முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆஸ்திரேலியா: ஒரு சூதாடியின் நிழல்




இந்தியாவுக்கு எதிராக 29-10-09 அன்று நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பரிதாபமாக தோற்றது. ஓட்டங்களில் வித்தியாசத்தை உத்தேசிக்கவில்லை. மூன்றரை மணி நேர மட்டையாட்டத்தில் எந்த ஒரு கட்டத்திலும் அவ்வணி பின் தங்கியே இருந்தது. குறிப்பாக குழப்பமான திட்டமிடலுடன் ஆஸியினர் களமிறங்கினர். எப்போதுமே தன்முனைப்பால் ஆட்டத்தை திசை திருப்பியுள்ள ஆஸியினர் 29-அன்று வெற்றிக்கு ஒரு புறக்காரணியை நம்பி இருந்தனர்: பனித் துளிகள். அவர்களின் திட்டம் இதுவாக இருந்தது: முதல் இருபது ஓவர்களில் விக்கெட்டுகளை அதிகம் கொடுக்காமல் நிதானமாக ஆடுவோம். மைதானத்தில் பனித்துளிகள் கொட்ட ஆரம்பித்ததும் இந்திய சுழலர்கள் கையிலிருந்து பந்து வழுவும். புல்டாசும், குறை உயரப் பந்துமாக வீசி சொதப்புவார்கள்; எளிதாக பத்து ஓட்டங்கள் கூட ஒரு ஓவரில் தொடர்ந்து அடிக்கலாம். ஆனால் நாக்பூரில் சில இரவுகளில் பனி குறைவாகவே இருக்கும் என்று அங்கு ஆடி பரிச்சயமுள்ள தோனி குறிப்பிட்டிருந்தார். அன்று பனிப்பொழிவு மிதமாகவே இருந்தது. இந்திய சுழலர்கள் ஹர்பஜனும் யுவ்ராஜும் சிறப்பாக பந்து வீசத் துவங்கிய போது ஆஸி மட்டையாளர்கள் முகம் இருண்டது; நெற்றியில் கவலைக் கோடுகள். கண்களில் குழப்பம். பனித்துளிகளை நம்பி ஆட இறங்கியது தான் ஆஸி அணியின் ஆதாரத் தவறு; மேலும் குறிப்பாய் அது அணித் தலைவர் ரிக்கி பாண்டிங்கின் தவறு. திட்டமிடல் பாண்டிங்கின் பலவீனம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பெவன் உட்பட, சுட்டியுள்ளனர். நேற்று அடித்துக் கழித்து பார்த்ததில் ரிக்கி பாண்டிங்கின் கணக்கு புத்தகத்தில் மீண்டும் மீண்டும் முட்டையே வந்தது.


கோழியின் கழுத்தை அறுத்த பின் அது பண்ணுகிற அழிச்சாட்டியம் தாங்காது. கசாப்பு கடைகளில் அதனால் முதலில் கோழியை தண்ணீரில் முக்கி மயக்கமடைய வைத்து பின் அறுப்பார்கள். கிரிக்கெட்டிலும் இது போல் எதிரணியினருக்கு மூச்சு விடவும் அவகாசம் வழங்காது நெருக்கடி வழங்குவது உசிதம் மற்றும் வழக்கம். ரிக்கி பாண்டிங் கோழியை பிடித்து சாவகாசமாய் அறுக்கலாம் என்று பறக்க விடுகிறார்; பிறகு அது மதில் மேல் கொக்கரிக்க வாயைத் திறந்து வியக்கிறார். பல உதாரணங்கள். 2003 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இரண்டாவதாக ஆடிக் கொண்டிருந்த இந்தியா சச்சின், கங்குலியை இழந்து, நம்பிக்கை இழந்து ஆஸி உள்ளங்கையில் தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது வானம் மந்தாரமாக தெரிந்தது. டர்க்வர்த் லூயிஸ் கணக்கை போட்டுப் பார்த்த ரிக்கி நிலைமையை மறந்து இருபத்தைந்து ஓவர்களை முடிக்கும் அவசரத்தில் பகுதி நேர சுழலர்களை கொண்டு வந்தார் இந்தியர்கள் மீதான அழுத்தத்தை விடுவித்தார். அதிமுக்கியமான ஒரு தருணத்தில் சேவாக் அன்று ரன் அவு ஆகாமல் இருந்திருந்தால் ரிக்கிக்கு அந்த ஆட்டம் நிஜமாகவே இறுதி ஆட்டமாக இருந்திருக்கும். 2008 நவம்பரில் விதர்பாவில் நடந்த டெஸ்டு ஆட்டத்தில் இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 166 க்கு 6 விக்கெட்டுகள் இழந்து திகைத்து நின்ற கட்டம். வாட்சனின் உள்வரும் பந்துக்ளை இந்தியர்களால் புரிந்து தடுக்க முடியவில்லை. மேலும் ஐந்து ஓவர்கள் தந்திருந்தால் தனி மனிதராக அனைவரையும் காலி செய்திருப்பார். ஆனால் ஓவர் ரேட் கவலை பாண்டிங்குக்கு. அன்றைய ஆட்டத்திலும் சீக்கிரமாக ஓவர்களை முடிக்காவிட்டால் தென்னாப்பிரிக்க உடனான அடுத்த தொடரில் அவர் தடை செய்யப்படுவார். வாட்சனை நிறுத்தி விட்டு பகுதி நேர சுழலர்களை வீசச் செய்தார். தனக்காக அணியின் வெற்றியை தியாகம் செய்தார். எதிர்கால கவலைக்காக இன்றின் கொண்டாட்டத்தை துறந்தார். 28-ஆம் தேதி நடந்த ஆட்டத்திலும் ஏறத்தாழ இதே நிலைமையே இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்களிடம் மூன்று முக்கிய விக்கெட்டுக்ளை இழந்து இந்தியா நெருக்கடியில் இருந்தது. ஒரு நல்ல ஆடுதளத்தில் சுழல் பந்து வீச்சை எதிர்கொண்டு ஆடும் போது இந்தியர்கள் இயல்பாகவே தன்னம்பிக்கையும் ஊக்கமும் பெறுவார்கள் என்பது தெரிந்திருந்தும் பாண்டிங் இருமுனையிலும் உடனடியாக சுழல் பந்து அறிமுகம் செய்தார். இந்திய மட்டையாளர்களின் முகங்கள் ஒளி விட்டன. பாண்டிங் கோழியை பறக்க விட்டார்.


31-10-09-அன்று பிரோஷாகோட்லாவில் நடந்த ஆட்டத்தில் மட்டையாடுவதற்கு முன்னரே தனது அணியின் ஸ்கோர் 200 என்று தீர்மானித்து டாஸின் போது சொன்னார் ரிக்கி. ஆஸியினர் மட்டையாடிய போது ரிக்கி பாண்டிங் மற்றும் பிறரின் ஆட்டம் பெரும்பாலும் எதிர்பார்க்கும் படியாக எதிர்மறையாக இருந்தது. அவர்கள் மனதிலிருந்த குறைந்த ஸ்கோர்தான் இந்த அணுகுமுறைக்கு முக்கிய காரணம். ஆடுதளம் மெதுவாக இருந்ததே அன்றி ஏற்ற இறக்கமெல்லாம் இல்லை. ஆனாலும் ரிக்கி எதிர்காலம் குறித்து மிகுந்த அச்சம் கொண்டிருந்தார். என்ன அச்சம்? இந்த ஆடுதளத்தில் தன் அணியினர் வழக்கமான ஆக்ரோசமான ஆட்டம் ஆடினால் எளிதில் வெளியேறி விடுவார்கள் என்ற அச்சம். இந்த அச்சம் இந்திய சுழலர்களின் பணியை எளிதாக்கியது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் 54 பந்துகளில் 73 ஓட்டங்கள் எடுத்த மைக்கேல் ஹஸ்ஸிடம் ஒரு பேட்டியாளர் ”இன்று மட்டையாடும் போது எப்படியான இறுதி ஸ்கோரை திட்டமிட்டிருந்தீர்கள்” என்று கேட்டார். ஹஸ்ஸியின் பதில்: “எந்த திட்டமும் இல்லை. வாய்ப்புகள் கிடைக்கும் போது அடித்தாடினேன். மற்றபடி ஆட்டத்தின் போக்கில் தான் மட்டையாடினேன்”. கிரிக்கெட் மூளை ஆட்டம் தான்; கற்பனை ஆட்டம் அல்ல. ரிக்கி ஹஸ்ஸி சொன்னதை கவனித்திருக்க வேண்டும்!


ரிக்கி பாண்டிங்குக்கு ஆஸ்திரேலியர்கள் ”பண்டர்” என்று ஒரு வட்டப்பெயர் வழங்கியிருக்கிறார்கள். அதன் பொருள் “சூதாடி”. அவரது பணயப் பொருள்: ”நிகழ்காலம்”.


திட்டம் ”அ” தோற்றால் சீட்டுக் கட்டிலிருந்து ஆஸ்திரேலியர்கள் திட்டம் ”ஆ”வை விடுவிப்பார்கள். பத்தாண்டுகளுக்கு மேலாக ஆஸி அணியின் முக்கிய வலுவாக இதுவே விளங்கி வந்தது. ஆனால் கில்கிறிஸ்ட், பாண்டிங், சைமண்ட்ஸ் போன்றோர் விலகிய பின் ஆஸி அணி இந்த இரண்டாவது சீட்டை இழந்து விட்டது. 28-ஆம் தேதி ஆட்டத்தில் பிரட் லீ காயத்தால் விலகி விட பந்து வீச்சிலும் ஆஸியினர் ஒற்றை சீட்டுடனே ஆடினர். உதாரணமாக வாட்சன், மிச்சர் ஜான்சன் போன்றோரை துவக்க ஓவர்களில் பயமின்றி ஆட சொல்லி அதிரடியான ஆரம்பத்தை ஆஸியினர் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இதை செய்ய ரிக்கிக்கு ஏதோ மனத்தடை இருந்தது. அவர் தனது மத்திய வரிசை மட்டையாளர்கள் பொறுப்பை முழுக்க எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். இந்த தன்மறுப்பு அணுகுமுறையை, தயக்கத்தையே பரிதாபம் என்று முதலில் சொன்னேன்.


இயன்சாப்பல் சச்சின் குறித்து முன்பு சொன்னது போல், ரிக்கி பாண்டிங்கும் முழு நீளக் கண்ணாடி நின்று தன்னையே கண்டு பிடிக்க வேண்டும். பிறகு கால்சட்டை பைக்குள் கைவிட்டு அந்த இரண்டாவது சீட்டை எடுக்க வேண்டும்.

கருத்துகள்

Ashok D இவ்வாறு கூறியுள்ளார்…
nice one

abi enable word verification in comments mode
Rajasurian இவ்வாறு கூறியுள்ளார்…
great as always

Please remove word verification
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...