முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இல்லாத கையும் பாராட்டுகளும்








எங்கள் கல்லூரியின் கலைநிகழ்ச்சிகளின் போது மேடை ஆட்டத்துக்கு இணையாக பார்வையாளர் பகுதியில் இருந்து ஒரு மாணவன் ஆவேசமாக நடனமாடிக் கொண்டிருந்தான். ஒரு முழங்கை இல்லாத மாணவன். நிறைய மாணவர்கள் கூட ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்களை மாணவிகள் மிகுந்த ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த கையற்ற மாணவனை ஒரு ஜோடி கண்கள் தனியாக கவனித்தன. ஹலோ எப்.எம்மில் இருந்து விளம்பரம் செய்ய வந்திருந்த தொகுப்பாளர் மேடையில் தோன்றி அந்த ஊன இளைஞனை பாராட்டி பேசினார். அவனோடு புகைப்படம் எடுக்க விரும்புவதாக சொல்லி அந்த ஆசையும் இவ்வாறு சொல்லி நிவர்த்தி செய்தார் “எப்பவுமே அடுத்தவங்க தான் ஆர்.ஜே வோட போட்டோ எடுக்கணும்னு விரும்புவாங்க, ஆனால் ஒரு ஆர்.ஜேவே உங்களோட போட்டோ எடுக்க விரும்பறாங்க. அந்த அதிபிரபலமான ஆர்.ஜெ யாரென்று கேட்காதீர்கள். எனக்கு தெரியவில்லை. விசாரித்து பார்த்தால் அங்கிருந்து யாருக்குமே தெரியவில்லை.
அந்த ஊன இளைஞன் மிக உற்சாகமாக மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தான். நண்பர்கள் அவனை சூழ்ந்து கொண்டார்கள். நடன நிகழ்ச்சி மேடையில் தொடர்ந்தது. அந்த மாணவன் பக்கமாய் மேலும் பல முழுஇளைஞர்கள் நகர்ந்தார்கள். அதுவரை வெவ்வேறு இடங்களிலாய் குழுக்களாய் ஆடிக் கொண்டிருந்த அவர்கள் ஊன இளைஞனின் பக்கமாய் குவிந்து ஆடத் தொடங்கினர். எல்லாரும் கூட போட்டொ எடுக்க விரும்பும் ஆர்.ஜெவின் பார்வையை ஆகர்சிக்க அதுவே உசிதமான இடம் என்று அவர்கள் தீர்மானித்திருந்தனர். அவர்கள் அவனை விட நன்றாக ஆவேசமாக அதிக தூசை கிளப்பி அதிக கூச்சலை ஏற்படுத்தி தான் ஆடினர். ஆனால் பார்க்க வேண்டியவரின் பார்வை விழவில்லை. ஆனால் பாராட்டை பெற்ற இளைஞன் அதற்கு மேல் ஆடாமல் நின்றிருந்தான். முகத்தில் மெல்லிய கூச்சம். மேடையில் பாராட்டு பெறும் அனைவரும் கூசி ஒதுங்குவதில்லை என்பதை கவனிக்க.
அடுத்து கனாக்காணும் காலங்கள் தொடரில் நடித்த அன்றைய விழாவின் சிறப்பு விருந்தினரான பிரபு என்பவர் மேடையில் தோன்றி நடன போட்டி வெற்றியாளர்களை அறிவிக்க தொடங்கினார். அவர் திடீரென்று தனக்கு அந்த ஊன இளைஞரை மிகவும் பிடிக்கும் என்று கூறி மேடையில் அழைத்து அணைத்து பரிசளித்தார். கரகோஷம் வலுத்தது. ஊன இளைஞர் அதையும் ஏற்றுக் கொண்டு இறங்கினார். அவர் மேலும் மேலும் பிரகாசமாக உற்சாகமாக மாறிக் கொண்டிருந்தார். ஒருவர் மகிழ்ச்சி அடைவதை பார்த்து முதன்முதலாக எனக்கு உறுத்தலாக இருந்தது. அவரை கவலையாக பார்த்தேன்.
போட்டியில் பங்களிக்காத ஒருவரை பாராட்டுவதும் பரிசளிப்பதும் கேட்காமலே உங்கள் சட்டைப்பையில் பிச்சை இடுவதற்கு சமம். மேடை வெளிச்சம் தங்கள் மேலும் அதிகமாக விழ அவரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த condescending நிலைப்பாடு ஒரு உயர்வு மனப்பான்மையில் இருந்து உருவாவது. இந்த நோய்மை கொண்ட மனிதர்கள் பெண்ணியம், தலித்தியம், கருணை என்றெல்லாம் போலியாக ஆவேசப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். ஆவேசப்படும் அதே தருணத்தில் அவமானப்படுத்தவும் தயாராக இருப்பார்கள். ஒரு அலியை பார்த்து நகைக்கும் பெண் தன் பெண்மையை எண்ணி உள்ளூர பூரிப்பதை போன்றது இது. எதிர்காலத்தில் இந்த இளைஞர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பார். அவர் மீது போலியான கருணையையோ வெறுப்பையோ மக்கள் தங்கள் அரிப்பை அடக்கும் பொருட்டு காட்டிக் கொண்டே இருப்பார்கள். அடுத்தவர்களின் மிதியடியாக இல்லாமல் இருக்க ஒரு ஊனன் என்ன செய்யலாம்?

தன்னை மதிக்கும் நபர்களை மட்டும் தேர்ந்தெடுத்து நண்பராகலாம். அது சாத்தியமில்லை. அசட்டுத்தனமாய் நடப்பவர்கள் மத்தியில் தான் நாம் பெரும்பாலான பொழுதுகளில் வாழ்ந்தாக வேண்டும். அவர்களை தவிர்க்க முடியாது. ஆக சுயமரியாதை விபத்துக்குள்ளாகாமல் பார்க்க தன்னை அவன் ஒரு படி உயர்த்திக் கொள்ள வேண்டும். சந்திக்கிறவர்களிடம் தான் அவர்களை விட மேல் என்பதை மிக நுட்பமாக உணர்த்தி விட வேண்டும். மிகவும் பணிவாக ஒருவர் தன்னை மேலானவராக காட்டிக் கொள்ள முடியும். அது ஒரு கலை. லௌகீகமாகவோ அலௌகீகமாகவோ ஒருவர் தம்மை மேலுயர்த்திக் கொள்ள முடியும். இரண்டும் சரியே. இப்படி முழுமையானவர்களை விட தான் ஒரு அடி மேலே என்று ஊனன் நிறுவினால் மட்டுமே அவர்கள் இவனை தமக்கு சமம் என்று கருத பிரயத்திப்பார்கள். அவர்களை விட உயரமாக ஒரு ஊனன் என்றுமே இருக்கப் போவதில்லை என்றாலும் சமமாகவேனும் இருப்பதற்கு இதுவே ஒரே வழி.
மனித மனம் கீழ்மையானது என்று பழிக்க நான் இதை எழுதவில்லை. ஊனம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனிதர்கள் அடிப்படையில் மிகவும் பலவீனமானவர்கள். இதை ஒரு மனச்சிக்கலாக மாற்றி துன்புறுகிறார்கள். துன்பம் கழிக்க சகமனிதனை குத்துச்சண்டை மூட்டை போல் பயன்படுத்துகிறார்கள். மனைவி கணவன் அம்மா அப்பா சகோதரர்கள் நண்பர்கள் அனைவரும் பிறரது அழுக்கை அலம்பவே வாழ்நாளில் பெரும்பகுதி வீணடிப்பதை பார்க்கிறோம். எத்தனை கெஞ்சல்கள், சமாதானங்கள், நியாயப்படுத்தல்கள், சச்சரவுகள்! கவபட்டா இதைப் பற்றி “மரு என்றொரு கதை எழுதியிருப்பார். ஒரு மருவுக்காக கணவன் மனைவியை படாத பாடு படுத்துகிறான். அவளை பெரும் குற்றவாளி ஆக்குகிறான். ஆனால் அந்த மருவை கிள்ளி எறியவே முடியாது. காரணம் அது அவனுக்குள் நமக்குள் ஒவ்வொருக்குள்ளும் இருக்கிறது. அது வெறுமனே காலோ கையோ மட்டும் கிடையாது என்பதை நிச்சயமாக சொல்லலாம்!
தமிழின் முன்னோடிகளில் அதிகமாக கொண்டாடப்படுவர்கள் இளமையிலேயே இறந்து போனவர்கள் அல்லது எழுதுவதை நிறுத்தினவர்கள் அல்லது மிகக் குறைவாக எழுதினவர்கள். நமக்கு அழிபவர்களை அல்லது அழிந்தவர்களை சிலாகிக்கும் ஒரு மனக்கோணல் உள்ளது என்று அடிக்கடி சொல்வார் மனுஷ்யபுத்திரன். இதுவும் அதுதான். கொஞ்சம் அறிவுஜீவித்தனமான மரு வேட்டை

கருத்துகள்

சர்வோத்தமன் சடகோபன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம், ருத்ரைய்யாவின் அவள் அப்படித்தான் படம் பற்றி பலர் சிலோகித்து பேசும் அதே வேளையில் அவருடைய அடுத்ததும் இறுதி படமுமான கிராமத்து அத்தியாயம் குறித்து யாரும் பேச மாட்டார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...