Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இந்திய கிரிக்கெட் அணியின் உறுத்தும் முதலிடம்

இலங்கையில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி முதல் போட்டியில் தள்ளாட்ட அணி நியுசீலாந்தை வீழ்த்தி ஐ.சி.சி பட்டியலில் முதல் இடத்தை பெற்ற போது இர்விங் வேலசின் "தெ பிரைஸ்" நாவலில் வரும் இங்கிரிட் பாஹ்ல் என்னும் ஒரு பெண் எழுத்தாளரின் சங்கடம் நினைவு வந்தது. எளிய இயற்கை கவிதைகளை மட்டும் பாடி வந்த அவருக்கு முழுக்க அரசியல் காரணங்களால் நோபல் பரிசு வழங்கப்படும்; கவிஞர் (வைரமுத்துவை போலன்றி ) நுண்ணுணர்வு கொண்டவர் தான். ஆனாலும் தனக்கு தகுதி இல்லை என தெரிந்தும் மறுக்கும் திராணி இல்லாமல் பெற்றுக் கொள்கிறார். பிற்பாடு பொருந்தாத மகுடம் அவரை உறுத்துகிறது; யோக்கியதை உள்ள பரிசாளர்களை சந்திக்கும் போது கூசுகிறார். தன்னை அழுத்தும் இந்த பரிசின் கனத்தை எப்படி இறக்கி வைப்பது என்பது தான் அவரது சிக்கல். சனிக்கிழமை இலங்கை அணியிடம் படுகேவலமாக இந்தியா தோற்றது தரப்பட்டியலில் முதல் அணியாக அது இருப்பதன் அபத்தத்தை துல்லியமாக சித்தரித்தது. அரியணையில் புட்டம் நெளிய வைத்தது. தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த சில வருடங்களில் தொடர்ச்சியாய் பல போட்டிகளில் வென்றிருந்தாலும், நமக்கு நியாயமான இடம் 5 தான். என்ன காரணம்?

உலகின் சிறந்த அணிக்கு சில அடிப்படை வலிமைகள் உண்டு.

"ஃபீல்டிங்கில் தொடர்ச்சியான சிறப்பு. "

தற்போதைய வலிமையான அணிகளிடம் இதைப் பார்க்கலாம்: அஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை. நெடுங்காலமாகவே அவர்களிடம், உள்ளூர் போட்டிகளில் கூட, நன்றாக ஃபீல்டிங் செய்யும் கலாச்சாரம் உள்ளது. நமது ஃபீல்டிங் தரம் இளம் வீரர்களின் விகிதத்தை சார்ந்தே உள்ளது. முதிய வீரர்கள் அணியில் அதிகரிக்கும் போது இயல்பாகவே ஃபீல்டிங் தரம் வீழ்கிறது.

"உடற்தகுதி"

இந்திய அணியினரின் உடற்தகுதி முன்னேறி உள்ளதென்றாலும் அங்கீகரிக்கப்பட்ட தரத்திற்கு நெடுந்தூரம் உள்ளது.

"மட்டையாட்டத்தில் சரிவு ஏற்படும் போது சரிகட்டி அணியை வலுவான நிலைக்கு எடுத்து செல்ல இரு மட்டையாளர்கள்"

இவர்கள் ஓரளவுக்கு தொழில் நுட்பம் தெரிந்த, ஒற்றை இரட்டை ஓட்டங்களை சுளுவாக எடுக்க தெரிந்தவர்களாக, சூழமைவுக்கு ஏற்றபடி தங்கள் ஆட்டத்தை தகவமைப்பவர்களாக, நினைத்த படி நிதானத்தில் இருந்து ஆக்ரோசத்துக்கு கியர் மாற்ற முடிபவர்களாக இருக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவுக்கு காலிஸ் மற்றும் டிவில்லியர்ஸ். முந்தைய ஆஸி அணியில் மார்டின் மற்றும் ஸ்டீவ் வாஹ். அசர் -- ஜெடேஜா ஜோடிக்கு பின்னர் இந்திய அணிக்கு இப்படியான யாரும் பின்னர் அமையவில்லை. தோனி நம்முடைய நவீன ஜெடேஜா. அசரின் இடம் இன்னும் காலியாகவே உள்ளது. இத்தகைய பாத்திரத்தை ஏற்க டெண்டுல்கருக்கு விருப்பம் இல்லை.

"ஆல்ரவுண்டர்கள்"

குறிப்பாக வேக\மிதவேக வீச்சாள ஆல்ரவுண்டர்கள். சிறந்த ஆல்ரவுண்டர் அரிது என்றாலும் துண்டு துக்கடா ஆல்ரவுண்டர்களுக்கும் அணியின் வெற்றியில் முக்கிய பங்குண்டு. இந்திய அணி மேலாண்மைக்கு இவ்விசயத்தில் லட்சியவாத அணுகுமுறை உண்டு. பிரஸ்னன், காலிங்வுட் (இங்கிலாந்து), மேத்யூஸ் (இலங்கை) போன்றவர்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் உள்ளூர் அளவிலாக மட்டுமே தேய்ந்து போயிருப்பார்கள். சமீபத்தில் இந்திய தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் நாட்டின் முக்கு மூலைகளில் எல்லாம் தனது குழு ஆல்ரவுண்டர்களுக்காக தேடுவதாக தெரிவித்தார். சமீப ஐ.பி.எல்லில் ஜொலித்த வங்காளத்தின் லஷ்மி ரதன் ஷுக்ளா இவர்கள் கண்ணில் ஏன் படவில்லை? சச்சின் ரானா, ஜெ.பி யாதவ், ஜோகிந்தர் ஷர்மா ஒதுக்கப்படுவது ஏன்? இவர்கள் இந்திய தேர்வாளர்களின் குறுகின மனப்பான்மை மற்றும் லட்சியவாத அணுகுமுறைக்கு பலிகடாக்கள். இடைத்தர ஆல்ரவுண்டர்களால் ஒரு முழுமையான பந்து வீச்சாளர் அல்லது மட்டையாளரை விட உபயோகமாக செயல்பட்டு அணிக்கு சமநிலை அளிக்க முடியும். கபில், ஹேட்லி, காலிஸ் போன்றோரின் திறமையுடன் வந்தால் தான் இடம் தருவோம் என அடம் பிடிப்பதனால் தான் இந்திய அணி ஒரு போலியோ குழந்தை போல் ஒரு பக்கம் சூம்பி உள்ளது.

"எந்த சூழல் அல்லது ஆடுகளத்திலும் விக்கெட்டுகளை நிலையாக வீழ்த்தும் மூன்று வீச்சாளர்கள்"

பத்தாண்டுகளுக்கு மேலாக வெற்றிகர அணியாக ஆஸ்திரேலியா திகழ்ந்த போது மெக்ராத், கிலெஸ்பி, வார்னே; தொண்ணூறுகளின் இறுதியில் கிரிக்கெட்டை ஆண்ட போது பாக் அணியில் அக்ரம், வக்கார், ரசாக், சக்லைன் கூட்டணி; தென்னாப்பிரிக்காவின் டொனால்டு, பொலாக், காலிஸ் ஆகியோர். விக்கெட் வீழ்த்தும் கூட்டு எந்திரங்களாக இவர்கள் தங்கள் அணிக்காக நெடுங்காலம் செயல்பட்டவர்கள். நமது அணி இருவரை சார்ந்தே எப்போதும் இயங்கி வந்துள்ளது. முன்பு ஸ்ரீநாத், கும்பிளே, தற்போது சகீர்கான், ஹர்பஜன். மட்டையாட்டம் மூலம் உச்சங்களை எட்டினாலும் அடிக்கடி சொங்கியாக தளர்வதற்கு இந்த பந்து வீச்சு வறுமை காரணம்.

மேற்சொன்ன குறைகளால் நாம் ஒரு நடுத்தர அணிதான் என்பது நிச்சயப்படுகிறது. சரி, சமீபமாக இந்திய அணி பல நாடுகளில் தொடர்கள் வென்று செய்துள்ள சாதனைகளை கணக்கில் கொண்டு நமக்கு தான் முதல் இடம் வேண்டும் என்று தரையை உதைத்து லாலி பாப் சூப்பும் சீக்கா போன்றவர்களுக்கு பதில் என்ன? இந்தியா போன்ற ஒரு நடுத்தர அணி முதலிடத்தை அடைந்துள்ளது ஒரு சுவாரஸ்யமான உண்மையை வலியுறுத்துகிறது. நடுத்தரமானவர்களும் வெல்லும் படி, வெற்றி பலவித வெளிக்காரணிகளால் இயக்கப்படுகிறது. வெற்றிக்கு ஒரு வரலாற்று உந்துதல் உள்ளது. ந்மது மிகத்திறமையான இளைய வீரர்கள் தோனியின் நிதானத் தலைமை கீழ் பிறரை இடறி விட்டு முன்னோடிய போது, ஆஸ்திரேலியா, பாக்கிஸ்தான், நியூசிலாந்த், இலங்கை போன்ற அணிகள் அனுபவஸ்த திறமையான ஆட்டக்காரர்களின் இழப்பு, மேலாண்மைக் குழப்படி காரணமாய் ஒரு சுமூகமான நிலைமாற்றத்தை அடைய திணறிக் கொண்டிருந்தன. இந்திய ஒரு நாள் அணி இந்த நிலைமாற்றத்தை ஒரு இளைய வீரர்களின் குழுவைக் கொண்டு சுமூகமாக சாதித்தது தான் இதுவரையிலான அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்திய விடுதலைக்கு எப்படி முழுக்க முழுக்க காந்தி காரணமில்லையோ அதைப் போன்றே நமது இதுவரையிலான எழுச்சிக்கு நாம் மட்டுமே காரணமல்ல. தரவரிசையின் முதல் எண்ணில் ஒரு காலும் இரண்டாம் எண்ணில் மற்றொன்றுமாக ஒருவிதமான தோரணையில் தலை கிறுகிறுக்க இந்திய அணி நிற்கும் போது நாம் இந்த வரலாற்று காரணத்தையும் வலியுறுத்த வேண்டும்.

சுமார் பத்தாம் நூற்றாண்டில் வில்லியம் (தெ கான்கிரர்) என்ற ஆங்கிலோ சாக்சன் மன்னன் படையெடுத்து வந்து இங்கிலாந்து மண்ணில் காலூன்றிய போது தடுமாறி விழுந்து விட்டான். அப்படியே எழுந்தால் பின்னிற்கும் ஆயிரக்கணக்கான விசுவாச படையினர் முன் அவமானமாகி விடும். அவன் சுதாரித்தபடி ஒரு பிடி மண்ணை வாரி, கை துக்கி வீரர்களிடம் காண்பித்து "நாம் இந்த மண்ணை கைப்பற்றுவோம்!" என்று அறிவித்து வீரர்களிடம் இருந்து பெரும் ஆதரவு முழக்கம் பெற்றான். வில்லியமைப் போல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் விழுந்தாலும் எளிதில் தோல்வியை ஒப்புக் கொள்ளாது. தரமாக போராடிய பின்னரே தோற்கும். இந்திய அணியைப் போல் அவமானகரமாய் அவை ஆட்டத்தை இழப்பதில்லை; ஃபீடிங், பந்து வீச்சு, மட்டையாட்டம் என அனைத்து துறைகளிலும் குறைந்த பட்ச தரத்தை தக்கவைத்தபடிதான் தோற்கும். அத்தகைய வலுவான நிலையிலான ஒரு இந்திய அணி எதிர்கால தலைமுறையினருக்கு ஆனது. கங்குலி போல் தோனியும் நமது அணியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைத்து செல்லுகிறார். எதிர்கால அதி-அணிக்கான பாலம் மட்டும் தான் தற்போதைய அணி. பலிபீடத்தில் நாம் இன்று சமர்ப்பிக்கும் கிரீடங்கள், கொட்டும் ரத்தத்திலிருந்து அவ்வணி எழுந்து வரும். இன்று நாளைக்கானது!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...