்றிலுள்ள குழப்பமான வாழ்க்கையை மௌனமாக வெகு நேரம் அவதானித்தாள்.

அவள் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தாலும், வாழைப்பழ தோட்டத்தின் தற்காலிக பிரம்மாண்டத்தில் வளர்ந்தாள்; அதிலிருந்து அவள் சாண்டா மார்டாவிலுள்ள கொல்ஜியோ டி லா பிரசண்டசியோன் டி லா சாண்டிஸ்மா விர்ஜினில் செல்வந்த பெண்ணொருத்திக்கான சிறந்த கல்வியைப் பெற்றாள். கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது, தோழிகளுடன் சேர்ந்து சித்திரத் தையல் இட்டாள், கொடை அங்காடியில் கிளாவிகார்டு இசைத்தாள், அத்தை ஒருவள் துணை போக உள்ளூர் கோழை மேட்டுக்குடியினர் நடத்திய பரிசுத்தமிக்க நடனங்களில் கலந்து கொண்டாள். ஆனால் அந்நகர தந்தி இயக்குனரை அவள் பெற்றோர் விருப்பத்திற்கெதிராய் திருமணம் செய்யும் வரை அவளுக்கு காதலன் இருந்த விஷயம் யாருக்கும் தெரியாது. அப்போதிலிருந்து அவளது அப்பட்டமான நற்குணங்கள் நகைச்சுவை உணர்வும், நீள் வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கும் எதிர்பாரா தாக்குதல்களால் முறியடிக்கப்படாத ஆரோக்கியவுமே. ஆனால் அவளது ஆச்சரியமான குணம் பிரமாதமான அம்மனவலிமையை மறைக்கும் அற்புதத் திறமையே. அவள் ஒரு குறைபாடற்ற லியோ. இதன் காரணமாகவே எதிர்பாராத ஊர்களிலிருந்து வந்த தூரத்து உறவினர்கள் வரை அதிகார எல்லை நீண்ட பொன்னாட்சி ஒன்றை நிறுவி, சமையலறையில் இருந்தவாறே, சட்டியில் பீன்ஸ் கொதிக்கையில், குரல் தாழ்த்தி, கண்கூட சிமிட்டாமல் கோள்களின் குடும்பத்தை போல் அவ்வாட்சியை கட்டுப்படுத்த முடிந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.