முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திசைகளற்ற வீடு



வாசலின் குறுக்காய் தூங்க பிரியப்படும் பூனை

கதவுகளை மூடப் போவதாய் மிரட்டினாலோ

பலம் பிரயோகித்தாலோ

அன்றி

இரு திசைகளில் ஒன்றை

தேர்ந்திட விரும்புவதில்லை



பீரோவுக்குள் இருந்தால் வாலும்

அலமாரிக்கு வெளியே காலும்

ஜன்னல் வழி வானத்துக்கு முகமும்

தரும்


பூனை என்றோ

ஒரே பெயராலோ

அழைக்கப்பட விரும்பாத அது

வித வித மாற்றுப்பெயர்களை விரைவில் வெறுத்து

முதலில் அழைக்கப்பட்டதை இறுதியாய் தேர்வு செய்கிறது


இரண்டு வித உணவுகளில்

முதலில் தந்த உணவை கடைசியிலும்

கடைசி உணவை முதலிலும்

உண்ண முனைகிறது


செய்தித் தாள் மேல் படுத்து

டி.வியை வெறிக்கும் அது

சானல்கள் இரைச்சலுடன் மாற்றப்படும் போது

மும்முரமாகிறது


ஒருநாள்

மூடப்படாத ஜன்னல்கள் கொண்ட

மாபெரும் அறை ஒன்றினுள்

தாவி இறங்கி

வாசலை தேடியது

அது வெட்டவெளி என்பதை உணராமல்

கருத்துகள்

Riyas இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லாயிருக்குங்க..
Sai Ram இவ்வாறு கூறியுள்ளார்…
படிக்கும் போதே மனதினுள் வெவ்வேறு அர்த்தங்கள் தோன்றி மறைகின்றன. அர்த்தங்கள் என்பதை விட காட்சிகள் என சொல்லலாம். கனவுநிலை காட்சி. 'வெட்டவெளி என்பதை அறியாமல் அதை அறையாக பாவித்து கதவை தேடும் பூனை'-யை இன்னும் சில நாட்களுக்கு மறக்க இயலாது.
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ரியாஸ் மற்றும் சாய்ராம்!
Tharshy இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லாயிருக்கு,,,,,,ரொம்ப
Senthil Prabu இவ்வாறு கூறியுள்ளார்…
nalla iruku abilash..
Valthukkal!!
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி இவ்வாறு கூறியுள்ளார்…
அந்தப் பூனையை எழுத்து சித்திரத்தில் நன்றாக வடித்து விட்டீர்கள்!! நன்றாக இருந்தது!!
Manikk இவ்வாறு கூறியுள்ளார்…
'நின்றால் தீவு
அசைந்தால் தோணி
இரண்டுக்கும்
மின்னற் பொழுதே தூரம்'
என்கிற அற்புதமான கவிதை வரிகளில் தங்கள் தலைப்பு கவருகிறது. தேவ தேவனுடைய கவிதை வரிகள் தானே இவை ?

சில கவிதைகள் படித்தவுடன் பதிந்து விடும். ஒரு பலாச்சுழையின் இனிப்பு மாதிரி இருக்கும் அவை.

சில கவிதைகள் புதிர் போடும். நிதானிக்க வைக்கும். அடர்ந்து கிடக்கும். மறுவாசிப்பைக் கோரும். தேன் மாதிரி. இனிப்பு ஒட்டிக்கொண்டே வரும்.

பூனையை பரபரப்பான மாநகரத்தில் வாழ்க்கையை நகர்த்துகிற மனிதனாகக் கொண்டால் இக்கவிதையில் நானே பூனையாகிறேன் :)

நன்றி அபிலாஷ் அண்ணா ...
Katz இவ்வாறு கூறியுள்ளார்…
மியாவ்
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
கொற்றவை, ஆரண்யநிவாஸ். ஆர் ராமமூர்த்தி, செந்தில் பாபு, மற்றும் வழிப்போக்கன் உங்களுக்கு என் நன்றிகள்
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
மாணிக்! தேவதேவன் வரியே தான். உங்கள் வாசிப்பு உவப்பாக உள்ளது, நன்றி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...