Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பயணக் குறிப்புகள்: கலையாத சதுரங்கப் பலகையும், கச்சிதமான நூலகமும்





போன மாத இறுதியில் சில சான்றிதழ்களை எடுத்து வர சொந்த ஊரான குமரி மாவட்டத்துக்கு செல்ல வேண்டி இருந்தது; சில தனிப்பட்ட காரணங்களுக்காக அது ஒரு சற்று நீண்ட சுற்றுப் பயணமாக முடிந்தது. பெங்களூர் சென்று அங்கிருந்து ஊருக்கு சென்றேன். அங்கே இருந்த இரண்டு நாட்களில் முடிந்த வரையில் நண்பர்களை சந்தித்தேன். புதுச்சூழலிலோ அல்லது நீண்ட காலம் கழித்தோ சில நண்பர்களை சந்திக்கும் போது வினோதமான ஒன்று புலப்படுகிறது: அவர்கள் அதே சுற்றுப் பாதையில் அதே பாவனைகளுடன் செல்கிறார்கள் என்பது அது. பிரச்சனைகளும், புகார்களும், தீர்வுகளும் மாறுவதே இல்லை.
கவிஞர் நட.சிவகுமாரை தக்கலையில் அவர் வீட்டில் சந்தித்தேன். அவர் சார்ந்த கலை இலக்கிய பெருமன்றத்தின் கூட்டங்கள் சலிப்பாக இருப்பதால் போவதில்லை என்றார். கடந்த வருடம் நான் பார்த்த போது தக்கலை மன்றக் கிளையின் தலைவராக இருந்தார். பேச்சு சுவாரஸ்யமாக செல்லவில்லை. மின்சாரம் வேறு போனது. அவரது மனைவி வெளியே வந்து “I feel stuffedஎன்று தனக்குள் சொன்னார். திடீரென்று ஊரில் அதைக் கேட்க பயமாக இருந்தது. இருவரும் வெளியே நடக்கச் சென்றோம். சிவகுமாரை நான் கடந்த முறை வீட்டில் பார்த்த போது அவர் குடும்பமும் வேலையும் இல்லாது கவிஞர்.மட்டுமாக இருந்தார் ஆண்கள் மட்டுமே புழங்கிய அவர் வீட்டின் தனித்துவமான வாசனை மற்றும் கலவரத்துடன், பரண் நிறைய புத்தகங்களும் பத்திரிகைகளும் பிதுங்கி வழிய, களங்கமற்ற மனதுடன் ஹி..ஹி என்று சிரித்தபடி உற்சாகமாக பேசுவார். தொண்ணூறுகளின் இறுதியில் அவர் தன் இருபதுகளின் பின்பருவத்தில் இருந்தாலும் ஒரு விடலைத்தனம் அவரைச் சூழ்ந்திருந்தது. அவரது உற்ற நண்பர்களாக அண்மை வீட்டு பள்ளிச் சிறுவர்கள் இருந்தார்கள். அவர்களுடன் பாலியலும், கவிதையும் உரையாடி ஒரு வட்டம் வைத்திருந்தார். கல்யாணமாகி, வேலை கிடைத்து நட இப்போது இறுகி இருந்தார். ஹெச்.ஜி ரசூலை சந்திக்க முடியாமல் போனது. அடுத்த நாள் என்.டி ராஜ்குமாரை சந்தித்தேன். என்.டியிடம் ஒரு முக்கிய குணாம்சம் அவர் எப்போதுமே உணர்ச்சிகரமாக பேசக் கூடியவர். அறிவார்ந்த சொற்களை தேடித் தேடி கோர்க்க முயல மாட்டார். எழுத்தாள உரையாடல்களில் வாழ்க்கை ஞானத்தை உதிர்க்க வேண்டிய தருணங்கள் எப்போதும் வரும். அப்போது எல்லாம் என்.டி இதழ் அலர்ந்த புன்னகையுடன் மௌனிப்பார். இதனால் என்.டியிடம் பேசுவது ஏதாவது ஒருவித மன-எழுச்சியை தந்தபடியே இருக்கும். பெரும்பாலும் தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதில் அவருக்கு விருப்பம் உண்டு. ஆனால் கேட்போருக்கு எண்ணங்களால் திணிக்கப்படும் உணர்வு ஏற்படாது. காரணம் அவரது உணர்ச்சிகரம். அந்தக் கண்களில் துளியும் தந்திரம் தென்படாது. அவரது சுயத்தில் எப்போது இருக்கும் கண்ணீரின், அன்பின் வெம்மை நமக்கு மிக நெருக்கமானதாக படும். மேலும் அவர் அடிப்படையில் ஒரு கவிஞனோ அறிவுஜீவியோ அல்ல ஒரு கவிதைப் பாடகன். இசையின் நெகிழ்ச்சி அவர் குரலில் எப்போதும் தொற்றியபடி உள்ளது. என்.டியிடம் நான் சந்திக்கும் போதெல்லாம் ஏதாவது புகார் இருக்கும். இம்முறை கலை இலக்கிய பெருமன்றத்தின் அதிகார போட்டி பற்றி விசனித்தார். ரெண்டாயிரத்துக்கு பிறகு மன்றம் முக்கியமான படைப்பாளிகளை அறிமுகப்படுத்தாதற்கு இதுவே காரணம் என்றார். குறிப்பாக உயிர் எழுத்தில் ஹெச்.ஜி ரசூல் தலித் கவிதை பற்றி எழுதிய கவிதையில் தன்னை போதுமான அளவுக்கு பிரதிநுத்துவப்படுத்த இல்லை என்று வருத்தம் தெரிவித்தார். இந்த ஏமாற்றம் அவருக்கு மன்றத்தின் பிற பெரியண்ணாக்களின் மீதும் உள்ளது. தான் அமைப்பு-ரீதியாக புறக்கணிக்கப்படுவதான வருத்தம் என்.டிக்கு பத்து வருடங்களுக்கு மேலாக நீடிப்பதில் வியப்பில்லை. குமார செல்வாவுக்கு பிறகு மன்றத்தில் உருவாகி வந்த ஒரு அசலான, திறமையான படைப்பாளி ராஜ்குமார். அது அவருக்கு தெரிகிறது என்பது தான் பிரச்சனை. ஒரு அமைப்புக்குள் தாக்குபிடிக்க ஒரு அசலான படைப்பாளி தன்னை சராசரியாக காட்டிக் கொள்ள வேண்டும். அல்லது அவனைச் சுற்றி அமைப்பை எழுப்ப வேண்டும். இரண்டும் நிகழாத போது உரசல்கள் ஏற்பட்டபடியே இருக்கும். இப்படியான சுயபிரக்ஞை உள்ள ஆளுமைகளை கொண்டுள்ள ஒரு அமைப்பு சாத்தானையோ கடவுளையோ நேரில் தரிசித்த பாதிரியாரைப் போல் நெருக்கடிக்கு உள்ளாகும். க-இ பெருமன்றத்துக்குள் சீனியர்கள் தன்னை ஒழித்துக் கட்ட முயன்றதாக என்.டி சில முறை பெயர்களை குறிப்பிட்ட விரிவாக பேசினார். யாருக்கும் அவர் மீது தனிப்பட்ட காழ்ப்பு இல்லை என்று எனக்கு தோன்றியது. என்.டி அல்லது அவரைப் போன்ற எந்த ஒரு நெடிதுயர்ந்த படைப்பாளியின் ஈகோவையும் ஒரு வாசகன் அல்லது நண்பனால் மட்டுமே ரசிக்க முடியும். மன்றத்தின் கருப்பை அவரை உந்தி வெளித்தள்ளுகிறது. கடந்த பத்தாண்டுகளாக அவரது வெளியேற்றம் சுமூகமாக நடக்கவில்லை. மறைமுகமான ஒரு அக்கப்போர் தொடர்ந்து நடக்கிறது. ஆனால் பார்வதிபுரம்-சென்னை பஸ் ரூட்டை விட கண்ணியமாகவும் தனிப்பட்ட காழ்ப்புகள் இன்றியும் இந்த உரசல் அதனளவில் கிராமியப் பண்பாட்டுடன் நடந்து வருவதை கவனிக்க வேண்டும். கலைக்காத சதுரங்கப் பலகையின் காயகளை போல் இம்மனிதர்கள் இன்னும் இடம் பெயராமலே இருப்பது மேலும் சுவாரஸ்யம்.
எல்லா நண்பர்களின்/உறவினர்களின் வீடுகளிலும் எனக்கு குடும்பப் பொறுப்பாளர்களின் கண்டிப்பும் எரிச்சலும் அகநெருக்கடியை ஏற்படுத்தின. குடும்பத் தலைவிகளை பார்த்த உடனே இருக்கையில் நெளிந்தபடி துள்ளி விடுவேன். ஆனால் என்.டியின் வீட்டில் அவரது மனைவியை சமன்செய்ய அவரது அம்மா இருக்கிறார். கசப்பான விசயங்களை சொல்லும் போது அம்முகத்தில் சிரிப்பு முழுக்க வறண்டிருக்காது. அவ்வீட்டில் அவரும் என்.டியும் ஒருவகை. உற்சாகத்தின் ஊற்றுகள். என்.டியின் பெண் குழந்தை கொள்ளை அழகு. பக்கத்து வீட்டுக்காரர்கள் சதா கவர்ந்து சென்று விடுகிறார்கள். மனுஷ்யபுத்திரனை சந்தித்து சந்தித்து குழந்தைகளை பார்த்தவுடன் அன்னியர் முன்னிலையில் கூட தயங்காமல் அள்ளியெடுத்து கொஞ்சாத என்.டி, நட போன்ற கிராமத்து அப்பாக்கள் வினோதமாக பட்டார்கள்.
மரபை மீறாதபடி, நகரத்து இலக்கிய ஆகிருதிகள் பற்றின ஊகங்களையும் வதந்திகளையும் ஊர்க்காரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். இம்முறை என்னிடம் கலைஞரின் மும்முனை இலக்கிய தளபதிகள் கனிமொழி, தமிழச்சி மற்றும் மனுஷ்யபுத்திரன் என்றனர். அதிலும் மனுஷ்யபுத்திரனுக்கு எம்.எல்.சி பதவி கிடைக்கப் போவது உறுதி என்றனர். கனிமொழிக்கும் ம.புவுக்கு பழைய நெருக்கம் இல்லையே என்றேன். இல்லை ... ஒரு காலத்தில் கனிமொழி பத்து கோடி ரூபாயை மனுஷ்யபுத்திரனிடம் தந்து வைத்திருந்தார். அவர்களின் நட்பும், தி.மு.க உறவும் அப்படித்தான் உறுதிப்பட்டது என்றார் நான் நட.சிவகுமார் வீட்டில் இருக்கும் போது ஒருவர் வேலை இடமாறுதலுக்காக தமிழச்சியிடம் பரிந்துரை செய்யுமாறு போனில் அவரை நச்சரித்துக் கொண்டிருந்தார். மற்றொரு நண்பர் மேற்சொன்ன மும்முனை தமிழச்சி-இமையம்-ரவிக்குமார் என்றார். தமிழச்சியிடம் நேரடியாக கேட்டால் எனக்கு அரசு வேலை உத்தரவாதம் என்று அடித்து சொன்னார். பரிச்சயமில்லை என்றேன். மனுஷ்யபுத்திரன் மூலம் முயலச் சொன்னார். கூச்சமாக இருக்கிறது என்று சமாளித்தேன். சாருவிடம் கேட்கலாமே என்றார். சாருவிடம் எதையும் கேட்கும் தைரியம் எனக்கு இருக்கிறது. ஆனால் வேலை பரிந்துரையை விட சிறப்பான இனிமையான காரியங்கள் அவை.
பெங்களூருக்கு திரும்பி இருந்த நான்கு நாட்களில் பல நண்பர்களை காண விரும்பினேன். தமிழவனை சந்திக்க உத்தேசித்தேன். போனில் அழைத்த போது சென்னைக்கு வரும் வெளியூர்க்காரர்களிடம் நான் வழமையாக சொல்வது போல் ஆட்டோ கட்டணம் பற்றி எச்சரித்தார். பொதுவான ஒரு உபசரிப்பு முறை இது. பிக்பசாரில் சந்தித்து அங்குள்ள உணவகத்தில் பழரசம் குடித்தபடியும், பின்னர் தொடர்ச்சியாய் அங்கேயே மதிய உணவருந்தியபடியும் அவருடன் பேசிய மூன்று மணிநேரங்கள் அருமையானவை.
நவீனத்துவம் பற்றி பேசும் போது தமிழில் நகுலனையும் நாகராஜனையும் தவிர வேறு யாரிடமும் அசலான நவீன நுண்ணுணர்வு இல்லை என்றார். எனக்கும் சற்றே ஒத்த எண்ணம் இருந்துள்ளது. தமிழின் பிராமண நவீனத்துவம் மரபை கராறாக பரிசீலிக்கவில்லை. உதாரணமாக டூப்ளினர்ஸ் தொகுப்பில் ஜேம்ஸ் ஜாய்ஸ் ஓரினச் சேர்க்கையாளரான ஒரு பாதிரியாரின் வாழ்வை கத்தோலிக்க பின்னணியில் இருந்து நுட்பமாக, தயக்கமின்றி அலசும் “The Sisters” போன்ற ஒரு முயற்சி இங்கு பெரிதும் நடைபெற இல்லை. மேற்கில் கிறித்துவத்தை உரையில் நீட்சேவோ, ரஸலோ, கவிதையில் டெட் ஹியூக்ஸ் போன்றவர்களோ கராறாக பரீலித்தது போல் நம்மவர்கள் இந்து மரபை நேரிடவில்லை. உதாரணமாக, நீலபத்மநாபனை போல் தெய்வ பக்தியை பத்தாம்பசலித்தனமாக முன்வைக்கும் ஒரு முக்கியமான எழுத்தாளனை மேற்கத்திய மரபில் காட்ட முடியாது. இத்தனைக்கும் அவர்கள் கிறித்துவம் போன்ற ஒரு இறுக்கமான மத இயக்கத்தின் விழுமியங்களுடன் இடையறாது மோதி வளர்ந்திருக்கிறார்கள். இந்த பார்வையை தமிழவன் ஏற்றுக் கொண்டார். சு.ரா போன்றவர்கள் மாற்றுத் தரப்புடன் உரையாட தயங்கியதாக அவர் சொன்னார். க.நாசுவிடம் போல் தன்னால் சு.ராவிடமோ அவரது பள்ளியை சார்ந்தவர்களிடமோ ஒன்றி உரையாட முடிந்ததில்லை என்றார். தமிழவனிடம் ஒரு இலக்கிய வரலாற்று திறனாய்வு ஒழுங்கு ஓடிக் கொண்டிருக்கிறது. பிரதிகளையும் ஆளுமைகளையும் அப்படித்தான் புரிய விழைகிறார். சு.ராவின் ஒரே அசலான நவீனத்துவ படைப்பு “ஜெ.ஜெ சில குறிப்புகள் என்றார். காரணம் அது காலத்தின், சூழலின் வெளிப்பாடு; ஒரு இடைவெளிக்கு பிறகு திரும்பின சு.ரா தன்னை பாதித்த கலாச்சார போக்குக்கு செய்த எதிர்வினை. ஜெ.ஜெ ஒரு மோசமான படைப்பு என்றாலும் தமிழவன் அதன் வரலாறுச் சிறப்பை இங்கு குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொண்டேன். ஜப்பானிய நவீன கவிதையுடன் ஒப்பிடுகையில் நவீன தமிழ் கவிதை ஒருவித ஆர்ப்பாட்டத்தன்மையும், மிகை அழுத்தமும் கொண்டதாக படுவதாக அவரிடம் சொன்னேன். அதற்கு கலாச்சாரம் காரணம் என்றார். ஜப்பானியரின் ஒழுங்கமைதி மத-தத்துவ மரபின் நீட்சியில் திரண்டது. தமிழர்களுக்கு கவிதை என்றால் கோழிக் குஞ்சுக்கு வண்னமடித்து திரியவிடுவது போல் மற்றொன்றாக மாற்றி விடும் ஒரு நடைமுறை உள்ளது என்றார். ஒரு மொழியின் இலக்கியத்தை சரியாக புரிந்து கொண்டு மதிப்பிட மற்றொரு மொழியின் இலக்கிய பரிச்சயம் அவசியம் என்றும் மீண்டும் வலியுறுத்தினார். கர்நாடகாவில் நவீனத்துவம் மேலும் வலிமையாக காத்திரமாக உருவாகி இருப்பதாகவும் அதற்கு காரணம் ஆங்கில இலக்கிய மாணவர்கள் மூலம் அது அறிமுகமாகி வளர்ந்ததே என்றார். இப்படியான ஒரு வரலாற்று பார்வையில் தமிழின் இலக்கிய தத்துவ எழுச்சிகளை ஆய்வதற்கு நிறைய சாத்தியங்கள் இருப்பதாகவும், அதை யாரும் கவனிக்க இல்லை என்றும் விசனித்தார். பேச்சு அவரது உயிரோசை கட்டுரைகளின் பால் திரும்பியது. தன்னை ஒரு முக்கியமான தருணத்தில் மிகுந்த சுதந்திரத்துடன் ஈழப் பிரச்சனை பற்றி எழுத தூண்டி வாய்ப்பளித்தததாக அவர் மனுஷ்யபுத்திரனைப் பற்றி குறிப்பிட்டார். “மனுஷ்யபுத்திரனுக்கு எழுத்தாளர்களுக்கு உள்ளிருக்கும் சிறப்பான திறமையை வெளிக்கொண்டு வர, புது எழுத்தாளர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கான பிரத்யேக திறமை உள்ளது. இது ஒரு முக்கியமான விசயம். இங்கிருந்து உரையாடல் மனுஷ்ய்புத்திரனின் கவிதைகள் நோக்கி சென்றது. ம.பு வின் அனைத்து கவிதைத் தொகுப்புகளையும் ஒருசேர படித்து வருவதாக கூறினார். மனுஷ்யபுத்திரனின் சாரமாக பெர்ஷிய, இஸ்லாமிய சூபி குரல் ஒலிப்பதாக அவர் சொன்னது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முகலாய கலாச்சார வாழ்வின் ஒரு ஏக்கமும் மன்றாடலும் அவரது கவிதையின் மைய தொனி என்றார். இதை தமிழவன் உதாரணங்கள் கொண்டு நிறுவ முயலவில்லை. நான் ம.புவிடம் முழுமையான ஒரு சமகால ஆளுமையை காண்கிறேன் என்றதற்கு தமிழவன் ம.புவின் கவிதைகளை ஒருசேர வாசித்து விட்டு மனதுக்குள் அவற்றின் தொனி ஏற்படுத்தும் அதிர்வை கவனிக்க சொன்னார். இலக்கிய மோஸ்தர்களின் முக்கியத்துவம் பற்றி தமிழவன் முன்வைத்த அவதானிப்பு சுவாரஸ்யமானது. மோஸ்தர்களினால் தூண்டப்பட்ட ஒரு எழுத்தாளனையோ சிந்தனையாளனையோ படிக்க/ அல்லது படிப்பதாய் பாவனை செய்ய ஆரம்பிக்கும் வாசகன் பின்னால் சிறந்த சிந்தனையாளனாக முதிர வாய்ப்புள்ளது என்றார். மோஸ்தர்கள் இன்றி இது சாத்தியப்படாது.
தமிழவன் அவரது எழுத்தைப் போலவே நேரிலும் ஒரு no-nonsense உரையாடல்காரர். அவதூறுகளை கிளறுவதையும், சர்ச்சைகளை வளர்ப்பதையும் கராறாக தவிர்க்கிறார். தன்னைப் பற்றின அவதூறுகளை குறிப்பிடும் போதும் ஜோக் கேட்டது போல் சிரிக்கிறார். உரையாடலின் போது ஒரு பக்கம் அவரது அவதானிப்புகளையும் கூர்மையான, உணர்ச்சி பாசாங்கற்ற வரலாற்று தர்க்க ஒழுங்கையும் தனிப்பட்டு கவனிப்பது சுவாரஸ்யமானது. பின்னர் அவரது வீட்டு நூலகத்தை பார்வையிட்டேன். எழுத்தையும், ஆளுமையையும் போன்றே நூலகமும் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.. இலக்கியம், தத்துவம், கலாச்சாரம் ஆகிய துறை நூல்களில் மிகச் சிறந்தவற்றை மட்டுமே அடுக்கி இருந்தார். ஒரு காலத்தில் பிரம்மராஜன், சு.ரா போன்றவர்கள் மிகுந்த பாதிப்படைந்து மொழிபெயர்த்த பெங்குவின் பதிப்பதகத்தின் ஐரோப்பிய கவிஞர்கள் வரிசை நூல்களில் அனைத்தையும் கொண்டிருந்தார். அதைப் போன்றே Fontana Modern Masters என்கிற அறிமுக நூல்களின் வரிசையிலும் பல முக்கிய புத்தகங்களை வைத்திருந்தார். பல நூல்களின் தலைப்புகளை குறித்துக் கொண்டேன். வேறு பல எழுத்தாளர்கள், ஆய்வாளர்களின் நூலகங்களில் தூசு போல் தானாக வந்தடைந்த பல நூல்கள் இருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் தமிழவனின் நூலகம் நன்கு திருத்தப்பட்ட ஒரு தோட்டம். பிடிக்காத/தேவையற்ற புத்தகங்களை அடுத்தவர்களிடம் கொடுத்து விடுவேன் என்றார். கிளம்பும் போது அவரிடம் புத்தகம் ஒன்று கேட்க வேண்டும் என்ற யோசனையை மாற்றிக் கொண்டேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...