Skip to main content

உலகக் கோப்பை: தோனியின் முன்னுள்ள இரு கேள்விகள்




வரப்போகும் கிரிக்கெட் உலகக் கோப்பையை முன்னிட்டு இந்திய அணி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும், கட்டி எழுப்பப்படும் அவநம்பிக்கைகளும் சற்று மிகையானவையே. சமீபத்திய சில ஏமாற்றங்களை கணக்கில் கொண்டாலும் சொந்த ஆடுகளங்களில் இந்தியா மிக வலுவான அணியாகவே உள்ளது. அணிகளின் இதுவரையிலான பொதுவான ஆட்டவரலாற்றின் படி ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையுடன் கோப்பையை வெல்லும் சரிசமமான வாய்ப்பு இந்தியாவுக்கும் உண்டு.
இந்தியாவுக்கு உள்ள வெளிப்படையான பலவீனங்களும், அதனால் சந்திக்கப் போகும் பிரச்சனைகளும் வரும் உலகக் கோப்பைக்கு முன் தீர்க்க முடியாதவை. ஆனால் அவை என்ன என்பதில் ஒரு தெளிவும், தற்காலிக தப்பித்தல்களை வரையறுப்பதும் அணிக்கு அவசியம். தோனியின் முன்னுள்ள முக்கிய சவால்கள் அவையே. நாம் இங்கு இரண்டை கவனிக்கலாம்.

முதலில் தோனி மட்டையாட்ட பவர் பிளே மற்றும் இறுதி ஸ்லாக் ஓவர்கள் உள்ளிட்ட பதினைந்து ஓவர்களில் ஓட்டங்களை கட்டுப்படுத்தி வீசுவதற்கான ஒரு சிறப்பு பந்தாளரை முடிவு செய்ய வேண்டும். இந்தியாவின் வரலாற்றில் அப்படி ஒரு யார்க்கர் நிபுணர் இருந்ததில்லை. (அகார்க்கர் ஓரளவு அந்த கிரீடத்தில் தூசு படியாமல் பார்த்துக் கொண்டார்). தோனியின் முன்னுள்ள கேள்வி இதுதான்: புதிதாய் ஒருவரை இவ்விடத்தில் கொண்டு வருவதா அல்லது ஏற்கனவே துண்டு போட்டு வைத்திருக்கும் பழுத்த வீரர்களை நம்பி இப்பொறுப்பை ஒப்படைப்பதா? இலங்கையில் நடந்து முடிந்த முத்தரப்பு தொடரின் இறுதி ஆட்டத்தில் முனாப் படேல் ஸ்லாக் ஓவர்களில் சாமர்த்தியமாக வீசினார். அவரை ஸ்லாக் ஓவர் நிபுணராக பயன்படுத்துவதானால் பிரவீனை அணியில் இருந்து விலக்க வேண்டும். சமீப காலமாக புதுப் பந்தை சிறப்பாக பயன்படுத்தி ஏராள விக்கெட்டுகளை சாய்த்து வரும் பிரவீனை கக்கத்தில் வைப்பதா கையை தூக்குவதா என்பதே தோனியின் முதல் குழப்பமாக இருக்கும்.

அடுத்து சிக்கல் ரவீந்திர ஜடேஜாவின் ஆதாரத் திறமை என்ன, அவரது அடையாளம் என்ன என்பது. ஜடேஜா ஆரம்பத்தில் தனது மட்டையாட்டத்துக்காக விதந்தோதப்பட்டு பெரும் எதிர்பார்ப்புகளுடன் களமிறக்கப்பட்டார். இங்கிலந்தில் நடந்த T20 உலகக் கோப்பையின் போது இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆரம்ப விக்கெட்டுகள் சரிய, நிலையாக ஆடும் பொறுப்பை ஒப்படைக்கும் அளவுக்கு தோனிக்கு ஜடேஜா மீது நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த ஆட்டத்தில் பதற்றமடைந்ததால் ஜடேஜாவில் அதிரடியாக ஆட முடியவில்லை. ஆட்டத்தை இந்தியா இழந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக ஜடேஜா கடுமையான நெருக்கடிக்கு உள்ளானார். அன்றில் இருந்து எந்த இந்திய தோல்விக்கும் விமர்சன பலிகடா ஜடேஜா தான். அடுத்து ஜடேஜா தன் பந்துவீச்சை கூர்மையாக்கினார். ஹர்பஜனை விட கட்டுப்பாட்டுடன் வீசினார். தோனி “ஜடேஜா ஒரு மட்டையாட்ட ஆல்ரவுண்டர் அல்ல, பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்று அறிவித்து மீடியாவிடம் இருந்து தன் பலி ஆட்டை பாதுகாத்தார். பின்னர் ஐ.பி.எல் உடன்பாட்டை மீறி மும்பை அணிக்காக ஆட முயன்றமைக்காக ஜடேஜா கடந்த ஐ.பி.எல் தொடர் முழுக்க தடை செய்யப்பட்டார். இது அவரது தன்னம்பிக்கையை உருக்குலைத்தது; நிர்பந்திக்கப்பட்ட ஓய்வில் அவரது ஆட்டத்திறன் துருவேறியது. பின்னர் அவர் கடுமையாக முயன்று பந்து வீச்சுத் திறனை மீட்டெடுத்தாலும், மட்டையாட்டம் கிட்டத்தட்ட மறந்து போயிருந்தது. இலங்கையில் நடந்த சமீப தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக உயரப்பந்துக்கு அவர் புட்டத்தை காட்டியபடி ஆடிய வினோத முறை அணி மேலாண்மையை வெட்கப்பட வைத்திருக்க வேண்டும். மீண்டும் விமர்சனம் எழ, தோனி “ஜெடேஜா ஆல்ரவுண்டர் அல்ல, முதன்மை பந்து வீச்சாளர் என்றார். இந்த அறிக்கைக்கு நியாயம் செய்யும் விதத்தில் முத்தரப்பு தொடர் இறுதி ஆட்டத்தில் ஜடேஜா இடத்தில் தோனி ஒரு முதன்மை மட்டையாளரை கொண்டு வந்தார். இங்கு நிஜமான பிரச்சனை ஜடேஜா ஒரு இயல்பான, மரபுவழி சுழலர் அல்ல என்பதே. அவர் ஒரு புத்திசாலி சுழலர் மட்டுமே. பந்துவீச்சில் அவரை விட சேவாக் அதிக திறமையானவர். யுவ்ராஜால் ஜெடேஜாவை விட கட்டுப்பாடாக பத்து ஓவர் இடதுகை சுழல் வீச முடியும் என்பது மட்டுமல்ல, அவர் அதிக விக்கெட்டுகளும், அனுபவமும் கொண்டவர். ஜெடேஜாவால் தன் பந்து வீச்சால் இவ்விருவரையும் மிஞ்ச முடியாது. இந்த பட்சத்தில் ஹர்பஜன் அணிக்கு திரும்பும் பட்சத்தில் தோனி ஜடேஜாவை முழுநேர\பகுதிநேர சுழலராக பயன்படுத்தும் நியாயம் என்னவாக இருக்கும்? ஜடேஜாவை அவர் இனி எப்படி அடையாளப்படுத்தப் போகிறார்?

இந்த குழப்பங்களுக்கான விடை நமது உலகக் கோப்பை வெற்றி வாய்ப்பை அதிரடியாக பாதிக்காது என்றாலும் ஒரு தெளிவான ஆரம்பத்துக்கு வழிகோலும்.

Comments

Akash said…
அஸ்வின் ஐ ஜடேஜா க்கு பதிலாக எடுக்கலாம். அவர் திறமையான பந்து வீச்சாளர். ஐபில், சாம்பியன் லீக் போட்டிகளில் எல்லாம் தனது திறமையை நீருபித்துள்ளர். அதே போல யுவராஜ் சிங்ககிண form உம கவலை அளிப்பதாக உள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...