Skip to main content

வேடிக்கையான அற்புதங்களும் உலகக் கோப்பையும்




ஆடுதளங்களை பொறுத்தமட்டில் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் ஒரு ஒற்றுமை அங்கு சவுரவ் கங்குலி போன்றவர்கள் கூட அபாயகரமாய் பந்து வீச முடியும்; இங்கு ஐயர்லாந்தின் கெவின் ஓபிரெயின் போன்ற யாரும் பொருட்படுத்தாத ஒரு மட்டையாளர் கூட ஐம்பது சொச்சம் பந்துகளில் சதம் அடித்து ஆட்டம் வென்று தர முடியும். தமிழ் சினிமா பார்வையாளனை போல் நாம் மிகுந்த விருப்பத்துடன் இந்த அசாத்தியங்களை நம்ப தலைப்படுகிறோம். சுற்றுலா பயணிகளுக்கு சொல்லப்படுவது போல் இந்தியா கிரிக்கெட்டில் கூட விநோதமான அதிசயங்களின் நாடு தான்.
கடந்த பத்து வருடங்களில் உலகின் மூலைகளில் இருந்து இந்தியாவுக்கு எத்தனையோ இளம் மட்டையாளர்கள் பயணம் வந்து தங்களது ஒளிந்திருந்த அபார ஆற்றலை கண்டறிந்திருக்கிறார்கள். இந்திய தட்டை ஆடுதளங்களில் முடிவற்ற சதங்களின் ருசியை கண்டவர்களில் ஹெய்டன் மட்டுமே தொடர் நட்சத்திரமாக திகழ்ந்தார். மிச்ச பேர் இந்திய மண்ணில் மட்டுமே ஜொலித்து விட்டு விமானம் ஏறியதும் பகலுக்கு மின்மினிகள் திரும்பியது போல் ஆனார்கள். இதனாலேயே இந்திய மண்ணில் சாதித்த மட்டையாளர்களை உலகம் மூன்று தலை மனிதன் போல் நம்ப இயலாமல் படிநிலையில் எங்கு பொருத்துவது என்று புரியாமல் தவிக்கிறது. ஆஸ்திரேலியாவில் அல்லது தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக மட்டையாடுவதற்கு கிடைக்கும் கவனம் வேறு வகை. அங்கு சதம் அடிக்கும் ஒரு மட்டையாளன் தன்னை தரமான வீரனாக உறுதியாக நிறுவிக் கொள்கிறான். அத்தனை சவால்களை அங்கு அவன் கடந்து மேலோங்கின பின்னரே சதம் அடிக்க முடியும். ஆனால் இந்தியாவில் சற்று இறுக்கமான தொழில்நுட்பமும் நிறைய பொறுமையும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால் டெஸ்டு போட்டி ஒன்றின் முதல் இரு நாட்களில் சதமடிப்பது எளிது. கடைசி நாளில் ஆடுதளம் தாறுமாறாக சுழலும் போது முதல் நாள் சதமடித்தவர் கோமாளியாக தோன்றுவார். ஒரே போட்டியில் ஒருவர் இருவேறாக தெரிவர்.
இந்தியாவின் சில லட்சிய ஆடுதளங்களில் பத்து நாட்கள் கூட ஆடி பத்து சதங்கள் அடிக்க முடியும். ஆடுதளங்கள் இவ்வளவு தட்டையாக மாறினதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் செய்த சோதனை முயற்சிகள் காரணமாக சொல்லப்படுகின்றன. கடந்த பத்து வருடங்களில் இந்தியா முழுக்க உள்ள முக்கியமான மைதானங்களின் ஆடுதளங்கள் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. நோக்கம் நமது ஆடுதளத்தை வேகவீச்சுக்கு தோதாக மாற்றி உள்ளூர் வேகவீச்சாளர்களை ஊக்குவிப்பதாக இருந்தாலும் விளைவு நேர்மாறானது. கடந்த ஐந்து வருடங்களில் இந்தியாவின் கவனத்திற்குரிய இளம் வேக வீச்சாளர்கள் தொடர்ந்து காயங்களுக்கு வீழ்ந்ததும் நமக்கு மாற்று வீரர்கள் தேடினாலும் கிடைக்காத படிக்கு வேக பந்து வீச்சின் தரம் உள்ளூர் அளவில் வீழ்ந்தது. சஹீரும் நெராவும் காயமடையக் கூடாது என்ற வேண்டுகோளுடன் இந்திய கிரிக்கெட் கடந்த மூன்று வருடங்களாக நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆடுதள மாற்றம் உள்ளூர் சுழல் பந்து வீச்சையும் சிறகொடித்து விட்டது. ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் நீடித்து மட்டையாடி லீட் பெறுவதன் மூலம் மட்டுமே ஒரு அணி வெல்லும் படியான விதிமுறை உள்ளது. அதனால் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் பந்து வீச்சும் களத்தடுப்பும் மிகச் சின்ன ஆயுதங்கள் மட்டுமே. ராஜஸ்தான் போன்ற வலுவற்ற அணிகள் பக்கத்து மாநில மட்டையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தம் அணிக்கு ஆட அழைத்தனர். பெரும்பாலும் வலுவான அணிகளின் ஓய்வு பெறும் நிலையிலுள்ள மட்டையாளர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டனர். தமிழ்நாட்டில் உபரியான ஸ்ரீராம், மகாராஷ்டிராவில் இருந்து கனிட்கர், தில்லியில் இருந்து சோப்ரா ஆகியோர் இவ்வாறு பந்தி மாறினார்கள். இந்த அளவுக்கு வேறப்போதுமே மட்டையாளர்களுக்கு மவுசு இருந்திருக்காது. யாருமே பந்து வீச்சாளர்களை இறக்குமதி செய்ய மெனக்கெட இல்லை. இந்த விசித்திர மனநிலையில் உச்சகட்டமாக கனிட்கர் ராஜஸ்தான அணியின் தலைவராகி இவ்வருட ரஞ்சி தொடரையே வென்றார். ஆனால் இந்த ஆரோக்கியமற்ற மாற்றம் உலகளவில் சிறிது சிறிதாக பரவி வந்தது. குறிப்பாக வார்னெ, மெக்ராத், முரளி போன்ற அதிதிறமையாளர்கள் அஸ்தமித்த பின்னர் உலகம் ஒரே அடியாக தட்டையாகி போனது. கிரிக்கெட்டை பந்து வீச்சாளர்களின் நிழல்களை அநாயசமாக கொய்தபடி மட்டையாளர்கள் செழித்தார்கள். சமீபமாக கிரிக்கெட் ஒரு மாபெரும் பொழுதுபோக்கு வணிகமாக வளர்ந்ததும் அதன் சமநிலையின்மை ஒரு பொருட்டாக யாருக்கும் தோன்றவில்லை. தோனியின் கீழ் ஏகப்பட்ட வெற்றிகளை அடைந்த அணி மிக பலவீனமான பந்து வீச்சை கொண்டதாகவே இருந்திருக்கிறது. இந்திய அணி சமநிலையின்மையை ஒரு வலிமையாகவே மாற்றி எடுத்தது.  இந்திய அணியின் சமகால வெற்றி வரலாறு ஐரோப்பிய அணிகளையே தம் மரபை மீற வைத்தது. ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களமிளங்க விரும்பும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற அணிகளே இன்று XI இல் ஏழு மட்டையாளர்களை தேர்கிறது. இந்திய ஆடுதள மற்றும் மட்டையாட்ட வைரஸ் இன்று உலகம் முழுக்க பரவி இருக்கிறது. இதில் ஐ.பி.எல்லின் பங்கு நாம் அறிந்ததே. வணிகமயமாக்கம் ஏற்படுத்தும் அழுத்தமும் நெருக்கடியும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடங்கி ஆடுதள அமைப்பாளர்கள் வரை கீச்சு குரலில் டப்பிங் செய்ய வைத்துள்ளது. நாட்கணக்கில் பொழுதை போக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஆட்டத்தை நவீன வணிகமும் மீடியாவும் கிளர்ச்சியான சில நிமிட காட்சிகளாக சுருக்கி விட்டன. சமகால கிரிக்கெட்டின் சீக்கை மறைத்து அலங்கரித்து மேளதாளத்தோடு விமரிசையாக ஊர்வலமாக கொண்டு செல்லவே இவை விரும்புகின்றன. துரதிஷ்டவசமாக சுடுகாட்டுக்கான பூக்கள் தூவப்பட்ட பாதை இந்தியாவில் இருந்தே ஆரம்பிக்கிறது.
2011 உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதால் தானோ ஏனோ சர்ரியலான ஆரம்ப காட்சிகள் அரங்கேற தொடங்கி விட்டன. மார்ச் ரெண்டாம் தேதி நடந்த இங்கிலாந்து ஐயர்லாந்து ஆட்டம் மேற்சொன்ன நோய்மையின் பல்வேறு அறிகுறிகளில் ஒன்று. இந்த ஆட்டம் மீடியாவில் ஒரு அற்புதமாக மிகைப்படுத்தப்பட்டது. ஒரு செவ்வியல் ஆட்டமாக வகைபடுத்தப்பட்டது. 327 ஓட்டங்களை ஐயர்லாந்து மட்டையாடி அடைந்தது ஒரு அற்புதம் அல்ல. இங்கிலாந்தும் ஐயர்லாந்தும் ஒரே போன்று தான் சிறப்பாக மட்டையாடியது. மிகச் சின்ன வித்தியாசம் ஐந்து பந்துகள குறைவாக ஐயர்லாந்து எடுத்துக் கொண்டது. பந்து வீச்சு, களத்தடுப்பு என அனைத்து துறைகளிலும் ஒரு அணி மேலோங்கும் போதே எதிரணியை அது முழுமையாக தோற்கடிக்கிறது. இதையே தென்னாப்பிரிக்காவோ ஆஸ்திரேலியாவோ செய்தாலும் கூட அது வெற்றி ஆகாது. இந்திய சமூக வாழ்க்கையில் ரேஷன் கடை வரிசை, வேலை வாய்ப்பு, அரசியல் வெற்றி என எத்தனையோ போட்டிகளில் எதிர்பாராமல் ஒருவர் நொடிப் பொழுதில் முன்னே வருவது போல, நடந்து வரும் இந்தியத் தனமான உலகக் கோப்பையில் அணிகள் ஆட்டமரபை வளைத்து ஆட அவசியமில்லை. வளையங்களுக்குள் தம்மை வளைத்து ஆட கற்று வருகின்றன.
ஆனாலும் நமது நாட்டின் பிரத்யேக பண்பான குழப்பம் அணிகளை பீடித்து உள்ளன. ஆஸ்திரேலியா மிக துணிச்சலாக வேக வீச்சாளர்களை நம்பி உள்ளது. தென்னாப்பிரிக்கா தங்களது வரலாற்றில் என்றும் அல்லாது மே.இ தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் மூன்று சுழலர்களுடன் வெற்றிகரமாக ஆடியது. இந்தியாவும் இலங்கையும் மூன்று சுழலர்களை களமிறக்க தயங்குகின்றன. எந்த அணியுமே முதல் பதினைந்து ஓவர்களில் தாக்கவா பதுங்கவா என்பதில் தீர்மானமற்றே உள்ளது. வலிமையான பந்து வீச்சை கொண்ட தென்னாப்பிரிக்காவும், இலங்கையும் பாகிஸ்தானும் கூட. இடைநிலை ஓவர்களின் போது மட்டுமே சில ஆட்டங்களில் விக்கெட்டுகள் கொத்தாய் எடுக்கின்றன. அது கூட நிகழாத போது அணித் தலைவர்கள் வறட்டுத் தனமாய் புன்னகைத்து விதியை எள்ளி நோகின்றனர். தொண்ணூறுகளின் போது இந்திய ஆடுதளங்களில் ஆடுவதற்கு ஒரு வெற்றி சூத்திரம் இருந்தது. முதலில் மட்டையாடி 280க்கு மே; எடுக்க வேண்டியது. பின்னர் மூன்று சுழலர்களை கொண்டு தாக்கி வென்று விடலாம். ஆனால் சமீபமாக இங்கு வந்த ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நியுசிலாந்து போன்ற அணிகள் சந்தித்த உண்மை வேறு. ஒவ்வொரு ஆட்டத்திலும் அணிகள் ஒன்றை விட மற்றொன்று மேலும் சிறப்பாக மட்டையாடிக் கொண்டே போகலாம். இதில் மாற்றமில்லை. கடைசியாக யார் மிக நன்றாக மட்டையாடினார்களோ அவர்களுக்கே கோப்பை. மார்ச் ஆறு அன்று தெ.ஆ மற்றும் இங்கிலாந்து இடையே சென்னையில் நடந்த ஆட்டத்தில் போல அரிதாக மோசமான மெத்தன ஆடுதளங்களிலும் ஆட நேரலாம். அப்போது ஒரு மோசமான சாப்பாட்டை உண்ட உணர்வே இரு அணிகளுக்கும் ஏற்படுகிறது. தாம் ஏன் ஜெயித்தோம் அல்லது தோற்றோம் என்பதை இரு அணிகளும் அப்போது பரிசீலித்தால் ஒரே விடையே கிடைக்கிறது. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே ஒரு பூனை போல் அமர்ந்திருக்கும் துரதிர்ஷ்டம் அணிகளுக்கு நேர்கிறது.

இதுவரையிலான ஆட்டங்களில் முயலும் ஆமையும் ஓடிக் கொண்டே இருந்தால் எப்படியும் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று புரிந்து கொண்டன. மற்றபடி மரபான ஓட்டபந்தய படிப்பினைகள் மண்மூடி போயின. அடுத்து வரும் ஆட்டங்களிலும் அற்புதங்கள் ஒன்றை ஒன்று முழுங்கக் கூடும். உலகக் கோப்பை இந்திய மண்ணை விட்டு விடை பெறும் போது கிரிக்கெட் மீண்டும் சாதாரணமானதாக மாறி விடும்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...