Skip to main content

சில கேள்விகள்: மகிழ்ச்சி விழைவும் பக்தியும்





டீக்கடையில் ஒட்டுக் கேட்டதில் ஒரு குடும்ப விசாரணை உரையாடல். கொஞ்சம் ஆரோக்யமான இடைவெளியுடன் இந்திய பாணியில் கராறாக குடும்பம் பற்றி மட்டுமேயான, அக்கறையும், கவலைகளும், புகார்களும், யோசனைகளும் கலந்த, ஒரு உரையாடல் – நாற்பதைத் தொடும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும்.
ஆண் எனக்கு தெரிந்தவர். மளிகைக் கடைக்கும் ரிலையன்ஸ் ஷாப்பிங் மாலுக்கும் இடைப்பட்ட ஒரு அரை இருட்டு ஸ்டோரில் இருக்கிறார். பேரிளம் பெண் தூக்கில் டீ வாங்க வந்தவர். ஆண் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக நோய் வாய்ப்படுவது பற்றி நொந்தபடி “நான் மட்டும் கல்லு கணக்கா இருக்கேன்” என்றார் மேலெழுந்த விழிகளுடன். ஒவ்வொரு குழந்தைக்காய் சிகிச்சை, பள்ளிச் செலவு என்று ஆயிரம் ஆயிரமாய் கையை விட்டு போனது பற்றி வருந்திக் கொண்டு, ஒரு கட்டத்துக்கு மேல் செலவு சமாளிக்க முடியாத கையாலாகாத உணர்வை வியப்புடன் முகத்தில் காட்டினார். பணத்தில் இருந்து பேச்சு ஒழுக்கத்துக்கு திரும்பியது.
பெண்ணின் கணவன் தொழில்முறை குடிகாரர். அவரை மலைக்கு அனுப்ப முயற்சி நடக்கிறது. “நேத்து கூட அண்ணனைப் பார்த்தேன். செம போதையில் இருந்தாரு”. பெண் அலுத்துக் கொண்டார் “மலைக்கு போறதுக்கு ஒரு மாசமாவது சுத்தமா விரதம் இருக்க வேண்டாமா? அவரை எப்படி புரிய வைக்க போறேனோ”
“ஒரு மாசத்துக்கு மிதமா குடிச்சா பரவாயில்ல. யாருதான் உலகத்துல பெரிசா யோக்கியம் சொல்லுங்க. கொஞ்சம் கண்டுரோல் பண்ணட்டும். அது போதும் விரதம் முடிச்சு மலை ஏறீடலாம்”
பெண் ஆமோதித்தார். மலை சீசன் விவரங்கள் பேசிக் கொண்டனர்.
ஒட்டுக் கேட்ட தகவல்களை வைத்துப் பார்க்க சில வியப்புகள் ஏற்பட்டன. பொருளாதார நெருக்கடியும், தொடர்ச்சியான பற்றாக்குறையும் வாழ்க்கையை இருட்டாக்குகின்றன. அதுவும் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையில் வாழ்க்கை மேலும் கசக்கும். எத்தனையோ மனிதர்கள் இப்படி வாலையும் தலையையும் இழுத்து ஒட்ட வைக்கும் இழுப்பறியில் வாழ்க்கையை நீட்டித்து செல்கிறோம். எதற்கு? ஏதோ கொஞ்சம் எதிர்பார்ப்பும், மகிழ்ச்சியும் மீதமிருப்பதாலா? நிறைய மகிழ்ச்சியை கொண்டு வாழ்வது தான் அன்றாட உய்வின் லட்சியம் என்ற எண்ணம் பொய். மகிழ்ச்சி மிகச் சன்னமாக அங்கங்கே விரவி உள்ளது. எண்ணற்ற குழப்பங்களுக்கும், கச்சப்புகளுக்கும் இடையே அதைத் தேடி அடைவது வாழ்வு. இன்பம் விழைதலே உயிரின் ஒவ்வொரு செயலையும் இயக்கும் தூண்டுதல் என்பது உண்மைதான். ஆனால், சுவாரஸ்யமாக, இன்பத்தை அள்ளி அள்ளி பெறுவது அவசியமோ சாத்தியமோ அல்ல.
அடுத்து, கடுமையான வாழ்வியல் ஏமாற்றங்களுக்கு மத்தியில் பக்திக்கு இருக்கும் மதிப்பு. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத எந்த ஒரு அமைப்பின் மீதும் ஒரு கட்டத்தில் வெறுப்பு வரும்; கேள்விகள் எழும். வாழ்வில் அடுக்கடுக்காக துயரங்கள் முகம் காட்ட மிகச் சிலரே வாழ்வின் மீது, விதியின் மீது, முடிவாக கடவுள் அல்லது சமூகத்தின் மீது கோபிக்கிறார்கள். பொதுமக்கள் இச்சந்தர்பத்தில் அதிக பக்தி கொண்டவர்களாக ஆகிறார்கள். துரதிஷ்டங்கள் மிக எளிதாக மூடநம்பிக்கைகளை வலுவாக்குகின்றன. மதமும், சடங்குகளும் கேள்விக்கு உள்ளாவதை விட ஆவேசமாக நாடப்படுகின்றன. ஒரு தொழில்முறை குடிகாரரை மலை ஏற்றி என்ன சாதிக்கப் போகிறார்கள்? அவர் தனதான முறையில் மகிழ்ச்சியை தேடி ஒரு சுற்றுப் பாதையை கண்டடைந்திருக்கிறார். டாஸ்மாக் போவது மலை ஏறுவது போல் ஒரு சடங்கு தான். ஆசுவாசம், தப்பித்தல் ஆகிய பதில்களைத் தாண்டி மக்கள் ஏன் சடங்குகளை, வழிவழியான நம்பிக்கைகளை வறுமையின் வெறுப்பில் கூட சந்தேகப்படுவதில்லை என்று வியப்பாக உள்ளது. ஒரே ஒரு காரணம் தான் படுகிறது: எதையெல்லாம் கேள்வி கேட்டு நொறுக்குகிறோமோ அதற்கு பதில் மற்றொன்றை உருவாக்க வேண்டி உள்ளது. அதற்கெல்லாம் எங்கே நேரம் சொல்லுங்கள்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...