முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பல் குத்துவது எத்தனை முக்கியம்?




எனக்கு ராசி, அதிர்ஷ்டம், விதி ஆகிய பிரயோகங்களில் நம்பிக்கை இல்லை. இவற்றில் மானுட மனஊக்கம் கலந்துள்ளது. சந்தர்ப்ப சுழற்சிகளில் ஒரு குருட்டத்தன்மை இருப்பதே உண்மை. அதனால் அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் என்றெல்லாம் சொல்லும் போது ஒரு கருத்து தன்னிச்சையாக உருவாகிறது. சந்தர்ப்ப மாற்றங்கள் ஒரு பெரும் மானுட அல்ல பிரபஞ்ச நன்மையை நோக்கி செலுத்தப்படுவன என்பதே அது. எனக்கு இறுதிகட்ட பிரபஞ்ச நன்மையில் நம்பிக்கை இல்லாததால் முக்கியமற்ற அன்றாட பேச்சில் மட்டுமே இவற்றை புரட்ட தலைப்படுவேன். ஆனால் இப்போது என் வாழ்க்கைப் போக்கின் நெளிவு வளைவுகளை பேச நினைக்கையில் சற்று சங்கடமாகிறது. ஆனாலும் ’ராசியுடனே’ ஆரம்பிக்கிறேன்.


எனக்கு வேலை விசயத்தில் அதிக ராசி இல்லை. அதாவது மனநிறைவு மற்றும் மகிழ்ச்சியை பொறுத்தமட்டில். 2006-இல் மாலைமலரில் செய்த வேலை எனக்கு மிகப்பிடித்தமான முதல் பணி. ஆனால் சில மாதங்களிலேயே எங்கள் குழு கலைந்தது. நானும் கிளம்ப வேண்டியதாகியது. பிறகு கிரீம்ஸ் ரோடில் ஒரு தனியார் நிறுவனத்தில் செய்திகளை சுருக்கி எழுதும் பணி பட்டியலில் இரண்டாவது. சில மாதங்களில் லே ஆப் என்று மென்னியை பிடித்து தள்ளினார்கள். பிறகு மூன்றாவதாக தற்போதுள்ள கல்லூரி வேலை. கல்லூரி வேலையில் மகிழ்ச்சியோடு காலவசதியும் ஒரு தனிச்சிறப்பு. ஆனால் அங்கும் ஒரு சிக்கல்.
எம்.பில் படிப்பை தொலைதூர கல்வி முறையில் முடித்தேன். வெகுவாக தாமதித்து சமீபமாகத்தான் ஆய்வை சமர்ப்பித்தேன். 2009 மேமாதத்துக்குள் எம்.பில் முடிக்காதவர்களை வீட்டுக்கு அனுப்ப ஒரு அரசாணை பிறப்பித்துள்ளார்கள். ஆகையால் கல்லூரியில் இருந்தும் விரைவில் வெளியேற்றப் பட்டு விடுவேன். இதற்கு பின் இன்னொரு கதை உள்ளது. 2005இல் நேரடி எம்.பில் வகுப்பில் சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். அப்பாவுக்கு புற்றுநோய் ஏற்பட்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட நான் நேரடி எம்.பிலில் இருந்து விலகி உடனே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இல்லாவிட்டால் ஒரேயடியாக பி.எச்.டி முடித்துவிட்டுத் தான் கிளம்பியிருப்பேன். கிறித்தவக் கல்லூரி மீது அப்படி ஒரு காதல் எனக்கு. இந்த அரசாணை பற்றி எனது துறைத்தலைவர் அழைத்து சொன்ன போது எனக்கு 2005-இல் பாதி கட்டணத்தை திரும்ப வாங்கி படிப்பில் இருந்து விலக நேர்ந்த அவலம் நினைவு வந்தது. இளங்கலை முதுகலை சேர்த்து ஐந்து வருடங்கள் நான் முதல் மாணவனாக வந்தேன். முதுகலையில் தங்கப்பதக்கம் பெற்றேன். என்னை விட பத்து பதினைந்து சதவீதம் குறைவாக மதிப்பெண்கள் பெற்ற சகமாணவர்கள் வசதியாக எம்.பில் படிக்க முடிந்ததை நினைக்கும் போது அநியாயமாக பட்டது. எத்தனையோ கவனிக்காமல் விடப்படும் அன்றாட தருணங்கள் போல் இச்சம்பவங்களை கோர்த்துப் பார்க்க ஒரு கதை உள்ளதாக தோன்றியது. துரதிஷ்டத்தின் கதை. என் விதியை கொஞ்ச நேரம் நொந்த பிறகு விதியே இல்லையே என்பது நினைவு வந்தது. (பிடிக்காத சில வேலைகளில் இருந்துள்ளேன். அங்கிருந்து நானாக கழன்று கொள்ள வேண்டும். அவர்களாக அனுப்பவே மாட்டார்கள்; எத்தனை மோசமாக பணி செய்தாலும், நடந்து கொண்டாலும்.)

இது போன்ற அல்லது மேலும் மோசமான ராசி பலருக்கும் இருந்திருக்கலாம்/இருக்கலாம். கண்ணீர்க் கதைகள் அதிகம் நினைவில் தங்கி இருக்கின்றன. அவற்றை மீட்டுவதில் அகங்காரம் கொஞ்சம் சுகம் காண்கிறது. சொறிந்து சுகம் காண்பது நமது நோக்கமல்ல அல்ல என்பதால் அதற்காக நான் இத்தனையும் சொல்லவில்லை. இப்படி சந்தப்பங்களை கதைப்படுத்தும் அபத்தம் ஏன் நடக்கிறது? வாழ்க்கையில் அப்படி ஒரு கட்டமைப்பு தர்க்கம் இல்லையே! வாழ்க்கையில் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்பது பற்றி ரசல் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்: Conquest of Happiness. அதில் மனிதனின் ஒரு ஆதாரப் பிரச்சனையை சுட்டுகிறார். சதா வாழ்க்கையை அர்த்தப்படுத்துவது. அதுவும் அகங்காரத்தை சும்மா சும்மா தொட்டு நக்கியபடி. இது குறைபட்ட உண்மையையே நமக்கு காட்டுகிறது. அதனால் மனிதன் வாழ்க்கையை நிறைவு செய்யப்படாத ஒரு கதையாக கற்பித்து அதில் தனக்கு மிகுந்த உணர்வெழுச்சி தரும் சம்பவங்களை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாய் நிரப்பி வருகிறான். பிறரிடம் அரட்டையடிப்பது இதனாலேயே சுகமான ஒன்றாக உள்ளது. ஆனால் தர்க்கரீதியான கதையாக வாழ்க்கையை புனைவு செய்வது மகிழ்ச்சிக்கு எதிரானது. பிரக்ஞையை மறந்து விட்டு மனதின் தர்க்க மாவு மிஷினை அணைத்து விட்டு பிடித்த விசயங்களில் திசை திரும்பி ஈடுபடுவதே மகிழ்ச்சியின் திறவுகோல் என்று வலியுறுத்துகிறார் ரசல். எப்படியாயினும் தர்க்கம் என்கிற அருமையான கருவியைக் கொண்டு அகங்காரத்தை முதுகு சொறிவது வீண் தான். அதற்கு தேமேவென்று ’பொழுது போக்கலாம்’.
அடிக்கடி பல்குத்த வேண்டும் தான். நமது வாழ்க்கை சேதி முக்கியம் தான். ஆனால் ஒன்றும் அத்தனை முக்கியமில்லையே!

கருத்துகள்

Rettaival's Blog இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்க்கையை சதா துரத்தியபடி வாழ்வதில் உள்ள பெருமிதத்தை இழக்காமல் இயங்க வாழ்த்துகிறேன். நேரடியாக உங்களை எனக்குத் தெரியாதெனினும் ரசலினுடைய வார்த்தைபடி உங்கள் விருப்பம் போல் வேலையும் அமைய வாழ்த்துக்கள். உங்களின் ஏனைய பதிவுகளை மௌனமாக வாசித்துவிட்டு இதற்கு மட்டும் ஏன் பின்னூட்டமிடுகிறேன் என்பது எனக்கே விளங்கவில்லை.
selventhiran இவ்வாறு கூறியுள்ளார்…
:)
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ரெட்டைவால்ஸ் மற்றும் செல்வேந்திரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...