Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கிரிக்கெட்டில் ஆசிய மேலாதிக்கம்: விழுமியங்கள் காலாவதியான கதை




இங்கிலாந்து கிரிக்கெட்டை அறிமுகப்படுத்திய வகையில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கோலோச்சியது. அக்காலத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர்கள் கூட லார்ட்ஸ் பெவிலியனில் அனுமதிக்கப்படாத அவமதிப்புகள் நடந்ததுண்டு. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியா தன் ஆட்டத்தரம் மற்றும் அணி விழுமியங்கள் கொண்டு பத்து வருடகாலம் மேலாதிக்கம் செலுத்தியது. இந்த ஒரு நூற்றாண்டு வெள்ளை ஆதிக்கம் ரெண்டாயிரத்துக்கு பிறகு குறிப்பிட்ட வகையில் மாறியது. ஆசிய ஆதிக்கம் துவங்கியது. இது கிரிக்கெட் அல்லாத காரணத்துக்காக நடந்தது என்பதே சுவாரஸ்யம். கிரிக்கெட் ஐரோப்பியர்களின் போராட்ட உணர்வு, ஒற்றுமை, விடாமுயற்சி, நாணயம், அணி விசுவாசம் போன்ற விழுமியங்களின் உருவகமாக இருந்தது. கிரிக்கெட்டில் தனிநபர் அல்ல அணியே முக்கியம் என்ற இன்னும் மதிப்பிழக்காத ஒரு தேய்வழக்கு உண்டு. ஆசியா ஆதிக்கம் செலுத்த துவங்கியவுடன் ஆதார விழுமியங்கள் ஒரே நாளில் புராதனமாகின. பணமும், செல்வாக்கும், இன துவேசமும் உலக கிரிக்கெட்டின் இயல்புகளாகின.
ஜக்மோகன் தால்மியா எனும் வங்காளி (இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இருந்து பெரும்பணம் கொள்ளையடித்ததாய் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரானதும் பாக் கிரிக்கெட் வாரியத்திடம் தன் செல்வாக்கை காட்ட ஷோயப் அக்தருக்கு வழங்கப்பட்ட சர்வதேச தடையை உடனடியாய் நீக்கி அவரை ஆட அனுமதித்தார். பின்னர் வங்க தேசம் எனும் முதிரா அணிக்கு டெஸ்ட் ஆட்டங்களில் ஆடும் அந்தஸ்தை பெற்றுத் தந்தார். உள்ளூரில் வலுவான உள்கட்டமைப்புகள் இல்லாத அவ்வணியால் அதற்கு பின்னான இருபது வருடங்களில் ஒரு பொருட்படுத்தத்தக்க டெஸ்ட் வெற்றியை கூட பெற முடியவில்லை. டால்மியா தான் உலக கிரிக்கெட் மென்பொருளில் நுழைந்த முதல் இந்திய வைரஸ்.

ஆஸ்திரேலியா போனால் பணம், செல்வாக்கு, இன துவேசம் ஆகிய மூன்று இந்திய குணாம்சங்களின் திமிர்த்தனம் காரணமாய் இந்தியர்கள் தர்ம அடி வாங்குவார்கள். ஆனால் உலக கிரிக்கெட் தளத்தில் ஒரு ஹர்பஜன் சிங் தப்பிக்க முடிந்தது. சச்சினால் பொய் சொல்ல முடிந்தது. சச்சின் பந்தை சுரண்டியதாக குற்றம் சாட்டிய ஒரு ரெப்ரியான மைக் டென்னிஸ் கடும் கண்டனத்துக்குள்ளானார். அவர் பணியாற்றிய ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. பந்தை எறிவதாய் சந்தேகிக்கப்பட்ட ஒரு வீச்சாளரை இலங்கை அணியால் இரண்டு பத்தாண்டுகள் காப்பாற்ற முடிந்தது. இதே சந்தேகத்துக்கு உள்ளான பாதுகாப்பற்ற எத்தனையோ வேறு நாட்டு பந்து வீச்சாளர்கள் இதற்குள் தொடர்ந்து சோதனைகளுக்கும் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வீச்சு பாணி தட்டி நிமிர்க்கப்பட்டு கிரிக்கெட்டை விட்டு வேறு தொழில் பார்க்க போயினர். இந்தியாவில் உள்ளூர் ஆட்டங்களில் கூட லாஹிரி போன்ற சுழலர்கள் சந்தேகத்துக்குரிய வீச்சு பாணி காரணமாய் ஆட்டத்தில் இருந்து தடை செய்யப்பட்டனர். முன்னர் தென்னாப்பிரிக்கா இனதுவேச நடவடிக்கைகள் காரணமாய் கிரிக்கெட்டில் இருந்து பல வருடங்களில் தடை செய்யப்பட்டது. ஆனால் தற்சமயம் தீவிரவாதமும், பெட்டிங் ஊழலும் நிழலுலகத்தின் இடையூறும் புரையோடிய பாகிஸ்தான் ஐ.சி.சியிடம் இருந்து எந்த ஒரு தீவிரமான காத்திரமான விசாரணைக்கும் நடவடிக்கைக்கும் உள்ளாகாமல் பத்திரமாக இருக்கிறது. அந்நாட்டில் வைத்து ஒரு அந்நிய அணி வெடிகுண்டு தாக்குதலில் இருந்து எதேச்சையாய் தப்பித்தது. மற்றொரு அணி தீவிரவாதிகளால் திட்டமிட்டு தாக்கப்பட்டது. இரண்டு குற்ற நடவடிக்கைகளுக்கும் எதிராக எந்த நடவடிக்கையையும் இன்னும் உலக கிரிக்கெட் அமைப்பாளர்களால் எடுக்க முடியவில்லை.
ஆசியாவுக்கு அதிகாரமும் முக்கியத்துவமும் எப்படி கிடைத்தது? ஐரோப்பாவில் கிரிக்கெட் நவீனப்படாமல் தேக்க நிலையை அடைந்தது. அங்கு சிறுவயதில் இருந்தே பல வித ஆட்டங்களை மக்களை ஆட ஊக்குவிக்கும் உள்கட்டமைப்பு இருப்பதாலும், கால்பந்தும் டென்னிஸும் அங்கு அதிக செல்வாக்கு பெற்றிருந்ததாலும் ஆசியா அளவுக்கு கிரிக்கெட்டால் அங்கு மேலாதிக்கம் செலுத்த முடியவில்லை. கிரிக்கெட்டுக்கு என்றுமே ஒரு முத்திரை, வரலாற்று முக்கியத்துவமே அங்கு இருந்துள்ளது. உதாரணமாய் ஆஷஸ் தொடர். ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் இந்தியா பாகிஸ்தான் அல்ல. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே ஆஷஸின் போது நாம் பார்க்கும் பகைமை கிரிக்கெட் வரலாறு ஒன்றின் தொடர்ச்சி மட்டுமே. இங்கிலாந்து அரச குடும்பத்தை போன்று கிரிக்கெட் அங்கு ஒரு பாதி மரித்த வரலாற்று எச்சமாக இருந்தது. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இருந்து ஆசிய நாடுகளின் பொருளாதார நிலைமை மேம்பட்டு மெல்ல நவீனத்துவத்துக்குள் காலடி வைக்கும் கட்டத்தில் அவற்றுக்கென்று விளையாட்டு கட்டமைப்புகள் இருக்கவில்லை. கிரிக்கெட் ஒரு விளையாட்டு மார்க்கமாக அல்லாமல் தேசிய உணர்வுகளை அடையாளப்படுத்தவும் ஒரு பொழுதுபோக்கு வணிகமாகவும் மாறியது. இங்கே கிரிக்கெட் பார்வையாளர்கள் பெருகினார்கள். உள்கட்டமைப்பு மற்றும் திறன்களின் அடிப்படையில் அல்ல, பார்வையாள மக்கள் தொகையை கொண்டு தான் நாம் ஐரோப்பியர்களை கிரிக்கெட் சந்தையில் முறியடித்தோம். இந்த அடிப்படையில் தான் வங்கதேசம் டெஸ்ட் அந்தஸ்தை பெற்றது. ஆசிய பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பரவி சவலையாகி வந்த கிரிக்கெட்டை ஆதரித்தனர். ஐ.சி.சியின் இன்றைய நிலைப்பாட்டுக்கு தேவையான பெரும்பகுதி பணம் ஆசிய வாரியங்களின் கஜானாவில் இருந்து தான் போகிறது. ஆசியாவுக்கு தலைவணங்கி சில வேளைகளில் கூழை கும்பிடு போடவும் தங்களது மரபான விழுமியங்களை கைவிடவும் கூட உலக கிரிக்கெட் தயாரானது. குறிப்பாக இந்தியா ஐ.சி.சியின் பெரியண்ணா என்ற விமர்சனமும் கூடவே வலுவாக எழுந்தது. இந்திய அரசியலில் போலவே இதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
நவீன கிரிக்கெட்டை எப்படி திறமையாக சந்தைப்படுத்தி விற்று பணம் பண்ணுவது என்பதை ஐ.பி.எல் உலகுக்கு கற்றுக் கொடுத்தது என்று சொல்லப்படுகிறது. அதே வேளையில் கிரிக்கெட்டில் இருந்து அதன் அடிப்படை விழுமியங்களை விலக்கி வேரற்றதாக, அடையாளமற்றதாகவும் மாற்ற முடியும் என்றும் கூடத்தான ஐ.பி.எல் நிரூபித்தது. இந்தியாவில் இன்று மதமும் அரசியலும் தேசியமும் அடைந்துள்ள நிலையை கிரிக்கெட் உலகளவில் அடைந்துள்ளது. நமது அரசியல்வாதிகளிடம் மக்களும் சாமியார்களிடம் பக்தர்களும் வாடிக்கையாளர்களாகவும் நுகர்வோராகவும்  இருக்கும் நிலையில் எப்படி அரசியலில் அரசியல் இல்லை, மதத்தில் மதம் இல்லையோ, அது போல் இன்று கிரிக்கெட்டில் கிரிக்கெட்டும் இல்லை. சமகால காட்பாதரை போல் எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருப்பதாய் இந்தியா இன்று உலகுக்கு சொல்லி அதை செய்தும் காட்டுகிறது. இரு உதாரணங்கள் சொல்லலாம்.

ஒருநாள் கிரிக்கெட் உச்சத்தில் இருந்த வேளையில் ஒவ்வொரு வீரரும் தன்னை டெஸ்ட் ஆட்டத்தில் நிரூபிக்கவே விரும்புவதாய் சொல்லப்பட்டது. அதன் மூலம் டெஸ்ட் ஆட்டத்தின் சமகால முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. பல இளம் வீரர்கள் ஒருநாள் ஆட்டங்களில் தம்மை நிறுவி அதன் மூலம் டெஸ்ட் அணியில் நுழைய கனவு கண்டனர். அப்படி செய்வது சாதனையாகவும் சிலருக்கு வெறுங்கனவாகவும் இருந்தது. மிகச்சிறந்த திறமையாளர்கள் மட்டும் சச்சின், கங்குலி போல நேரடியாக இளமையிலேயே டெஸ்ட் வாய்ப்பை பெற்றனர். இங்கிலாந்தின் காலிங் வுட், தெ.ஆவின் ஜாண்டி ரோட்ஸ் போன்றோர் தொடர்ந்து போராடி தம் முப்பதுகளில் மட்டுமே டெஸ்ட் அணியில் ஸ்திரப்பட்ட கதைகள் செவ்வியல் அம்சம் கொண்டவை. அதே வேளையில் மைக்கேல் பெவன் போன்ற தலைசிறந்த ஒருநாள் ஆட்டக்காரர் கடைசி வரை டெஸ்ட் அணியில் நிலைக்க முடியாமல் போன துன்பியலும் கிரிக்கெட்டின் வாய்மொழி கதைகளில் மறக்க முடியாதது. ஆனால் இந்த காலகட்டம் ஐ.பி.எல்லோடு காலாவதியானது.

இன்று இளம் வீரர்கள். தேசிய அணியில் ஆட முடியாவிட்டாலும் பரவாயில்லை squadஇல் ஒரு இடம் மட்டும் போதும் என்று கருதுகிறார்கள். இப்படி ஒரு சுற்றுப்பயணத்தின் போது எந்த ஆட்டத்திலும் கலந்து கொள்ளாமல் வெறுமனே ஒட்டிக் கொண்டு செல்லும் ஒரு வீரர் சர்வதேச வீரர் என்ற அந்தஸ்தை பெறுகிறார். இதன் மூலம் அவர் ஐ.பி.எல் பேரத்தின் போது அதிக சந்தை மதிப்பை பெற்று அதிக விலைக்கு வாங்கப்படுகிறார். ஐ.பி.எல்லில் நுழைந்த பின்னரும் ஒரு வீரர் நன்றாக ஆடி தன்னை நிலைப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஒரு ஆட்டத்தில் கூட ஆடாமல் வெறுமனே ரிஸர்வாக மைதான எல்லைக்கோட்டுக்கு வெளியே நகத்தை கடுத்துக் கொண்டு ஒரு முழுபருவமும் அமர்ந்திருந்தாலும் ஒரு ஐ.பி.எல் வீரர் அரைகோடியாவது சம்பாதித்து விடலாம். பல இளம் வீரர்கள் கிளப் ஆட்டங்களில் கவனிக்கப்பட்டும், 18 வயதுக்கு கீழானவர்களுக்கான ஆட்டத்தொடர்களில் சிறப்பாக ஆடியதன் மூலமும் ஐ.பி.எல்லில் தேர்வாவதால், ஐ.பி.எல் ஆடியே தேசிய அணியிலும் நுழைய முடியும் என்பதாலும் ரஞ்சி தொடர் ஆடுவது இந்திய கிரிக்கெட் வீரருக்கு இனிமேல் தேசிய வாய்ப்புக்கான நுழைவுத் தேர்வு அல்ல. உதாரணமாக சமீப ரஞ்சி தொடரில் ஏகப்பட்ட ஓட்டங்கள் குவித்த சர்வதேச அனுபவம் கொண்ட வாசிம் ஜாபரை ஐ.பி.எல் பேரத்தில் யாரும் வாங்கவில்லை. ஆனால் யாரென்றே தெரியாத ஆஸி தேசிய அணியில் கூட இரண்டு ஆட்டங்களுக்கு மேல் இடம் பெறாத டானியல் கிறிஸ்டியன் என்பவரை கோடி கொடுத்து வாங்கினார்கள். இதன் காரணம் செல்வாக்கை, சிபாரிசை முன்னிறுத்தும் இந்தியத்துவ தேர்வு பாணி. ஐ.பி.எல்லில் ஒரு வீரரின் தரம் அவரது ஆட்ட வரலாறால் அல்ல, பயிற்சியாளர் அல்லது ஒரு மூத்த வீரரின் சிபாரிசால் தான் முடிவாகிறது. அநேக அணிகளில் பயிற்சியாளர்களும் நட்சத்திர வீரர்களும் ஆஸ்திரேலியர்கள் என்பதால் டானியல் கிறிஸ்டியன் போன்றவர்கள் எளிதில் பின்வாசல் வழியாக கௌரவமாக நுழைகிறார்கள். நிரந்தரமாக மூடப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் முன்வாசலுக்கு வெளியே எப்போதும் ஒரு நீண்ட வாய்ப்பு நாடுவோர் வரிசை நிற்கிறது. ஐ.பி.எல் பின்வாசல் வழி உள்ளே நுழையும் இன்றைய கிரிக்கெட் வீரருக்கு தேசிய அணி வாய்ப்பு என்பது வெறும் மற்றொரு வாய்ப்பு மட்டுமே, முன்பு போல் ஜென்மாந்தர கனவு அல்ல. நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இது இன்றொரு இந்திய பிரச்சனை மட்டுமல்ல, சர்வதேச அளவில் பல நாட்டு வாரியங்களும் முழி பிதுங்குகின்றன.
ஐ.பி.எல்லினால் சர்வதேச கிரிக்கெட்டில் இரு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. முதல் வருடத்தில் ஐ.பி.எல் நடக்கும் இருமாத காலத்தில் பல அந்நிய அணி வீரர்களை ஐ.பி.எல் அணிகள் இழந்தன. இது ஐ.பி.எல் அணிகளின் தரத்தை பெருமளவு பாதித்தன. உதாரணமாய் முதல் ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இங்கிலாந்து ஆஸி வீரர்களை இழந்து தாக்குப்பிடிக்க திணறியது. ஆனால் தற்சமயம் ஐ.பி.எல் ஆட்ட வேளையில் சர்வதேச வாரியங்கள் தமது வீரர்களை ஐ.பி.எல்லுக்கு இழந்து தவிக்கின்றன. கெய்ல் உள்ளிட்ட மேற்கிந்திய அணியின் மூத்த வீரர்கள் ஐ.பி.எல்லுக்காக சொந்த நாட்டு அணியை பகிஷ்கரிக்க துணிந்தனர். மே.இ வாரியத்துடன் நடந்த இழுபறியின் விளைவாய் கெய்ல் தற்போது நடந்து வரும் பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் ஆட மறுத்து விட்டார். கெய்ல் தான் காயமுற்றுருப்பதாய் சொல்லித் தான் விலகினார். ஆனால் அவர் எந்த சிரமமும் இன்றி ஐ.பி.எல் ஆடி வருகிறார். மே.இ வாரியம் இதனை சமீபமாய் கண்டித்தது. கெய்ல் பொருட்படுத்தவே இல்லை. அநேகமாய் இதே பாணியில் ஒரு காட்சி இலங்கையிலும் அரங்கேறியது. மலிங்கா காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்டு ஆட்ட பயணம் மேற்கொள்ள முடியாது என்று மறுத்து விட்டு இங்கே சௌகரியமாக மும்பை இந்தியன்ஸுக்காக சர்வ அலட்சியமாக யார்க்கர்கள் எறிந்து வெற்றிகளை வாங்கித் தந்து கொண்டிருந்தார். அதெப்படி காயமடைந்த ஒருவர் நன்றாக ஒருபுறம் ஆடிக் கொண்டிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய இலங்கை கிரிக்கெட் வாரியம் அவரை நாட்டுக்கு திரும்பி தன் (இல்லாத ) காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வலியுறுத்தியது. மலிங்காவும் ஏதோ ஈ மொய்க்கிறது என்று அலட்சியமாக இருந்தார். பின்னர் ரொம்பத்தான் மொய்க்கிறதே என்று டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு அறிவித்தார். டெஸ்டு ஆட்டத்தின் மீது குவிக்கப்பட்ட அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் இந்திய கிரிக்கெட் இப்படி ஒரு வேடிக்கை சமாச்சாரமாக்கியது.

தனிப்பட்ட சிரமங்களை மறந்து சுயலாபங்களை தியாகம் செய்து அடைய இன்று ஒன்றுமே கிரிக்கெட்டில் இல்லை. எல்லா திறன்களைப் போலவும் கிரிக்கெட் ஆடுவதும் ஒரு திறன். அது ஒரு விற்பனை சரக்கு. ஒரு டெஸ்டு போட்டியில் சராசரியாக மலிங்கா நாற்பது ஓவர்கள் வீச வேண்டி வரும். சில லட்சங்கள் கிடைக்கும். அதே நாற்பது ஓவர்களை அவர் எட்டு ஐ.பி.எல் போட்டிகளில் தனித்தனியாக வீசலாம். கோடிக்கணக்கில் சன்மானம் வரும். இதனால் அவர் அதிக வருவாய் மார்க்கத்தை தேர்ந்தெடுப்பது தவறில்லை எனலாம். இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் ஆடினாலே விரைவிலே உடல் தகுதி இழந்து விடும் அளவுக்கு பலவீனரான அவர் அதையே இரண்டு ஐ.பி.எல் பருவங்களாக ஆடி தன் எதிர்காலத்தை பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இதனால் மோசமான உடல்தகுதி கொண்ட திறமையாளர்களுக்கு தங்கள் எதிர்காலத்தை ஸ்திரப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு ஐ.பி.எல் என்று ஒரு தரப்பு நியாயம் உள்ளது. ஆனால் மலிங்கா, கெய்ல் போன்றோரை வளர்த்தெடுத்த நாடுகளுக்கும் அவற்றின் வாரியங்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகாதா இச்செயல்? சமகாலத்தில் மதிப்பிழந்த எத்தனையோ விழுமியங்களில் ஒன்று தான் விசுவாசம் என்பது இதற்கான ஒரே பதில். இன்று விசுவாசம் ஒரு நிலப்பிரபுத்துவ மதிப்பீடு என்று எளிதில் நாம் அடையாளப்படுத்தி நிராகரிக்க முடியும். அணி உணர்வுக்காக அதிகம் போற்றப்பட்ட இலங்கை அணியினர் தமது தலைவர் தில்ஷானுடன் உள்ளிட்டு வரப்போகும் இங்கிலாந்து தொடரில் தாமதமாய் பங்கேற்கப் போகின்றனர். காரணம் ஐ.பி.எல். உலக கிரிக்கெட் வரலாற்றில் மற்றொரு நாட்டின் உள்ளூர் ஆட்டத்தொடருக்காக ஒரு சர்வதேச தொடர் அலட்சியப்படுத்தப்படுவது இது முதல்முறையே. இது ஒரு துவக்கம் மட்டுமே என்று பலரும் கருதுகின்றனர். ஐ.பி.எல் வேளையில் பிற சர்வதேச ஆட்டங்களை நடத்தாமல் இருப்பது ஒரு தீர்வு என்று பல வீரர்களும் வேண்டுகிறார்கள். அனைத்தும் தலைகீழாகி விட்டதற்கு இந்த வேண்டுகோள் ஒரு இறுதி உதாரணம்.
முதல் தடை செய்யப்பட்ட கனியை புசிக்கும் முன், முதல் சொல் எழுதப்படுவதற்கு கடவுளும் நாமும் வேறுவேறாக இல்லை. அந்நியமான பிறகு மதம் தேவைப் பட்டது. கிரிக்கெட்டிற்கு ஐ.பி.எல் தேவைப்பட்டது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...