முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதால் யாருக்கு அனுக்கூலம்?




2011 உலகக் கோப்பை கால் இறுதியை நெருங்கப் போகும் நிலையில் உள்ளூர் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் ஊகங்களும் எதிர்பார்ப்புகளும் பொய்யாகி உள்ளன. சுவாரஸ்யமாக வெள்ளைகார நிபுணர்கள் ஊகித்தவை நிஜமாகி உள்ளன. அவர்கள் ஆசிய அணிகளை விட தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய ஆகிய அணிகளுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்றார். சார்பு மனப்பான்மையால் அப்படி சொல்லவில்லை. சில எளிய அபிப்பிராயங்கள் இந்த நிலைப்பாட்டுக்கு பின் உண்டு. முதலில் உள்ளூரில் ஆடும் போது கோடானுகோடி பார்வையாளர்களும் மீடியாவின் கழுகு சிறகடிப்புகளும் ஏற்படுத்தும் அழுத்தம் ஆசிய அணிகளை கொஞ்சம் முடமாக்கி விடும் என்பது. அடுத்து ஐரோப்பிய அணிகள் பலவும் அடிக்கடி ஆசியா வந்து கிரிக்கெட் ஆடி வருவதால் இங்குள்ள சூழலும் ஆடுதளமும் முற்றிலும் அந்நியமல்ல. மேலும் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகளின் வேகப்பந்தாளர்களாலும் முக்கியமான நேரங்களில் கொத்தாக விக்கெட்டுகளை அடைய முடியும். உலகக் கோப்பை காலிறுதியை நெருங்கி வரும் இவ்வேளையில் இத்தனை அவதானிப்புகளும் தேறி உள்ளன. ஒரு சிறிய அணியான வங்க தேசமே உள்ளூரில் ஆடிய போது மக்களின் எதிர்பார்ப்பால் திணறியது. கொஞ்சமே என்றாலும் பாகிஸ்தானுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் எதிரே இலங்கையும் நிலைகொள்ளாமல் தவித்தது. ஸ்டுவர்ட் புராட், பிரெட் லீ, டெய்ட் மற்றும் ஸ்டெயின் ஆகியோர் சுழலர்களுக்கு இணையாக விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிகளை கவிழ்த்துள்ளன. இங்கிலாந்து தடுமாறி வருகிறதென்றாலும் தெ.ஆ அணி மெத்தன ஆடுதளங்களுக்கு ஏற்றபடி தகவமைத்து ஆடுகிறது. தங்களது மரபான ஆட்டமுறையை மாற்றி சுழலர்களை மையமாக்கி அவர்கள் பல ஆட்டங்களை இந்த தொடரில் வென்றுள்ளனர். உலகக்கோப்பையில் மூன்று முதல்நிலை சுழலர்களுடன் ஆடின ஒரே அணியும் தெ.ஆ தான். மற்ற எந்த அணியையும் விட  அவர்களின் சுழலர்கள் தாம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.
ஆசிய அணிகளுக்கு உள்ளூர் சூழல் நன்றாக அத்துப்படி என்பது ஒரு பெரும் பலம் என்றனர் ஆசிய விமர்சகர்கள். இது இலங்கையை தவிர பிற அணிகளுக்கு பொருந்தவில்லை. குறிப்பாய் இந்தியாவில் ஆடுகளங்களை வாசிப்பது நாளிதழ்களில் ஊழல் கணக்குகளை படிப்பது போல. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோனியே தவறாய் ஆடுதள சுபாவத்தை ஊகித்துள்ளார். இரண்டு ஆட்டங்களிலும் இரண்டாவதாக எதிரணி மட்டையாடிய போது ஆடுதளம் பனி காரணமாக சுலபமாகியது. தெ.ஆவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுதளம் மிக மெத்தனமானது என்பதை புரியாமல் 350 உத்தேச இலக்கை நோக்கி எகிறிய இந்தியா வழுக்கி 296இல் வந்து நின்றது. இரண்டாவதாக ஆடிய அணி சூழ்நிலையை நன்றாக கணித்து ஆடியது. அடுத்து, சுழல் இத்தொடரில் ஒரு பெரும் பங்கை வகிக்கும் என்று கோரப்பட்டது, தொடர்ந்து கோரப்படுகிறது. இந்திய அணி இந்த அடிப்படையிலே தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் இந்திய ஆடுதளங்கள் சமீபமாக மாறி விட்டன என்பதை நம்ப நம் மீடியா தயாராக இல்லை. இந்த இறந்த கால மீள்விருப்பம் கிட்டத்தட்ட வேடிக்கையானது. இந்தியாவில் ஆடுதளங்கள் மெத்தனமாக இருக்குமே அன்றி பெருமளவில் சுழலுக்கு சாதகமாக ஆகப் போவதில்லை. கோடை முற்றி ஆடுதளங்கள் வறண்டு இளகினாலும் மிகச் சில ஆட்டங்களிலே பந்து பம்பரமாகும். அப்படியான ஆட்டங்கள் எந்த அணிகளுக்கிடையே எந்த மாதிரி முக்கிய கட்டத்தில் நடக்கிறது என்பதே சுவாரஸ்யம். நவ்ஜோத் சித்து சொன்னது போல் இந்தியாவில் சுழல் சாதக ஆடுதளங்களை அமைப்பது ஒன்றும் அசாத்தியம் இல்லை. ஆனால் அப்படி ஆடுதளத்தை கலப்படமாக்க இது ஒன்றும் உள்ளூர் ஐந்து போட்டி ஆட்டத்தொடர் அல்ல. ஓட்டங்கள் புரண்டொழுகும் திருவிழாவே உலகக்கோப்பை தொடர் ஒருங்கிணைப்பாளர்களின் கனவு. அதற்கேற்றபடியாக செயல்படவே ஆடுதள தயாரிப்பாளர்களும் முயல்வார்கள். இதுவரை தட்டை, மெத்தனமானவை, சற்றே சுழல்பவை, மாற்று ஸ்விங்கை தூண்டுபவை என ஒரு கலவையாகத் தான் ஆடுதளங்கள் அமைந்துள்ளன. ஒரே நிலையில் எந்த அணியும் தொடரில் ஆதிக்கம் செலுத்தாதற்கு இதுவும் காரணம்.
கடைசியாக, உள்ளூர் எதிர்பார்ப்புகளின் நெருக்கடி இந்தியாவை தாக்காது என்று நம்மூர் விமர்சகர்கள் சொன்னது நிஜமாகவில்லை. இந்தியா தொடர்ந்து உள்ளூரின் எதிர்பார்ப்பு அழுத்தத்தில் ஆடி ஆடி வைரமாகவே விளைந்திருப்பதாய் சொல்லப்படுவது உண்மையென்றாலும் கூட உலகக் கோப்பை நெருக்கடி தனித்துவமானது. இந்தியாவின் முதல் ஆட்டத்தில் ஸ்ரீசாந்த் பந்து வீசிய விதம் இந்த நாயக பிம்ப ஆட்டத்திற்கு முன்மாதிரியாக அமைந்தது. ஆட்டம் துவங்கும் முன்னாலே ஸ்ரீ ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்துவது என்று முடிவு செய்து விட்டார். விளைவாக அது அவரது கடைசி ஆட்டமாகியது. ஆனால் ஸ்ரீசாந்த் இல்லாவிட்டாலும் அவரது பாணியில் தான் அணியில் பலரும் ஆட முயல்கிறார்கள். அதாவது ஒரே ஆட்டத்தில் 11 பேரும் ஆட்டநாயகர்களாக முயல்வது. துணை பாத்திரங்கள் யாருக்கும் வேண்டாம். இந்திய அணி இந்த கோப்பையில் இறுதி கட்டம் வரை வர வேண்டியது அணியை விடவும், உலக கிரிக்கெட்டை விடவும் ஊடகங்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் அதிமுக்கியமாக உள்ளன. இந்திய அணியின் துரதிர்ஷ்டம் இந்த திசைதிருப்பிகள் தாம். 11 பேருக்காக பதினாயிரம் பேர் யோசிக்கிறார்கள். அவர்கள் தோற்றாலும் வென்றாலும் சறுக்கினாலும் நிமிர்ந்தாலும் ஒரு காவியத்தனம் வந்து விடுகிறது. எஸ்.வி சேகர் நாடகம் பார்த்து விட்டு ஒருமுறை சுஜாதா வியந்தார். எசகுபிசகாய் என்ன வசனம் வந்தாலும் பார்வையாளர்கள் சாவி கொடுத்த பொம்மை மாதிரி சரியான நேரத்தில் மிகச் சரியாக சிரித்து விடுகிறார்கள் என்று. எஸ்.வி சேகர் பார்வையாளர்களை அசடுகளாக்குகிறாரா அல்லது பார்வையாளர்கள் அவரை ஏமாற்றுகிறார்களா என்பதே சுஜாதாவின் உள்ளார்ந்த குழப்பம். இந்திய கிரிக்கெட்டர்கள்-ஊடகங்கள்-பார்வையாளர்கள் என்ற உறவுநிலையில் அசட்டுத்தனம் எங்கிருந்து ஆரம்பமாகிறது? இந்தியா எனும் அவ்வப்போது நன்றாக ஆடும், அரிதாக மிக நன்றாக ஆடும் ஒரு சுமாரான அணி ஏன் ஆகச்சிறந்த அணி என்று அடம் பிடிக்கிறோம். யாரை யார் ஏமாற்றுகிறோம் என்று அறிவது தெரிந்து கொண்டே ஒரு அபத்த நாடகத்தை பார்த்து களிக்க பயன்படும்.
உலகக் கோப்பையை அதை நடத்திய நாடுகள் என்றுமே வென்றதில்லை என்ற வெள்ளை விமர்சகர்கள் சொன்னதில் நிச்சயம் ஒரு நியாயம் உள்ளது. ஆனால் இம்முறை உலகக் கோப்பையின் மவுசு மிகவும் குறைந்துள்ளது என்பதே உண்மை. உலகக்கோப்பை தொடரில் இருந்து சுவரில் அடிக்கப்பட்ட பந்தாக இந்தியா திரும்பினாலும் துக்கம் அனுஷ்டிக்க கூட யாருக்கும் அவகாசம் இருக்காது. உலகக்கோப்பையை விட பொழுதுப்போக்கு தன்மை கொண்ட வண்ணமயமான ஐ.பி.எல் உடனே வந்து விடும். ஐ.பி.எல் வெற்றிகரமாக முடிந்த உடன் அடுத்து எத்தனையோ ஆட்டத்தொடர்களும் பயணங்களும் நிகழப் போகின்றன. இருந்தும் 2011 உலகக் கோப்பைக்கு தகுதியை மீறின பரபரப்பு அளிக்கப்பட்டது கிரிக்கெட்டை உறிஞ்சி வாழ்பவர்களின் வணிக நன்மைக்காக மட்டுமே. இது தெரிந்தும் எஸ்.வி நாடகத்தின் பார்வையாளனை போல் இந்திய அணி தன்னை கோடி கரங்கள் கட்டுப்படுத்த அனுமதிப்பது பரிதாபகரமானது. அவர்களுக்கு வேறு வழியில்லை எனலாம்.

மேற்கத்திய நிபுணர்களின் மற்றொரு ஊகம் போலவே ஆஸி, தெ.ஆ போன்ற அணிகள் ஊடக சூட்டுக்கு தப்பித்து சமதளத்தில் தமக்கு தோதான வேகத்தில் ஆடி வருகின்றன. இந்த அணிகளில் தெ.ஆவின் தகவமைவும் சமநிலையும் சற்று பிரமிப்பூட்டியுள்ளன.  கடந்த முறை இந்தியாவில் ஒருநாள் தொடர் ஆடிய போது தென்னாப்பிரிக்கா மரபான முறையில் பந்து வீசி மிகுந்த குழப்பத்துடன் ஆடியது. சுழலர்களை அதிகம் பயன்படுத்தவும் தயங்கியது. இந்தியாவை போல் மிக தாமதமாக உலகக் கோப்பை ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் நடந்த இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் தான் அவர்கள் புதிய வீரர்களை அறிமுகப்படுத்தி சோதித்து பார்த்தார்கள். அதில் தேறிய டூபிளெயிஸ், பீட்டர்ஸன், தாஹிர் போன்றோர் நேரடியாக உலகக் கோப்பையில் சோபித்துள்ளது ஒரு நேர்மறை சமாச்சாரம். டூமினி ஆப் சுழலர்களுக்கு எதிராக தொடர்ந்து எல்.பி.டபிள்யு ஆகி வெளியேறி வந்தார். உலகக் கோப்பைக்கு சற்று முன்னர் அவர் அந்த தொழில்நுட்ப குறையை சரிசெய்தார். அவர்களின் கீழ்மத்திய வரிசை மட்டையாட்டத்தை டூமினி இப்போது வலுவாக்குகிறார். அவர்களின் தலைவரான கிரேம் ஸ்மித் ஆட்ட சாதுர்யம் குறைவானவராக இருக்கலாம். ஆனால் அவரது தலைமையில் தான் தென்னாப்பிரிக்கா சற்று சுதந்திரத்துடன் மட்டையாடவும் ஆவேசமாக பந்து வீசவும் தொடங்கியது. தொடக்க நிலையில் எதிரணியின் விக்கெட்டுகளை கொத்தாக சாய்ப்பதும், சுழலர்களை கொண்டு மத்திய வரிசையை தாக்குவதும் தெ.ஆ மரபில் அந்நியமானவை. ஸ்மித் இம்மரபை புத்துருவாக்கி உள்ளார். இந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறும் ஸ்மித் அதற்கு முன் தன் அணியை மற்றொரு தளத்துக்கு உயர்த்தி உள்ளார்.
இதுவரையிலான உலகக் கோப்பை ஆட்டங்களில் இரண்டு பொய்கள் அம்பலமாகி உள்ளன. இந்திய நிபுணர்கள் நம்ப வைத்தது போல் இந்த உலகக் கோப்பையில் வெற்றிக்கு சாதகமான எந்த ஒரு குறிப்பிட்ட அணியும் இல்லை. ஊடக சாதக அணிகள் மட்டும் இருக்கலாம். இந்த தொடரில் சூழல் என்னதான் ஆசியத்தனமாக இருந்தாலும் கிரிக்கெட் அடிப்படையில் ஒன்று தான். மேற்கத்தியர்களுக்கு ஆசிய கிரிக்கெட் மீது இருந்த புதிர்தன்மை வெகுவாக குறைந்து விட்டது. எதிர்பாரா தன்மை காரணமாக ஆடுதளம் மட்டும் தான் மர்ம பாத்திரமாக இருக்கப் போகிறது. இதனுடன் உள்ளுர் அணிகளின் நெருக்கடி, சமநிலை குலைவு, தடுமாற்றம், ஊடக மிகை சேர்ந்து கொள்ள இந்தியத்தன்மை கூடிய கிரிக்கெட் உருவாகிறது. பார்வையாளனை கிளர்ச்சியில் ஆழ்த்தும் திகில் போட்டிகள் நிகழ்கின்றன. பெரும்பாலான ஆட்டங்கள் இந்தியாவில் நடப்பதன் ஒரே அனுகூலம் பார்வையாளனுக்கு மட்டும் தான். இந்த தனித்துவமான மசாலா இம்மண்ணுக்கு மட்டுமே உரியது.

கருத்துகள்

தமிழ்வாசி பிரகாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல அலசல்...அப்ப இந்தியா கோப்பையை கைப்பற்ற வாய்ப்பே இல்லையா?


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)
Rettaival's Blog இவ்வாறு கூறியுள்ளார்…
Fantastic View!

ஊகியுங்கள் அபிலாஷ்! எந்த அணி கோப்பையை வெல்லும் என உங்கள் பட்சி சொல்கிறது?
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
என் பட்சி அமைதி காக்க சொல்கிறது ரெட்டைவால்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...