Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஆஸ்திரேலியாவும் கிரிக்கெட்டின் ஆதிதேவதையும்





பெரும்பாலும் டெஸ்டு ஆட்டங்கள் பொறுமையாலும், சாமர்த்தியத்தாலுமே வெல்லப்படுகின்றன. டெஸ்டு ஆட்டத்தின் ஆதார இலக்கே வலிமையை முன்னிறுத்தி பலவீனத்தை மறைப்பது தான். அதற்கான அவகாசமும், நேரமும் டெஸ்டில் உண்டு. ஒரு அணியைத் தவிர உலகின் அனைத்து நாடுகளும் சராசரிகளை கேடயமாக்கி ஒன்றிரண்டு மேதைகளை தாக்குதல் முனையாக்கி வெற்றி நோக்கி கால் இஞ்ச் அரை இஞ்ச் என்று நண்டுக்கால்களால் முன்னேறுபவை தாம். உதாரணமாக இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா. மேற்சொன்ன எந்த அணியுமே முதல் நாளே ஆட்டத்தை தங்களுக்கு சாதகமாய் எவ்வளவு சீக்கிரம் வென்று முடிக்கலாம் என்று யோசிப்பதில்லை. ஒவ்வொரு செஷனாய் தங்கள் சீட்டுக்கட்டின் விரிப்பை கலைத்து கலைத்து அடுக்குவதே இவ்வணிகளின் தலைவர்களின் பணி. முதலில் தோல்வியை தவிர்த்தல், பின்னர் வாய் சிவக்குமென்றால் மட்டும் வெற்றிலை. ஆனால் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் டெய்லர் மற்றும் ஸ்டீவ் வாஹின் தலைமைகளின் கீழ் ஆஸ்திரேலியா ஒரு மாறுபட்ட தடத்தில் சென்றது. ஒரு சைக்கோ கொலைகாரனைப் போல் எதிரணிகளை கால் பதியும் இடமெல்லாம் முறியடித்து கிட்டத்தட்ட அப்படி செய்வதை விட ஒரு வேறுபட்ட நிதானமான அணுகுமுறை இருக்கவே முடியாது என்று திடமாக நம்பியது. ஒரு குமாஸ்தாவின் கோப்பைப் போல் அவர்கள் எதிரணிகளை சுலபமாக திறந்து மேலும் ஒன்றுமில்லை என்று அலுப்பில் மூடினர்.
இதற்கு காரணம் மற்றெந்த அணியையும் விட ஆஸ்திரேலியாவிடம் ஏகப்பட்ட அதிதிறமையாளர்கள் இருந்தனர் என்பதே வார்னே, மெக்ராத், கில்கிறிஸ்டு, வாஹ் சகோதரர்கள், ஹெய்டன் என்று ஒரு நீண்ட வரிசை. அப்படி ஒரே கட்டத்தில் ஒரு அணிக்கு அமைவது கால விசித்திரம். இத்தோடு இறுதிவரை தொடர்ந்து முரட்டுத்தனமாய் போராடும் அவர்களின் விடாப்பிடி ஆற்றலும் சேர்ந்து கொண்டது. பின்னர் இந்த அதிதிறமையாளர்கள் ஓய்வு பெற ஆஸ்திரேலியா சமதள வாழ்வுக்கு திரும்பியது. ரிக்கி தலைவரானார்; ஆஸி அணி திரும்பிப் பார்த்து தாம் இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்காவை விட ஒன்றும் மோசமில்லை என்று நினைத்து சமாதானம் கொண்டது. சமதள வாழ்வில் ஆஸ்திரேலிய அணி தன்னை தக்க வைக்க கடுமையாக உழைக்க நீண்ட நேரம் மௌனமாக பொறுமை காக்க வேண்டியிருந்தது. இயல்பான போராட்ட குணம் ஆஸ்திரேலியாவை இந்த மானுட அவதாரத்தின் போது அடிக்கடி சளி பிடித்து தும்மாமல் காப்பாற்றியது. ஆனால் விமர்சகர்களுக்கு இந்த வில் அம்புகளுடன் கானகத்தில் சின்ன சின்ன அரக்கர்களை கொன்று திரிந்த ஆஸ்திரேலியாவை பிடிக்கவில்லை. நேரம் கிடைத்த போதெல்லாம் “அந்த காலத்திலே என்று அலுத்துக் கொண்டார்கள். முக்கியமாக ஆஸ்திரேலியாவுக்கு ஒரு சராசரி குணம் விடாத வாசனையாக ஒட்டிக் கொண்டது. அவர்கள் தோல்வியை தவிர்ப்பது பற்றி ரொம்பவே அக்கறை கொண்டனர். இதனால் ரெண்டாயிரத்துக்கு பிறகு மிக சங்கடமான பல தோல்விகளை கண்டனர். ஆனாலும் பூர்வாங்க வாசனை கிடைத்து மூக்கு வேர்க்கும் போது ஒவ்வொரு விமர்சகனையும் ஆஸ்திரேலியா சிலிர்க்க வைத்தது. இந்த சிறப்பு குணத்தை மட்டும் அவர்கள் இழந்து விட இல்லை.
ஒவ்வொரு சராசரி அணியும் வெற்றி அடையப் போகும் போது வெற்றியை பற்றி கவலை கொள்ளும்; தோல்வியின் சறுக்கில் விரையும் போதோ தோல்வியை பற்றி கவலை கொள்ளும். தோல்வி உறுதி என்றானபின் ஒரு விடுதலை உணர்வை பெறும் அணி ஆஸ்திரேலியா மட்டும்தான். அந்நிலையில் அது தன் பிரக்ஞைக்குள் அரவை எந்திரத்தை நிறுத்தி தூய மிருக நிலைக்கு திரும்புகிறது. சவாலை எதிர்கொள்ளும் மிருகத்தை போல் தன் உடல்மொழியை மிகுந்த வன்மம் கொண்டதாக மாற்றுகிறது. பிறகு எதிரியை முடிந்த அளவுக்கு காயப்படுத்த, தளர்த்த முயல்கிறது. ஒரு சராசரி அணியைப் போல் எதிர்காலத்தை அலசி ஆராய்ந்து சோர்வடையவோ, முடிவை தீர்மானித்து சரணடைந்து தோள் உலுக்கவோ அது விழைவதில்லை. ஏனெனில் திறமைக்கு அடுத்தபடியாய் ஆஸ்திரேலியாவின் ஆளுமையின் சாரம் இந்த தூய மிருகநிலை குணம் தான்.
2010 ஜூலை மாதம் இங்கிலாந்தின் லீட்சில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாம் டெஸ்டு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஒரு சராசரி அணியாகவே நான்கு நாட்களும் ஆடியது. பாகிஸ்தானுக்கு வெற்றி பெற நூற்று எண்பது ஓட்டங்களே இலக்கு நிர்மாணித்து ஆடி கிட்டத்தட்ட தோல்வி நிச்சயம் என்ற நிலையில் ஆஸ்திரேலியாவின் கண் முன் திடீரென சிவப்பு துண்டு காண்பிக்கப் பட்டது. “தோல்வி அக்கறை, வெற்றி பற்றின கவலை இனி தேவை இல்லை என்பதே அந்த சிவப்புத் துண்டு. இந்த தோல்வியை கடந்த மனநிலை ஒரு அணிக்கு இரண்டு காரணங்களால் தோன்றலாம். முதலில், உச்சபட்ச திறமை.தரும் தன்னம்பிக்கை. அடுத்து, தோல்வி உறுதி என்றான் பின், முட்டுசந்தை முட்டிய பின் ஏற்படும் விடுதலை உணர்வு. அதிதிறமையாளர்களை இழந்து தட்டையாகி விட்ட ஆஸ்திரேலியர் தோல்வியை நேரிடும் போது மட்டும் தங்கள் மரபான உச்சத்தை அடைகின்றனர். வருடங்கள் பின்னோட பத்தாண்டுக்கு முன்பான வலிமையை, பராக்கிரமத்தை சில மணிநேரங்களுக்கு பெறுகின்றனர். இந்த தற்காலிகமாய் உருமாறிய ஆஸ்திரேலியா அன்று பாகிஸ்தானின் மென்னியை கூடிய மட்டும் நெரித்தது. சில மூச்சுகள் இடைவெளியில் மூன்று விக்கெட்டுகளுடன் பாகிஸ்தான் பிழைத்தது. பின்னர் சன்னதம் இறங்கி ஆஸ்திரேலியா அடுத்த ஆட்டங்களில் தோசைக் கரண்டியை பற்றிக் கொண்டு மந்தமாய் நகர்ந்தது. விமர்சகர்கள் “அட என்று வியந்தனர். இம்மாதம் (அக்டோபர்) நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் மூன்றரை நாளும் ஆஸ்திரேலியா, பாதி பரிணாம நிலையில், சொறிந்து விட்டும் பேன் பார்த்தும் பொழுதைக் கடத்தியது. கிளையை விட்டிறங்க தயங்கியது. இறுதியாய் இந்தியாவுக்கு 216 இலக்கை நிர்மாணித்து கிட்டத்தட்ட தோல்விதான் என்று எண்ணிய தறுவாயில் அது தனது தூயமிருக நிலைக்கு சட்டென்று திரும்பி நான்கு எதிரணி விக்கெட்டுகளை சாய்த்து ஐந்தாம் நாளுக்கு திரும்பியது. நான்காம் நாள் வரை இரு அணிகளும் ஒரு வழுக்குப்பாறைகள் அடந்த மலை ஏறுபவர்களைப் போல் மிகுந்த பிரக்ஞை உடன் மாறி மாறி தாக்கியும் பதுங்கியும் ஆடி வந்துள்ளனர். இனிமேல் ஏதும் இழக்க இல்லை என்ற நிலையில் ஆஸ்திரேலியா ஒரு வேறுபட்ட அணியானது. கிட்டத்தட்ட இந்தியா குழம்பிப் போனது. இரவில் கணக்குப் பார்த்து கடை அடைக்கத் தயாரான மளிகைக்கடை அண்ணாச்சியை பின்னிருந்து தோளில் தட்டி யாரோ அழைத்தது போல் திடுக்கிட்டது. இப்படியும் ஒரு அணி இருக்க முடியுமா என்று திகைத்தது. ஐந்தாம் நாள் ஆஸி 9 விக்கெட்டுகளை வீழ்த்திட இந்தியா அவிழ்ந்த ஆடையை கணநேரத்தில் பற்றி தப்பித்தது. இந்த ஆஸி அணியை எதிர்கொள்வது நெருப்பை அணைப்பது போல நண்பனானாலும் விரோதியானாலும் நெருப்பு தின்றே ஆக வேண்டும். நெருப்பான பின் ஆஸ்திரேலியாவுக்கு வேறு ஏதும் தெரியாது. கிரிக்கெட்டின் முன்கற்பு நிலை, களங்கமற்ற கனவுநிலை இப்படித்தான் இருக்க வேண்டும். முதலாம் டெஸ்டு ஆட்டத்தின் முடிவு முக்கியமல்ல. ஏனெனில் வெற்றி தோல்வியின் பாசாங்கை சில மணிநேரங்களில் ஆஸ்திரேலியா நிரூபித்து விட்டது. கிரிக்கெட்டின் ஆதிதேவதை மிகச்சில தருணங்களிலே விழித்துக் கொள்கிறாள் அப்போது கிரிக்கெட்டின் நிறம் மஞ்சளில் இருந்து சிவப்பாக மாறுகிறது.

Comments

Anonymous said…
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
ARV Loshan said…
ரசிக்க வைக்கும் நடை..
பல காரணங்கள்,கருத்துக்களை ஆழமாக யோசித்தேன்.சரி தான்.
நன்றி லோஷன். தொடந்து இந்த பக்கம் வாருங்கள்
Gnana Prakash said…
அருமை நண்பரே
நன்றி ஞானப்பிரகாஷ்
Rajasurian said…
தங்களின் வித்தியாசமான பார்வையும் எழுத்து நடையும் ஆச்சர்யமானவை
நன்றி ராஜசூரியன்

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...