Skip to main content

ஹர்பஜன் தேங்கி விட்டாரா?

சச்சின் தேங்கி விட்டதாக சொல்லி திட்டு வாங்கிய முன்னாள் இந்திய மட்டையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் தற்போது மீண்டும் அதே விமர்சனத்தை ஹர்பஜன் மீது வைத்துள்ளார். சொல்லப்போனால் ஹர்பஜன் தன் ஆட்டத்திறனை மீட்டு விக்கெட்டுகள் எடுத்து வரும் கட்டத்தில் சஞ்சய் இதைச் சொல்லியிருக்கிறார். சஞ்சய் சொல்ல வருவது ஹர்பஜன் ஒரு சராசரி வீச்சாளராக உள்ளார், இன்னும் உயரங்களை எட்டவில்லை என்றே. சரி, ஹர்பஜனை எந்த உச்சவரம்பு கொண்டு மதிப்பிடுவது?



2001 ஆஸ்திரேலியா டெஸ்டு தொடரில் 32 விக்கெட்டுகள் சாய்த்த பின் ஹர்பஜனால் தனிப்பட்ட முறையில் ஆட்டங்களை வென்று கொடுக்க முடிந்ததில்லை. ஒரு கட்டம் வரை கும்பிளேவுக்கும் பின்னர் சஹீர், இஷாந்த போன்ற வேக வீச்சாளர்களுக்கும் துணை பந்து வீச்சாளராக திகழ்ந்தார். ஆனால் முதல் நிலை வீச்சாளராக இயங்க வேண்டிய ஆட்டங்களில் அவரால் சுதாரிக்க முடியவில்லை. இந்தியாவின் தலையான சுழலர் சாய தோள் நாடி தவிக்கிறார். இதுவே சஞ்சயை காட்டமாக விமர்சிக்க வைத்துள்ளது. ஹர்பஜனை உலகத்தரம் என்பது தமிழில் உலக இலக்கியம் படைக்கிறோம் என்று பொத்தாம் பொதுவாக சொல்வது போன்றே. மேலும் தீர்க்கமாய் மதிப்பிட்டு தரம் நிறுவ உரைகற்கள் வேண்டும். பஜ்ஜியை நாம் முரளி, கும்ப்ளே மற்றும் வார்னேயோடு ஒப்பிட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட சுழல் மேதைகள் வேறுபட்ட ஆட்டமுறை கொண்டவர்கள். வார்னே சம்பிரதாய கால்சுழல் பந்தையே ஆயுதமாக கொண்டிருந்தார். நினைத்த இடத்தில், தேவைப்படும் திருப்பத்துடன், வேற்பட்ட அளவுகளில் பந்தை இறக்க அவரால் முடிந்தது. அவரது 708 விக்கெட்டுகளில் பெரும்பாலானவை ஸ்லிப்பில் மார்க் டெய்லர் பிடித்தவை அல்லது அவரது பிரம்மாண்ட திருப்பத்துக்காக ஆடி நேராக வந்த பிளிப்பர் பந்துகளில் இழந்தவை. ஐரோப்பிய மட்டையாளர்கள் வார்னேவை அவரது தொழில்வாழ்வின் இறுதிவரை ஒருவித கிலியுடனே ஆடினர். அதே போல் இறுதி வரை அவரால் துணைக்கண்ட மட்டையாளர்களை எளிதில் வீழ்த்தி சோபிக்க முடியவில்லை. வார்னேயுடன் ஒப்பிடுகையில் முரளிதரன் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். அவர் மீது எந்த மட்டையாளரும் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தியது இல்லை. ஆனால் முரளியை விட வார்னே கற்பனைத் திறன் மற்றும் திட்டமிட்டு செயலாற்றும் மதிநுட்பம் மிகுந்தவர். முரளி அளவிற்கு அவர் பந்தின் திருப்பத்தை நம்பி இருக்கவில்லை. இவ்விருவரோடும் நாம் ஹர்பஜனை ஒப்பிடலாம்.



ஹர்பஜனுக்கு இயல்பாகவே சற்று அதிகம் பவுன்ஸ் கிடைக்கும். அவர் தனது பெரும்பாலான விக்கெட்டுகளுக்கு இதனையே நம்பி உள்ளார். மேற்சொன்ன இருவர் அளவுக்கு பஜ்ஜியின் பந்து திரும்பாது. அவர் அதிகம் சிந்திக்கும் வகையறாவும் அல்ல. பொறுமையும் குறைவு. பஜ்ஜியின் ஆயுதங்கள் இரண்டு. திருப்பமுள்ள ஆடுதளத்தில் உள்வரும்-வெளிச்செல்லும் பந்துகளை மாற்றி மாற்றி வீசுவார். புதிய மட்டையாளர்கள் வலதுகை என்றால் ஸ்லிப்பிலும், இடது கை என்றாலும் எல்.பி. அல்லது பவுல்ட் ஆவார்கள். ஆட்டத்திறனின் உச்சத்தில் மட்டும் அவர் வீசும் புளோட்டர் எனும் சுழன்று மிதந்து உள்வருவது போல் தோற்றம் தந்து வெளியே அல்லது நேராக செல்லும் பந்து மிகச்சிறப்பானது. ஆனால் பொதுவாக அவரது தூஸ்ரா எனும் வெளிச்செல்லும் பந்தை மட்டையாளர் கணிக்க ஆரம்பித்து விட்டால் பஜ்ஜியின் ஒரு கை ஒடிந்தது போல. இதோடு ப்வுன்ஸ் இல்லாத மெத்தனமாக தளத்தில் ஆட்டம் என்றால் ஹர்பஜன் முழுக்க சொங்கி ஆகி விடுவார். தட்டையான ஆடுதளத்தில் ஹர்பஜனின் பந்து வீச்சை வார்னே, முரளி மற்றும் கும்பிளேவோடு ஒப்பிடுவது மேலும் நமக்கு புதிய புரிதல்களை தரும்.

ஒரு உதவாக்கரை ஆடுதளத்தில் முரளிதரன் தனது கட்டுப்பாடு மற்றும் இயல்பான திருப்பம் கொண்டு சமாளிப்பார். வார்னே பந்தின் நீளம் மற்றும் கோணத்தை எதிர்பாராமல் தொடர்ச்சியாக மாற்றி மட்டையாளரை குழப்புவார். வார்னேவுக்கும் பந்தை திருப்புவது எந்த தளத்திலும் சுலபமே. மேலும் லைன் மற்றும் லெங்த் மீது அபாரமான கட்டுப்பாடு கொண்டவர் வார்னே. இவ்விருவரையும் விட வேகமாக வீசிய கும்பிளே மெத்தன தளத்தில் கூட சிறப்பான பவுன்ஸ் பெற்றார். அதுவே அவருக்கு பெரும்பாலான விக்கெட்டுகளை பெற்றுத் தந்தது. கும்பிளே லைன் விசயத்தில் கூர்மையானவர். குறை நீளத்தில் வீசுவதே அவரது ஒரே குறையாக இருந்தது. ஒரு விக்கெட்டை வீழ்த்த மணிக்கணக்காய் முயலும் அளவுக்கு இம்மூன்று மேதைகளுமே மகா பொறுமைசாலிகள். பொறுமை தன்னம்பிக்கையில் இருந்து ஊற்றெடுப்பது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். திருப்பம், கட்டுப்பாடு, கற்பனை மற்றும் பொறுமை ஆகிய நான்கிலும் ஹர்பஜனுக்கு போதாமை உண்டு. இந்த போதாமைக்கு அவரது உணர்ச்சிகரமான மன-இயல்பு ஒரு முக்கிய காரணம்.

337 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தும் ஹர்பஜன் தோல்வி மனப்பான்மை மிக்கவர். பொதுவாக ஒரு வீச்சாளரின் சம நிலையை குலைக்க மட்டையாளர்கள் ஆரம்ப ஓவர்களிலேயே ஆதிக்கம் செலுத்த முயல்வார்கள். ஆனால் ஹர்பஜன் விசயத்தில் சமீப தொடர்களில் ஆஸ்திரேலிய மற்றும் இலங்கை மட்டையாளர்கள் மற்றொரு விசித்திர தந்திரத்தை கையாண்டார்கள். அவரை மிக கவனமாக ஆடி ஆரம்ப ஸ்பெல்களில் விக்கெட்டுகள் வழங்காமல் பார்த்துக் கொண்டார்கள். விக்கெட் விழாவிட்டால் தன் பெயரை வரலாற்று நூலில் காணாத முதலமைச்சர் மாதிரி அவர் பதற்றமாவார். அவரது மன-அமைதி குலையும். விக்கெட்டுகள் வீழ்வதில் சூழல், அதிர்ஷ்டம் மற்றும் மட்டையாளரின் திறன் மற்றும் மனநிலை ஆகியவற்றின் பங்கு அதிகம். ஆனால் ஹர்பஜன் அது முழுக்க தன் தவறு என்று எண்ணியபடி அடுத்த ஸ்பெல்களில் மோசமாக் வீச ஆரம்பிப்பார். பிறகு அவரை ஆடுவது சுலபமாகி விடும். உலகில் இந்த நூதனமான முறை ஹர்பஜனுக்கு எதிராக மட்டுமே கையாளப்படுகிறது.

மேற்சொன்ன நான்கு குறைகளும் தற்போது உலக சுழலர்கள் அனைவருக்கும் உள்ள பிரச்சனை எனலாம். பிளைட், லூப் மற்றும் திருப்பத்தை நம்பி மட்டையாளனுக்கு சவால் விட எந்த சுழலருமே இன்று தயாரில்லை. அத்தகைய ஒரு சுழல் பந்து ஆதிக்க காலகட்டம் மேற்சொன்ன மூவர் அணியின் ஓய்வுடன் முடிந்து விட்டது எனலாம். இதற்கு சமீப ஆண்டுகளில் பயன்படுத்தப்படும் மட்டையாட்டத்துக்கு சாதகமான ஆடுதளங்களும் காரணம் எனலாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் சுழல் பந்தாளர்களுக்கு சாதகமான ஆடுதளங்கள் இலங்கையை தவிர வேறு எங்குமே உருவாக்கப்படவில்லை. இந்தியா கூட தன் உள்ளூர் வெற்றிகளுக்கு வேக வீச்சாளர்களை பெரிதும் நம்ப வேண்டியதாகியது. இதுவே இன்றைய சுழலர் தலைமுறையை எதிர்மறை மனப்பான்மையுடன் ஆட வைக்கிறது.

ஹர்பஜனின் கற்பனை வறட்சி மற்றும் எதிர்மறை மனப்பான்மை ஆகியவற்றையே தேக்கம் என்று மஞ்சுரேக்கர் குறிப்பிட்டார். இதை உலக கிரிக்கெட் பந்துவீச்சுக்கு நேர்ந்துள்ள பொதுவான பின்னடைவின் விளைவு என்பதே தகும்.

Comments

priyamudanprabu said…
நல்ல அலசல்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...