Skip to main content

மனுஷ்யபுத்திரன் மீதான அசட்டுப்புகார்களும் ஒரு அபாரக் கவிதையும்

இன்று காலையில் என் கல்லூரி நண்பர்களுடன் ஒரு உஷ்ணமான இலக்கிய விவாதம். மனுஷ்யபுத்திரன் தன்னிரக்க கவிதைகளையே எழுதி வருவதாக ஒரு நண்பர் சொல்லி, பிறகு நான் மறுக்க, அவர் தன் கருத்தை மலைப்பாம்பு போல் விழுங்கி துப்பவும் முடியாமல் பிறகு ஜகா வாங்கினார். நான் ம.புவின் சக்கர நாற்காலியின் அனுகூலங்கள் குறித்த கவிதை அன்றாட வாழ்வின் அபத்தங்கள் குறித்தது என விளக்க, நண்பர் தான் ஒட்டுமொத்த நவீன கவிதை இயக்கமுமே தனிமனித தன்னிரக்கத்தை பேசுவது; அத்தகைய நவீன கவிஞர்களுள் ஒருவர் ம.பு என பொருள்பட சொன்னதாய் ஒரு ஊடுபாதைக்குள் நுழைந்தார்.



ம.பு ஒரே மாதிரியான கவிதைகளை மீண்டும் மீண்டும் எழுதுவதாய் அவதானிப்பது அரைகுறை வாசிப்பின் விளைவுதான். ம.புவின் வாசகனாக மட்டும் அல்ல, பொதுவாக தமிழ் கவிதை வாசிப்பில் உள்ள சிரத்தை இன்மையை குறிப்பிடவே இதை எழுதுகிறேன். நாம் ஒரு எழுத்தாளன் குறித்து ஒற்றை வாக்கியத்தை உருவாக்கி வைத்து தத்தைகளின் கூண்டு வரிசை போல் ஒப்பிக்கிறோம். இன்னும் சில வருடங்களில் முகுந்த் நாகராஜன் என்ன குழந்தைகளைப் பற்றியே திரும்பத் திரும்ப எழுதுகிறார் என்று புகார் செய்வோம்.

ம.பு தனது கவிதை மொழிக்குள் கூறுமுறை மற்றும் கரு சார்ந்து பற்பல சாத்தியங்களை முயன்றுள்ளார். தேவதேவன் அளவுக்கு மீளமீள வரும் ஒரு உருவகத்தை கூட நீங்கள் காட்ட முடியாது. அவருடைய ”நீ” கூட ஒருவர் அல்ல. கீழ் வரும் மனுஷ்யபுத்திரன் கவிதையை பாருங்கள்.


கன்னிமையின் முலைப் பால்



கன்னிமை நீங்கா
உன் முலைகளில்
கசிந்துவரும்
பாலின் மணத்தில்
திடுக்கிட்டு எழுகிறது
இந்த இரவு

காமத்தின் அனல்பறக்கும்
என்முகத்தில் பட்டுத் தெறிக்கிறது
அதன் ஒரு அமிலத் துளி

வெளியே
தொடங்குகிறது
இதற்குமுன் பெய்திராத பெரு மழை
பாலின் வாசனையை
எங்கெங்கும் கொண்டுவரும் ஒரு மழையை
யாரும் அதற்கு முன் பார்த்ததே இல்லை

இன்னும் பிறக்காத
ஆயிரம் ஆயிரம் சிசுக்கள்
இன்னும் திறவாத
கண்களில் நீர் தளும்ப
அம்மையின் முலைதேடி
தவியாய் தவிக்கின்றன

உன் கன்னிமை முலைகளில்
பெருகும் பாலின் விசித்திர சுவையை
ஒரு கணம் தன் நாவால் தொட்டு அறிகிறாய்

பின்
ந்கரவே நகராத
காலத்தின் சுவர்களில்
அதைப் பீய்ச்சுகிறாய்

(31.1.2010
8.32 pm)



மானுட குலம் என்றுமே உணர்ந்து வெளிப்படுத்த முடியாத ஒரு திகைப்பை இந்த கவிதை பேசுகிறது. அதுவும் எத்தனை உக்கிரமாக. பாலமணம் கொண்டு வரும் பெருமழை மிக sensous-ஆன ஒரு படிமம்.

துவங்கி உறைந்து நிற்கும் ஒரு முழுமையை கவனியுங்கள். கன்னிமை, மழைக்கு முன்னான அக்கன்னியின் முலைப்பால் மணம், ஒரே ஒரு துளி இவை துவங்காமலே தேங்கி நின்று விகசிக்கும் தன்மை கொண்டவை.

மழை கூட வாசனையை தான் கொண்டு வருகிறதே ஒழிய பாலை அல்ல. இந்த வராமை, வெளிப்படாமையை கவிதையின் ரகசியமாக, பிரபஞ்ச புதிரின் விடையாக நீங்கள் பல விதங்களில் விளங்கிக் கொள்ளலாம.

”நகரவே நகராக காலத்தின் சுவர்கள்” முக்கியமான வரி. கவிதையின் ஒரே திட்பமான உருவகம் இது. அந்த பெண் அப்படி பீய்ச்சி அடிப்பதில் ஒரு அவலம், குமுறல் அல்லது அவளது வெற்றி உள்ளது. ”சிற்பியின் நகரம்” நினைவு வருகிறது.

இன்னும் எத்தனையோ விதங்களில் படிப்பதற்கான சாத்தியங்களை உள்ளடக்கின கவிதை.

Comments

பொதுவாக, கவிதை புரியாதவர்களே விமர்சகர்கள் ஆகிறார்கள். டி.எஸ். எலியட், எஸ்ரா பவுண்ட் முதலியோரும் விமர்சகர்களாகி இயல்கையில் கவிதையை நழுவ விடுகிற அவலத்தையே காண்கிறோம். அது காரணமாகத்தான் அவர்கள் தத்தம் தொழில்நுட்பங்களைப் பெரிதுபேசித் தம் படைப்புகளை நியாயப் படுத்த நேர்ந்திருக்கிறது. (ஒரு படைப்பாளி விமர்சகராகவும் இருக்க நேர்ந்தால், தன் படைப்புகளுக்கு முன்பாக ஏனையோர் படைப்புகளைக் கட்சிகட்டி, தன்னை நியாயப் படுத்துகிற அவ வதைபாட்டில் இருந்து தப்பவே முடியாது). தன் குஞ்சு பொன்குஞ்சுதானே?

மனுஷ்ய புத்திரனின் கவிதை பற்றி உங்கள் விளக்கம்..., விடுங்கள், என்னதான் மொழி என்னும் கருவி மூலம் வெளிப்பட்டாலும் கவிதை, அறிவுகொண்டு தீண்டும் கிட்டத்தில் இல்லை. அதை உணர்ந்து கொளுவ மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளை நாடுவதே உரிய வழி.

என்றால் பாவம் ஒரு விமர்சகர் என்ன செய்வார்? சிக்கல்தான். அவர், கவிதை போன்ற உன்னதக் கலைகளை, அறிவுக்கு எடுக்காமல் உணர்வுத் தளத்திலேயே சந்திக்கிற வார்த்தைகளைத் தேர வேண்டும். அவ் வழியாகவே வாசகர்களுக்கு அவர் உதவக் கூடும்.

கன்னிமை - காமம் - இருண்மை - அதிர்ச்சி - பெருமழை - புணர்தலும் நிமித்தமும் - இரவு - பால்மணம் - அமிலம் - தாய்மை - சிசுக்கள் - சிறு பெண் - காலம் - மறிதல் - அறிதல் - தடை - வெளிப்பாடு

இப்படி. மன்னிக்க, நான் விமர்சகன் இல்லை. மேலும் சொல்லளவில் உணர்ந்து தொடவே முயல்கிறேன். உள்ளுறைகள் அவரவர் வாசிப்பில் பல்கி வரக் கூடும்.

- ராஜசுந்தரராஜன்
//பொதுவாக, கவிதை புரியாதவர்களே விமர்சகர்கள் ஆகிறார்கள்.//

நண்பர் ராஜசுந்தார்ராஜன் சொல்வது மிகவும் சரி.அந்த வரிகளை இப்படியும் கொள்ளலாம் .
கவிதை புரிந்தவர்கள் விமர்சிப்பதில்லை. இதுவே என் கருத்து,

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...