Skip to main content

ஒரு சந்திப்பு முறிவின் நினைவாக

நண்பனுக்கு – இது ஒரு திறந்த கடிதம்.

நீ சட்டென்று பேங்களூர் சென்று விட்டது அறிந்தது வருத்தம். மிக சுய நலமான வருத்தம். இங்கே இருந்த போதும் நாம் அடிக்கடி சந்தித்துக் கொண்டதில்லை தான். ஆனால் உன் அண்மை இருப்பு ஒரு ஆசுவாசம் தருகிறது. இதோ இப்போதே நான் குறும்பேசியில் பேச முடியலாம். வெளி அத்தனை சுருங்கியதாக இருக்கட்டும். ஆனால் தொலைதொடர்பின் வெளி அத்தனை காத்திரமாக இல்லை.



இது இரண்டாம் அல்லது மூன்றாம் முறை. நாம் சந்தித்து நீண்ட உரையாடல்கள் நிகழ்த்தின பின் உடனே வேறு ஊருக்கு சென்று விடுகிறாய்.

கல்லூரியில், நாம் ஒன்றரை வருடங்கள் சந்தித்து பழகியும் இறுதி கட்டத்தில் தான் நண்பர்கள் ஆனோம். ஒரே விடுதியில் இருந்தும் நாம் ஒரு உரையாடலுக்கு சந்திக்க திட்டமிட்டு அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. உனக்கு முடிந்தும் என் தேர்வுகள் தொடர்ந்தன. எனக்காக சில வாரங்கள் ஊருக்கு போவதை தள்ளிப் போட்டு விடுதியில் காத்திருந்தாய். இறுதியில் நாம் மைதானப் புல்வெளியில் சந்தித்து என்ன உரையாடினோம் என்று நினைவில்லை. பேச்சின் சுவை பொருளில் இல்லைதானே.

மற்றொரு முறை தண்ணி அடித்தபடி என்னுடன் பேச விரும்பியதால் பாருக்கு போனோம். இரவு பதினோரு மணி வரை பேசியிருப்பேன். அது போதாதென்று தன்னை ஒரு முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் என்று கூறிக் கொண்டவரை நட்பாக்கி அவர் தன் மகள் குறித்து கூறியதை இன்றும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு அப்பா தன் மகள் குறித்து ஒரு குடிகாரனிடம் குறிப்பிடுவாரா, அதுவும் இரவில், அதுவும் திருமணம் குறித்து. அடுத்து நினைவில் உள்ளது கிளம்புகையில் வண்டி மக்கர் செய்ய மாறி மாறி நாம் சொதப்ப ஆபத்பாந்தவன் தோன்றி மூக்கை பொத்திக் கொண்டு வண்டியை உதைத்து கிளப்பி விட்டார். மறு நாள் என்னிடம் சொன்னாய்: “நேத்து ரொம்ப எரிச்சலாய்ட்டேன், என்னை நீ பேசவே வுடல”. இப்படி ஆகும் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தது என்று தாமதமாக சொல்கிறேன்.

அப்பாவின் வற்புறுத்தலால் நீ சென்னையிலிருந்து கிளம்பி, பாளையங்கோட்டையில் பி.எட் ஒரு வருடம் தங்கிப் படித்த காலத்தை விரும்பியிருக்க மாட்டாய். அப்போது எனக்கெழுதிய கடிதத்தில் “சென்னையில் உன் கையை பிடித்த படி சுற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தாய். இப்போதுதான் நினைவு வருகிறது. நான் உன் கையை ஸ்பரிசித்ததே இல்லை. கல்லூரியில் ஒரு பெண்ணின் முத்தம் உதட்டுக்கு வந்ததை கூச்சத்தில் நான் கன்னத்தில் வாங்கியதை தான் இதுவரை நினைத்து வந்திருக்கிறேன். அந்த பெண் ரொம்ப தாமதமாக பிறகொரு நாள் தன்னுடன் மருத்துவமனைக்கு வருமாறு அழைத்தாள். அப்போது தற்போதைய மனைவியை கருத்தாக காதலித்துக் கொண்டிருந்தேன். நிறைய யோசித்து முடிவுக்கு வராமல் மறுத்து விட்டேன். சற்று கழித்து மற்றொரு தோழி இங்கிலாந்திலிருந்து திரும்பினாள். வரும் நாள் விபரம் சொல்லி விமான நிலையம் வரச் சொன்னாள். செல்ல வில்லை. பார் இதையெல்லாம் நினைத்து வந்திருக்கிறேன். நீ சொன்னதை …

இரண்டாம் மூன்றாம் முறைகள் நீ சென்னைக்கு முழுக்கு போட்டதும் இதே போன்ற நீண்ட சந்திப்பு அல்லது சந்திப்பு திட்டத்தின் பிறகு என்பதால் எனக்கு குற்ற-உணர்ச்சி ஏற்படுகிறது. அதனாலே இக்கடிதம். சகுனம் செரியில்லை. அல்லது வேறெதாவது சரியில்லை. இன்று படித்த சார்லஸ் சிமிக்கின் கவிதை ஒன்றில் கைக்கடிகார வட்டத்தை பறக்கத் துடித்தபடி அமரும் பட்டாம்பூச்சியுடன் ஒப்பிடுகிறார். எதற்கு வீணாக அலட்டிக் கொள்கிறேன். இது பட்டாம்பூச்சியின் தவறு. காலச்சக்கரம் சுற்றி வரும் போது நீ சென்னையில் இருக்க வேண்டும். அப்போது நாம் பிசிறின்றி ஆரம்பத்தில் இருந்து துவக்கலாம். புல்வெளியில் இருந்து டாஸ்மாக்கிற்கு. இம்முறை நீ ஏமாற மாட்டாய். நான் தண்ணி அடிப்பதை நிறுத்தி ரொம்ப காலமாகிறது.

என் காதலியாக மாறின பின் அவளை முதலில் மவுண்ட் ரோடில் சந்திக்க ஏற்பாடாகியது. ஒரு மணி நேரம் காத்த பிறகு அவள் நண்பி அழைத்து காதலியின் மாமா சுனாமி வந்ததாய் அச்சுறுத்தியதால் அவளால் வீட்டிலிருந்து கிளம்ப முடியாதாகையால் ரத்து என்று அறிவித்தாள். பிறகு சந்திப்புகளுக்கு எந்த தடையும் இல்லாமல் திருமணம் வரை சென்றது. இம்முறை சுனாமி நினைவு தினத்தன்று வெளியே செல்ல திட்டமிட்டு பிறகு கைவிட்டோம். மூட நம்பிக்கை காரணமல்ல. ஒரு சந்திப்பு முறிவின் நினைவாக.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...