முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாகம் – குறும்பட விமர்சனம்

தமிழ் ஸ்டுடியோ இணைய இதழில் நான் எழுதி வரும் குறும்பட விமர்சன தொடரில் இவ்வாரம் ’தாகம்”

எழுத்து, இயக்கம்: மா.யோகநாதன்


இசை: பா.சதீஷ்

படத்தொகுப்பு: பா.பிரமோத்

ஒளிப்பதிவு: சீ.அரவிந்த்குமார்




”தாகம்” ஒரு தேர்தல் பிரச்சார மைக்கை விட சத்தமான படம். மரம் வெட்டுதல் போன்ற இயற்கை அழிப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இயற்கை வளங்களை, குறிப்பாக நீர்வளத்தை, கடுமையாக பாதிக்கும் என்று எச்சரிப்பதே இப்படத்தின் இயக்குநர் மா.யோகநாதனின் உத்தேசம். இந்த பரப்புரையில் இயக்குநர் இரு தவறுகள் செய்கிறார்.
சூழலியல் பிரச்சனை பன்முகத்தன்மை கொண்டது மற்றும் சிக்கலானது. உதாரணமாக, இந்த வருட கோடையில் வெப்பம் அதிகம் ஆனதற்கான காரணங்களில் அப்காகினிஸ்தான் போர் வரை அடக்கம். இயக்குநர் உலக வெப்பமயமாதலை ஒரு விவசாயி நுண்பேசி, கார், வீடு வாங்கி, சட்டை பேண்ட் அணிந்து தலை சிலுப்புவதற்காக பேராசைப்பட்டு சில மரங்களை வெட்டி விற்கும் பாவச்செயலின் விளைவாக சுருக்கி விடுகிறார். இப்படியான பாமர நம்பிக்கையை பரப்புவதற்காக கணிசமான பணம் மற்றும் மனித ஆற்றல் விரயமாக்கியுள்ள மா.யோகநாதன் அதற்கு பதில் சில மரக்கன்றுகளை நட்டு திருப்தி உற்றிருக்கலாம். அடுத்து சினிமாவில் அரைப்பக்க வசனம் கடத்தும் சேதியை ஒரு அரைநொடி நேர காட்சியால் மேலும் அழுத்தமாய் சொல்ல முடியும். சினிமாவின் குறிப்பிடத்தக்க சிறப்பே காட்சிகளின் மூலம் மொழியைக் கடந்து பார்வையாள மனதுடன் உரையாட முடிவது தான். ஆனால் மா.யோகநாதன் சினிமா மொழியை புறக்கணித்து வசனங்களின் சிலுவையில் ஏறிக் கொள்கிறார். உதாரணமாக முதல் காட்சியில் புயலடித்து மரம் சாய்ந்துள்ளதை நாயகனான அவினாசி கவனிக்கிறார். புயலின் பாதிப்பை காட்ட இலை தழைகளும், குப்பை பொருட்களும் சிதறிக் கிடக்கும் ஒரு காட்சி போதும். ஆனால் அவினாசியை “நேத்து புயலடிச்சிருக்கு போலே” என்று குளோசப்பில் சொல்ல வைக்கிறார் இயக்குனர். நல்லவேளை அவினாசிக்கு கோபமோ சிரிப்போ வருவது போல் காட்சியில்லை. இருந்தால் “ஆஹா எனக்கு கோபம்/சிர்ப்பு வருது போல” என்று சொல்ல செய்திருப்பார். அவினாசி புயலில் விழுந்த மரத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு தோட்டத்து மரமாக வெட்டி விற்கிறார். இப்படி அவர் பணத்தாசையால் பீடிக்கப்பட்டு இயற்கையை அழிப்பதை சொல்லவும் இயக்குநர் நிறைய காட்சிகளை வீணடிக்கிறார். இறுதியில் செல்லமுத்து என்ற கோமணதாரி ஒரு சொம்பு தண்ணீரில் குளிப்பதை காட்டி ஊரில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதை விளக்குகிறார். பின்னரும் திருப்தி அடையாமல் அவினாசி சூடாகி விட்ட தன் காருக்குள் ஊற்ற தண்ணீர் தேடி பொட்டல் வெளி எல்லாம் அலைந்து தளர்ந்து வீழ்ந்த பறவையை போல் மண்ணில் கிடப்பதை டாப் ஆங்கிளில் காட்டி முடிக்கிறார். அவிநாசி, அவரது தாய் முதல் சொம்பு நீரில் குளிக்கும் செல்லமுத்து வரை அனைவரும் படுமோசமாக நடித்திருந்தாலும் நம்மால் மன்னிக்க முடியாதது படத்தொகுப்பாளர் பா.பிரமோத்தை தான். ஓட்டைக் குடத்தால் மொண்டு மொண்டு ஊற்றினால் தாகம் எப்படி தணியும்

கருத்துகள்

butterfly Surya இவ்வாறு கூறியுள்ளார்…
ஏன் அபிலாஷ் இவ்வள்வு கோவம்..?
AkashSankar இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களுக்கு பிடித்த குறும்படத்தை பற்றி சொல்லுங்களேன்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...