Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஜெயமோகனின் கருடபுராணத் தண்டனை: : ஃபூக்கோவும் அமர்நாத்தின் ஒழுக்கவியலும்






அமர்நாத் என்பவர் ஜெயமோகனின் அரசியலை தாக்கி எழுதின கடிதம் (அல்லது வாசகரை எதிர் நோக்கி எழுதப்பட்ட கட்டுரை) சாருஆன்லைனில் பிரசுரமாகியுள்ளது. சுருக்கமாக, இக்கடிதம் ஜெவின் திரைமறை சதிராட்டங்களை அம்பலப்படுத்த விழைகிறது. இதன் ஒரே சுவாரசியம் இரவு விடுதி துகிலுரிப்பு போல் சிறிது சிறிதாக திரைமறைவு சேதிகளை வெளிப்படுத்துவது தான். படித்து முடித்ததும் அட தெரிந்ததுதானே என்று உங்களுக்குத் தோன்றும். இதற்கான பதிலில் சாரு "நான் கடவுள்" ஆர்யா பாணியில் வெற்றிலை மென்றவாறே முத்தாய்ப்பாக இதையெல்லாம் புட்டு வைக்கத்தான் நான் இருக்கிறேனே, 15 வருடங்களாக மல்லுக்கட்டுகிறேனே, நீயெல்லாம் ஏன் காலத்தை வீணடிக்கிறாய், வா உலக இலக்கியம் பேசுவோம்; கஸான்சாகிஸ், அப்துல் ரகுமான் முனீப்பின் படைப்புகள் பற்றி தரமான உரையாடல் நடத்தலாமே என்று அமர்நாத்தை அறிவுறுத்தி முடிக்கிறார். எனது இந்த பதிவின் நோக்கம் வாசகரை அக்கடிதம் நோக்கித் திருப்புவதோ மேலும் செருப்படி வார்த்தை விளையாட்டை நீட்டிப்பதோ அல்ல. வலுவான விமர்சன அளவுகோல்களோ, தர்க்கப் பின்னணியோ இன்றி இலக்கிய ஆளுமைகள் பரபரப்புக்காக தாக்கப்படுவதை, இந்த தாக்குதல் பின்னுள்ள ஒழுக்கமனப்பான்மை, மற்றும் ஆதர்ச ரீதியிலான எதிர்பார்ப்புகளையும் ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.

எனது முதல் கேள்வி: தினசரி வாழ்வில் எத்தனையோ வசைகள், பொய் பித்தலாட்டங்களை தாங்கும் நாம் இலக்கியப் பரப்பில் ஒரு உன்னதமான நிலையை ஏன் எதிர்பார்க்கிறோம்? எழுத்தாளனை ஏன் லட்சியப்படுத்துகிறோம்? ஜெயமோகன் இயக்குனர்கள் முன் ஆதாயத்துக்காக புழுவாய் குழைவதை கண்டிக்கும் அமர்நாத் தன் தனிப்பட்ட வாழ்வில் யாரையும் ஜால்ரா போட்டதில்லையா? கூஜா தூக்காத மனிதனே பூமிப்பரப்பில் இல்லை எனலாம். இலக்கியவாதியும் தினசரி வாழ்வுத் தளத்தை சேர்ந்தவன் தானே? இலக்கியவாதி ஆதர்ச நாயகனாக இருந்த காலம் கற்பனாவாத சகாப்தத்துடன் முடிந்து விட்டது. எழுத்தாளனை அவனது அரசியலுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியது இன்றைய சூழலின் கட்டாயம். எந்த அணுகுமுறைச்சாய்வும் இல்லாதவன் மன நிலை பிறழ்ந்தவன் மட்டுமே. அவன் எழுத்தாளனாக முடியாது. உலகவாழ்வின் பாசாங்கு, குழிபறித்தல், கபடம் எழுத்தில் நுழைந்தால் அதை தர்க்கரீதியாக எதிர்கொண்டு, மறுக்கலாம், மௌனிக்கலாம்; உணர்ச்சிவசப்பட்டு எதிர்ப்பது மடத்தனம். 



மேற்குறிப்பிட்ட வலைமனையில் ஜெவை வைய தேவடியா, பிம்ப் (மாமா), கருட புராணத் தண்டனை ஆகிய பதங்களை அமர்நாத் மற்றும் சாரு பயன்படுத்தப்படுத்துகிறார்கள். இதை நாம் ஆராய வேண்டும். சமூகத்தை கட்டுப்படுத்த விழையும் உயர்குடி, பிராமணீய, ஒழுக்கவியல் பயன்பாடுகள் இவை. பழங்கால அரச சமூகத்தில் பொதுப்பார்வைக்கு முன் குற்றவாளிகளை தாக்கி அழிக்கும் தண்டனை முறைகள் இருந்தன. ஃபூக்கோ தனது "ஒழுக்கமும், தண்டனையும்: சிறையின் பிறப்பு" எனும் நூலில் இந்த வகை தண்டனைக்கு இரு கூறான நோக்கங்கள் உண்டு என்கிறார்: எதிர்பார்த்த, எதிர்பாராத நோக்கங்கள். பொதுமக்கள் முன்னிலையிலான தண்டனையின் போது குற்றவாளியின் உடல் அவனது குற்றத்தை மறுஒளிபரப்பு செய்யும் டி.வி. சானல் போல் ஆகிறது. அதாவது இப்படியாகப் பட்ட குற்றத்தை செய்திருக்கிறான் என்பதை மக்களுக்கு உணர்த்துவது. அடுத்து சட்டம் என்கிற தனது உடல் நீட்சியை காய்ப்படுத்தியதற்காக குற்றவாளியின் உடல் மீது அரசாங்கம் பழி தீர்த்துக் கொள்கிறது. எதிர்பாராத நோக்கம் என்னவென்றால், குற்றவாளியின் உடல் மீது பெரும்பாலான கட்டங்களில் மக்களுக்கு இரக்கம் ஏற்பட்டு அதனால் அரசாங்கத்துக்கு பாதகமான கலகங்கள் விளைகின்றன. இந்த கடைசிக் கூற்றுக்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. பாசாங்கு, பித்தலாட்டத்தின் அடிப்படையில் ஜெவை கூண்டில் ஏற்றி தீர்ப்பு சொல்லி தண்டனை விதிப்பது ("மரத்தில் கட்டி வைத்து அடிக்க வேண்டாம்; கருட புராணத்தில் தண்டனை உண்டு") தன்னை நியாயப் பீடமாக கற்பிக்கும் கடித ஆசிரியரின் ஒழுக்கவியல், மேட்டுக்குடி மனப்பான்மையை குறிக்கிறது. ஃபூக்கோவை பொறுத்த மட்டில் இது பூர்ஷுவா நிலைப்பாடு. இதன் எதிர்பாரா விளைவு (பச்சாதாபம்) ஜேவுக்கு ஆதரவாக அமையலாம்.

பிரபல ஆளுமைகளை போற்றுதலும், தூற்றுதலும் வலுவற்ற வாசகப் பரப்பின் நோய்க் கூறுகள். நுட்பமான அறிதல் அற்ற வாசகர்கள் எதை சார்வது என்று புரியாமல் ஆரம்பத்தில் தடுமாறுவார்கள்; பாதுகாப்பின்மை போக்க குழுக்களில் இணைவார்கள்; அவதூறுகள் கிசுகிசுப்பார்கள். இறுதியாய் வழிபாட்டு, எதிர்நிலை பிம்பங்களை ஏற்படுத்துக் கொள்வார்கள். ஒரு தேர்ந்த வாசகனுக்கு எழுத்தாளனின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு மீது கசப்பு ஏற்படாது. அப்படி நேர்ந்தால் அவன் போன தலைமுறை ஆதர்சவாதத்தின் எச்சமாக மட்டுமே இருப்பான். எழுத்தாளன் பிரதிநிதி அல்ல; அவன் தனிக்குரல் மட்டுமே. கடல் ஆரவாரத்தினிடையே ஆயிரம் முறைகளில் ஒன்றாய் கரையில் உடையும் ஒரு அலை அவன். 


நமது வாசகர்கள் பரந்து பட்ட, ஆழ்வாசிப்பின் முதிர்ச்சியையும், விழிப்புணர்வையும் பெறும்போது மட்டுமே இத்தகைய பாதுகாப்பின்மை பதற்றம் குறைந்து, சச்சரவுகள் நிற்கும். நமக்கு அவசியம் ஜெ போன்ற பிரபல ஆளுமைகளை ஒழுக்க சிலுவையில் அறைவதல்ல. திட்டவட்டமான கருவிகளுடன அவரது படைப்புகளை விமர்சித்து அறுதியிடுவதே. சாரு எச்சிற் பருக்கை கையுடன் அவசரமாக "ஜெவின் படைப்புகளை புறக்கணியுங்கள்" என்று வேண்டாமல், அதற்கான காரணங்களை தர்க்க ரீதியாக பட்டியலிட வேண்டும். (உதாரணமாக, அவரது விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் ஆகிய நாவல்களில் லட்சியவாதிகள், அவர்களின் வீழ்ச்சிக்கு இன்றைய பின் நவீனத்துவ யுகத்தில் ஏற்படும் சமகாலமற்றத்தன்மை, பொருத்தமின்மை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம் ). இதுவரை ஜெவின் படைப்புகளை பற்றின நுட்பமான விமர்சன மறுப்புகள் எழுந்ததில்லை. நாம் திரும்பத்திரும்ப சொல்வதெல்லாம் அவர் இந்துத்துவாவாதி, ஆதிக்கவியலாளர், அரசியல் சூழ்ச்சிக்காரர் என்பதே. இந்துத்துவா கட்சி இன்று இந்தியாவின் பெரும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது, அதன் குரலாக ஒரு நபர் இருப்பதில் என்ன தவறு. அல்கொய்தாவின் நிலைப்பாட்டை ஆதரிக்க இணையதளம் இல்லையா? இடதோ வலதோ தீமைக்கும் நன்மைக்கும் ஒரு வலுவான கருத்துத் தளம் தருவது இன்றைய காலத்தின் அவசியம். இடது கையோ, வலது கையோ வலுவுற்றால் நிச்சயம் அடிக்கத்தான் ஓங்கும். ஒருவர் ஆதிக்க சக்தி ஆதரவாளர் என்றால் கண்டிக்க தேவை இல்லை. அவரது அடிப்படையில் உள்ள ஓட்டையை மட்டுமே கவனித்து விவாதிக்க வேண்டும். 

ஒரு ஆளுமையின் அரசியல் காய் நகர்த்தல்களை நிர்வாணப்படுத்தல் அறிவுத்தளத்தின் பணி அல்ல. ஆதிக்க அரசியல் இன்றைய மனித இயல்பு. நமது களம் மனித மனத்தின் நுட்பங்கள் பற்றின தேடலாகவே இருக்க வேண்டும். 

உயிர்மையின் தரம் பற்றின ஜெவின் கேள்விக்கு பதில் "வார்த்தை" வலதுசாரி இதழ் என்று சொல்லுவதல்ல. ஒரு மாதாந்திர இதழான உயிர்மைக்கு பரந்துபட்ட வாசகர்களை சென்றடையும் நோக்கம் உள்ளது. பக்கங்களை நிரப்பும் நிர்பந்தம் உள்ளது. தீவிர, வணிக இதழ் வாசகர்களுக்கு இடையிலான ஒரு பாலமாகத்தான் உயிர்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஆழமான கட்டுரைகளை சுவாரஸ்யமாக, தொடர்ச்சியாக எழுதும் எழுத்தாளர்கள் எத்தனை பேர் நம் இலக்கியப் பரப்பில் உள்ளனர்? ஆங்கிலத்திலிருந்து கோட்பாட்டு எழுத்தை தமிழில் பிரதியெடுப்பதை நான் குறிப்பிடவில்லை. புதிய கலை, அறிவியல், சமூக, வரலாற்று அணுகுமுறைகளை நம் சூழலுக்கு அல்லது தலைமைப் பொருளுக்கு பொருத்தி அவதானிக்கும் மிகச்சில எழுத்தாளர்களே உள்ளனர்; ஒரு மாதாந்திர பத்திரிகைக்கு அவர்களால் மட்டுமே தீனி போட முடியாது. உயிர்மை அனைத்து எழுத்தாளர்களுக்குமான பொதுத் தளம். தீவிர ஆய்வுப் பின்னணி மற்றும் தயாரிப்புடன் உருவாக்கப்படும் கட்டுரைகளை "உயிர்மை" எதிர்பார்க்கிறது என்பதே உண்மை. மிக முக்கியமான படைப்புகளுடன் பலவீனமானவையும் வெளிவந்தால் அது நம் தமிழ்ச்சூழலின் பிரதிபலிப்பு தான். எழுத்தாளர்களின் மறுபிம்பம் தான் பத்திரிகை. உயிர்மையில் தொழில் நுட்ப ரீதியிலான ஆழமான சினிமா விமரசனங்களை வெளியிடாதது பற்றி நான் அதன் ஆசிரியர் மனுஷ்யபுத்திரனிடம் கேட்டிருக்கிறேன். தமிழில் அத்தகைய திரைவிமர்சகர்கள் இல்லை என்பதே அவரது பதில் (இதையே "கற்றது தமிழ்" ராமும் "புதிய பார்வை" பேட்டி ஒன்றில் குறிப்பிடுள்ளார்). மற்ற துறை சார்ந்த படைப்புகளின் பஞ்சத்திற்கும் இப்பதிலே பொருந்தும் என நினைக்கிறேன். ஜெவின் திருப்திக்காக வேண்டுமானால் எச்.பீர்முகமது உயிரொசையில் எழுதின சில தத்துவக் கட்டுரைகளை உயிர்மையில் மறுபிரசுரித்து மிரட்டலாம். 

 மேலும் ஜெயன் உயிர்மைக்கு செய்வது போல் ஒருவர் தனக்குப் பிடித்த மூன்று பத்திகளை மட்டுமே படித்து பத்திரிகையை வீசினாலும் அது பிரச்சனை அல்ல. நமது இன்றைய முடிவற்ற ஊடக வெளியில் தரம் என்பதற்கு பொது அளவுகோல் அமைப்பது சிக்கலானது. தரம் தனிமனித தீர்வு சார்ந்தே அமைகிறது. இந்நிலைக்கு இன்றைய இணைய, பதிப்பு, டி.வி.ஊடகங்களில் மையமற்று அலைவுறும் விவாத சச்சரவுகள் (இவ்விவாதத்தையும் உள்ளிட்டு) உதாரணம்.

கடைசியாக "நொண்டி நாய்" விவகாரம் பற்றி. ம.பு இவ்விவகாரத்தில் சமயோசிதமாகவே நடந்து கொண்டிருக்கிறார். இதில் எதிர்கால பதிப்பாளர்களுக்கு பாடம் உள்ளது. சண்டை சச்சரவுகள் மத்தியிலும் தமிழின் மும்மூர்த்திகள் ஜெ, எஸ்.ரா, சா.நி ஆகியோர் உயிர்மை பதிப்பகத்துக்காக தொடந்து எழுதி வந்துள்ளதை கவனியுங்கள். அரசியலில் போலவே தொழிலிலும் எதிரிகளை பயன்படுத்துவது அல்லது நண்பர்களாக்குவது அவசியம். இலக்கிய மும்மூர்த்திகள் ஒரே படகில் வாளேந்தியபடி வெவ்வேறு சுருதிகளில் முழங்கியபடி பயணித்ததனாலே பல முக்கிய நூல்கள் நமக்குக் கிடைத்தன. 

அடுத்து, ஊனர்கள் தங்கள் சமூக உறவாடல்களின் போது தங்கள் உடல் வித்தியாசம் பற்றின பல வசைகளை கேட்டு பல்லிளிக்க வேண்டியுள்ளது. தலித்துகளை அவரகள் சாதிப் பெயர் குறிப்பிட்டு வைதால் நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது. ஊனர்களை பாதுகாக்கவும் இத்தகைய சட்டம் வேண்டும். அத்துடன், "தேவடியாளுக்கு" நேர்ந்தது போல் "நொண்டி" எனும் தட்டையான வார்த்தைக்குப் பதிலீடாக வேறு பொருத்தமான, வாயில் நுழையாத சொல்லை அல்லது சொற்றொடரை கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் அனைத்து கால் ஊனர்களும் நொண்டுவதில்லை. சக்கர நாற்காலிக்காரர்களை உதாரணமாக சொல்லலாம். அப்படிச்செய்தால் "நொண்டி" ஒரு பொது வசையாக மாறும் (நிலையற்ற தன்மை கொண்ட பிரபல எழுத்தாளரை "அட நொண்டி" என அழைக்கலாம்)---ஊனர்கள் தப்பித்துக் கொள்வார்கள்.

 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...