Skip to main content

ஆஸி, தெ.ஆ வெளியேற்றங்கள்: வீழ்ச்சியின் தொலைவும் கசப்பின் சுவையும்



இந்த உலகக் கோப்பையில் மிக மௌனமாக இரு நட்சத்திரங்கள் உதிர்ந்துள்ளன. ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் நுழைய வேண்டிய வாசல் வழி மிகுந்த குழப்பத்துடன் வெளியேறி விட்டன. மிக இனிமையான ஒரு நாளின் முடிவில் வந்த எதிர்பாரா துர்கனவை போல் இத்தோல்வியை எப்படி விளக்க என்றே இரு தோல்வியுற்ற அணித் தலைவர்களுக்கும் புரியவில்லை. இந்த அணிகளின் கசப்பான புன்னகை காண பார்வையாளர்கள், நிபுணர்களின், எதிரணி ஆதரவாளர்கள் அனைவருக்கும் சற்று விசனமாகத் தான் இருந்தது. அவர்கள் இத்தோல்விகளை விளக்க சன்னமான சொற்களை, வருத்தாத வாதங்களை தேடினார்கள்.
இவ்வணிகள் தங்கள் நெடுங்கால மற்றும் சமீப வரலாறுகள் காரணமாய் தோல்வியடையும் போது, ஒரு நெடும் ஆட்டத்தொடரில் இருந்து வெளியேறும் போது அது வெறும் தோல்வியாய் இருப்பதில்லை. அணிகளின் வெற்றி தோல்விகள் மித்துகளால் கட்டி எழுப்பப்படுகின்றன. ஒரே ஆட்டத்தில், அது உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றமாய் அமைந்தாலும் கூட, இவை விழுவதில்லை. பிரம்மாண்ட வரலாறு கொண்ட அணியொன்றின் வீழ்ச்சி நெடுந்தொலைவை கடந்து வரும் எரிகல்லினுடையதை போன்றது. இடைப்பட்ட காலம் ஏகப்பட்ட கற்பனைகளால் நிரப்பப்பட வேண்டியது. ஆஸ்திரேலியாவின் பத்தாண்டு வெற்றிப் பருவத்தில் எழுதப்பட்டதை விட பலமடங்கு அதிக சொற்கள் அவர்களின் மெதுவான தோல்வி ஊர்வலத்தை வர்ணிக்க அலச தீர்ப்பு வழங்க செலவழிக்கப்பட்டு உள்ளன. தென்னாப்பிரிக்கா அநாயசமாய் அடையும் வெற்றிகளை விட அது சுலபமாய் இழக்கும் முக்கிய ஆட்டங்களே நமது கற்பனையை அதிகம் தூண்டுகின்றன.
தென்னாப்பிரிக்கா ஏன் கால்-இறுதியில் தோற்றது? தென்னாப்பிரிக்காவின் மன இறுக்கம் கொண்ட ஆட்டமரபு அவர்களை சில சமயங்களில் பதற்றமடைய விநோதமாய் தோல்வியை தட்டிப் பறிக்க செய்கிறது என்றனர் நிபுணர்கள். தெ.ஆ உலகக்கோப்பை கால், அரைஇறுதிகளில் ஐந்தாவது முறையாய் தடுமாறி வீழ்ந்துள்ளது. ஆனால் இதே அதி-கவன, சுயகட்டுப்பாட்டு ஆட்டமுறை தான் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக எண்ணற்ற ஆட்டங்களை உத்திரவாதமாய் வெல்ல அவர்களுக்கு உதவியுள்ளது. இன்றைய ஒருநாள் அணிகளில் தெ.ஆ தான் அனைத்து துறைகளிலும் மிகத் திறமையான தன்னிறைவான அணி. தெ.ஆ தன்னை உடனடியாக மாற்றிக் கொண்டு ஆசிய அணிகளை போல் வாலில்-தீப்பிடித்த-கிரிக்கெட் ஆடப் போவதில்லை.  அவர்களை இத்தனை வருடங்களாய் சீராய் வழிநடத்திய உருவாக்கிய ஆட்டமரபையும் துறக்க போவதில்லை. தெ.ஆ தனது வலிமையையும் பலவீனத்தையும் ஒருங்கே கொண்டே வளரப் போகிறது. அதுதான் அவர்களின் தனித்தன்மை. வரலாற்றை திருத்தி எழுதும் நோக்கில் ஒரு அணி தன் ஆளுமையை இழக்க கூடாது. நவீன கிரிக்கெட் அணிகளின் வரலாறு வணிக, விளம்பர நிறுவனங்கள், மீடியா வியாபாரிகள் மற்றும் நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்களின் கற்பனையால் ஒன்றன் மேல் ஒன்றாய் படலம் படலமாய் உருவாக்கப் படுவது. தென்னாப்பிரிக்கா இப்படியே இருப்பதனாலும் ஒன்றும் இழப்பில்லை. தெ.ஆ மிகச் சின்ன ஓட்டை கொண்ட பிரம்மாண்ட பலூனாக இருப்பதில் ஒரு நாடகீயம் உள்ளது. இது கிரிக்கெட் சூழ் உலகுக்கு பிடித்து தான் இருக்கிறது. இந்த ஓட்டையை மூடி விட்டால் தெ.ஆ தன் பாத்திரத்தை மாற்றி கொள்ள வேண்டி வரும். அதாவது, அது ஆஸ்திரேலியாவின் முள்கிரீடத்தை பெற வேண்டும். ஒரு அதி-ஆரோக்கியமான உடலை போல் அனைவரையும் சலிப்பூட்டியபடி மெல்ல மெல்ல மரிக்க வேண்டும்.

ஆஸ்திரேலியா ஏன் கால்-இறுதியில் தோற்றது?
ஆஸ்திரேலியாவின் சுழலர்கள் மோசமாக வீசியதே காரணம் என்றனர் நிபுணர்கள். ஆனால் ஆஸி அணியின் ஒரே சுழலரான வயதான கிரேஜ்ஹா விக்கெட்களை கொய்வார் என யாரும் எதிர்பார்க்க இல்லையே. தெ.ஆ, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியுசிலாந்து, ஏன் இந்திய அணிக்கு கூட முக்கியமான கட்டங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை அமைத்து தந்தது சுழலர்கள் அல்ல வேகவீச்சாளர்களே. இலங்கை மட்டுமே இதற்கு விதிவிலக்கு. ஆக மொத்தமாய் விக்கெட்டுகளின் எண்ணிக்கையை அல்ல தரத்தை கருதுகையில் இந்த உலகக் கோப்பை தொடரில் சுழலர்கள் செய்ததெல்லாம் எச்சிற் பருக்கைகளை கூட்டி பெருக்கியது தான்.
ஆஸ்திரேலியா தோற்றதற்கு அசல் காரணம் அவர்களின் வேகவீச்சாளர்கள் மோசமாக வீசினது தான். அவர்கள் திறமையாக ஆவேசமாக இயங்கினார்களே ஒழிய தந்திரமாக சமயோசிதமாக வீசவில்லை. கால்-இறுதி ஆட்டத்தில் பிரெட் லீக்கு அடுத்த படியாய் அச்சுறுத்தக் கூடியவராக இருந்தவர் பகுதி நேர மிதவேக வீச்சாளர் வாட்சன். காரணம் அவர் இந்திய ஆடுதளங்களின் சிணுங்கல் குணத்தை அறிந்தவராக இருந்தார். திசையையும் நீளத்தையும் வேகத்தையும் தொடர்ந்து மாற்றி எதிர்பாராத வகையில் வீசினார். வேகத்தை விட கூர்மையும் மதிநுட்பமும் ஆசிய ஆடுதளங்களில் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தினார். அவர் எறிந்த இரு மெதுவான பந்துகள் சச்சினின் மட்டை ஓரத்தை உரசி கீப்பரையும் உரசி போயின. சச்சினுக்கு அவரை வாசிக்க நேரம் பிடித்தது. வாட்சனுக்கும் பிரெட் லீக்கும் இங்கு ஐ.பி.எல் ஆடின அனுபவம் பயன்பட்டிருக்கலாம். ஆனால் ஆஸ்திரேலியாவின் ஒட்டு மொத்த ஆட்டதிட்டம் நேர்முரணாக இருந்தது. அவர்கள் வேகத்தை கொண்டு அதிரடியாய் விக்கெட்டுகளை வீழ்த்த உத்தேசித்தனர். இது பலவீன அணிகளுக்கு எதிராக பயன்பட்டு, வலுவான அணிகளுக்கு எதிராக சொதப்ப செய்தது. ஆனால் லீக் கட்டத்தை அடையும் வரை ஆஸியினரின் வேக வீச்சு பெரும் வலிமையாக அச்சுறுத்தலாக கருதப்பட்டது. கால்-இறுதியில் ஆஸி அணிக்கு எதிராக இந்தியா இரண்டாவதாக மட்டையாடினால் அநேகமாய் தோல்வி தான் என்று கணித்தார் கவாஸ்கர். ஆனால் எது பலமாக கருதப்பட்டதோ அதுவே பலவீனமாக அமைந்தது. வாழைப்பழம் விழுங்கியவாறே வழுக்கியும் விழுந்தனர்.
ஆனால் ஆஸ்திரேலியாவிடம் ஒரு அஸ்திரமே இருந்தது. அவர்கள் இது போன்றதொரு நெருக்கடி ஆட்டத்தில் வேறு ஒன்றுமே செய்திருக்க முடியாது. அந்த அஸ்திரமும் எய்த போது தேர்க்கால் தரைக்குள் அழுந்தி விட்டது. இந்த வெளியேற்றம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் எழுச்சியின் கடைசி மூச்சோ என்று அதிக சுவாரஸ்யமின்றி மெல்ல கேட்கிறோம். அதற்கு இன்னும் பெரும் தொலைவு இருக்கிறது. அவசரப்படாமல் நாம் இந்த இரு அணிகளின் சறுக்கல்களை கவனிக்கலாம். மீள்-எழுச்சிகளை எதிர்பார்க்கலாம். கசப்பை விட ரசிக்கத்தக்க சுவை வேறொன்றில்லை.

Comments

Ashok D said…
இறுதி ஆட்டத்தினையும் சுவையாய் தொகுப்பீர்கள் என எண்ணுகிறேன்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...