Skip to main content

சூரஜ் ரந்திவ்: போட்டி மனப்பான்மையும் தோல்வி மனப்பான்மையும்



பொழுதுபோக்குக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஆட்டம் தொழிலாக மாறும்போது எத்தகைய தனிமனித ஒழுக்க சீரழிவுகளை கொண்டு வரும் என்பதை சமகாலத்தில் பலமுறை பார்த்துள்ளோம். பொதுவாக தன்னம்பிக்கை இல்லாத ஆட்டவீரர்கள் கடுமையான நெருக்கடி நிலைமைகளில் வக்கிரமாக வன்மத்துடன் நடந்து கொள்வார்கள். சச்சின்,  ரிக்கி பாண்டிங், ஜெயசூரியா, அல்லது சேவாக் போன்ற உச்சப்ட்ச திறமையாளர்களுக்கு இப்படி லட்சக்கணக்கான கண்கள் முன் நெறியற்ற, அறந்தவறிய முறைகளில் நடந்து கொள்ள வேண்டிய அவசியங்கள் ஏற்பட்டதில்லை. எதிரணி வீரரை முழங்கையால் இடிப்பதோ (கம்பிர்), வேண்டுமென்றே ஓட்டத்துக்காக விரையும் மட்டையாளரை தடுத்து ரன் அவுட் செய்வதோ  (அக்தர்) ஒரு சாமான்ய ஆளுமையின் நிலைப்பாடு மட்டுமே ஆகும். சமீபமாக நாம் பார்த்துள்ளதிலேயே படுஅநீதியான ஆட்டம் இன்று ஒரு இளம் வீரரிடம் இருந்து வெளிப்பட்டது. அவர் சூரஜ் ரந்திவ்.


இன்றைய ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா இலக்கை அடைய ஒரு ஓட்டம் தேவைப்பட்டது. களத்தில் மட்டையாடிய சேவாகுக்கு சதமடிக்கவும் ஒரே ஓட்டம் தான் வேண்டும். அந்நேரம் பார்த்து ரந்திவ் ஒரு பெரிய நோபாலை வேண்டுமென்றே வீசினார். சேவாக் அதை லாங் ஆபில் ஆறு அடித்தாலும், முதலில் அப்பந்து நோபால் என்பதால் சேவாகால் தன் சதத்தை நிறைவு செய்ய முடியவில்லை. ரந்திவ் சமீப காலமாக தனது திறமை, போட்டி மனப்பான்மை மற்றும் தன்னம்பிக்கையால் அனைவரையும் கவர்ந்து வருபவர். அவரது திறமைக்கு அவர் அந்த கடைசி பந்திலும் சேவாகை வெளியேற்றவே முயன்றிருக்க வேண்டும். அதுதான் நியாயமாகவும், நேர்மறையான நிலைப்பாடாகவும் இருந்திருக்கும். சாத்தியத்தின் விகிதத்தை மறந்தால் ஒரு ஓட்டத்தில் பிந்தங்கிய நிலையிலும் கூட ஒரே ஓவரில் ஒரு வீச்சாளரால் ஆட்டத்தின் போக்கை மாற்றவோ வென்று தரவோ நிச்சயம் முடியும். ஆனால் ரந்திவிடம் வெளிப்பட்டது காழ்ப்பும் தோல்வி மனப்பான்மையும் மட்டுமே. சேவாகை வெளியேற்றுவது என்பதை விட அவருக்கு சதத்தை மறுப்பதே அவரது நோக்கமாக இருந்தது. முத்தையா முரளிதரன் அல்லது வார்ன் போன்ற ஒரு மேதை இப்படி கிரிக்கெட் விழுமியங்களை புறந்தள்ளி தனக்கும் அணிக்கும் அவப்பெயர் பெற்றுத்தந்திருக்க மாட்டார். இன்றைய கிரிக்கெட்டர் ஒரு கனவானாக இருக்க வேண்டாம் என்றாலும் குறைந்த பட்சம் நாணயஸ்தனாக நடக்கவோ அல்லது நடிக்கவோ முயலலாம்.

அரங்கில் இருந்து வெளியேறும் போது சேவாகால் தன் ஏமாற்றத்தை மறைக்க முடிய இல்லை. இருந்தும் தன்னை பேட்டி கண்ட டோனி மோரிசனிடம் “இது எல்லாரும் செய்வது தான். எனக்கு சதம் தரக் கூடாது என்று நினைத்தார்கள். நியாயம் தான்” என்று முழுங்கினார். இதுகூட சர்ச்சைகளை தவிர்க்க விரும்புகின்ற ஒரு முதிர்ச்சியான பதில் தான்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் ...” ரந்திவ் வெட்கி தலைகுனிய வேண்டும்.

இன்னும் ஒரு முக்கிய கேள்வி உள்ளது. வருகிற ஐ.பி.எல்லில்  டெல்லி அணியால் ரந்திவ் ஏலம் எடுக்கப்பட்டால் எப்படி சேவாகை, இந்திய ரசிகர்களை எதிர்கொள்ளப் போகிறார்? இனிமேல் கிரிக்கெட் உலகில் அவருக்கு கிடைக்கப் போகிற மரியாதை தான் என்ன?

Comments

Anonymous said…
//சச்சின், ரிக்கி பாண்டிங், ஜெயசூரியா, அல்லது சேவாக் போன்ற உச்சப்ட்ச திறமையாளர்களுக்கு இப்படி லட்சக்கணக்கான கண்கள் முன் நெறியற்ற, அறந்தவறிய முறைகளில் நடந்து கொள்ள வேண்டிய அவசியங்கள் ஏற்பட்டதில்லை.//

இதில் நீங்கள் பாண்டிங்கை சேர்த்திருப்பது நல்ல நகைச்சுவைக்காக மட்டுமே என எண்ணுகிறேன். கும்ப்ளே தலைமையிலான இந்திய அணியின்
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது பாண்டிங் ஆடிய போங்காட்டத்தை மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
உண்மையான விமர்சனம், ரந்தீவ் செய்தது கோழைத்தனம்
Mohamed Faaique said…
இலங்கை அணி வீரர்கள் தவறு செய்யும் பொது தூக்கிப்பிடிக்கிறீர்கள். இந்திய நியூசிலாந்து போட்டியின் போது எங்கேயிருந்தீர்கள்.? உங்கள் பதிவுகளை படிக்கிறேன் . பக்க சார்பு எப்பவுமே இருக்கிறது. லோஷன் போன்றோரது பதிவுகளை படித்தாவது புத்தி பெறுங்கள்
பாண்டிங் தன் தனிப்பட்ட ஆட்டத்தில் என்றும் ஏமாற்றியது இல்லை நடேஷ். ஒரு தலைவராக அவர் தவறிழைத்து இருக்கலாம்.
ஒரு பொது பார்வையாளனாகவே இதை எழுதியிருக்கிறேன் முகமது பெயிக். தில்ஷானுக்கு ஒரு இந்திய வீச்சாளரால் இது நேர்ந்திருந்தாலும் கண்டித்திருப்பேன்.
அருமையான பதிவு, விளையாட்டு, அன்பு, பரந்த மனப்பான்மையும் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

லாரா, சச்சின் போன்ற வீரர்கள் அவுட் என்று தங்களுக்கு தெரிந்த உடன், அம்பயரின் கை அசைப்பிர்க்கு காத்து இருக்க மாட்டார்கள். அதனால் தானே அவர்களை கடவுளாக கொண்டாடுகிறோம், அவர்கள் அடித்த ரன்களுக்காக மட்டும் அல்ல

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...