முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனுஷ்யபுத்திரன், அறிவாளி அசடுகள் மற்றும் புத்தக தேர்வு

அறிவாளிகள் ஆபத்தானவர்கள்; அசடுகள் தங்கள் தன்னம்பிக்கை மிகுந்த அறியாமையால் நம்மை தொடர்ந்து வியக்க வைப்பவர்கள்.இருவரும் எதிர்பாராத தருணத்தில் ணங்கென்று நம் பொட்டில் அடிப்பார்கள். மூன்றாவது ஒரு வகை உண்டு. உள்ளதிலே சிரமம் இவர்களை சமாளிப்பது தான்: அறிவாளியாய் தோன்றும் அசடு.

மூன்றாம் வகையினரை படு ஜோராக நேரிடுபவர் மனுஷ்யபுத்திரன் அறிவாளி அசடுகள் பொதுவாக ஒரு நிலைகுலையாத தன்னம்பிக்கையுடன் தாக்குவார்கள். இவர் ஹிட்டிலிருந்து கிளம்பி வரும் அதிமனிதன் போல ஒரு புது அவதாரம் எடுத்து மேலும் மூர்க்கமாக எதிர்வினை ஆற்றுகிறார். இதை ஒரு கலையாகவே மாற்றி வைத்திருக்கிறார்.



தற்போது நடந்து வரும் புத்தக சந்தையில் உயிர்மை கடையில் ஒரு நபர் ம.புவின் இரண்டு கவிதை புத்தகங்களை எடுத்து வந்து அவரிடமே கேட்கிறார்: “இதுல எந்த புத்தகம் நல்லா இருக்கும். சொல்லுங்க சார்”.
ம.பு: “ரெண்டுமே படுமட்டமான புக்ஸ் சார். வாங்காதீங்க. ரொம்ப ஏமாற்றமாயிடும்”
அறிவாளி-அசடு: “இல்லை சார், நான் அந்த அர்த்தத்துல கேக்கல. எத வாங்குறதுண்ணு ஒரு குழப்பத்துல கேட்டேன் ”
ம.பு: “ நானும் அதனால தான் சொல்றேன். படுகேவலமான புத்தகம் ரெண்டுமே. தயவு செஞ்சு வாங்காதீங்க”
அ-அ ஜகா வாங்குகிறார்.

அ-அ மற்றும் ம.பு தொடர்பான மற்றொரு சம்பவத்தை எனது உற்ற நண்பர் ஒருவர் வழி இன்று ஒரு அரட்டையின் போது தெரிய வந்தது. சாரு இஸ்லாம் குறித்து ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார். அதைப் படித்த ஒரு இஸ்லாமிய நண்பருக்கு கொலைவெறி: அதில் இஸ்லாம் பற்றின தகவல்கள் போதுமான அளவு இல்லையாம். அவர் என் நண்பர் முன்னிலையில் உயிர்மைக்கு தொலைபேசி போட்டு ம.புவிடம் பொருமுகிறார். ம.பு சுருக்கமாக பதில் கூறி வைத்து விடுகிறார். என்ன சொன்னார்? “உங்களுக்கு இஸ்லாம் பத்தி தெரியணும்னா குரான் படிங்க. அதுக்கு சாருவோட நூல் தேவையில்லை”. இதில் சுவாரஸ்யமான சேதி இஸ்லாமிய நண்பரின் நோக்கம் தான்: ம.புவிடம் மோதி தன் தரப்பை நிறுவி அப்புத்தகத்தை திருப்பிக் கொடுத்து அதற்கான காசையும் சில்லறை பாக்கியில்லாமல் திரும்பப் பெற உத்தேசித்திருக்கிறார். ம.பு பல் மொத்தமும் காட்டி சீறியதில் அவர் குழம்பி அதை கேட்க மறந்து விட்டிருக்க வேண்டும். அல்லாவிட்டால் சற்று அரண்டிருக்க வேண்டும். இ. நண்பரின் தரப்பில் ஒரு ஆதாரத் தவறு உள்ளது. என்ன?

ஒரு புத்தகம் வணிகப் பண்டம் அல்ல. அது பல தளங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டிய ஒரு உரையாடல். ஒரு உரையாடல் பிடிக்காமல் போகும் போது நாம் அங்கிருந்து விலகலாம். நாக்கு நீளம் என்றால் அறம் பாடலாம். அவ்வளவே. ஆனால் உரையாடலை திரும்பப் பெற முடியாது. இன்று விற்பனைப் பண்டங்களையே திரும்ப கொடுக்க முடியாது. கடைகளில் அடிக்கடி இது குறித்த சச்சரவுகள் நிகழ்வதை காணலாம். தி.நகர் பெரியார் சாலையில் உள்ள அழகப்பர் செட்டி நாடு உணவகத்தில் ஒரு மத்திய வயது பெண் வந்து பெரிய அலப்பறை கொடுத்ததை பார்த்தேன். அவர் 85 ரூபாய்க்கு வாங்கி சென்ற சிக்கன் கறியில் துண்டுகள் போதவில்லையாம். “காசை திரும்பக் கொடு” என்று வம்பு செய்தவரை கல்லா ஊழியர் முதலில் பொருட்படுத்த இல்லை. அப்புறம் ஒரு கலக மனநிலை ஏற்பட்டு அம்மணி கல்லா மேஜையில் உள்ள அலங்கார ஜாடிகளை சேதப்படுத்தினார். பிறகு ஊழியர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட அவரவரின் குடும்ப சிறப்புகளை அலசி விட்டு அப்பெண்ணை அகற்றினர். வெகு நேரம் கழித்தும் உணவக வாயிலில் பக்கடா மீசை முண்டாசு சகிதம் பிதுங்கி நிற்கும் காவல் மாமா தான் தாங்காமல் பொருமிக் கொண்டிருந்தார்: “பீஸ் பத்தலையாம் பீஸ். இவ்வளவு பெரிய ஹோட்டலுக்கு வாடகை, மீன்கட்டணம் எல்லாம் எப்பிடி கட்டறதாம். மளிகை சாமான் விலையெல்லாம் எகிறி இருக்கேங்கிற விவஸ்தை வேணாம்”. வாங்கும் பொருளின் மதிப்பு பற்றி சதா சந்தேகப்பட்டு அவஸ்தைப்படுவது ஒரு அலாதியான நுகர்வோர்த்தனம்.



ஆனால் பொதுவாக விலை ஏறஏற நாம் தரத்தை குறித்து எளிதில் சமாதானம் கொள்கிறோம். உதாரணமாக தற்போது நான் பயன்படுத்தும் மடிகணினியை பாதி விலைக்கு செய்து விடலாம் என்று ஒருவர் நிறுவினால் நான் நிச்சயம் மறுப்பேன். அவதார் எனும் படத்தை பங்களூருவில் ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி பார்த்த ஒரு மாமாவை டி.வியில் பேட்டி கண்டார்கள் அவர் சொன்னார்: “237 மில்லியன் டாலர் செலவில் படத்தை எடுத்திருக்கிறார்கள். இதை பார்க்க ஆயிரம் ரூபாய் ஒன்றும் அதிகம் அல்ல”. விலை குறைய குறைய நம் சந்தேகம் வலுக்கிறது. தமிழில் உள்ள சில அருமையான நூல்களை நாம் ஆங்கிலத்தில் வாங்குவதென்றால் பத்து மடங்கு அதிகம் செலவிட வேண்டும். குறிப்பாக புத்தகம் நல்லா இல்லே என்று ஆங்கில பதிப்பாளரின் வேட்டியை உருவ முடியாது. ஆயிரக்கணக்கில் செலவிட்டு ஆங்கில நூல்கள் வாங்கி ஏமாந்தவர்களுக்கு இது புரியும். எழுத்தாளர் வாசந்தி டைம்ஸ் நியுவின் முதல் தமிழ் சிறப்பிதழில் எழுதின கட்டுரை ஒன்றில் இதை குறிப்பிட்டிருக்கிறார்.

திருடர்களிடம் இருந்து திருட விரும்பும் விவேகி வாடிக்கையாளர்கள் உண்டு. பெரும்பாலும் மத்திய, உயர்மத்திய வகுப்பை சேர்ந்தவர்கள். மடுவாங்கரையில் என் வீட்டுப்பக்கத்தில் ஒரு பைரேட்டட் டி.விடி கடை போட்டிருக்கும் நபர் இப்படியான புகார் ஒன்றை தெரிவித்தார். ஒரு டி.வி.டி வாங்கி பார்த்து சரியா தெரியல என்று திரும்பக் கொடுத்து மற்றொன்று பெற்றுப் போகிறார்கள். இப்படியே 50 ரூபாய்க்கு மூன்று நான்கு படங்கள் ஓசியில் பார்த்து விடுகிறார்கள்.

அறிவாளி அசடுகளுக்கு திரும்புவோம். இவர்களை சுதாரிக்கையில் ம.புவிடம் கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது: டைமிங்.

முதன்முறை ம.புவை சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கும் போது எதேச்சையாக குறிப்பிட்டார்: ”நமது ஈகோவை வீங்க வைத்துக் கொள்வதே அராஜகவாதிகளிடம் இருந்து காப்பாற்றும். இல்லாவிட்டால் புழு போல் தேய்த்து விடுவார்கள்”.

அம்சம் இரண்டு: அ-அ நபர்களை நேரிடும் போது அவர்களை விட மிகையான தன்னம்பிக்கையுடன் அவர்களின் தர்க்கத்தையே தனக்கு சாதகமாக திருப்பி விடுகிறார். கூட தாளிப்புக்கு அவர்களை விட ரெண்டு கடுகு அதிகம் போடுகிறார். இத்தனை மென்மையான மனிதர் முரட்டு பாவத்தை மற்றும் காரத்தை சில சமயம் படு சரளமாக வெளிப்படுத்துவதை கவனித்திருக்கிறேன். புன்னகையை விட கோபம் பாதுகாப்பானது..

முதலில் குறிப்பிட்ட எங்கள் நட்பு வட்டார அரட்டை ஒரு தீர்மானத்தை வழிமொழிந்து முடிந்தது: அதாவது தற்போது நூற்றுகணக்கில் வெளியாகும் புத்தகங்களை அட்டை பார்த்து மட்டுமே வாங்கக் கூடாது. நானும் வாசகர்கள் கவனமாகவே வாங்கணும் என்று சொல்லி வைத்தேன். ஆனாலும் இதுவரை நான் வாசித்துள்ள பல அருமையான நூல்கள் தாராளமயமாக்க கொள்கை அடிப்படையில் என் மனைவி அள்ளி வந்தவை தாம். நான் தயங்கித் தயங்கி புரட்டி வாசித்து நிதானித்து வாங்கிய நூல்கள் பல ஏமாற்றமளித்து உள்ளன.

நூல்கள் நமக்குள் நிகழ்த்தும் ரசாயனத்தை வட்டம் போட்டு விளக்குவதோ தீர்மானிப்பதோ அததனை எளிதல்ல.

கருத்துகள்

Thangavel Manickadevar இவ்வாறு கூறியுள்ளார்…
அட்டகாசம் போங்கள். ம.பு ம.புதான். உங்கள் எழுத்தை இரண்டு தடவை படிக்க வேண்டி இருக்கிறது. கருத்தாழம் மிக்கவையாய் மிளிறுகின்றன. வாழ்த்துக்கள்
வெள்ளிநிலா இவ்வாறு கூறியுள்ளார்…
dear friend., pls read this blog and notice about this in your blog if you like. thanking you !
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//notice about this in your blog//

வாழ்த்துக்கள்!
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
வெள்ளிநிலா என்ன சொல்கிறீர்கள் என்றே புரியவில்லை
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி தங்கவேல் அவர்களே!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...