Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இ.பா 80வது பிறந்த நாள் விழா – சில குறிப்புகள்


இக்கூட்டம் நேற்று (ஜூலை 9) மாலை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்தின் ஆகக் கூர்மையான கருத்துக்கள் இறுதியாக ஏற்புரை வழங்கிய இ.பாவிடம் இருந்து வந்ததால் அதனை முதலில் சொல்லி விடலாம். இ.பாவின் குறும்பேச்சு ஒரு குத்துச் சண்டை ஹைலைட்ஸை ஒத்திருந்தது. அத்தனை பஞ்ச் வசனங்கள். ஏறத்தாழ இரவு ஒன்பதரைக்கு களைத்து கடுப்பாகி இருந்த பார்வையாளர்களுக்கு அத்தனையும் ரசிக்கும் படியாக இருந்தன.

எனக்கும் 80 வயதாகிறது. பாலசந்தருக்கும் 80 வயதாகிறது. ஆனால் ஊடங்கள் அவரைத் தான் பாராட்டுகின்றன இது தவறு என்று கூறவில்லை. தமிழகத்தில் எழுத்தாளனுக்கு கலாச்சார மதிப்பு அவ்வளவு தான் என்று கூற வந்தேன். பாலசந்தர் பாராட்டப்பட வேண்டியவர் தான். அவரது படைப்புகள் அவ்வளவு தரமானவை அல்ல என்றாலும்.

நான் சொல்ல வந்தது என்ன வென்றால் ஒருவர் மட்டுமே கலைஞர் என்று சொல்லக் கூடாது. எல்லாரும் கலைஞர்கள் தாம். (கூட்டம் இச்சொல்லின் இரட்டைப் பொருளைப் பற்றிக் கொள்ள சிரிப்பலை பரவுகிறது). எழுத்தாளனும் கலைஞனே.

தமிழகத்தில் பொதுவெளி அறிவுஜீவி என்று யாரும் இல்லை. அப்படி ஒரு இடமே இங்கு இல்லை. தமிழகத்தில் ஒரு அருந்ததி ராய் உருவாகி வருவார் என்று நாம் கற்பனை பண்ண முடியுமா?

தமிழக எழுத்தாளர்கள் Authors Guild of India மாதிரி ஒரு சங்கம் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் AGI மாதிரி கண்டவர்களை எல்லாம் எழுத்தாளன் என்று சேர்க்கக் கூடாது. எழுத்தாளன் பத்திரிகையாளன் ஆகலாம். ஆனால் பத்திரிகையாளன் எழுத்தாளன் ஆக முடியாது. இது போன்ற ஒரு அமைப்பை நடத்துவதற்கு தகுதியானவர் மேடையில் வீற்றிருக்கும் ரவிக்குமார் தான். (அவர் இப்பவே தலைவராக திட்டம் போடுகிறார் என்று மனுஷ்யபுத்திரன் குறுக்கிடுகிறார் )

ஆ.ராமசாமி, மனுஷ்யபுத்திரன் போன்ற இளைஞர்கள் தாம் இந்த அமைப்பு பணிகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் (அ.ரா இளைஞர் என்ற விசயத்தை பிடித்துக் கொண்ட ம.பு நிகழ்ச்சி முடிந்து வெளியேறும் வரை அ.ராமசாமியை ஓட்டிக் கொண்டே இருந்தார். அ.ரா உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகத்துடன் பேச்சை திருப்பிக் கொண்டே இருந்தார்)

நானும் நண்பர் பிரகதீசும் ஒரு கணக்குப் போட்டு பார்த்ததில் இ.பாவின் வயதுக்கு ம.புவும், அ.ராவும் இளைஞர்கள் என்பது சரியாகவே பட்டது. நானும் நண்பரும் இதே விகிதப்படி குழந்தைகள். கூட்டத்தில் இருந்த ஒரு கைக்குழந்தை இந்த கணக்கு உள்ளெல்லாம் வரவே வராது.

இமையம் இ.பாவின் 53 சிறுகதைகள் நுட்பமாக வாசித்து ஒரு ஆய்வுக் கட்டுரை படித்தார். “அக்கட்டுரையில் தேர்வு வைத்தால் நான் தோற்று விடுவேன் என்றார் இ.பா.

இ.பா ஒருமுறை தமிழ் விரிவுரையாளருக்கான ஒரு நேர்முகத்தேர்வை நடத்தினார். வந்த ஒருவர் தான் நவீன இலக்கியத்தில் நிபுணன் என்கிறார். இ.பா “சரி சந்தோஷம், புதுமைப்பித்தன் பற்றி சொல்லுங்களேன் என்கிறார். அவர் “புதுமைப்பித்தன் எல்லாம் எனக்கு தெரியாதுங்க என்கிறார். “என்னங்க நவீன இலக்கியம் கரைத்து குடித்ததாய் சொல்கிறீர்கள். புதுமைப்பித்தன் தெரியாதா? வேறென்னதான் தெரியும்?அதற்கு அவர் “நான் ஆழ்ந்து தோய்ந்து ஆய்வு செய்துள்ளது தென்பாண்டி சிங்கம் என்ற நவீன இலக்கியத்தில் தான். அதிலிருந்து என்ன வேண்டுமென்றாலும் கேளுங்கள், சொல்கிறேன்

மேலும் ஒரு தமிழாசிரிய பகடி. இ.பாவின் கதை ஆனந்த விகடனில் வெளிவருகிறது. தனது தமிழ் பேராசிரிய நண்பரிடம் காட்டுகிறார். அவர் நச்சினார்க்கினியாருக்கு பிறகு யாரையும் வாசிப்பதில் உவப்பில்லாதவர்.“என்னய்யா நீங்களுமா கதை எழுத ஆரம்பிச்சுட்டீங்க
“ஏன் நானெல்லாம் எழுதக் கூடாதா? என்கிறார் இ.பா.
“என்ன எழுதுகிறீர் ... தூய தமிழா இது ... ஆங்கில வார்த்தைகளை அங்கங்கே கலந்து . ச்சீஎன்று முகம் சுளிக்கிறார்.

இனி பிற பேச்சாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இ.பா பிறந்த நாள் கூட்டத்தில் துவக்க உரை மனுஷ்யபுத்திரனுடையது. அவர் பேசியதை கேட்கவில்லை. தாமதமாக சென்றேன். அடுத்த உரை சி.டி இந்திராவினுடையது. சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் பேராசிரியரான அவரைப் பார்த்தால் மாணவர்கள் பொதுவாக தலைதெறிக்க ஓடுவார்கள். ஆனால் அனறு மாறாக பார்வையாளர்கள் அவரது அரைமணி உரைக்கு பிறகு திராணியற்று களைத்துப் போய் துவண்டு கிடந்தார்கள். என் பக்கத்தில் ஒரு தாத்தா காலி தண்ணீர்ப் பாட்டிலை விடாமல் உறிஞ்ச முயன்று கொண்டிருந்தார். விடாமல் பேசிக் கொண்டிருந்த ஒரு அழகான பெண்ணும் பக்கத்து வாலிபனும் தான் விதிவிலக்கு. சி.டி. இந்திராவின் பேச்சில் சரிபாதி தன்னை பற்றியே தான். பலவருடங்களுக்கு முன்னர் அவரது கருத்தரங்க கட்டுரையை கிண்டலடித்த ஒரு வெள்ளையரை நினைவு வைத்து திட்டித் தீர்த்தார். அதே போல் பல வருடங்களுக்கு முன் தனிப்பட்ட வகையில் உதவினவர்களை நன்றியுடன் நினைகூர்ந்தார். தனது அப்பாவை பற்றிக் கூட குறிப்பிட்டார். இந்த சுய-யாகத்துக்கு நடுவில் இ.பா.வின் இரு கதைகளை மொழிபெயர்க்கும் பணிக்காக தமிழில் வாசிக்க ஆரம்பித்ததை குறிப்பிட்டார். இ.பாவின் பல எளிய வரிகளை பரங்கித் தமிழில் படித்து நவீன விமர்சன சொல்லாடல்களை யானைக்கு கோமணம் கட்டுவது போல் அவற்றில் திணித்தார். மிக செயற்கையான ஒரு விமர்சனம் அது. உதாரணமாக ஒரு வரி: “அவன் டாய்லட் அறைக்குள் இருந்த போது தன் வீடு எத்தனை பெரியது என்று தோன்றியது. நல்ல வரிதான். ஆனால் இதை படித்து விட்டு திரும்பத் திரும்ப wit and humor என்று கூவினார் சி.டி இந்திரா. இதைவிட wittyயான எத்தனையோ வரிகள் தமிழில் உள்ளன இ.பாவிடம் கூட கிடைக்கும். சி.டி.இவுக்கு தனிப்பட்ட எந்த அவதானிப்புகளும் இல்லை என்பது வெளிப்படை. துரியோதனன் வைக்கோற் போரால் அறையை நிறைத்துக் காட்டியது போல் அவரது கழைக்கூத்து இருசாராருக்கும் அவஸ்தையாகவே இருந்தது. மேடையில் ம.பு நெளிவது பார்த்தது “இதோ முடித்து விடுகிறேன் என்று விட்டு மேலும் பதினைந்து நிமிடம் தமாஷை தொடர்ந்தார். இந்திரா முழுக்க ஆங்கிலத்திலேயே பேசினார். இ.பாவின் கதைப் பகுதிகளை படிக்கும் போதும் மட்டும் குழறியபடி தமிழ் பயன்படுத்தினார். இங்கு நமக்கு ஒரு ஐயம் எழுகிறது. தமிழில் சரளமாக பேசத் தெரியாதவர் தமிழ் சிறுகதைகளை மட்டும் எப்படி ஆங்கிலத்துக்கு மொழியாக்கினார்? அகராதிக்குள் பொந்து தோண்டியா?

இமையம் இ.பாவின் 53 சிறுகதைகளை அலசி படித்த கட்டுரை அருமையானது. அதை அவர் பிரசுரிக்க வேண்டும். இ.பாவின் கதைகளின் மையம் தர்க்கம் தான் என்றார். கடவுளிடம் சரணடைவது, கண்ணீர் விடுவது ஆகிய உணர்ச்சிகர சமரசங்களை அவரது கதைகளில் காண முடியாது. பக்கத்துக்கு பக்கம் புரட்டி தேடிப் பார்த்து இதை உறுதி செய்ததாக இமையம் கூறினார். இ.பா தி.மு.கவை விமர்சிப்பதை வாசகனாக ஏற்றுக் கொள்வதாகவும், தி.மு.க கட்சிக்காரனாக மறுப்பதாகவும் சொன்னார். மனம் பிறழ்ந்தவர்கள், வாழ்க்கையால் கைவிடப்பட்டவர்கள் போன்ற விளிம்பு நிலையாளர்கள் தாம் இ.பாவின் நாயகர்கள். இருந்தாலும் மேலும் கவனித்தால் இவர்களை புறந்தள்ளி இ.பாவின் குரல் வலுத்து ஒலிப்பதை அவரது கதைகளில் கேட்க முடியும். இது புனைகதைக்கு ஆரோக்கியமானதா இல்லையா என்பது முக்கியமான கேள்வி என்று இமையம் முடித்தார். இமையத்துக்கு  அப்படி ஒரு கணீர் குரல். உங்களை எளிதில் தூங்க விடாத குரல்.

எஸ்.ராமகிருஷ்ணன் இ.பாவிடம் தனக்குப் பிடித்த பத்து குணாதசியங்களை சொல்லப் போவதாக ஆரம்பித்தார்; பட்டியலை முடிக்கும் தறுவாயில் அவரது பேச்சு சூடு பிடித்தது. இதுவரை நான் கேட்டுள்ள இலக்கிய உரைகளில் ஆகச்சிறந்ததாக அது இருந்தது. எஸ்.ராவின் முக்கிய கருத்துக்களை கீழே தருகிறேன்.

  1. இன்று இந்தியாவில் எழுத்தாளன் சந்திக்கும் பெரும் சவால் வரலாற்றை எப்படி எதிர்கொள்வது என்பது தான். போர்ஹே சொன்னது போல் வரலாறு தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறையாலும் புனையப்பட்டு முன்னெடுக்கப் படுகிறது. நீங்கள் வரலாற்றை ஒரு பார்வையில் புனைந்து காட்டினால் ஆயிரம் பேர் புறப்பட்டு வந்து அதை தவறு என்று கண்டிப்பார்கள். இவர்கள் சுயநலத்துக்காகவும், அதிகாரத்துக்காகவும் வரலாற்றை திரிப்பவர்கள். ஆனால் எழுத்தாளன் வரலாற்றில் மறைக்கப்பட்ட குரல்களை உற்றுக் கேட்கிறான். இன்றைய எழுத்தாளனின் தேவையும் கடமையும் வரலாற்றை புனைவு மூலம் மறுகட்டமைப்பு செய்து புதிய குரல்களை வெளியே கேட்க செய்வது தான். 
  2. பிரிவை எண்ணி அழுவதும் அதை கொண்டாடுவதும் தமிழினதத்தின் ஆதார குணம் என்று கூறலாம். சங்க இலக்கியப் பாடல்களில் பிரிவு திரும்பத் திரும்ப பேசப்படுகிறது. பிரிவு பற்றி எழுதாத தமிழ் எழுத்தாளனே இல்லை எனலாம்.
  3. தமிழ் நவீன இலக்கியவாதிகள் “குடும்பம் எனும் கட்டமைப்புக்கு உள்ளே தங்களது புனைவுகளை மீண்டும் மீண்டும் உருவாக்கியவர்கள். தமிழர்கள் உலகம் பூரா வாழ்ந்துள்ளார்கள். ஆனால் தமிழ எல்லையை விட்டு தமிழ் இலக்கிய அனுபவப் பரப்பு வளர இல்லை. இ.பாவின் எழுத்துக்கள் இந்த எல்லையை தாண்டி பேசுகின்றன.
  4. தமிழகத்தில் எழுத்தாளனுக்கும், புத்தகங்களுக்கும் இருக்கும் உதாசீன நிலை (திராவிட கழகங்களால்?) திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. கம்பராமாயணப் பிரதி தீயிலிட்டு கொளுத்தப்படுவதை நம் சமூகம் மௌனமாக வேடிக்கை பார்த்தது. அது சரியா தவறா என்ற விவாதத்துக்குள் நான் செல்ல வில்லை. அப்படி அனுமதிக்கும், இலக்கியவாதியை புறக்கணிக்கும் சமூகத்தை நாம் ஆராய வேண்டும் என்றே கூற வருகிறேன்.

பொதுவாக அனைத்து பேச்சாளர்களும் தமிழ் சமூகம் தீவிர எழுத்தாளர்களை உதாசீனப்படுத்துவதை கண்டித்தும், கண்ணீர் விட்டும், கவலை தெரிவித்தும் பேசினர். ஞானக்கூத்தன் கேரளாவில் எம்.டி வாசுதேவன் கொண்டாடப்படுவதையும், எழுத்தாளர்கள் தேரில் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவதையும் சொல்லி தமிழக அவல நிலையுடன் ஒப்பிட்டார். இறுதியாக பேசின ரவிக்குமார் கிட்டத்தட்ட இந்த அவல நிலையை ஆதரித்தார். தமிழக எழுத்தாளர்கள் பொதுப் பிரச்சனைகளில் ஈடுபாடு காட்டாததனாலே மக்கள் அவர்களை உதாசீனிக்கிறார்கள் என்று சொதப்பலான் ஒரு தர்க்கத்தை தெரிவித்தார். அதே தர்க்கப்படி பார்த்தால் தமிழர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நமீதாவும், அனுஷ்காவும், விஜய்யும், அஜித்குமாரும் செய்துள்ள சமூக சேவைகள் அல்லது ஈடுபட்டுள்ள பொதுப்பிரச்சனைகள் என்ன? என்ன சேவை செய்ததற்காக குஷ்புவுக்கு கோவில் கட்டி இப்போது கழகக் கண்மணியாக வேறு ஆக்கியுள்ளார்கள். பெரியார் படத்தில் மணியம்மையாக நடித்ததா? ஷேக்ஸ்பியர் தன் வாழ்நாள் முழுக்க ஒரு எளிய ராகவிசுவாசியாகவே வாழ்ந்தார். வீடு கட்டினார். சொத்து சேர்த்தார். எந்த போராட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை. அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவும் இல்லை. ஜேம்ஸ் ஜாய்ஸ்? வைக்கம் பஷீர்? எம்.டி வாசுதேவன் நாயர்? தால்ஸ்தாயும், மார்க்வெஸும் ரவிக்குமார் குறிப்பிடும் public intellectual  பிம்பத்துக்கு அருகில் நின்றாலும் அவர்கள் நிச்சயம் கட்சி பீரங்கிகள் அல்ல. உலகம் முழுக்க எழுத்தாளன் கொண்டாடப் படுவது சமூக சேவைக்காகவோ அரசியல் செயல்பட்டுக்காகவோ மட்டும் அல்ல. அடுத்து, செம்மொழி மாநாட்டுக்கு ஏன் பல தீவிர இலக்கியவாதிகள் அழைக்கப்பட வில்லை என்பதற்கு ரவிக்குமார் மேலும் வேடிக்கையான ஒரு பதிலை அளித்தார். அழைப்பு வராதவர்களுக்கு பழந்தமிழ் இலக்கிய பரிச்சயம் இல்லையாம். அடுத்த முறை மாநாடு நடத்தும் முன்னர் கலைஞர் தீவிர இலக்கியவாதிகளுக்கு செம்மொழி டெஸ்டு வைக்கலாம்! ரவிக்குமாரிடம் நான் கேட்க விரும்பிய கேள்வி: “சங்கச்சித்திரங்களும், கொற்றவையும் எழுதி மரபிலக்கியத்தில் ஊறித் திளைத்த ஒரு எழுத்தாளர் இருக்கிறாரே. உங்கள் செம்மொழி தேர்வில் அவர் எத்தனை மதிப்பெண்ணில் தோற்றார்?

ரவிக்குமார் பேசிக் கொண்டே சென்ற போது எனக்கு சற்றே கண் மயங்கியது. செம்மொழி செம் ம் ம் என்று அதிர்ந்த போது விழித்தால் சாட்சாத் கலைஞரே முன் நின்று உரையாற்றுவது போல் ஒரு தோற்றம். இதற்கே இப்படி என்றால், செம்மொழி அணியில் தீவிர இலக்கியவாதிகள் ஒவ்வொருவராக சரணடைந்தால் என்னவாகும் என்று நினைத்த போது காலடியில் பூமி விலகியது. தானியங்கி பீரங்கிகள் மட்டுமே நிறைந்து நின்று மாறி மாறி சுடும் போர்க்களம் ஒன்று கற்பனையில் விரிந்தது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...