முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நித்யானந்தாவும் FTV மாடலும்




சில மாதங்களுக்கு முன் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட பனிமுலை இணையதளத்தில் மண்ணுண்ணி என்ற பெயரில் சில வேடிக்கை/அரசியல் கட்டுரைகள் எழுதினேன். அதிலொன்றை இங்கே மறுபிரசுரிக்கிறேன்


குடுமி போட்ட ஐயங்காரர் மாமா வாயில் இருந்து காலை வேளையில் அதுவும் ஒரு பக்தி நிகழ்ச்சியில் நித்யானந்தாவுக்கான விளக்கம் வரும் என்று நான் எதிர்பார்க்க இல்லை. மேலும் விளக்குவதற்கு முன் சத்தியபிரமாணம் ஒன்று:
நான் விசுவாசியோ அவிசுவாசியோ அல்ல. நித்யானந்தாவின் நடைமுறை ஞானம் மற்றும் லௌகீக சாமர்த்தியத்தின் மீது அபார மரியாதை கொண்டவன்.


விஜய் டீவியில் சுமார் ஏழு மணிக்கு, எச்சில் சாப்பாடு கேட்டு ஜன்னல் திண்டில் காக்கா கரையும் வேளையில், குடுமி மாமா சொன்னது என்னவென்றால்: “ஒருவருக்கு நல்ல குரு அமையாமல் போவது ஒரு நல்ல மனைவி அல்லது நல்ல மகன் அல்லது நல்ல மருகள் அமையாமல் போவது போல். இதற்கெல்லாம் காரணம் முன் ஜென்ம பாவம். நல்ல குரு அமைவதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்”.

நான் எவ்வளவு பெரிய பாவி என்பதை உடனே உணர முடிந்தது. ஜெயா டீவியில் ஒரு குடுமி பஜார் சுருதி டான்ஸ் (அதாவது பாட்டின் சுருதி)ஆட பஜனை செய்து கொண்டிருந்தது. குருக்கள் அசுரன் வாமனனை விஷ்ணு பாதாளத்துக்கு அனுப்பின கதையை விளக்கி கொண்டிருந்தார். வாமனனின் கதிக்கு காரணம் அவர் விஷ்ணுவின் கால்களின் சரியான சைஸ் என்ன என்று கவனிக்காததே என்றார் பஜனைத் தலைவர். அதுவும் விஷ்ணு இந்த அளவைப் பற்றி பன்னிப் பன்னி வெவ்வேறு ஸ்தாய்களில் பாடி பாடி சொல்லியிருக்கிறார். ஆனால் பாவம் செய்த வாமனன் நம்ம வகை.attention deficit disorder. பஜனை குழுவில் ஒரு சிறுவன் ஸ்பஷ்டமாக கொட்டாவி விடும் வேளையில் நான் அங்கிருந்து ராஜ் டீவிக்கு வந்தேன். பால் தினகரன் நம்மைப் பிடித்த சாத்தானும், இலவச இணைப்பான பாவங்களும் இப்போதே துரத்தப்படும் என்றார். காலை வேளையில் முன்னணி தொலைக்காட்சிகள் பக்தி மார்க்கம் செல்வதற்கு மக்களின் ஒரு சின்ன செண்டிமண்ட் தான் காரணம் என்று நினைத்திருந்தேன். அதாவது கடவுள் நாமம் நினைத்து, சொல்லி அல்லது கேட்டு ஆரம்பித்தால் அனறைய நாள் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை. ஆனால் நடப்பதோ வேறு. பாவி பாவி என்று நினைவுறுத்தப்பட்டு குற்றவுணர்வுடன் நமது மக்களின் காலை வேளை ஆரம்பிக்கிறது.

இதற்கு Ftv-ஏ தேவலாம் போல. Ftv Breakfast-இல் சிகையலங்கராம், முக ஒப்பனை, இமை வரைதல் என வெவ்வேறு உதவியாளர் கரங்கள் தன் மீது ஈடுபட்டிருக்க பிளாக்பெரி நுண்பேசியில் விரல்களால் உலாவியபடி கன்ன எலும்புகள் துருத்தின ஒரு மாடல் சொல்கிறாள்: “இந்த மழைப்பருவ ஷோவுக்காக மூன்று மாதங்களாய் கடுமையாக தயாரித்துக் கொண்டு வருகிறேன்”. இத்தனை வேலைகளுக்கு இடையே பாவமூட்டைகள், பார்ப்பானின் காலடி அளப்பது, குற்றவுணர்வுக்கு எல்லாம் எங்கே நேரம் சொல்லுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.