Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

அவர்களின் விசித்திர கற்பனைகள்


கடந்த ஆறு மாதங்களில் மூன்று தடவைகள் விழுந்தேன். ஒரே இடத்தில் (கால் பாதம்)அடி. வெவ்வேறு விளைவுகள். வெறும் சுளுக்கு, சுண்டு விரலில் எலும்பு முறிவு மற்றும் மேல்பாத எலும்பு முறிவு. கூடுதலாக இம்முறை நான் அணியும் காலிப்பர் (வாதத்தால் கால் பலவீனமானவர்கள் அணியும் குழல் போன்ற கருவி) நெளிந்து கோணியது. இப்பதிவின் தலைப்பில் உள்ள விசயங்கள் எனக்கு உருவாக இல்லை. ஜோசியரை பார்க்கவோ, வழிபாடு செய்யவொ விதியை நோகவோ இல்லை. மிகச்சிறு வயதில் இருந்தே விழுகை எனக்கு பழகி விட்ட ஒன்று. அதாவது அப்போது எல்லாம் காலிப்பர் அணியாததனால் விழுவேன். ஒரு தடவை இதனால் முட்டி எலும்பு முறிந்திட காலிப்பர் கட்டாயமாய் அணிவது என்று தீர்மானித்தேன். மேலே குறிப்பிட்ட மூன்று முறைகள் காலிப்பர் அணிந்ததனால் ஏற்பட்டன. என் காரண-காரிய போக்கு சற்று இடறி விட்டது.

கடந்த 8 வருடங்களாக Rainbow Orthopedics எனும் நிறுவனத்திடன் இருந்து தான் காலிப்பர் வாங்கி வருகிறேன். தேனாம்பேட்டையில் ராஜ் டி.வி அலுவலகம் தாண்டி வந்தால் ஒருகடை முன்பாக கயிற்றில் பத்திரிகைகள் தொங்க போட்டு, மாலையானால் ஒரு வெள்ளை வேட்டி கும்பல் பெஞ்சுகளில் அமர்ந்து தெனாவட்டாக தண்ணி அடிக்கும். அவர்களுக்கு பக்கத்தில் உள்ளது RO அலுவலகம். முந்தின கருவி வரை ஸ்டெடியாக தான் இருந்தது. இக்கருவியில் லாக் எனும் முட்டி இணைப்பை மடிக்கவும் நேராக்கவுமான பகுதியை வெளியில் வாங்கி பொருத்தி இருந்தார்கள். பழைய மாதிரி சுதேசி லாக் சரியாக விழாமல் சிலரை விழ வைத்து விட்டதாம். ஆனால் புது லாக்கில் எனக்கு கண்டம் இருந்ததை அப்போது அறியவில்லை. புது காலிப்பர் கனமாக இருந்தது. நான் காரணம் கேட்டதற்கு லாக் கனமாக இருந்ததால் கருவியும் கனமாக்க வேண்டி வந்தது என்றார்கள். வித்யா பாலனுக்கும் தான் மூக்கு பெரிசாக உள்ளது; அசினுக்கு கண்கள் கோணி உள்ளன. அதற்காக? வெளியிலிருந்து தருவித்த லாக் நான் எழுந்து நின்றால் தானாக விழுந்து பொருந்திக் கொள்ளும். சில சமயம் நான் நடந்தால் உற்சாகத்தில் அதுவும் எழுந்து கொள்ள முட்டி மடிய நான் விழுவேன். உற்றோர் நண்பர் கேட்டனர்: முதல் தடவையே ஏன் சரி செய்ய வில்லை?

நான் பார்த்தை கேட்டதை நடந்ததை நம்புபவனல்ல. ஆதாரபூர்வமாய் தீர்க்கமாய் விளங்கும் மட்டும் எதுவும் உண்மை அல்ல. முதல் இருமுறை வீழ்ச்சிகளின் போது நான் ஒரு நீண்ட அரைகால் சட்டை அணிந்திருந்தேன்; அதன் துழாவும் விளிம்பு மேற்சொன்ன லாக்கில் மாட்டி இழுத்து விட்டதென்பது என் கண்டுபிடிப்பு. தீர்வாக குறிப்பிட்ட அரைக்கால்சட்டையை தூக்கி கடாசினேன். மூன்றாவது முறை விழுந்த போது புறக்காரணிகள் காரணமல்ல, RO தான் குற்றவாளிகள் என்று தீர்மானித்தேன். ஏன் இம்முறை ஒரு நீண்ட சட்டை நுனியோ, வேறுகால் சட்டையோ ஏமாற்றி இருக்கலாம் இல்லையா? இல்லை. ஏன் எனில் இம்முறை விழுந்த போது நான் நிர்வாணியாக இருந்தேன்.

மூன்று வீழ்ச்சிகளுக்கும் ஒரு பொதுப்பின்னணி உள்ளதாய் மனைவி சொன்னாள்: உறங்காத இரவுகளைத் தொடர்ந்த மூன்று கலக்கமான காலைகள். ” நீ தூக்க கலக்கத்தில் லாக்கை சரியாக போடாமல் நடந்துள்ளாய்”. நான் இதை கட்டாயமாக மறுத்தேன்: “பார் இம்முறை சிறிது தூரம் சரியாக நடந்த பின்னரே வீழ்ந்தேன். ஆதாரம் என் பக்கம்”.

முதல் இருமுறைகளும் விழுவதற்கு கால் நொடி முன்னரே எனக்கு அது தெரிந்திருந்தது; ஒரு ஆபத்தை தடுக்க முடியாதே என்ற ஆற்றாமையே ஏற்பட்டது. பெரும்பாலும் ஒரு யோசனை நிலையில் தான் தலைவெட்டப்பட்ட துரோணர் போல் விழுந்தேன். இம்முறை அலசி புரிய அவகாசம் இல்லை. பீசா கோபுரம் போல் காற்றில் இழுக்கப்படும் மைக்ரோ நொடிகளில் தான் விழுவதாகவே உணர்ந்தேன். கடுமையான பீதியில், என்னிடம் கோபித்துக் கொண்டு சில நாட்களாக தொலைபேசியில் பேசாத அம்மாவை கத்தி அழைத்தேன். ஆணவம் மூத்தவனுக்கு இருப்பதில் கொடுமையான அனுபவம் சிந்திக்க முடியாது கடும் பீதியில் கைவிடப்படுவது தான். ச்சே!

விழுந்த பின்னான நொடிகளில் முதலில் தோன்றியது என்ன?

ஜூலை மாதம் விழுந்த சுளுக்கி கொண்ட போது ஓய்வுக்காக நான் முந்தைய அலுவலகத்தில் ஒரு மாதம் விடுப்பெடுத்தேன். அடிக்கடி விடுப்பெடுப்பவன் என்பதால் யாரும் என் விபத்தை நம்பவில்லை. பிறகு இது குறித்து என்னை விசாரித்த தலைமை மேலாளருக்கு நான் நுட்பமாக நடந்ததை விவரித்தேன். முதலில் அவர் முகம் கூம்பு வடிவாகி பப்பாளியாகி முட்டை வடிவம் வந்து பிறகு அசல் வடிவம் பெற்றது. ’என்னை அடிக்காதே’ என்ற பாவனையில் அவர் உடனே கூறினார்: “இனிமேல் விழுந்து வைக்காதீர்கள்”. பிறர் கருணையற்றவர்கள்; கூருணர்வு மழுங்கினவர்கள் என்று நானிதனால் சொல்ல உத்தேசிக்க இல்லை. மனிதர்களுக்கு சகிப்புணர்வு குறைந்து விட்டது.



அக்டோபர் மாதம் விழுந்து முடித்து என் சமீப அலுவலகம் சென்ற போது ஒரு நபர் கேட்டார்: “என்ன விழுந்து அடிபட்ட மாதிரியே தெரியவில்லையே”. மேலும் சிலருக்கு என்ன அடி, எப்படிப்பட்ட விபத்து என்றெல்லாம் விளக்கிய போது எளிதில் குழம்பினார்கள். தவறில்லை, அவர்களுக்கு அப்படி ஒன்றும் என்றுமே நடந்திருக்க வாய்ப்பில்லை. கம்பீரமாய் தீவிர இலக்கிய சிந்தனையில் நடந்து போகும் போது, அதுவும் வீட்டுக்குள்ளே, பட்டென்று விழுந்தேன் என்று சொன்னால் நம்ப சிரமம் தான். அலுவலகத்துக்கு திரும்பிய பின் யாரும் விசாரிக்கவில்லை என்பது எனக்கே ஒரு குற்றவுணர்வை ஏற்படுத்தியது. இப்படியான கலவரச்சூழலில் விழுந்த பின் எனக்கு முதலில் தோன்றிய பிரச்சனை: “அட யாரும் நம்ப மாட்டார்களே!”

மருத்துவமனையில் எக்ஸ்.ரே பார்த்து விட்டு மருத்துவர் பேசிய வார்த்தைகள் தாம் விநோதங்களிலே உச்சம். நான் அறிய விரும்பியது கால் எப்போ குணமாகும்; எத்தனை நாட்கள் ஓய்வு தேவை. என் கேள்விகள் அவர் காதில் விழவில்லை. குழந்தைக் குழறலுடன் சொன்னார், “உங்கள் எலும்புகள் மிகவும் மெலிந்து உள்ளன. ஏன் இப்படியே ஓய்வெடுக்காமல் நடந்து வந்துள்ளீர்கள்?”
“உங்களை பார்க்கத்தான் டாக்டர்”
“உங்கள் கால் எலும்புகள் wafers போல் உள்ளன. எளிதில் நொறுங்கி விடும்”. தொடர்ந்து அவர் ஒரு நீண்ட விளக்கம் அளித்தார். எனது தீர்க்க முடியாத குறைகளைப் பற்றின அவ்வுரையை முடிந்த மட்டில் ஒரு அறிவியல் ஈடுபாட்டுடன் சிரமப்பட்டு கேட்டேன். ஆனால் என்னை முழுக்க ஆட்கொண்டிருந்தது ஒரு வியப்புணர்வு: அவரது உவமை அல்லது அலாதியான கற்பனை குறித்து. குழந்தையாய் இருக்கையில் wafers பிஸ்கட்டை நிறையவே சுவைத்திருக்கிறேன். வாயில் இட்டால் கரையும் படி அத்தனை மெல்லிசாக, உட்துளைகள் கொண்டிருக்கும். நானும் அக்காவும் அதற்காக கட்டிப் புரண்டிருக்கிறோம். உடல் உறுப்பை பிஸ்கட்டோடு ஒப்பிடும் அம்மனநிலை எப்படியானதாக இருக்கும்? அடுத்த முறை கால் எப்படி முறிந்தது என்ற கேள்விக்கு பதிலளிக்க ஒரு வார்த்தை கிடைத்து விட்டது. அவர்களுக்கு நிச்சயம் புரியும்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...