Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சந்தேஷம்: வீட்டைத் துண்டாக்கும் அரசியல்



இந்த மாத உயிர்மையில் எழுதியுள்ள பத்தியில் சாரு கேரள முதலமைச்சருக்கு தான் எழுதிய திறந்த கடிதத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். கேரளாவில் ஒரு முதலமைச்சரையே கேள்வி கேட்கும் சுதந்திரம் இருப்பதாய் சொல்லி இருந்தார். தமிழகத்தில் உள்ளது ஒரு மாபெரும் பொம்மலாட்ட மேடை மட்டுமே. இன்று மதியம் சத்தியன் அந்திக்காடு இயக்கிய ”சந்தேஷம்” என்றொரு மலையாளப்படம் பார்த்தேன். ஏஷியானெட்டில் ஒளிபரப்பானது. ஸ்ரீனிவாசன் திரைக்கதை எழுதிய இப்படம் எனக்கு சாருவின் மேற்சொன்ன கருத்தை நினைவூட்டியது.

”சந்தேஷம்” ஒரு அரசியல் பகடி. அதுவும் கேரளாவின் மிக வலிமையான செங்கொடிக் கட்சியை கிண்டலடிக்கும் படம். கூடவே கேரள காங்கிரசாருக்கும் நிறைய முட்டை தக்காளி உண்டு. புத்திசாலித்தனமான திரைக்கதையும், திலகனின் அபாரமான நடிப்பும் படத்தின் பிரதான வலிமைகள். மிகை உணர்ச்சி, உபதேசங்கள், மேலோட்டமான ஒளிப்பதிவு, ஆட்டுக்குட்டி மேய்வது போன்ற காட்சித்தொகுப்பு என்பவை குறைகள். ”பஞ்சவடிப்பாலத்திற்கு” அடுத்தபடியாய் மெச்சப்பட வேண்டிய மலையாளத்தின் மிகச்சிறந்த அரசியல் பகடிகளில் இப்படமும் ஒன்று.

“சந்தேஷம்” என்றால் “வருகை” என்று பொருள். மிக அருமையான தலைப்பு. தன் ஆயுசின் பெரும்பகுதியை தமிழகத்தில் வேலையில் கழித்து விட்டு ஓய்வை நிம்மதியாக கழிக்க சொந்த ஊரான கேரளாவுக்கு திரும்பும் ராகவன் நாயர் நேரிடும் அதிர்ச்சிகளும், வேதனைகளும் தான் படம்.இப்படி நெடுங்காலம் கழித்து வருகை தரும் ராகவன் ஒரு வெளியாளாகவே முக்கால்வாசி படம் வரை இருக்கிறார். இப்படி வெளியாளின் பார்வை வழியாக கேரள அரசியலை பார்க்க வைப்பதே ஒரு மாற்றுப்பார்வையை பார்வையாளனுக்கு அளிக்கும் சிறந்த ஒரு திரைக்கதை உத்தி தான். ராகவன் நாயர் ஊரில் இல்லாத காலத்தில் கேரளா மாறி விட்டிருக்கிறது. கொள்கைகளை மறந்த கட்சிகளின் வெற்று கோசங்களும், அரசியல் தர்ணாக்களும், சுயநல பழிவாங்குதல்களும் கேரளா எங்கும் ஒரு புற்றுநோய் போல் பரவி விட்டிருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சியை இந்த போலி அரசியல்வாதிகள் தடுப்பது மட்டுமல்லாமல், மக்களின் அன்றாட வாழ்விலிருந்து விலகி இயங்குகிறார்கள்.அதிகார போட்டி மட்டுமே இவர்களின் தலையாய இயக்கம். இதற்காக ஏழ்மை போன்ற அடிப்படை பிரச்சனைகளை திசை திருப்புகிறார்கள். கேள்வி கேட்பவர்களுக்கு எதிராக அறிவுஜீவித்தன சொற்றொடர்களும் மிரட்டல்களும் ஏவப்படுகின்றன.

ராகவனுக்கு இந்த இந்த கலாச்சார நோய் ஆரம்பத்தில் புரிவதில்லை. வெள்ளாந்தியாகவே இருக்கிறார். அவரது மகன்களில் இருவர் வெவ்வேறு கட்சித் தொண்டர்கள். பிரபாகரனாக நடித்துள்ள ஸ்ரீனிவாசன் கம்யூனிஸ்ட். பிரகாஷாக நடித்துள்ள ஜெயராம் காங்கிரஸ். இவர்கள் சதா மோதிக் கொள்கிறார்கள். இவர்களின் அசட்டுத்தனம் மற்றும் சுயநலத்தால் ராகவன் போலிசில் கைதாகிறார். தன் தோப்பை இழக்கிறார். மகளின் திருமணம் பாதிக்கப்படுகிறது. மனைவிக்கு மாரடைப்பு வருகிறது. இறுதியில் அவர் தன் வீட்டை சுத்திகரிக்க முடிவெடுக்கிறார். இரு மகன்களையும் வீட்டை விட்டு துரத்துகிறார். இறுதியில் அவர்கள் திருந்தி கட்சி தொடர்பை துண்டித்து வேலைக்கு சென்று நல்ல மக்களாகின்றனர். இங்கு ”வீடு” என்பது மாநிலத்துக்கான ஒரு குறியீடு என்று நோக்கும்பட்சத்தில் கேரள அரசியல் பற்றின ஒரு கூர்மையான விமர்சனமாக படம் மாறுவதை நாம் கவனிக்கலாம்.அதே நேரம் இப்படம் கம்யூனிச சித்தாந்தம் குறித்த விமர்சனம் அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

படத்தில் காங்கிரசை விட அதிகம் பகடி செய்யப்படுவது கம்யூனிச்டு கட்சிதான். படத்தின் மிகச் சிறந்த காட்சிகளும் இவை தான். உதாரணமாக, கம்யூனிஸ்டு கட்சியின் அறிவுஜீவி தலைமை மக்கள் பிரச்சனைகளில் இருந்து மிகவும் விலகி, பாசாங்குடன் உள்ளீடற்று செயல்படுவதை ஒரு காட்சி காட்டுகிறது. பிரபாகரனுக்கு மணமுடிக்க ஆசை. தலைவர் குமாரப் பிள்ளையிடம் அனுமதி வேண்டுகிறான். அவர் மறுக்கிறார். ஒரு தொண்டனுக்கு மனைவி மக்கள் தடையாக இருப்பார்கள்; கம்யூனிசஸ்டுக்கு ஏழை உழைப்பாளி வர்க்கம் தான் குடும்பம்; அவர்களை நேசிக்க பழகிக் கொள் என்கிறார். பிரபாகரன் அவரை விடுவதாக இல்லை. “நீங்கள் ஏன் மணமுடித்தீர்கள்?” என்று கேட்கிறான். அதற்கு தலைவர் “நான் அதை எண்ணி இன்று வருத்தப்படுகிறேன்” என்கிறார். அடுத்து பிரபாகரன் தலைவர் விடிகாலையில் கோவிலுக்கு மறைந்து சென்று சாமி கும்பிடுவது தனக்கு தெரியும் என்று சொல்லி அவரை மிரட்டப் பார்க்கிறான். தலைவர் சற்று வெருண்டு ”அது உனக்கெப்பிடி தெரியும்?” என்கிறார். பிரபாகரன் “நானும் தினமும் தலையில் துண்டு மூடிக் கொண்டு அதே கோவிலுக்கு அல்லவா செல்கிறேன்” என்கிறார். தலைவர் கடைசியில் சம்மதிக்கிறான். ஆனால் ஒரு நிபந்தனை. மணப்பெண் கட்சி அனுதாபியாக இருக்க வேண்டும். கம்யூனிஸ்டு கட்சிக்கூட்டங்கள் படத்தின் மிகச்சிறந்த நகைச்சுவை பகுதிகள். ஒரு கூட்ட முடிவில் வழக்கமாக அருந்தும் சாயாவுடன் பருப்பு வடைக்கு பதில் கடைக்காரர் பழங்கள் கொண்டு வருகிறார். தலைவர் குமாரப்பிள்ளை கடுமையாக ஆட்சேபித்து எப்படி நீ கட்சியின் மரபான உணவு பழக்கத்தை மாற்றலாம், போய் வடை போட்டு கொண்டு வா என்று அவற்றை திருப்பி அனுப்புவார். மற்றொரு இடத்தில் “கட்சி பொது மக்களோடு அணுக்கமாக இல்லை” என்று ஒரு உறுப்பினர் குற்றம் சாட்ட தலைவர் அவரிடம் “உன் மீது ஒழுக்க நடவடிக்கை” எடுப்பேன் என்று மிரட்டுகிறார். அவர் மேலும் சொல்கிறார்: “கட்சிக்குள் நாங்கள் ஜனநாயகத்தை கடைபிடிக்கிறோம். அதனால் தான் தலைவர்களும் தொண்டர்களும் சேர்ந்து டீ, வடை தின்கிறோம், பீடி பிடிக்கிறோம். அதற்காக இப்படி கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது”.

ஒரு அரசியல் பகடி என்பதை மீறி மிகையான லட்சியவாதத்தின் வீழ்ச்சியை பேசும் படமாகவும் இதனை பார்க்க வாய்ப்புள்ளது. கட்சி, குழந்தைகள், மண் என ஒவ்வொன்றின் மீதான மிகை ஈடுபாடும் வாழ்வை கேலிக் கூத்தாக்குவதை படம்சுட்டுகிறது. மீண்டும் ஏசியாநெட்டில் ஒளிபரப்பட்டால் நிச்சயம் பாருங்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...