Skip to main content

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 14



பவனி வீதியில் நீளிருக்கைகள், வெயிலில் துருபிடித்த வாதாம் மரங்கள், நான் வாசிக்கப் படித்த இயற்பாங்கு பள்ளிக்கூடத்து முற்றம். பிப்ரவரி மாத பிரகாசமான ஞாயிற்றுக்கிழமையின் போதான நகரின் மொத்த பிம்பமும் ஜன்னல்வழி ஒரு கணம் ஜொலித்தது.


"ரயில் நிலையம்!" அம்மா வியந்துரைத்தாள், "யாரும் ரயிலுக்காக காத்திருக்காத போது உலகம் எப்படி மாறி விடுகிறது"

இயக்குப்பொறி அப்போது விசிலடிப்பதை நிறுத்தி, வேகம் குறைத்து, நீண்ட ஒப்பாரியுடன் வந்து நின்றது. என்னை முதலில் வியப்பிலாழ்த்தியது அமைதிதான். உலகின் பிற அமைதிகள் இடையே நான் கண்களை மூடிக் கொண்டு அடையாளம் காணும்படியான லௌகீக அமைதி. வெப்பத்தின் எதிரலை பாய்வு மிகத் தீவிரமாய் இருந்தபடியால் மேடுபள்ளமான கண்ணாடி வழி அனைத்தையும் பார்ப்பதாய் தோன்றியது. அங்கு கண்ணுக்கெட்டியவரை மனித உயிருக்கான அடையாளமே இல்லை; சன்னமாய் தூவபட்ட எரியும் தூசால் மூடப்படாத எதுவுமே இல்லை. காலித்தெருக்களில் அமைந்த அந்த பிண நகரத்தை பார்த்துக் கொண்டு, அம்மா மேலும் சில நிமிடங்கள் இருக்கையிலே இருந்தாள். இறுதியில் பீதியில் கூவினாள்: "கடவுளே".

அதுதான் இறங்கும் முன் அவள் சொன்ன ஒரே விஷயம். ரயில் அங்கு நின்ற போது நாங்கள் ஒரேயடியாய் தனிமைப்பட இல்லை என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஆனால் ரயில் இதயத்தை பிளக்கும்படியான விசில் சத்தத்துடன் திடீரென கிளம்பிய போது அம்மாவுடன் நானும் அந்த நரக வெயிலில் கைவிடப்பட்டேன்; அந்த நகரத்தின் ஆகமொத்த துக்கமும் எங்கள் மேல் கவிந்தது. ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை. தகரக்கூரையும், நீடிக்கப்பட்ட மொட்டைமாடியும் கொண்ட அந்த பழைய மர ரயில் நிலையம் கவ்பாய் திரைப்படங்களில் நாங்கள் அறிந்தவற்றின் வெப்பமண்டல திரிபுவடிவாக தோன்றியது. புற்பதர்களின் அழுத்தத்தில் வெடிக்க ஆரம்பித்திருந்த தரை ஓடுகள் கொண்ட அந்த கைவிடப்பட்ட நிலையத்தை கடந்து போனோம்; வாதாம் மரங்களின் நிழலின் பாதுகாப்பை நாடியபோது மதியத்தூக்கத்தின் மந்தத்துக்குள் மூழ்கினோம். நான் சிறுவனாயிருக்கையில் இருந்தே, என்ன செய்வதென்றே அறியாமல் எதிர்செயலூக்கம் அற்ற, அந்த மதிய குட்டித்தூக்கங்கள் மீது அருவருப்பு கொண்டிருந்தேன். ”சத்தம் போடாதே தூங்குகிறோம்”, தூங்குபவர்கள் விழிக்காமலே முணுமுணுப்பார்கள். கடைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் 12 மணிக்கு மூடப்பட்டு, மீண்டும் மூன்று மணிக்கு சற்று முந்தி தான் திறக்கும். வீடுகளின் உட்புறங்கள் சோம்பலின் முழுமறதி நிலையில் மிதந்தன. வெக்கை பொறுக்க முடியாமல் சில வீடுகளில் மக்கள் முற்றத்தில் ஊஞ்சற்படுக்கை தொங்க விட்டு தூங்குவர், அல்லது வாதாம் மரங்களின் நிழலில் நடுத்தெருவில் நாற்காலிகள் இட்டு உட்கார்ந்து தூங்குவர். நிலையத்திற்கு எதிரிலுள்ள மதுக்கூடம் மற்றும் மேஜைக்கோலாட்ட அறை கொண்ட விடுதியும், தேவாலயத்திற்கு பின்னுள்ள தந்தி அலுவகமும் மட்டுமே திறந்திருந்தன. அனைத்தும் என் நினைவிலிருந்து அச்சடித்து எடுத்தது போல், ஆனால் மேலும் சின்னதாய், ஏழ்மையானதாய், மரணச்சூறாவளியில் நிலமட்டமாயிருந்தன: அழுகும் வீடுகள், துரும்பால் துளையிடப்பட்ட தகரக்கூரைகள், நொறுங்கும் கிரானைட் பெஞ்சுகள் மற்றும் துயரார்ந்த வாதாம் மரங்கள் கொண்ட ஆற்றின் அணைகரை ஆகிய அனைத்துமே கண்ணுக்கு புலனாகாத, தோலை வறளச் செய்து சூரணமாக்கி, எரியும் தூசால் உருமாறி இருந்தன.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...