முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மின்மினிப் பூச்சி லாந்தர் விளக்குகள் - மார்க்கரெட் சூலா



ஜூன் ஆரம்பத்தில் அயாபேவில் உள்ள குயவர் நண்பர் முராயாமா-சானிடம் இருந்து எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.


“மேகி”, அவர் சொல்கிறார், “மின்மினிகள் வந்து விட்டன!”

“சரி”, நான் சொல்கிறேன், “நாங்கள் உடனே வந்து விடுகிறோம்!”

மலை கிராமங்கள் வழி நெளிந்து செல்லும் நாட்டுப்புற நெடுஞ்சாலை வழி இரண்டரை மணிநேர பயணத்தில் அயாபேவை அடையலாம். நானும் ஜானும் இரவு தங்குவதற்கான பையொன்றை கட்டி விட்டு பலகலைக்கழக வகுப்புகள் முடிந்த உடன் கிளம்புகிறோம். முராயாமா-சான், அவரது மனைவி அயாகோ மற்றும் பத்து வயது மகள் தொமோக்கோ தமது பழைய பண்ணை வீட்டில் எங்களை அன்பாக வரவேற்கிறார்கள். நாங்கள் மிகச் சிறந்த நண்பர்கள் என்றாலும், அவரது இறுதிப்பெயரால் தான் அழைப்போம். அவரது மனைவியும் அப்படித்தான்.

டோபூ, மீன் மற்றும் தோட்டத்து காய்கனிகளாலான ஒரு எளிய சாப்பாட்டை அயாக்கோ தயார் செய்கிறார். இருளத் தொடங்கியதும், நங்கள் வலைகள் மற்றும் கண்ணாடி ஜாடிகளை எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறோம். ட்சுயுவுக்கு [1] அவ்விரவு குறிப்பிடும்படியாக தெளிவாக இருக்கிறது.


நட்சத்திரங்கள், நெல்வயல்களில்


நட்சத்திர பிரதிபலிப்புகள்


ஓ! மின்மினிகள்


மின்மினிகள் நெல்வயல்களின் வரப்பிலுள்ள புற்களின் மீதும், ஈரநிலத்தில் செழிக்கும் ஹொட்டாரு புக்குரோக்கள், அதாவது பெல்பூக்கள், மீதும் அமர்கின்றன. தொமோக்கோ ஒரு பெல்பூவை எனக்காக பறிக்கிறாள்; ஹொட்டாரு என்றால் மின்மினி என்றும் புக்குரோ என்றால் கோணிப் பை என்றும் விளக்குகிறாள். எங்களது பட்டாம்பூச்சி வலைகளால் காற்றில் மொண்டு வலைநிறைய பட்டாம்பூச்சிகளை பிடிக்கிறோம். ஹொட்டாரு புக்குரோ பூக்களை திறந்து அவற்றின் மென்மையான இதழ் கூண்டுக்குள் மின்மினிகளை நுழைப்பதன் மூலமாய் கவனமாக இடம் மாற்றுகிறோம். விரைவிலேயே பூக்கள் மினிமினிகளின் தழலொளியை பெறுகின்றன. ஒருமணி நேர முடிவில், வீட்டுக்கு செல்ல எங்களுக்கு வழிகாட்டும் அளவுக்கு கைநிறைய லாந்தர்கள் சேர்ந்து விட்டன. மிச்ச மின்மினிகள் ஜாடிகளில் உள்ளன. எங்களிடம் எவ்வளவு உள்ளன? ஐம்பது? நூறு? எரிந்து எரிந்து அணையும் அவற்றின் வெளிச்சங்களைக் கொண்டு அவற்றை எண்ணுவது சாத்தியமல்ல.

பண்ணை வீட்டில் நாங்கள் செருப்புகளை கழற்றி விட்டு பிரதான அறையில் கூடுகிறோம், டாட்டாமியில் [2] ஓய்வாக அமர்கிறோம். முராயாமா-சான் வெளியே தன் சூட்டடுப்புக்கு சென்று, சமீபமாய் சுட்ட சில சாக்கே கோப்பைகளை தேர்ந்தெடுக்கிறார். எங்கள் ஒவ்வொருவருக்கும் சுத்தமான சாக்கே கோப்பை ஒன்றை அளித்து, அதில் சாக்கே நிறைக்கிறார்.

“கான்பாய்!” அவர் நலம் பாராட்டுகிறார்.

அந்த மென்மையான கோப்பைகளை உதடுகளுக்கு எழுப்பியபடி நாங்கள் எதிரொலிக்கிறோம் “கான்பாய்!”

எங்கள் விருந்தோம்புநர் வீட்டின் மிச்சமுள்ள புசுமா [3] கதவுகளை மூடுகிறார் பிறகு கண்ணாடி ஜாடிகளின் மூடிகளைத் திறந்து, மின்மினிகளை அறைக்குள் திறந்து விடுகிறார். நானும் தொமோக்கோவும் ஹொட்டாரு புக்கோருவின் இதழ்களை உரித்து, எங்கள் சிறைக்கைதிகளை தங்கள் பட்டு கூண்டுகளில் இருந்து வெளிவர தூண்டுகிறோம். அவை விரைந்து பாய்கின்றன, விட்டு விட்டு மின்னுகின்றன, எங்கள் கைகள் மற்றும் முட்டிகளில், மாடக்குழியில் உள்ள ஜப்பானிய சுருள்சுவடிகளில் அமர்ந்திட தங்கள் பச்சை விளக்குகளை பளிச்சிடுகின்றன.


மின்மினிகள் நிரம்பிய அறையில்


டாட்டாமியில் கிடக்கிறேன்


மாலை குளிர்மை


அந்த இருண்ட அறையில், நாங்கள் சாக்கே குடித்து, மெதுவாக பேசுகிறோம், மென்மையான விசயங்களைப் பற்றி, நட்பின் முக்கியத்துவம், வாழ்வின் இயற்கையான அபரிதத்தன்மை பற்றி பேசுகிறோம். இரவு ஆழமுற, சாக்கே பூட்டிகள் காலியாக நாங்கள் மணிக்கணக்காக டாட்டாமியில் முணுமுணுத்தபடி கிடக்கிறோம். கூரையில் நட்சத்திரங்கள் மின்னி மின்னி அணைகின்றன. தூங்கும் நேரம் வந்த உடன், முராயாமா-சான் ஷோஜியை [4] திறந்து, இரவுக்குள் மின்மினிகளை விடுவிக்கிறார். காலையில் அவை தொலைவாக பரவலாக, மந்தாரமான வானில் இருளின் புள்ளிகளாக, சிதறியிருக்கும்.


அடிக்குறிப்பு:

1. ஜூனில் இருந்து ஜூலை பாதி வரை நிகழும் ஜப்பானிய மழைக்காலம். பிளம் பழங்கள் கனியும் பருவம் என்பதால் ட்ஸுயுவுக்கு நேரடியான பொருள் “பிளம் மழை” என்பது

2. மரபான ஜப்பானிய பாய்

3. சித்திர வேலைப்பாடுகள் கொண்ட நழுவுக்கதவு

4. மெல்லிய கண்ணாடி காகிதத்தாலான அறை பகுப்புத் திரை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.