Skip to main content

மேற்கிந்திய தீவு பயணம்: காயங்களில் இருந்து ஓய்வுக்கு



நேரடி ஒளிபரப்பு துவங்காத ஒரு காலத்தில் அனைத்து அணிகளுக்கும் ஒரு கொடுங்கனவாக திகழ்ந்த மேற்கிந்திய தீவுப்பயணங்கள் மெல்ல மெல்ல சிரமமான தொடர்களாக மாறி பின்னர் இப்போது ஒரு எளிய சுற்றுலாவாக முடிந்து விட்டது. சமீப தொடரில் பாகிஸ்தான் அங்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் ஆட சர்வதேச பரிச்சயம் குறைந்த ஒரு அணியை அனுப்பியது. மே.இ தீவுகளும் தமது மூத்த வீரர்களை விலக்கியது. இரண்டு முதிரா அணிகள் மோதியதில் யாருக்கும் சுவாரஸ்யம் இல்லாமல் ஒரு அணி வென்றது. அடுத்து இதிலிருந்து கற்றுக் கொண்ட பாவனையில் இந்திய தேர்வாளர்களும் மே.இ தீவுகளுக்கு ஒருநாள் தொடர் ஆட இளைய வீரர்களின் அணி ஒன்றை அனுப்புகிறது. அவ்வணியில் உலகின் சிறந்த அணித்தலைவரும், உலகின் தலைசிறந்த மட்டையாளரும் இல்லை. பாக் செய்தது பரீட்சார்த்த தேர்வு என்ற நியாயம் இருந்தது; ஏனென்றால் அவர்களின் அணி உலகக் கோப்பையில் சொதப்பியது. ஆனால் உலக சாம்பியன்களின் தேர்வு ஒருவித உதாசீனம் மற்றும் அக்கறையின்மையில் இருந்து வருவது. மேலும் இந்த இந்திய அணியின் தேர்வுக்கு ஒரு சின்ன வரலாற்று முக்கியத்துவமும் உண்டு.
முதன்முதலாக ஐ.பி.எல்லில் ஆடிக் களைத்ததற்காக வீரர்களுக்கு சர்வதேச தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்படுகிறது. இலங்கையின் மூத்த வீரர்கள் ஒரு ஆஸி சுற்றுத் தொடருக்கு பின் உலகக்கோப்பைக்குப் பின் ஐ.பி.எல்லுக்கு பின் சளைக்காமல் இங்கிலாந்து பயணத்துக்கும் செல்கிறார்கள். ஆஸ்திரேலிய காப்டன் சர்வதேச கிரிக்கெட்டுக்காக ஐ.பி.எல்லை ஆரம்பத்தில் இருந்தே தவிர்த்து வருகிறார். இங்கிலாந்து வீரர்களும் ஐ.பி.எல் தவிர்த்து தங்களது கவுண்டி ஆட்டங்களில் தீவிரமாய் ஆடி இந்திய தொடருக்காக தயாராகி வருகிறார்கள். ஆனால் முரண்பாடாக இந்தியாவின் மூத்த வீரர்களும் தலைவரும் சர்வதேச தொடர் ஒன்றை தியாகம் செய்து மிகுந்த ஈடுபாட்டோடு உள்ளூர் ஆட்டத்தொடர் ஒன்றை ஆடி வருகிறார்கள். இங்கு சில காரணங்களை அணுகலாம்.
மே.இ தீவுகள் ஒருநாள் தொடருக்கு அவர்கள் செல்லாததன் காரணம் அவ்வணியின் சமகால தரக்குறைவை உத்தேசித்து இருக்கலாம். ஆனால் கடந்து பத்து வருடங்களில் இந்தியாவுக்கு எதிராக மே.இ தீவுகள் வலுவாகவே ஆடி சில முக்கிய ஐ.சி.சி தொடர்களில் இருந்து கூட நம்மை வெளியேற்றி உள்ளது. 2011 உலகக் கோப்பையில் கூட இதே கால் நடுங்கும் மே.இ தீ அணி நம்மை தோல்வியை நோக்கி தன் குச்சிக் கைகளால் நெருக்கியது. கடந்த மே.இ.தீ பயணத்தின் போது நாம் டெஸ்டு தொடரை வென்ற போது கூட அதற்கு கடுமையாக போராட வேண்டி இருந்தது. அதற்கு பின் ஒருநாள் தொடரை இழந்தோம்.
மேலும் இந்த அணித் தேர்வு சர்வதேச கிரிக்கெட்டின் சரிந்து வரும் சந்தை மதிப்பு மற்றும் அந்தஸ்தை சுட்டுகிறது. உதாரணமாய், மே.இ.தீவுகளில் ஒரு சதம் கூட அடித்திராத தோனிக்கு ஐ.பி.எல் கோப்பை வெல்வதை விடவும் அங்கு ஆடுவது அல்லவா சவாலாக இருந்திருக்க வேண்டும். அதே போல் சஹீர் கானுக்கும் அங்கு தன்னை நிரூபிக்கும் கனவு இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் ஐ.பி.எல்லில் காயும் தகரக்கூரை மேல் பாயும் பூனை போல் ஆடிக் கொண்டிருக்கிறார்.
எழுபதுகளில் கவாஸ்கருக்கு முந்திய இந்திய அணி ஒன்று மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றிருந்த போது ஒரு ஆட்டத்தில் ஆடுவதற்கு 11 வீரர்கள் தேறவில்லை. காரணம் பெரும்பாலானோர் மே.இ.தீ வேகவீச்சாளர்களால் காயப்படுத்தப்பட்டு ஒதுங்கி இருந்தனர். பின்னர் அடுத்த பயணத்தில் கவாஸ்கர் அங்கு அறிமுகமாகி சுலபமாக ஆடி சதங்கள் அடித்து பெரும் அங்கீகாரம் பெற்றார். ஒரு இந்தியரால் அதிவேகப்பந்தை ஆட முடியும் என்று அவர் மே.இ தீவுகளில் அப்போது நிரூபித்தது பெரும் சாதனையாக கருதப்பட்டது. எண்பதுகளின் அச்சுறுத்தும் வேகவீச்சாளர் நால்வரும் ஓய்வு பெற்ற பின்னரும் தொண்ணூறுகளில் அவர்களுக்கு அடுத்தபடியாக ஆம்புறோஸ், வால்ஷ், பிஷப் போன்ற திறமையான சற்று குறைவாக அச்சுறுத்தக் கூடிய வேகவீச்சாளர்கள் இருந்தனர். கவாஸ்கருக்கு அடுத்து அங்கு நிலைத்து ஓட்டங்கள் எடுக்க முடிந்தது சச்சின் மற்றும் திராவிடால் தான். மிச்ச ஒன்பது பேருக்கும் மே.இ தீவுகள் தொண்ணூறுகளிலும் ஒரு புதிர் நிலமாகத் தான் தொடர்ந்து இருந்தது. வால்ஷ்-ஆம்புறோஸ் இரட்டையர் ஓய்வு பெற்ற பின் கங்குலி தலைமையின் கீழ் அங்கு சென்ற இந்திய அணி ஹூப்பரின் புத்துயிர்ப்பினால் வலுவுற்ற மேற்கிந்திய மட்டையாட்டத்தை சமாளிக்க முடியாது திணறியதால், அந்த தொடரையும் கைப்பற்ற முடியவில்லை. இதற்கு பின்னர் தான் மே.இ தீவுகள் இறுதியாக மாபெரும் வீழ்ச்சிக்காக விளிம்பை நோக்கி சென்றது. அரசியல், உள்கட்டமைப்பின் தோல்வி, வேறு ஆட்டவகைகளுடனான போட்டி என பல்வேறு காரணங்களால் மே.இ தீவுகள் ஈடுபாட்டையும் கவனத்தையும் இழந்து சிதறிக் கொண்டிருந்தது. இளம் வீரர்கள் ஊழல், ஆட்டநிலை சீர்குலைவு போன்ற காரணங்களால் மந்தையில் இருந்து பள்ளங்களுக்கு சென்றனர். சந்தர்பால் போன்ற அனுபவஸ்தர்கள் வாரியத்துக்கு எதிராக ஆட்டக்காரர்களின் சங்கம் அமைத்து பிளவுபட்டனர். இந்த கட்டத்தில் இந்தியாவின் ஆட்டத்தரமோ திராவிடின் கீழ் ஒரு உச்சத்தை அடைந்திருந்தது. மிகச்சிறந்த வேகவீச்சாளர்கள் கூர்மையாக தொடர்ந்து ஆடிய, அணியில் இடத்துக்காக போட்டியிட்ட பொற்காலம் அது. இதனுடன் மரபான வலுவான மட்டையாட்டமும் சேர்ந்து இந்தியாவுக்கு தனது முதல் மே.இ தீவுகள் டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றுத் தந்தது. அப்போது இந்த வெற்றி ஒரு பெரும் வரலாற்று கணமாக கொண்டாடப்பட்டது. ஆடுவதற்கு 11 பேரை திரட்ட முடியாது அச்சுறுத்தலான காலத்தில் இருந்து முதல் தொடர் வெற்றி வரையிலான இந்தியாவின் இப்பயணம் மூன்று பத்தாண்டுகளை எடுத்துக் கொண்டது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வேறெந்த தேசங்களுக்கான பயணங்களை விடவும் இந்தியாவின் கிரிக்கெட் ஆட்டவரலாற்றை மே.இ தீ பயணங்களே துல்லியமாக சித்தரிப்பன. அந்த மூன்று பத்தாண்டு காலத்தில் மே.இ தீ செங்குத்தாக வீழ்ந்தது என்றால் இந்தியா அது விழுந்த இடத்தில் இருந்து உதித்து மேலெழுந்தது. ஆனால் வரலாறு இங்கு முடிகிறது.
தோனி தலைமை ஏற்க வேண்டியிருந்த இந்த மே.இ.தீ பயணம் ஒரு இந்திய A அணி தொடர் போல் ஆடப்பட இருக்கிறது. இத்தொடரில் இரு அணிகளுக்கும் அடையவோ இழக்கவோ குறிப்பிடத்தக்கதாய் ஏதுமில்லை. ஒன்றாம் வகுப்பு பரீட்சை எழுதச் செல்லும் குழந்தையின் எதிர்பார்ப்புடன் இந்திய அணி அங்கு செல்கிறது. வரலாற்றை தவிர்த்து செய்தி மதிப்பு கூட குறைந்து விட்ட பயணமாக இம்முறை இது இருக்கிறது. பயிற்சியாளராக புதிதாக பதவியேற்று அதற்கு முன்னிருந்தே இந்திய ஆர்வலர்களின் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருந்த டங்கன் பிள்ட்சர் கூட இங்கிலாந்து மற்றும்  ஆஸி பயணங்களை மட்டுமே சவால்களாக காண்கிறார். உண்மையிலேயே மே.இ அணி பூமியை பிளந்து கீழே போய் விட்டதா? எல்லா டெஸ்டுகளும் இரண்டு மூன்று நாட்களில் முடியப்போகின்றனவா? இல்லை. கெய்ல், சந்தர்போல், பிராவோ, சர்வான் உள்ளிட்ட மூத்த வீரர்கள் திரும்பினால் டிவெயின் பிராவோ போன்ற புதிய மட்டையாளர்களின் பங்களிப்புடன் அவர்களால் இந்திய பந்து வீச்சாளர்களை தங்கள் பங்குக்கு அவர்களாலும் ஓடவிட முடியும். ஆனால் நடந்து வரும் பாக் பயண முடிவுகள் இந்திய தேர்வாளர்களின் முடிவை பாதித்துள்ளது அப்பட்டம்.
மொத்த அணியுமே காயமுற்றதில் ஆரம்பித்து தோல்வியை தவிர்ப்பதில் தொடர்ந்து வெற்றியில் முடிந்த பின் தற்போது இந்தியாவின் 2011 மே.இ தீ பயணம் ஒரு ஓய்வுப்பயணமாக வேறு திசை எடுத்துள்ளது. இனிமேல் இந்தியாவில் டாஸை சுண்டிப் போட்டால் அதன் ஒரு பக்கம் எப்போதும் கோடிகளில் பணம் புரட்டுவதை காட்டுவதாக மட்டுமே இருக்கும் என்பதற்கு இப்பயணம் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

Comments

saro said…
உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.

Share
இனிமேல் இந்தியாவில் டாஸை சுண்டிப் போட்டால் அதன் ஒரு பக்கம் எப்போதும் கோடிகளில் பணம் புரட்டுவதை காட்டுவதாக மட்டுமே இருக்கும் என்பதற்கு இப்பயணம் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.>>>>>

எப்பவுமே டாஸ் போட்டவுடனே கோடிகளும் கை மாறுமே...இது புதிதல்ல.

எனது வலைப்பூவில்: மதுரையில் நேற்று நடந்த கொடூர விபத்து. அது சம்பந்தமாக என் கருத்து பகிர்வு!
thiru said…
இங்கிலாந்து வீரர்களும் ஐ.பி.எல் தவிர்த்து தங்களது கவுண்டி ஆட்டங்களில் தீவிரமாய் ஆடி இந்திய தொடருக்காக தயாராகி வருகிறார்கள்.
---
இந்தியாவின் மூத்த வீரர்களும் தலைவரும் சர்வதேச தொடர் ஒன்றை தியாகம் செய்து மிகுந்த ஈடுபாட்டோடு உள்ளூர் ஆட்டத்தொடர் ஒன்றை ஆடி வருகிறார்கள்

IPL is as important to Indian players as County is for British
பாலா said…
இந்தியா-ஆஸ்திரேலியா இந்தியா-தென்னாப்பிரிக்கா போன்ற போட்டிகளுக்கான விளம்பர முகாந்திரம் மே.இ தொடருக்கு இல்லை என்பதை மறுக்க முடியாது. (விளம்பரம் இல்லாத இடத்தில் நமக்கு என்ன வேலை :-()

ஏற்கனவே நலிந்துகொண்டிருக்கும் மே.இ கிரிக்கெட் வாரியத்திற்கு இது ஒரு அவமானமாகவே கருதப்படும்.

ICC தலைமை பொறுப்பு இந்தியாவிடமிருந்து போன பிறகு ஐபிஎல் போக்குகளை கவனிக்க வேண்டும்.
திரு,
அவர்கள் கவுண்டி ஆடினாலும் சர்வதேச ஆட்டங்களை புறக்கணிக்கவில்லை, நாம் அத்தவறை செய்கிறோம்
உடன்படுகிறேன் பாலா

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...