முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரவீந்திர ஜடேஜா: தேர்வின் குளறுபடி மற்றும் தோல்வியின் பலிகடா




இந்திய அணி சொதப்பும் போதெல்லாம் இந்திய மனநிலை அதற்கான காரணத்தை தவறான இடத்தில் தேடும். நமது பழங்குடி உள்ளுணர்வு பலியிட ஒரு உயிரை நாடும். பெரும்பாலும் அது நட்சத்திரமல்லாத ஒரு இளைய வீரராகத் தான் இருக்கும். வங்கதேசத்தில் நாம் மோசமாக ஆடிய போது தினேஷ் கார்த்திக் விமர்சிக்கப்பட்டார்.இலங்கையில் முதல் டெஸ்டை இழந்த போது அனுபவமற்ற இளம் பந்து வீச்சாளர்கள் வறுக்கப்பட்டார்கள். தற்போது விமர்சகர்களின் நூடுல்ஸ் சட்டியில் ஆல்ரவுண்டராக கருதப்படுகிற ரவீந்திர ஜடேஜா.


ரவீந்திர ஜடேஜா ஐ.பி.எல்லுக்கு முன்னரே நம்பிக்கைக்கு உரிய ஆல்ரவுண்டராக இனம் காணப்பட்டார். ஆனால் உள்ளூர் ஆட்டங்களில் அவரது பந்து வீச்சோ மட்டையாட்டமோ யாரையும் கவரவில்லை. ஐ.பி.எல்லிலும் ஜடேஜா ஒரே ஆட்டத்தை தான் ராஜஸ்தான் அணிக்காக வென்று தந்தார். உச்சி குளிர்ந்த அணித்தலைவர் வார்ன் வழக்கம் போது ஜடேஜாவை மிகையாக புகழ்ந்தார். “Rock Star” என்றார். வார்னின் புகழுரைக்கு பிறகு ஜடேஜா அதிக கவனம் பெற்றார். இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட்டார். முதல் ஆட்டத்திலேயே அவர் கடுமையாய் உழைக்கக்கூடிய ஒரு எளிய கிரிக்கெட்டர் என்று தெரிந்து போயிற்று. ஆனால் வர்ணணையாளர்கள் தொடர்ந்து அபார திறமையாளி என்று பாடை கட்ட ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் ஜடேஜாவின் சரளமின்மை அணியை சங்கடமான சூழ்நிலைகளில் கொண்டு நிறுத்தியது. ஆனால் இது ஜடேஜாவின் தவறு அல்ல. அவர் மீது மிகையான எதிர்பார்ப்பை கரகம் ஏற்றி திணற வைத்த தேர்வாளர்களும் அணி மேலாண்மையும் தான் பொறுப்பாக வேண்டும்.

ஜெடேஜா அதிகம் சுழல வைக்கும் வீச்சாளர் அல்ல. அவரால் கூர்மையாக நேராக வீச முடியும். அவரது ஆர்ம் பந்து பல மட்டையாளர்களை குழப்பி உள்ளது. பல நெருக்கடியான கட்டங்களில் ஜடேஜா துணிச்சலாக வீசி ஓட்ட ஒழுக்கை கட்டுப்படுத்தி உள்ளார்; ஜடேஜாவின் பந்து வீச்சு மற்றும் துடிப்பான களத்தடுப்பால் அணி நிச்சயம் பயன்பட்டுள்ளது. மட்டையாட்டத்தில் அவரால் அதிக பட்சம் பந்து வீச்சாளர்களுடன் சேர்ந்து சின்ன சின்ன கூட்டணிகளை உருவாக்க முடியும். அவர் நிச்சயம் யூசுப் பதானோ உத்தப்பாவோ அல்ல. ஜடேஜா ஒரு சிறந்த மட்டையாட்ட ஆல்ரவுண்டராக தற்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது அவரது தவறு அல்ல.

அணியில் ஜடேஜாவின் இடம் கேள்விக்குள்ளாகும் நிலைமைகள் ஏற்படும். தற்போது அது நிகழ்கிறது. சேவாக், யுவ்ராஜ் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு அணிக்குள் வந்து நன்றாக பந்து வீசும் நிலைமையில் அவர்களால் ஜெடேஜாவின் பாத்திரத்தில் மேலும் சிறப்பாக இயங்க முடியும். ஜெடேஜா ஒரு மிதவேக பந்து வீச்சாளராக இருந்தால் மட்டுமே இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும். அணி மேலாண்மை இனிமேல் ஜெடேஜாவை தக்க வைப்பதற்கு ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும். அவரது பந்து வீச்சு அபாரமான முன்னேற்றத்தை பெற்று அவரால் ஓஜ்ஹாவை நெருக்கித் தள்ள முடிய வேண்டும். அல்லாத பட்சத்தில் ஜெடேஜாவின் இருப்பு தொடர்ந்து ஒரு உறுத்தலாக இருக்கும். ஆனால் யுவ்ராஜை போல் அவரால் எந்த எதிர்மறை பாதிப்பும் இருக்காது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

அடுத்து வரும் ஆட்டங்களில் ஆல்ரவுண்டர் இடத்தில் அஷ்வின், சதீஷ், இர்பான் பதான் போன்றோரை முயன்று பார்க்க வேண்டும். உலகக் கோப்பைக்கு பிறகு கொதிப்பாக இதையெல்லாம அலசுவதோ நிதானமாக பரிட்சார்த்த முயற்சிகள் செய்வதோ சுயபகடியாக மட்டுமே இருக்கும்.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பிற்கினிய நண்பரே..,

/ /....இந்திய அணி சொதப்பும் போதெல்லாம் இந்திய மனநிலை அதற்கான காரணத்தை தவறான இடத்தில் தேடும்.,வங்கதேசத்தில் நாம் மோசமாக ஆடிய போது தினேஷ் கார்த்திக் விமர்சிக்கப்பட்டார்.../ /

தமிழகத்தின் ஸ்ரீராம்,ரமேஷ், மற்றும் விஜய் பரத்வாஜ் போன்றவர்களை விட்டுவிட்டீர்களே.

/ /... அடுத்து வரும் ஆட்டங்களில் ஆல்ரவுண்டர் இடத்தில் அஷ்வின், சதீஷ், இர்பான் பதான் போன்றோரை முயன்று பார்க்க வேண்டும்.../ /

இவர்களோடு பிரவீன்குமார்,மிதுன் போன்றவர்களையும் பரிசீலிக்கலாம்.

நன்றி..

மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
ச.ரமேஷ்.
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம் ரமேஷ். ஆனால் பிரவீன் இன்னும் நிறைய உழைக்க வேண்டும். ஆனால் மிதுனின் தொழில்நுட்பம் நிச்சயம் உறுதியானது. அவரால் திண்ணமாக ஆட முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...