முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீரிழிவு - குழந்தைமையை நோக்கி




காமமும் உணவும் அடிப்படையான உடல் இச்சைகள் என்பதால் அவை சார்ந்த நோய்களும், உடல் கோளாறுகளும் மனிதனின் ஒருவகை தண்டனை நிலைகளாக மாற்றப்பட்டவை. இந்த நோய் நிலைகளின் குற்ற தண்டனை வரலாறு கலாச்சாரத்துடன் கலந்தது, மறைமுகமானது. இது ஒருவகை நேர்மறை ஒடுக்குமுறை. உதாரணமாக நீரிழிவு, உடல் பருமன் போன்ற மெடபொலிசம் சம்மந்தப்பட்ட உடல் கோளாறுகள். குறிப்பாக, நீரிழிவை நுட்பமாக நோக்கும் போது அதில் மனிதனின் தண்டனை தரும் ஆசை தீவிரமாக செயல்படுவதை காணலாம். இது என்ன?
சர்க்கரை நோய் ஒரு சூழியல் சேதம் போன்றது. உடலை எண்ணற்ற வலைப்பின்னல்களின் அமைப்பு என்று கொள்வோம். ஏராளமான நடவடிக்கைகள், ஆற்றல் உருமாற்றங்கள், சேமிப்புகள், அழிவு, மீள்-உருவாக்கங்கள் ... உணவு ஆற்றல் உருமாற்றம் தொடர்பான ஒரு கோளாறு தான் நீரிழிவு. சிடுக்கு கோட்பாட்டில் சொல்வது போல நீரிழிவிலும் ஒரு இலை அசைவோ, பட்டாம்பூச்சியின் சின்ன சிறகுகளின் அடிப்போ ஒரு பூகம்பத்தை தொலைவில் ஒரு பகுதியில் விளைவிக்க முடியும். அதாவது கண்டுபிடிக்க முடியாத அல்லது கவனத்தில் கொள்ளாத ஒரு மிகச்சின்ன காரணம் ஒருவரின் ரத்த சர்க்கரை அளவை எகிறச் செய்யலாம். அதிகப் படியான உணவோ இனிப்போ ஒரு காரணமே அன்றி ஒரே காரணம் அல்ல. உடலுறவால் மட்டுமே எய்ட்ஸ் தொற்றுகிறது என்பது போன்றதே சர்க்கரை உண்டு நீரிழிவு/உயர் ரத்த சர்க்கரை ஏற்படுகிறது என்பது. எளிமைப்படுத்தல் தான் இக்கோளாறு மற்றும் பிற மெடொபொலிஸ நோய்களின் ஆதார சமூக பிரச்சனை. சமூகம் நீரிழிவு நோயாளியை ஒரு உணவுக் குற்றவாளியாக முத்திரை குத்துகிறது. அவனை ஒரு சாப்பாட்டு பண்டத்தை போல் இனிப்பில் முக்கி எடுக்கிறது. ஒரு கரண்டியால் ஒடுக்குகிறது. பழைய தேவதைக் கதையில் வரும் துடைப்பத்தில் அமர்ந்து பறக்கும் சூனியக்காரி போல் ஒரு தேக்கரண்டி மீது அமர்ந்து அவனை துரத்துகிறது. சமூகம் ஏன் இதை செய்கிறது.?

முதலில் நீரிழிவை கட்டுப்படுத்துவதில் மருந்தும் உணவுக் கட்டுப்பாடும் ஓரளவு குறிப்பிட்ட பங்கு மட்டுமே ஆற்ற முடியும். கூட்டிக் கழித்துப் பார்க்கையில் அது ஒரு பின்னோக்கிய ஓட்டம். பெட்ரோல் ஒழுகும் ஒரு காரைப் போன்றது நீரிழிவாளனின் உடல். சுருக்கமாய், ஒரு போது நிற்காத கசிவு. நீரிழிவாளனின் கையில் மருத்துவர் ஒரு லட்டு தருகிறார். தன் கையில் அவர் ஒரு பிரம்பை வைத்துள்ளார். லட்டை வாயில் வைத்தால் ஒரு அடி; கீழே போட்டலும் ஒரு அடி. நீரிழிவில் மருத்துவர்-நோயாளி உறவு இப்படித் தான் நடக்கிறது. மருத்துவர் தொடர்ந்து நோயாளியின் உடலைக் கொண்டு ஒரு பகடையாட்டம் ஆடியபடி உள்ளார். பல சமயங்களில் கட்டையின் எந்த பக்கம் விழப் போகிறது என்பது அவருக்கு பெருங்குழப்பமாக உள்ளது. மருத்துவருக்கும் நீரிழிவாளருக்கு நடுவில் உள்ளது ஒரு கதவோ திரையோ அல்ல மூடுபனி. மூடுபனிக்கு பின்னால் மின்னும் முகத்தின் மீது மருத்துவருக்கு சதா அவநம்பிக்கையும் அச்சமும் உள்ளது. இது தொடர்ந்து குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் நீளுகிறது. நீரிழிவாளன் ஏராளமான ஹெட்லைட்டுகளின் வெளிச்ச பாய்ச்சல்கள் நடுவே பதுங்கின ஒரு முயல். அவனை என்ன பண்ணுவது என்று அவர்களுக்கோ என்ன நிகழ்கிறது என்று அவனுக்கோ புரிவதில்லை.

இன்று ஏராளமான தகவல்கள் நீரிழிவு பற்றி ஆவணமாக்கப்பட்டுள்ளன; ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆனால் நீரிழிவின் போது உடலில் நிகழும் தொடர் சலனங்களும், அதனாலான விளைவு சங்கிலிகளும் ஒரு பெரும் புதிராகவே உள்ளன. இந்த மர்மம் காரணமாக நீரிழிவாளன் அவநம்பிக்கை கூண்டில் நிற்க வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்படுகிறான்; உளவியல் வதைக்கு உள்ளாகிறான். தன் கையில் உள்ள லட்டுவின் ஒவ்வொரு பூந்திக்கும் அவன் கணக்கு சொல்ல வேண்டும். அவன் கண்ணீர் விடுகிறான்.

நோய்மை எதிர்ப்பின் பெரும்பகுதி பொறுப்பு நீரிழிவாளனுக்கு போய் விடுவதால் அவன் கடும் நெருக்கடிக்கு உள்ளாகிறான். அவன் பார்ப்பது எல்லாம் தின்பண்டமாகிறது. எதையும் தின்பதும் தின்னாமல் இருப்பதும் அவன் முன் தீராத ஒரு கேள்வியாகிறது. உணவு மெல்ல மெல்ல ஒரு பாவமாகிறது. மர்ம உறுப்பை போல் நாக்கை அவன் பாதுகாக்க பார்க்கிறான். அதை வெறுத்து மோகித்து பின்னர் அதன் வழியாய் நரகம் திறந்து தன்னை விழுங்கிடும் என்று அஞ்சுகிறான். சமூகம் அவனுக்கு ஒரு கச்சிதமான பாதிரியார் அங்கியை அணிவித்து பழக்குகிறது. அவன் எங்கும் குற்றவுணர்வையும், மன்னிப்பு வேண்டுதலையும், மெல்லிய ஏக்கத்தையும் சிலுவையாக ஏந்தி அலைகிறான். நீரிழிவு அவனை பால்யத்தை நோக்கி திருப்புகிறது. அவன் திரும்ப இழக்க முடியாத கன்னித் தன்மையை, கற்பை தந்து பாதுகாக்க சொல்கிறது இனிப்பு. அந்த நீண்ட நெரிசலான அங்காடியில் அவன் பல் மஞ்சளித்த ஒரு சிறுவனாக ஈக்களால் மொய்க்கப்பட்டு இனிப்புகளை பற்றி கனவு கண்டு தொடர்ந்து கண்டிக்கப்பட்டு வாழ வேண்டும்; விரல் நுனிகளில் ஒட்டின இனிப்பை நக்குவதே அவன் ஆதார குற்றம். ஏனிப்படி தண்டிக்கப்படுகிறான்.

உணவு பற்றின ஒரு அடிப்படை குற்றவுணர்வின் மீது மனித அடையாளம் கட்டுவிக்கப்பட்டுள்ளது. உணவு ஆற்றல் உருமாற்றத்தின் கோளாறு தான் நீரிழிவு. ஆனால் மிகுதியாய் உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை ஏற்படுவதில்லை. அதன் காரணங்கள் சிக்கலானவை. ரத்த சர்க்கரை அளவு ஒருவருக்கு 120இல் இருந்து நானூறுக்கு உயர்வதன் காரணம் ஒரு ஸ்பூன் சர்க்கரை அல்ல. ஆனால் அப்படி சிந்திப்பதே எளிது. ஒரு தேக்கரண்டியால் அவனை துரத்துவதே வசதி. மெத்த படித்த நிபுணர்கள் தொடங்கி பொது மக்கள் வரை நீரிழிவாளனை ஒரு ஸ்பூன் சர்க்கரை கொண்டு துலாத்தட்டில் அளக்கும் ஒழுக்க புத்தி உள்ளது. கடந்த நான்கு வருடங்களில் பல நீரிழிவு மருத்துவர்களை பார்த்திருகிறேன். அவர்கள் அனைவரும் என்னை மிட்டாய் திருடிய சிறுவனாகவே பார்த்துள்ளனர். நான் இனிப்பை திருடித் தின்பதாகவே எப்போதும் அவநம்பிக்கை கொள்கின்றனர். பிடிபட்ட சிறுவனிடம் போலவே மிரட்டலாக பேசுகின்றனர். ஒரு ஆஸ்துமாக்காரருக்கோ முட்டி வலிக்காரருக்கோ இது நடக்காது. பின்னர் சிகிச்சைக்காக நான் ஒரு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன். அங்கு நடந்தது தான் உச்சம்.

அங்கு என் ரத்த சர்க்கரை எகிறி குதித்துக் கொண்டிருந்தது. நான் மருத்துவமனையில் தந்ததை தவிர அதிகமாகவே குறைவாகவோ உண்ணவில்லை. மருத்துவர்கள் மட்டும் என்னை நம்ப தயாராக இல்லை. எந்த ஆதாரமும் இன்றி, நான் கள்ளத்தனமாய் பிஸ்கட்கள் தின்பதாய் சொன்னார்கள். சர்க்கரையோடு பழச்சாறு குடித்ததாய் குற்றம் சாட்டினார்கள். ஒரு எளிய பள்ளி உபாத்தியாயர் போல் நடந்து கொண்டார்கள். என் அக்கா மகன் கூட தங்கி இருந்தான். அவனது பிறந்த நாள் அன்று பெற்றோர் கூட இல்லாததால் என் ஆஸ்பத்திரி அறையில் வைத்து கேக் வெட்டி கொண்டாடினான். நான் நாவு நுனியில் கூட அதை சுவைக்கவில்லை. ஆனால் செவிலிகள் நான் கேக் தின்றதாய் மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தினார்கள். இந்த மனவதை போதாதென்று அடுத்த நாள் வந்து என்னை எச்சரித்த மருத்துவர்கள் ரெண்டு நாள் முன்பு திறந்து வைக்கப்பட்ட ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து பார்த்து என்னை முறைத்து ஒரு விசாரணை மனநிலைக்கு வந்தார்கள். “நான் தின்னவில்லை என்று சத்தியம் செய்ய வேண்டி வந்தது. ஆனால் சந்தேகம் நீங்கவில்லை என்று தெரிந்தது. வாழ்வில் என்றுமே நான் ஒரு உணவுப் பொருளை பார்த்து இவ்வளவு பயந்ததில்லை. அடுத்து அவர்கள் போன பின் நான் பாய்ந்து போய் அந்த பிஸ்கட் பாக்கெட்டை பதுக்கினேன். என் மனைவி வந்தாள். கையில் சிப்ஸ் பாக்கெட். அவளை விரட்டி அதையும் அலமாரிக்குள் வைத்து பூட்டினேன். பிறகு அறையின் ஒவ்வொரு மூலையிலும் ஏதாவது உணவுத் துண்டுகள் கிடக்கின்றனவா என்று தேடினேன். என் எதிரில் அமர்ந்து கொறிக்காதீர்கள். எனக்கு கெட்ட கோபம் வருகிறது!

என்னை திரும்பவும் தொட்டிலில் கிடத்தி தொடையை கிள்ளி விடுகிறார்கள். வீறிட்டலறுகிறேன்

கருத்துகள்

சத்யராஜ்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
மருத்துவர்களே இது குறித்த அறிவற்ற மூடர்களாய் இருப்பின் எங்கே போய் முட்டிக் கொள்வது. நீங்கள் நல்ல மருத்துவர் ஒருவரை கண்டு பிடிக்க வேண்டியது அவசியம் என்று படுகிறது. தமிழில் இந்த உடல் குறைபாட்டின் பெயரிலேயே இழிவு என்று வைத்து விட்டதால் இழிவாகவே பார்க்க முயல்கிறார்களோ என்னவோ. :-(
Kavitha இவ்வாறு கூறியுள்ளார்…
சர்க்கரை நோய் பற்றிய முழுமையான அறிவை 'நோயாளிகளுக்கு' தவறு' குறைபாடு' உள்ளவர்களுக்குக்
கொடுப்பதில் மருத்துவர்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது, நல்ல உணவு, உடற்பயிற்சி, மனமகிழ்சி மற்றும் மருந்து இவைகளால் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும் என்பது என் அனுபவ அறிவு!
Arun இவ்வாறு கூறியுள்ளார்…
நுட்பமான வர்ணனை என்று பாராட்ட தோன்றுகிறது.
ஆனால், கட்டுரையின் பின்னால் உள்ள ஆற்றாமை பாராட்டுதலை விட புரிதலை தேடுகிறது.

அருண் இரா
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சத்யராஜ் குமார், கவிதா மற்றும் அருண்
நளினி சங்கர் இவ்வாறு கூறியுள்ளார்…
சர்க்கரை நோயின் புதிர்தன்மை என்றுமே விளங்கிக்கொள்ளமுடியாத ஒன்று.என் அனுபத்தில், ஒரு உயிர்வேதியல் படித்திருப்பவருக்கு தெரிந்திருக்கும் அடிப்படை அறிவியல்கூட பெரும்பாலான மருத்துவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை. அல்லது மருத்துவர்கள், நம்மிடம் இவைகளைப் பற்றி பேசுவது பயனற்றது என்று நினைத்திருக்கக்கூடும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...