Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

எதிர்கால வல்லரசின் 50 மில்லியன் பட்டினியாளர்கள்

நான் அந்த அறிக்கையைப் பற்றிப் படித்ததும் திடுக்கிடவில்லை. நீங்களும் மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இந்திய மக்களின் பட்டினி நிலை பற்றிய ஐ.எஃப்.பி.ஐ. எனும் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கை முடிவுகள் நாம் உள்ளூர அறிந்து வைத்திருந்தது தான்:
இந்தியாவின் ஐம்பது மில்லியன் பட்டினியாளர்கள்.
பசிப்பட்டியலில் மத்திய பிரதேச மாநிலம் பஞ்சடைத்த கண்களுடன் ஊடகங்களில் வலம் வரும் எத்தியோப்பியாவை முந்தியுள்ளது. குழந்தை ஊட்டச்சத்துப் பட்டியலில் பஞ்சாப் மாநிலம், கெபோன், ஹொந்தாரஸ், வியட்னாம் போன்ற ஆப்பிரிக்க தேசங்களுக்கு வெகு கீழே உள்ளது மிகக்குறைந்த வறுமை சதவீதம் (6.16%) கொண்டுள்ளதாய் சொல்லப்படும், சிறப்பு செயல்பாட்டு மாநிலமாய் விருதளித்துக் கொண்டாடப்பட்ட பஞ்சாப். ஒரேயடியாய் தலை குனிய வேண்டாம். யு.என்.ஒ.டி.சி.யின் உலக போதை மருந்து அறிக்கைப்படி போதை மருந்துப் போக்குவரத்தில் பஞ்சாப் 'முதலிடத்தில்' உள்ளது. தலித்துகளுக்கு மத உரிமை மறுத்து, தங்கள் மத நூலான குரு கிராந்த் சாகிப்பை தீண்டத்தகாதவர்களிடமிருந்து பாதுகாப்பதிலும் பஞ்சாபியர்கள் பேர் பெற்றவர்கள்தாம்.
பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் பிஞ்சு சிசுக்களின் மரணங்களும், அரைவயிற்றுக் கனல் வயிறுகளும் தமிழ் நாடு, கேரளாவில் அதிகம்.
இங்கு உணவுப் போதாமை பற்றி ஒரு சிறு குறிப்பு.
உணவு ஆற்றலை கலோரி எனும் unit கொண்டு அளக்கிறோம். உதாரணமாய் ஒரு இட்லி 80 கலோரிகள். ஒரு மனிதனுக்கு தினசரி 1200--1800 கலோரிகள் வரை தேவைப்படுகிறது. நம் நாட்டில் ஐம்பது மில்லியன் மக்கள் சராசரியாய் 600 கலோரிகள் மட்டுமே பெறுகின்றனர். எத்தனை இட்லிகள், கணக்கிடுங்கள்!
இந்தியாவின் 12 மாநிலங்கள் மக்களை அரைப்பட்டினியாய் வைத்துள்ளன. முதல் வில்லன் மத்திய பிரதேசம்தான். ஹரியானா, அஸ்ஸாம் பற்றியும் குறிப்பிட வேண்டும். உணவுப்போதாமையைப் பொறுத்தமட்டில் 25 துணை சஹாரா நாடுகளைவிட, தெற்காசியாவை விட கீழே தான் உள்ளோம். இத்தனையும் வல்லரசு நாடாக இந்தியா மல்லுக் கட்டி நிற்கும்போது. ரொம்ப விசனப்பட வேண்டாம். போட்டியில் வங்கதேசத்தைச் சற்று முந்தி விட்டோம். ஏனென்றால் இந்தியாவின் உணவு உற்பத்தி அதிகம்.
பிரதமரின் பொருளாதார அறிவுரைக் குழு உறுப்பினரான ஜி.கே. சத்தா இந்த நிலைக்குக் காரணமாய் இந்தியாவின் அடித்தட்டு மக்களை உதாசீனப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகளைச் சாடியுள்ளார். உண்மை! ஜி.டி.பி. வளர்ச்சி மத்திய, உயர்மத்திய, உயர்தட்டு மக்களின் முகம் மட்டுமே. பஞ்சத்தில் வயிறு வீங்கின குழந்தை மாதிரி இந்தியா வளர்ந்து வளர்ந்து ஒருபக்கம் மட்டும் வீங்கிப் போய் விட்டது. சமீபத்தில் அசுர பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள குஜராத், சட்டீஸ்கர்கு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கீழ்த்தட்டு மக்களின் பட்டினி நிலை சிறந்த உதாரணம்.
நமது அரசாங்கம் தொழிற்பயிற்சி, அடிப்படை, உயர் கல்வி உடைய மத்திய, உயர் மத்திய வர்க்க இளைஞர்களுக்கு உற்பத்தி, சேவை தொழில் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதன் மூலம் வறுமையை ஒழித்துவிடலாம் என்று நம்புகிறது. இதுதான் பிரதமர் ம.மோ. சிங்கின் 'வறுமைப் போர்' திட்டம்.
மேற்கூறிய தகுதிகள் இல்லாத, விவசாய, கூலி வேலை செய்வோரின் மீது அக்கறை அதிகமாகும் போது இந்திய அரசியல்வாதிகள் தொழிலதிபர்களிடம் விவசாய நிலத்தைக் கொடுத்து வாங்கி நாடகம் போட்டு முடித்து ஏ.ஸி அறையில் தூங்கப் போய்விடுவார்கள். குறைந்த பட்ச கூலி நியமனம் செய்து, ஆனால் அதில் பாதி மட்டும் நொடிந்த மக்களுக்குக் கொடுத்து வயிற்றில் அடிப்பார்கள்.
இந்தியாவில் 17 மில்லியன் குடும்பங்கள் சொந்த நிலங்கள் ஏதும் அற்றவை. 800 மில்லியன் கிராமவாசிகளுக்கு 400 மில்லியன் ஏக்கர் விவசாய நிலம் என்ற விகிதாச்சார அவலம் நிலவுகிறது. மிச்ச மக்கள் எங்கே போவார்கள்? அவர்கள் நிலம் எங்கே? நமது இந்திய நகரங்கள் புற்று நோய் போல் அவர்களின் வாழ்வாதாரத்தை வளர்ச்சி என்னும் பெயரில் சுரண்டி விட்டன. சிங்கூரை எடுத்துக் கொள்வோம். கார்த் தொழிற்சாலைக்கு 1000 ஏக்கர் நிலம் எதற்கு? டாட்டாவுக்கு ரியல் எஸ்டேட் கனவுகள் இருந்தனவா? இந்திய விவசாய நிலக்கொள்ளையைப் பொறுத்த மட்டில் இந்தக் கேள்விகள் ஆராயப்பட வேண்டியவை.
இந்தியா நகரங்களை மட்டுமே நோக்கி வளர்கிறது. நகரங்கள் உச்சபட்ச ஆடம்பரங்களுடன் வாழ்வதற்கான மனிதக் கனவின் தூல வடிவம். கலிபோர்னியாவோ, சிங்காரச் சென்னையோ எல்லா பணக்கார நகரங்களும் சளைக்காமல் ஏழைகளை உற்பத்தி செய்கின்றன. ஒருவித கழிவுப் பொருள் போல.
பிளேட்டோ நினைவுக்கு வருகிறார். நகரங்களில் ஏழை--பணக்கார பிளவு நிகழ்வதைத் தவிர்க்க முடியாது என்றார் அவர். ஏனென்றால் நகரம் ஒரு போட்டிக்களம். வரிசையில் பிந்தியவர்கள் சாக்கடை வாசிகளாவது முகம் திருப்பிக் கொண்டே நாம் மறைமுகமாய் அங்கீகரிக்கும் உண்மை. நகரங்களின் வளர்ச்சி மீதே நம் உச்சபட்ச கவனம் இருப்பதால், கைவிடப்பட்ட கிராமவாசிகள் நகரம் நோக்கிக் குவிய இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வு விகிதாச்சாரம் மேலும் வீங்குகிறது.
பிளேட்டோ அடுத்து ஒன்று சொன்னார். இவ்வாறு நகரம் ஏற்றத்தாழ்வின் உச்சத்தை அடைந்து, கர்ப்பிணியின் பத்து மாத வயிறு போல் ஆகும் போது, ஏழைகள் வெகுண்டெழுந்து புரட்சி செய்து, ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்றார். மீண்டும் சக்கரம் அடுத்து ஒரு சுற்று சுற்றி வரும்போது, மற்றொரு புரட்சி காத்திருக்கும்.
இதோடு முழுக்க ஒத்துப் போக முடியவில்லை. ஆனாலும் பங்களூருவில் ஐ.டி. வர்க்கத்தினர் மீது பொது மக்கள் ஏக காண்டில் இருப்பதாய் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் கட்டுரை ஒன்று சொல்கிறது. ஐ.டியினரின் குடி, கும்மாள கலாச்சாரம், அவர்கள் மனை நிலங்களின் விலையை, வீட்டு வாடகையை, விலைவாசியை எகிற விட்டது, குடும்பத்துக்குள்ளே ஒருவர் ஐ.டி.க்காரர் மற்றவர் சாதா குமாஸ்தாவாக இருப்பதனால் ஏற்படும் சமனிலை இழப்பு, சச்சரவு, சூழல் மாசுபடுவது, போக்குவரத்து நெரிசல் என பங்களூருவின் பூர்வகுடிகள் கடுப்பாகி புகார்களை அடுக்குகின்றனர். அங்கு ஐ.டி. கனவான்கள் மீது பரவலான எதிர்ப்பு அலை இவ்வாறு உருவெடுத்துள்ளது. சில மளிகைக்கடை மாமாக்கள் தக்காளி, வெங்காயம்கூட ஐ.டி. மக்கள் என்றால் இரட்டை விலை சொல்லுகிறார்களாம். மறுத்தால், 'லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிறாயே, கொடுத்தால் என்ன?' என்கிறார்களாம். இது வெறும் வயிற்றெரிச்சல் அல்ல! இக்கேள்வியை ஞாபகத்தில் வையுங்கள்.
உணவு மிகுதியால் ஏற்படுவது சர்க்கரை நொய். இந்தியாவில் 40 மில்லியன் சர்க்கரை நோயாளிகள். அதே நிலத்தில் அருகருகே 50 மில்லியன் பட்டினியாளர்கள். இந்த முரணை மாற்ற?
நாம் ஜகத்தை அழிக்க வேண்டாம். நம்மிடம் அமெரிக்க ராணுவம் இல்லை.
காந்தி சொன்ன மாதிரி நகரங்களை அழிக்கலாம்.
நம்மால் அதுவும் முடியாது! உலகச் சந்தை நுகர்வோர் அடிமைகளுக்கு நகரங்களை விட்டால் வேறு போக்கிடம் ஏது.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...