முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 14



பவனி வீதியில் நீளிருக்கைகள், வெயிலில் துருபிடித்த வாதாம் மரங்கள், நான் வாசிக்கப் படித்த இயற்பாங்கு பள்ளிக்கூடத்து முற்றம். பிப்ரவரி மாத பிரகாசமான ஞாயிற்றுக்கிழமையின் போதான நகரின் மொத்த பிம்பமும் ஜன்னல்வழி ஒரு கணம் ஜொலித்தது.


"ரயில் நிலையம்!" அம்மா வியந்துரைத்தாள், "யாரும் ரயிலுக்காக காத்திருக்காத போது உலகம் எப்படி மாறி விடுகிறது"

இயக்குப்பொறி அப்போது விசிலடிப்பதை நிறுத்தி, வேகம் குறைத்து, நீண்ட ஒப்பாரியுடன் வந்து நின்றது. என்னை முதலில் வியப்பிலாழ்த்தியது அமைதிதான். உலகின் பிற அமைதிகள் இடையே நான் கண்களை மூடிக் கொண்டு அடையாளம் காணும்படியான லௌகீக அமைதி. வெப்பத்தின் எதிரலை பாய்வு மிகத் தீவிரமாய் இருந்தபடியால் மேடுபள்ளமான கண்ணாடி வழி அனைத்தையும் பார்ப்பதாய் தோன்றியது. அங்கு கண்ணுக்கெட்டியவரை மனித உயிருக்கான அடையாளமே இல்லை; சன்னமாய் தூவபட்ட எரியும் தூசால் மூடப்படாத எதுவுமே இல்லை. காலித்தெருக்களில் அமைந்த அந்த பிண நகரத்தை பார்த்துக் கொண்டு, அம்மா மேலும் சில நிமிடங்கள் இருக்கையிலே இருந்தாள். இறுதியில் பீதியில் கூவினாள்: "கடவுளே".

அதுதான் இறங்கும் முன் அவள் சொன்ன ஒரே விஷயம். ரயில் அங்கு நின்ற போது நாங்கள் ஒரேயடியாய் தனிமைப்பட இல்லை என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஆனால் ரயில் இதயத்தை பிளக்கும்படியான விசில் சத்தத்துடன் திடீரென கிளம்பிய போது அம்மாவுடன் நானும் அந்த நரக வெயிலில் கைவிடப்பட்டேன்; அந்த நகரத்தின் ஆகமொத்த துக்கமும் எங்கள் மேல் கவிந்தது. ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை. தகரக்கூரையும், நீடிக்கப்பட்ட மொட்டைமாடியும் கொண்ட அந்த பழைய மர ரயில் நிலையம் கவ்பாய் திரைப்படங்களில் நாங்கள் அறிந்தவற்றின் வெப்பமண்டல திரிபுவடிவாக தோன்றியது. புற்பதர்களின் அழுத்தத்தில் வெடிக்க ஆரம்பித்திருந்த தரை ஓடுகள் கொண்ட அந்த கைவிடப்பட்ட நிலையத்தை கடந்து போனோம்; வாதாம் மரங்களின் நிழலின் பாதுகாப்பை நாடியபோது மதியத்தூக்கத்தின் மந்தத்துக்குள் மூழ்கினோம். நான் சிறுவனாயிருக்கையில் இருந்தே, என்ன செய்வதென்றே அறியாமல் எதிர்செயலூக்கம் அற்ற, அந்த மதிய குட்டித்தூக்கங்கள் மீது அருவருப்பு கொண்டிருந்தேன். ”சத்தம் போடாதே தூங்குகிறோம்”, தூங்குபவர்கள் விழிக்காமலே முணுமுணுப்பார்கள். கடைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் 12 மணிக்கு மூடப்பட்டு, மீண்டும் மூன்று மணிக்கு சற்று முந்தி தான் திறக்கும். வீடுகளின் உட்புறங்கள் சோம்பலின் முழுமறதி நிலையில் மிதந்தன. வெக்கை பொறுக்க முடியாமல் சில வீடுகளில் மக்கள் முற்றத்தில் ஊஞ்சற்படுக்கை தொங்க விட்டு தூங்குவர், அல்லது வாதாம் மரங்களின் நிழலில் நடுத்தெருவில் நாற்காலிகள் இட்டு உட்கார்ந்து தூங்குவர். நிலையத்திற்கு எதிரிலுள்ள மதுக்கூடம் மற்றும் மேஜைக்கோலாட்ட அறை கொண்ட விடுதியும், தேவாலயத்திற்கு பின்னுள்ள தந்தி அலுவகமும் மட்டுமே திறந்திருந்தன. அனைத்தும் என் நினைவிலிருந்து அச்சடித்து எடுத்தது போல், ஆனால் மேலும் சின்னதாய், ஏழ்மையானதாய், மரணச்சூறாவளியில் நிலமட்டமாயிருந்தன: அழுகும் வீடுகள், துரும்பால் துளையிடப்பட்ட தகரக்கூரைகள், நொறுங்கும் கிரானைட் பெஞ்சுகள் மற்றும் துயரார்ந்த வாதாம் மரங்கள் கொண்ட ஆற்றின் அணைகரை ஆகிய அனைத்துமே கண்ணுக்கு புலனாகாத, தோலை வறளச் செய்து சூரணமாக்கி, எரியும் தூசால் உருமாறி இருந்தன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.