முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீராமல் பசித்த நாள்




இன்று முழுக்க
பசித்தபடியே இருக்கிறது
பசி நெருப்பில்
தசைகளும் எலும்புகளும் கொழுப்பும்
மெல்ல மெல்ல
வேகிறது

இன்று முழுக்க
எல்லாரிடமும் இனிமையாக பேசிக் கொண்டிருக்க
கரித்து கொட்டியவாறிருக்க
வருகிறது
வலிக்கும் இடங்களையும்
கிளர்ச்சியான பிரதேசங்களையும்
வருடியவாறு உள்ளேன்
அடுத்தவர் கவிதைகளில்
அவசியமற்றவை
என்று பென்சிலால் வெட்டித் தள்ளிய
வரிகளை மீண்டும் கண்டடைந்து
பொருத்துகிறேன்
இன்று முழுக்க
சொன்னவற்றை விட
விட்டுவிட்ட வார்த்தைகளில்
உத்தேசித்த பொருள் இருந்ததை
விசனிக்கிறேன்

நடந்ததை நினைக்க நினைக்க
மனம்
இன்னொரு பக்கம்
ஒரு ரப்பர் கொண்டு
என் நாளை அழித்து கொண்டு வருவதை
நினைக்க பதற்றமாகிறது
தொடர்ந்து நினைக்கிறேன்.

வீடு காற்றால் நிரம்பி
இருக்கிறது
சமையலறையில்
இன்று அதிகமாய் சமைத்த உணவு பண்டங்கள்
கலவையான சமையல் வாசம்
ஒரு நொதிக்கும் ஆவியை போல்
எழுந்து கொண்டிருக்கிறது
உணவுகள் என்னை
புறமொதுக்குகின்றன
பசிப்பதற்கும்
பசிக்காமல் இருப்பதற்கும் இடையிலான
ஆசுவாசம்
வெறும் கற்பனை என்று நினைத்து கொள்கிறேன்
ஒவ்வொரு உணவுப் பொருளும்
துக்கமாய் இருப்பதாய் தோன்றுவது
கூட
வெறும் கற்பனை தான்
இன்றைய கடும் கோடையில்
தொடர்ந்து தண்ணீர் குடிப்பது மட்டும்தானே
நியாயம் என்கிறான் நண்பன்
ஆனால் மூடி திறந்திட
உணவுகளும்
நானும்
வேர்த்திருக்கிறோம்
மிருதுவாகி
கெட்டிதட்டி போய்
அந்த ஜன்னலுக்கு அப்பால் தெரியும் மலையை
போல் அல்லாமல்
சலனித்தபடி
எதற்கோ காத்திருக்கிறோம்

இன்று முழுக்க பசிக்க கூடாது
என்று
ஒரு செடி தொட்டிக்கு பரிவாய் சொட்டு சொட்டாய்
இருட்டில் நீரூற்றுவது போல்
இரவில் உண்டு கொண்டு
படுக்கிறேன்
யாரோ தூங்காமல்
அடிக்கடி கவனித்தபடி இருக்கிறார்கள்
ரகசியமாய்

இன்று முழுக்க
பசியில் இருப்பது
இன்று முழுக்க
அழிவது ஆகாதா
என்று எண்ணி
வெளியே உற்று பார்க்கிறேன்
மரங்களும் புல் பூண்டும்
பறவைகளும் மிருகங்களும் பூச்சிகளும்
தெரியாத வெளியில்
மழையாக கொட்டுகிறது
என்னை அறியாமல்
கவனிக்கிறேன்
பசித்துக் கொண்டிருக்கும் இரவில்
தன்னந்தனியாக
வெற்றாக
முழுதாக
இருக்கும் உலகை

கருத்துகள்

Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
என்னை அறியாமல்
கவனிக்கிறேன்
பசித்துக் கொண்டிருக்கும் இரவில்
தன்னந்தனியாக
வெற்றாக
முழுதாக
இருக்கும் உலகை


........கவிதை கரு, நல்லா இருக்குதுங்க. வாழ்த்துக்கள்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.