Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இந்திய அணித்தேர்வின் பின்னுள்ள காரணிகள்



வங்கதேசத்தில் நடைபெறப் போகும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வில் இம்முறையும் தமாஷ் உள்ளது. இந்த பதிவு அக்குளறுபடிகள் பற்றியது.

முதலில் ரோஹித் சர்மாவின் சேர்க்கை. அவர் பொறுப்பில்லாமல் ஆடியதனாலே கழற்றி விடப்பட்டார். பிறகு ஆடிய உள்ளூர் ஆட்டங்களிலும் ரோஹித் பொறுப்பு காட்டவில்லை. மும்பை அணிக்காக குறைந்த ஸ்கோர்களுக்கு பிறகு ஒரு முன்னூறு அடித்து விட்டு டக் அவுட் ஆனார். ஆனாலும் இந்திய அணியில் இடம் கிடைத்து விட்டது. இங்கு நாம் ”பொறுப்பு” என்கிற வார்த்தையை கவனிக்க வேண்டும். ஒவ்வொரு இளைய வீரரும் அணியிலிருந்து விலக்கப்பட்டவுடன் அவர் மீது ஒரு பழிச்சொல் முத்திரை குத்தப்படும். அது பெரும்பாலும் கூடவே தங்கி விடும். உதாரணமாக சடகோபன் ரமேஷுக்கு கால்கள் நகராது என்றார்கள். சிறப்பான சராசரி இருந்தும் அவர் இந்த ஒரு குற்றச்சாட்டு காரணமாகவே எளிதில் நீக்கப்பட்டார். பொதுவாழ்வில் கூட நாம் அடிக்கடி எதிரிகளை வீழ்த்த பயன்படுத்தும் ஒரு அசட்டுத் தந்திரமே இது. ரோஹித்தின் பிரச்சனை பொறுப்பின்மை அல்ல. அவருக்கு தனக்கே உரித்தான ஆட்டமுறைமை இன்னும் உருவாகவில்லை. ஒரு நாள், டெஸ்டு ஆட்டம் என்று எளிய தகவமைப்பு மட்டுமல்ல இது. ஆட்டமுறைமையை உருவாக்குவது குழந்தை சோறு உண்ண, நடக்க பழகுவது போல்; இங்கிலாந்து மட்டையாளர் கெவின் பீட்டர்சனுக்கு இந்த குழப்பம் ரொம்ப நாள் இருந்தது. இதற்காக அவர் ஜெப்ரி பாய்காட் போன்ற விமர்சகர்களால் கண்டிக்கப்பட்டதும் உண்டு. எனக்கு ரோஹித் மீது தனிப்பட்ட புகார்கள் இல்லை. ஆனால் மேற்குறிப்பிட்ட குளறுபடி அவரது தேர்வின் நியாயமின்மை குறித்து. உள்ளூர் ஆட்டங்களில் தொடர்ச்சியாக, சிறப்பாக மற்றும் திறமையாக ஆடுவதே தேர்வின் அளவுகோல் என்றால் ரோஹித்தை விட பலரும் தராசில் இடம் பிடிப்பார்கள்: மும்பையின் ரஹானே, கர்நாடகாவின் மனீஷ் பாண்டே மற்றும் தில்லியின் ஷிகார் தவான். தராசு முள்ளை ரோஹித் பக்கம் சாய்த்த காரணி என்னவாக இருக்கலாம்?



அவரது ஆட்ட நளினம். இந்திய மற்றும் இங்கிலாந்து தேர்வாளர்களுக்கு ஆட்ட நளினம் மீது தவிர்க்க முடியாத மயக்கம் உண்டு. அடுத்து அணித்தலைவர் ஆதரவு. இந்த கோணத்தை விளக்க முன்னாள் இங்கிலாந்து அணித்தலைவர் நசீர் ஹுசேனின் Playing with Fire எனும் சுயசரிதையிலிருந்து உதாரணம் தருகிறேன். டேரன் காப் எனும் தொண்ணூறுகளின் குண்டு வேகப்பந்து வீச்சாளரை உங்களுக்கு தெரியும். நசீர் அணித் தலைமையின்ன் போது கோப்புக்கு வயதும் உடற்பளுவும் ஏறி வந்தது. ஆனால் அவருக்கு அணியின் இளைய வீரர்களிடத்து செல்வாக்கு அதிகம். நசீருக்கு அது தெரியும். அவர் சொன்னார்: “காப் 90 கிலோ எடை ஆனாலும் நான் அவரை அணியில் வைத்திருப்பேன். அணியில் அவரது தாக்கத்தை நான் அறிவேன்.” ஒவ்வொரு அணியிலும் இத்தகைய சமரசங்கள் மற்றும் சுதாரிப்புகள். அணிக்கு வெளியே அணி மேலாண்மை மற்றும் வாரிய அதிகாரிகள், தேர்வாளர்கள் இடையிலும் இது நிகழலாம். வெளிச்சத்துக்கு வராத உண்மைகள் இவை. ஒரு அணித்தலைவர் தன் நம்பிக்கைக்கு பாத்திரமான வீரர்களின் ஒரு கூட்டணியை அணியில் வைத்திருக்கும் போது மன ஆறுதல் மற்றும் அதிகாரத்தை அடையலாம். குறிப்பிட்ட ஆட்டக்காரர்கள் தகுதியற்றவர்களாக இருக்கும் பட்சத்திலும் இது முக்கியமானது.



அமித் மிஷ்ரா ஓஜ்ஹாவுக்கு பதிலாக தேர்வு செய்யப்படுள்ளார். முன்னவர் இடத்தில் இலங்கைத் தொடரின் போது பின்னவர் கொண்டு வரப்பட்டதற்கு மிஷ்ரா ஆட்டத்தகுதி மற்றும் பார்ம் இல்லாமல் இருந்தது காரணம். இப்போது ஒரு 20-20 ஆட்டத்தில் அடி வாங்கினதும் ஓஜ்ஹா மீண்டும் காணாமல் போகிறார். 20-20 உலகக் கோப்பையின் போதும் இதுவே நடந்தது.



இத்தனைக்கும் ஓஜ்ஹாவின் ஒரு நாள் ஆட்ட விவரத்தொகுதி சிறப்பானது. 9 ஒரு நாள் ஆட்டங்களில் 12 விக்கெட்டுகள். மிஷ்ரா? 5 ஆட்டங்களில் 4 விக்கெட்டுகள். நடந்து வரும் ரஞ்சி தொடரில் திரிபுராவுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளது இவரது தேர்வுக்கு உதவியிருக்கலாம். 90-களின் இறுதியிலிருந்து இடதுகை மட்டையாளர்கள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருவதனால் பெரும்பாலான அணிமேலாண்மைகள் இடதுகை சுழலாளர்களை விட ஆப் சுழலர்களையே பயன்படுத்த விரும்புகின்றனர். குறிப்பாக கங்குலி இடது கை சுழலர்களுகளை பொருட்படுத்தியது இல்லை. ஜோஷி, முரளி கார்த்திக் போன்ற அருமையான சுழலர்களின் தொழில்முறை வாழ்வுக்கு செக் வைத்ததே கங்குலியின் இந்த அணுகுமுறைதான். இலங்கை அணியில் நான்கு அதிரடி இடதுகை மட்டையாளர்கள் உள்ளனர். தோனிக்கு ஓஜ்ஹா மீது நம்பிக்கை போதவில்லை என்பதும் ஒரு காரணம். ஒருவரது ஆட்டத்திறனுக்கு புறம்பாக எத்தனையோ காரணிகள் ஒருவரது தொழில்முறை உய்வை தீர்மானிக்கின்றன.

கிரிக்கெட்டை கிரிக்கெட் மட்டும் தீர்மானிப்பதில்லை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...