Skip to main content

உலகக் கோப்பை: தோனியின் முன்னுள்ள இரு கேள்விகள்




வரப்போகும் கிரிக்கெட் உலகக் கோப்பையை முன்னிட்டு இந்திய அணி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும், கட்டி எழுப்பப்படும் அவநம்பிக்கைகளும் சற்று மிகையானவையே. சமீபத்திய சில ஏமாற்றங்களை கணக்கில் கொண்டாலும் சொந்த ஆடுகளங்களில் இந்தியா மிக வலுவான அணியாகவே உள்ளது. அணிகளின் இதுவரையிலான பொதுவான ஆட்டவரலாற்றின் படி ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையுடன் கோப்பையை வெல்லும் சரிசமமான வாய்ப்பு இந்தியாவுக்கும் உண்டு.
இந்தியாவுக்கு உள்ள வெளிப்படையான பலவீனங்களும், அதனால் சந்திக்கப் போகும் பிரச்சனைகளும் வரும் உலகக் கோப்பைக்கு முன் தீர்க்க முடியாதவை. ஆனால் அவை என்ன என்பதில் ஒரு தெளிவும், தற்காலிக தப்பித்தல்களை வரையறுப்பதும் அணிக்கு அவசியம். தோனியின் முன்னுள்ள முக்கிய சவால்கள் அவையே. நாம் இங்கு இரண்டை கவனிக்கலாம்.

முதலில் தோனி மட்டையாட்ட பவர் பிளே மற்றும் இறுதி ஸ்லாக் ஓவர்கள் உள்ளிட்ட பதினைந்து ஓவர்களில் ஓட்டங்களை கட்டுப்படுத்தி வீசுவதற்கான ஒரு சிறப்பு பந்தாளரை முடிவு செய்ய வேண்டும். இந்தியாவின் வரலாற்றில் அப்படி ஒரு யார்க்கர் நிபுணர் இருந்ததில்லை. (அகார்க்கர் ஓரளவு அந்த கிரீடத்தில் தூசு படியாமல் பார்த்துக் கொண்டார்). தோனியின் முன்னுள்ள கேள்வி இதுதான்: புதிதாய் ஒருவரை இவ்விடத்தில் கொண்டு வருவதா அல்லது ஏற்கனவே துண்டு போட்டு வைத்திருக்கும் பழுத்த வீரர்களை நம்பி இப்பொறுப்பை ஒப்படைப்பதா? இலங்கையில் நடந்து முடிந்த முத்தரப்பு தொடரின் இறுதி ஆட்டத்தில் முனாப் படேல் ஸ்லாக் ஓவர்களில் சாமர்த்தியமாக வீசினார். அவரை ஸ்லாக் ஓவர் நிபுணராக பயன்படுத்துவதானால் பிரவீனை அணியில் இருந்து விலக்க வேண்டும். சமீப காலமாக புதுப் பந்தை சிறப்பாக பயன்படுத்தி ஏராள விக்கெட்டுகளை சாய்த்து வரும் பிரவீனை கக்கத்தில் வைப்பதா கையை தூக்குவதா என்பதே தோனியின் முதல் குழப்பமாக இருக்கும்.

அடுத்து சிக்கல் ரவீந்திர ஜடேஜாவின் ஆதாரத் திறமை என்ன, அவரது அடையாளம் என்ன என்பது. ஜடேஜா ஆரம்பத்தில் தனது மட்டையாட்டத்துக்காக விதந்தோதப்பட்டு பெரும் எதிர்பார்ப்புகளுடன் களமிறக்கப்பட்டார். இங்கிலந்தில் நடந்த T20 உலகக் கோப்பையின் போது இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆரம்ப விக்கெட்டுகள் சரிய, நிலையாக ஆடும் பொறுப்பை ஒப்படைக்கும் அளவுக்கு தோனிக்கு ஜடேஜா மீது நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த ஆட்டத்தில் பதற்றமடைந்ததால் ஜடேஜாவில் அதிரடியாக ஆட முடியவில்லை. ஆட்டத்தை இந்தியா இழந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக ஜடேஜா கடுமையான நெருக்கடிக்கு உள்ளானார். அன்றில் இருந்து எந்த இந்திய தோல்விக்கும் விமர்சன பலிகடா ஜடேஜா தான். அடுத்து ஜடேஜா தன் பந்துவீச்சை கூர்மையாக்கினார். ஹர்பஜனை விட கட்டுப்பாட்டுடன் வீசினார். தோனி “ஜடேஜா ஒரு மட்டையாட்ட ஆல்ரவுண்டர் அல்ல, பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்று அறிவித்து மீடியாவிடம் இருந்து தன் பலி ஆட்டை பாதுகாத்தார். பின்னர் ஐ.பி.எல் உடன்பாட்டை மீறி மும்பை அணிக்காக ஆட முயன்றமைக்காக ஜடேஜா கடந்த ஐ.பி.எல் தொடர் முழுக்க தடை செய்யப்பட்டார். இது அவரது தன்னம்பிக்கையை உருக்குலைத்தது; நிர்பந்திக்கப்பட்ட ஓய்வில் அவரது ஆட்டத்திறன் துருவேறியது. பின்னர் அவர் கடுமையாக முயன்று பந்து வீச்சுத் திறனை மீட்டெடுத்தாலும், மட்டையாட்டம் கிட்டத்தட்ட மறந்து போயிருந்தது. இலங்கையில் நடந்த சமீப தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக உயரப்பந்துக்கு அவர் புட்டத்தை காட்டியபடி ஆடிய வினோத முறை அணி மேலாண்மையை வெட்கப்பட வைத்திருக்க வேண்டும். மீண்டும் விமர்சனம் எழ, தோனி “ஜெடேஜா ஆல்ரவுண்டர் அல்ல, முதன்மை பந்து வீச்சாளர் என்றார். இந்த அறிக்கைக்கு நியாயம் செய்யும் விதத்தில் முத்தரப்பு தொடர் இறுதி ஆட்டத்தில் ஜடேஜா இடத்தில் தோனி ஒரு முதன்மை மட்டையாளரை கொண்டு வந்தார். இங்கு நிஜமான பிரச்சனை ஜடேஜா ஒரு இயல்பான, மரபுவழி சுழலர் அல்ல என்பதே. அவர் ஒரு புத்திசாலி சுழலர் மட்டுமே. பந்துவீச்சில் அவரை விட சேவாக் அதிக திறமையானவர். யுவ்ராஜால் ஜெடேஜாவை விட கட்டுப்பாடாக பத்து ஓவர் இடதுகை சுழல் வீச முடியும் என்பது மட்டுமல்ல, அவர் அதிக விக்கெட்டுகளும், அனுபவமும் கொண்டவர். ஜெடேஜாவால் தன் பந்து வீச்சால் இவ்விருவரையும் மிஞ்ச முடியாது. இந்த பட்சத்தில் ஹர்பஜன் அணிக்கு திரும்பும் பட்சத்தில் தோனி ஜடேஜாவை முழுநேர\பகுதிநேர சுழலராக பயன்படுத்தும் நியாயம் என்னவாக இருக்கும்? ஜடேஜாவை அவர் இனி எப்படி அடையாளப்படுத்தப் போகிறார்?

இந்த குழப்பங்களுக்கான விடை நமது உலகக் கோப்பை வெற்றி வாய்ப்பை அதிரடியாக பாதிக்காது என்றாலும் ஒரு தெளிவான ஆரம்பத்துக்கு வழிகோலும்.

Comments

Akash said…
அஸ்வின் ஐ ஜடேஜா க்கு பதிலாக எடுக்கலாம். அவர் திறமையான பந்து வீச்சாளர். ஐபில், சாம்பியன் லீக் போட்டிகளில் எல்லாம் தனது திறமையை நீருபித்துள்ளர். அதே போல யுவராஜ் சிங்ககிண form உம கவலை அளிப்பதாக உள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...