முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பதிப்பாளரிடம் அல்ல படைப்பாளியிடம் பேசினேன்



மனுஷ்யபுத்திரன் மீது ஒரு பதிப்பாளராக, ஆசிரியராக கறுப்புக் கொடி காட்ட, வெளிநடப்பு செய்ய அடுக்க ஒரு எதிர்க்கட்சியே இயங்குகிறது. கடைசியாக சொன்னது அலங்காரத்துக்கு அல்ல. சாரு புத்தகம் கிழித்த போது நிஜமாகவே சில எழுத்தாளர்கள் வெளிநடப்பு செய்ததாக எனக்கு உள்வட்டாரத் தகவல் வந்தது. என்ன, வெளிநடப்பு தான் யாருக்கும் தெரியாமல் போய் விட்டது. அவர் அரசியல் ஆதாயத்துக்காக சில நூல்கள் வெளியிடுவதான புகார் அகநாழிகை பேட்டியில் எழுப்பப்பட்டுள்ளது. அதை ம.பு மறுத்துள்ளார். நட்சத்திரங்களையும், பிரமுகர்களையும் முன்னிறுத்துவதாக பிரபலமாக முணுமுணுக்கப்படுகிறது. அட, என் நண்பர்களுக்காகத் தானே உயிர்மை நடத்துகிறேன் என்று பதில் தருகிறார். ஆனால் இத்தனை சுவாரஸ்யங்களையும் தாண்டி சில முக்கியமான சின்ன சேதிகள் கிரிக்கெட்டில் byes போல கவனிக்கப்படாமல் போகின்றன.

முதலில் அவர் படைப்புத் தளத்தில் ஜீவாத்மாக்களுக்கு மரியாதை தருகிறார். அதற்கு அவரது ஈகோ குறுக்கே நிற்பதில்லை. தன் படிநிலையில் அவர்களுக்கான இடம் என்ன என்பதையும் வெளிப்படையாக வைத்துள்ளார். இது முக்கியமானது. முகுந்த் நாகராஜன், கருணாகரமூர்த்தி உள்ளிட்டோரின் படைப்புத் திறனை ஆரம்பத்தில் கவனிக்கவில்லையே என்ற குற்றவுணர்வு இப்போதும் அவருக்கு உள்ளது. இந்த தார்மீக உணர்வு இன்று மிகச்சிலருக்கே உள்ளது. கவிதை பிரசுரத்தில் லாப நோக்கின்றி அவர் காட்டும் ஈடுபாடு குறித்து இன்றிரவு நிலவின் கீழ் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன். இதோ மற்றொரு உதாரணம்.



என் நண்பரும் முக்கிய தலித் கவிஞருமான நட.சிவகுமார் இருபது வருடங்களுக்கு மேலாக இயங்கி வருபவர். உவர்மண் தொகுப்பால் பெரும் கவனத்துக்கு ஆளானவர். ஆனால் அவருக்கு விமர்சகர்கள் போதுமான வெளிச்சம் இன்னும் அளிக்கவில்லை. இதற்கு அரசியல் ஒரு முக்கிய காரணம். சிவகுமார் தனது இதுவரையிலான கவிதைகளை மொத்தமாய் தொகுத்து வெளியிட விரும்பினார். அவர் அணுகிய பதிப்பாளர்கள் ’கிலோவுக்கு எத்தனை பேரீச்சம் பழம் வேணும்’ என்கிற ரீதியில் பேசியிருக்கிறார்கள். உயிர்மை தனக்கு சரியான படைப்பு வெளியை, அங்கீகாரத்தை பெற்றுத் தரும் என்று நம்பினார் சிவகுமார். என்னிடம் ம.பு வின் எண்ணை வாங்கினார். இரண்டு வாரங்கள் பேசத் தயங்கி இருக்கிறார். முடியாது என்று விட்டால் அவமானமாகி போகுமே என்ற அச்சம். இத்தனை வருடங்களாய் தமிழ்ச்சூழலில் இயங்கியதால் ஒரு மூத்த எழுத்தாளனுக்குள் சேகரமாகிய அச்சம். பிறகு போனால் போகட்டும் என்று பேசியிருக்கிறார். அவர் சற்றும் எதிர்பாராதபடி அன்புடனும் மரியாதையுடனும் பேசியிருக்கிறார் ம.பு. பிறகு என்னிடம் தொடர்பு கொண்ட சிவகுமார் இப்படி சொன்னார்:
“மனுஷ்யபுத்திரன் ஒரு வணிகராக என்னை நோக்கவில்லை. ஒரு படைப்பாளியாக என்னிடம் அவர் பேசினார்!”

படைப்பு அரசியலின் அச்சுபிச்சு கருத்து நெரிசலில் சிவப்பு விளக்கு மட்டுமே நம் கண்களுக்கு புலப்படும். இதையெல்லாம் யார் கவனிக்கிறார்கள்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...