Skip to main content

ஒரு சந்திப்பு முறிவின் நினைவாக

நண்பனுக்கு – இது ஒரு திறந்த கடிதம்.

நீ சட்டென்று பேங்களூர் சென்று விட்டது அறிந்தது வருத்தம். மிக சுய நலமான வருத்தம். இங்கே இருந்த போதும் நாம் அடிக்கடி சந்தித்துக் கொண்டதில்லை தான். ஆனால் உன் அண்மை இருப்பு ஒரு ஆசுவாசம் தருகிறது. இதோ இப்போதே நான் குறும்பேசியில் பேச முடியலாம். வெளி அத்தனை சுருங்கியதாக இருக்கட்டும். ஆனால் தொலைதொடர்பின் வெளி அத்தனை காத்திரமாக இல்லை.



இது இரண்டாம் அல்லது மூன்றாம் முறை. நாம் சந்தித்து நீண்ட உரையாடல்கள் நிகழ்த்தின பின் உடனே வேறு ஊருக்கு சென்று விடுகிறாய்.

கல்லூரியில், நாம் ஒன்றரை வருடங்கள் சந்தித்து பழகியும் இறுதி கட்டத்தில் தான் நண்பர்கள் ஆனோம். ஒரே விடுதியில் இருந்தும் நாம் ஒரு உரையாடலுக்கு சந்திக்க திட்டமிட்டு அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. உனக்கு முடிந்தும் என் தேர்வுகள் தொடர்ந்தன. எனக்காக சில வாரங்கள் ஊருக்கு போவதை தள்ளிப் போட்டு விடுதியில் காத்திருந்தாய். இறுதியில் நாம் மைதானப் புல்வெளியில் சந்தித்து என்ன உரையாடினோம் என்று நினைவில்லை. பேச்சின் சுவை பொருளில் இல்லைதானே.

மற்றொரு முறை தண்ணி அடித்தபடி என்னுடன் பேச விரும்பியதால் பாருக்கு போனோம். இரவு பதினோரு மணி வரை பேசியிருப்பேன். அது போதாதென்று தன்னை ஒரு முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் என்று கூறிக் கொண்டவரை நட்பாக்கி அவர் தன் மகள் குறித்து கூறியதை இன்றும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு அப்பா தன் மகள் குறித்து ஒரு குடிகாரனிடம் குறிப்பிடுவாரா, அதுவும் இரவில், அதுவும் திருமணம் குறித்து. அடுத்து நினைவில் உள்ளது கிளம்புகையில் வண்டி மக்கர் செய்ய மாறி மாறி நாம் சொதப்ப ஆபத்பாந்தவன் தோன்றி மூக்கை பொத்திக் கொண்டு வண்டியை உதைத்து கிளப்பி விட்டார். மறு நாள் என்னிடம் சொன்னாய்: “நேத்து ரொம்ப எரிச்சலாய்ட்டேன், என்னை நீ பேசவே வுடல”. இப்படி ஆகும் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தது என்று தாமதமாக சொல்கிறேன்.

அப்பாவின் வற்புறுத்தலால் நீ சென்னையிலிருந்து கிளம்பி, பாளையங்கோட்டையில் பி.எட் ஒரு வருடம் தங்கிப் படித்த காலத்தை விரும்பியிருக்க மாட்டாய். அப்போது எனக்கெழுதிய கடிதத்தில் “சென்னையில் உன் கையை பிடித்த படி சுற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தாய். இப்போதுதான் நினைவு வருகிறது. நான் உன் கையை ஸ்பரிசித்ததே இல்லை. கல்லூரியில் ஒரு பெண்ணின் முத்தம் உதட்டுக்கு வந்ததை கூச்சத்தில் நான் கன்னத்தில் வாங்கியதை தான் இதுவரை நினைத்து வந்திருக்கிறேன். அந்த பெண் ரொம்ப தாமதமாக பிறகொரு நாள் தன்னுடன் மருத்துவமனைக்கு வருமாறு அழைத்தாள். அப்போது தற்போதைய மனைவியை கருத்தாக காதலித்துக் கொண்டிருந்தேன். நிறைய யோசித்து முடிவுக்கு வராமல் மறுத்து விட்டேன். சற்று கழித்து மற்றொரு தோழி இங்கிலாந்திலிருந்து திரும்பினாள். வரும் நாள் விபரம் சொல்லி விமான நிலையம் வரச் சொன்னாள். செல்ல வில்லை. பார் இதையெல்லாம் நினைத்து வந்திருக்கிறேன். நீ சொன்னதை …

இரண்டாம் மூன்றாம் முறைகள் நீ சென்னைக்கு முழுக்கு போட்டதும் இதே போன்ற நீண்ட சந்திப்பு அல்லது சந்திப்பு திட்டத்தின் பிறகு என்பதால் எனக்கு குற்ற-உணர்ச்சி ஏற்படுகிறது. அதனாலே இக்கடிதம். சகுனம் செரியில்லை. அல்லது வேறெதாவது சரியில்லை. இன்று படித்த சார்லஸ் சிமிக்கின் கவிதை ஒன்றில் கைக்கடிகார வட்டத்தை பறக்கத் துடித்தபடி அமரும் பட்டாம்பூச்சியுடன் ஒப்பிடுகிறார். எதற்கு வீணாக அலட்டிக் கொள்கிறேன். இது பட்டாம்பூச்சியின் தவறு. காலச்சக்கரம் சுற்றி வரும் போது நீ சென்னையில் இருக்க வேண்டும். அப்போது நாம் பிசிறின்றி ஆரம்பத்தில் இருந்து துவக்கலாம். புல்வெளியில் இருந்து டாஸ்மாக்கிற்கு. இம்முறை நீ ஏமாற மாட்டாய். நான் தண்ணி அடிப்பதை நிறுத்தி ரொம்ப காலமாகிறது.

என் காதலியாக மாறின பின் அவளை முதலில் மவுண்ட் ரோடில் சந்திக்க ஏற்பாடாகியது. ஒரு மணி நேரம் காத்த பிறகு அவள் நண்பி அழைத்து காதலியின் மாமா சுனாமி வந்ததாய் அச்சுறுத்தியதால் அவளால் வீட்டிலிருந்து கிளம்ப முடியாதாகையால் ரத்து என்று அறிவித்தாள். பிறகு சந்திப்புகளுக்கு எந்த தடையும் இல்லாமல் திருமணம் வரை சென்றது. இம்முறை சுனாமி நினைவு தினத்தன்று வெளியே செல்ல திட்டமிட்டு பிறகு கைவிட்டோம். மூட நம்பிக்கை காரணமல்ல. ஒரு சந்திப்பு முறிவின் நினைவாக.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...