முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரே முகபாவம் கொண்ட பூனை



ஒரே முகபாவம் கொண்ட பூனையின்
முகம்
வெளிப்படையாய் காட்டுவது
உண்மை அல்ல
ஏனெனில்
அம்முகம் ஒருபோதும் மாறாமல்
இருக்கிறது

யாருக்கோ காத்திருப்பது போல்
மறந்த எத்தனையோ முகங்களைப் போல்
அது மாறினாலும் மாறாமலே இருக்கிறது

அது முகமோ
அம்முகத்தின் ஜாடை ஒரு சேதியோ
அல்ல
என்று உறுதியாக தெரிகிறது

நிலைத்த முகமென்பதால்
அது சிந்தனை வயப்பட்டும் இல்லை
என்று
நம்பத் தலைப்படுகிறோம்

மணிக்கணக்காய் ஒரே இடத்தில்
நகராமல் கிடந்தாலும்
அது
எதற்கும் காத்திருக்கவில்லை

காத்திருப்பவர்கள்
எதை நோக்கியோ நகர்ந்து கொண்டிருப்பவர்கள்

ஒரு கனத்த இறுக்கமான
கருங்கல் குன்று
எதற்காகவும் காத்திருக்கவில்லை
அதைப் போன்றே
பூனையும்

பூனை
புது இடத்திற்கு நகர்வது
ஒரு பூகோள வரைபடத்தை
இடம் மாற்றி வைப்பது போல

விநோத ஓசைகளுக்கு
தன் செவிகளை திருப்பி
திசைகளை சோதிக்கும் பூனை
நகர்வுகளை நம்புவதில்லை

காற்று அடிப்பதும்
சூரியன் உதிப்பதும்
பேராறுகள் புதுத் தடங்களை தேர்வதும்
ஒரு பூ உதிர்வதும்
ஒரு சொல் மற்றொரு சொல்லை நோக்கி செல்வதும்
பிரயாணம் அல்ல
எந்த இடத்துக்கும் சொந்த மில்லாத ஒன்று
எந்த இடத்துக்கு செல்ல முடியும்
என பூனை கேட்கிறது

வீடெங்கும் தன் மயிர்களை
உதிர்க்கும்
பூனை
தான் அவ்விடங்களில் எல்லாம்
இருக்கவில்லை
என்று வாதிக்கிறது

அடிக்கடி வழமையான இடங்களில்
இருந்து மறையும் பூனை
இருட்டிலோ வெளிச்சத்திலோ
மறைவிலோ வெட்டவெளியிலோ
எங்கும் இருக்கலாம் என்பதாலே
அதை தேடுவதும்
மிக சிரமமாகிறது

டீவி பார்க்கும் பூனை
பாட்டு கேட்கும் பூனை
எலி பிடிக்கும் பூனை
மடியில் மட்டும் தூங்கும் பூனை
ரகசியமாய் குட்டிகளிட்டு வெளிப்படும் பூனை
குழந்தைகளால் துன்புறுத்தப்படும் பூனைகள்
ஒரு ஓய்வுப் பொழுதில் நம்மை தேடி வரும் அனாமநேய பூனை
ஏதோ ஒரு பொறுப்புடன் திரியும் பூனைகள்
யாவும் பூனைகள் அல்ல

அவை
பல்வேறுபட்ட வேடங்கள்

அசலான பூனை
தன் வேடத்தை ஒரு போதும் களையாது
தன் முகத்தை
ஒரு போதும் மறக்க முடியாததால்
அது
எந்த முகத்துடன் பேசினாலும்
ஒரே முகத்துடன் கவனிக்கும்

பூனையுடன் பேசும் போது
எந்த முகத்தையும் அணியலாம்
அதன் முகத்தை அணிந்தால் மட்டும்
நம்மை பொருட்படுத்தாது

முந்தின நாள் இருந்த இடத்தில்
அதற்கு முந்தின நாளும்
நாளைய இடத்தில்
இன்றும்
இருக்க முடிவதால்
தொடர்ச்சியான எதையும்
விட்டுவிட்டு செய்வதே சாத்தியம் என்பதால்
அது
தனக்கு நெருக்கமாய் அசைவது
காலம் மட்டுமே என்றபடி
வைக்கப்பட்ட இடத்திலே வைக்கப்பட்டு விட்ட
ஒரு பிளாஸ்டி புட்டியை
கைகளால் நகர்த்தப் பார்த்து
ஆர்வம் இழக்கிறது

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
மனித மனதின் விசித்திரங்களையும் இயல்பையும் கூர்மையாய் சொல்லும் கவிதை.
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.