முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 9


நான் அவள் சுட்டு விரலின் திசையை தொடர்ந்து போய் அந்த நிலையத்தைக் கண்டேன்: உரிந்து விழும் மரம், சாய்-தகரக் கூரை, நீண்ட மொட்டை மாடி மற்றும் முன்னால் இருநூறு மக்களுக்கு மேல் நிற்கமுடியாத சிறு வறண்ட சதுக்கமும் கொண்ட ஒரு கட்டிடம். இங்குதான், அம்மா அன்று சொன்னாள், 1928-இல் ராணுவம் கணக்கில் அடங்கா எண்ணிக்கையில் வாழைத்தோட்ட தொழிலாளர்களை கொன்று குவித்தது. எனக்கு நினைவு தோன்றிய நாளில் இருந்து தாத்தாவால் ஓராயிரம் முறை சொல்லப்பட்டும், திரும்ப சொல்லப்பட்டும் அந்நிகழ்வை நானே வாழ்ந்து அனுபவித்தது போல் அறிந்து வைத்திருந்தேன்.

படைவீரன் பணிநிறுத்தம் செய்யும் தொழிலாளிகளை சட்டவிரோதிகள் என்று அறிவிக்கும் சட்டம் ஒன்றை வாசிக்கிறான்; அதிகாரி சதுக்கத்தை காலி செய்ய ஐந்து நிமிடங்கள் அவகாசம் அளித்த பிறகு மூவாயிரம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் காட்டுத்தனமாய் எரியும் சூரியன் கீழ் அசைவற்று நிற்கின்றனர்; சுடும் உத்தரவு; சடசடவென வெண்ணிற வெங்கனல் வெடிப்புகளில் தோட்டாக்கள் துப்பும் எந்திரத்துப்பாக்கிகள்; பீதியின் பொறியில் மாட்டிக் கொண்டு தெறிக்கும் குண்டுகளின் பசியடங்காத கத்திரிக்கோல்களால் கச்சிதமாக, சிறிதுசிறிதாக நறுக்கி இடப்படும் கூட்டம்.

காலை ஒன்பது மணிக்கு சியனாகோ வந்தடையும் ரயில்வண்டி கப்பல்களில் இருந்து பயணிகளையும், சியராவில் இருந்து வந்தவர்களையும் ஏற்றிக் கொண்டு கால்மணி நேரத்தில் வாழைப்பழ பிராந்தியத்தின் உட்பகுதிகளுக்குள் பயணம் தொடரும். நானும் அம்மாவும் நிலையத்தை எட்டு மணி தாண்டியபின் வந்தடைந்தோம்; ஆனால் ரயில் வர தாமதமாகியது. அப்போது பயணிகள் நாங்கள் மட்டுமே. காலியான தொடர்வண்டிக்குள் நுழைந்ததுமே அவள் இதை உணர்ந்தாள்; விழா உணர்வு கூடிய நகைச்சுவையுடன் கூவினாள், "என்ன வசதி ! மொத்த ரயிலும் நமக்கு மட்டும் தான்"

அது அவளது ஏமாற்றத்தை மறைப்பதற்கான போலி பெருவகை தான் என நினைக்கிறேன்; ஏனெனில் தொடர்வண்டிகளின் நிலைமையில் இருந்து காலத்தின் கோலங்களை கண்கூடாக கண்டேன். அவை இரண்டாம் வகுப்பு தொடர்வண்டிகள்; ஆனால் அங்கு மூங்கில் இருக்கைகள் அல்லது உயர்த்தவும் தாழ்த்தவும் முடியக்கூடிய கண்ணாடி ஜன்னல் கதவுகளுக்கு பதில் ஏழைகளின் அலங்கரிக்கப்படாத வெதுவெதுப்பான பின்புறங்களால் வழவழப்பாக்கப்பட்ட மரபெஞ்சுகளே இருந்தன. அந்த தொடர்வண்டி மட்டுமல்ல மொத்த ரயிலுமே அவற்றின் பழைய நிலைமையுடன் ஒப்பிடுகையில் ஒரு பேய் வடிவாகவே இருந்தது. அந்த ரயில் ஒரு காலத்தில் மூன்று வகுப்புகள் கொண்டிருந்தது. படுஏழைகள் பயணித்த மூன்றாம் வகுப்பு வாழைப்பழங்களை அல்லது கசாப்புக்கான கால்நடைகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பலகை பெட்டித் தொடர்வண்டிகள் பயணிகளுக்காக வண்ணம் பூசப்படாத பலகை பெஞ்சுகள் அமைக்கப்பட்டு மாற்றப்பட்டன. இரண்டாம் வகுப்பில் வெண்கல அலங்காரம் கொண்ட மூங்கில் இருக்கைகள் இருந்தன. அரசு அதிகாரிகளும், வாழைப்பழ நிறுவனத்தின் மேலாளர்களும் பயணிப்பதற்கான முதல் வகுப்பில் நடைபாதையில் தரைவிரிப்புகள் மற்றும் வெல்வெட்டால் பொதியப்பட்ட அமர்வு நிலையை விருப்பத்துக்கு ஏற்ப மாற்றும் வசதி கொண்ட இருக்கைகள் இருந்தன. நிறுவனத் தலைவர், அவரது குடும்பம் அல்லது முக்கிய விருந்தாளிகள் பயணிக்கும் பட்சத்தில், வண்ணக்கண்ணாடிகள் கொண்ட ஜன்னல்கள், சுவர் மீது ஜிகினா பதித்த அச்சுருவ வேலைப்பாடுகள்,மற்றும் பயணத்தின் போது தேநீர் அருந்த சிறுமேஜைகள் அமைந்த வெளி மொட்டைமாடி உடைய ஆடம்பர தொடர்வண்டி ரயிலின் இறுதிப்பகுதியில் இணைக்கப்படும். இந்த கற்பனைக்கு எட்டாத தனிவண்டியின் உட்பகுதியை கண்டுள்ள ஒரு ஜீவனைக் கூட நான் இதுவரை சந்தித்தது இல்லை. என் தாத்தா இருமுறை மாநகரத் தலைவராக இருந்தவர்;அவர் பணம் பற்றி விளையாட்டுத்தன மனப்பான்மை கொண்டவர். ஆனாலும் பெண் உறவினருடன் பயணித்தால் மட்டுமே அவர் இரண்டாம் வகுப்பில் சென்றார். ஏன் அவர் மூன்றாம் வகுப்பில் பயணிக்கிறார் என்று கேட்டால் "நான்காம் வகுப்பு என்று ஒன்று இல்லாததால்" என்று பதிலளிப்பார். ஆனால் ஒரு காலத்தில் இந்த ரயிலின் சற்றும் மறக்கமுடியாத அம்சம் நேரந்தவறாமையே. நகரங்களின் அனைத்து கடிகாரங்களின் நேரமும் இதன் விசில் சத்தத்துக்கு ஏற்ப அமைக்கப்பட்டது.
அன்று ஏதேதோ காரணங்களால் அது ஒன்றரை மணிநேரம் தாமதமாக புறப்பட்டது. இரங்கல் தொனியில் கிறீச்சிட்டவாறு, மிக மெதுவாக அது நகர ஆரம்பித்த போது அம்மா சிலுவை வரைந்து கொண்டாள்; ஆனால் எதார்த்தத்துக்கு உடனடியாக திரும்பினாள்.
"இந்த ரயிலின் ஸ்பிரிங்களுக்கு எண்னையிட வேண்டியுள்ளது", அவள் சொன்னாள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.