முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அவமானத்தின் உறவு



என்னை அவமானப்படுத்தியவர்கள்
மிகக் குறைவாகவே
என்னைப் பற்றி அக்கறை கொண்டிருக்கிறார்கள்
கவலைப்பட்டிருக்கிறார்கள்
யோசித்திருக்கிறார்கள்
பல பேர் என் பெயரை கூட
சரிவர அறியாதவர்கள்

அவர்கள் ஏன் என்னை
அவமானப்படுத்துகிறார்கள்
என்பதை விட
என் மீது
அன்பு கொண்டவர்கள்
வெறுப்பு பாராட்டுபவர்கள்
கவலை கொள்பவர்கள்
ஏதாவதொரு விதத்தில்
சிந்தனையில் பயன்படுத்துபவர்கள்
என்னை ஒத்த பெயர்கள் வரும் போது
ஒரு நொடி
தயங்கி மீள்பவர்கள்
ஏன் என்னை
அவமானப்படுத்துவதில்லை
என்றே வியக்கிறேன்

ஒரு நொடி அவமானப்படுத்தி விட்ட பின்
அவர்கள்
நகர்ந்து விடுகிறார்கள் எளிதில்

அவர்களுக்கு
மீண்டும் மீண்டும்
நினைவுபடுத்துகிறேன்

குற்றவுணர்வை விட
முதலில் ஆத்திரம் கொள்கிறார்கள்
பிறகு ஆச்சரியப்படுகிறார்கள்
பிறகு களைப்பாய்
பின்சாய்ந்து
புருவம் தூக்கி
தோள் தளர்த்துகிறார்கள்
பெருமூச்சு விடுகிறார்கள்
பிறகு
மிகுந்த தன்னம்பிக்கையுடன்
கண்களை நோக்குகிறார்கள்
அப்பார்வை நம்மை கடந்து போகிறது

அவமானத்தை விட
மெலிதான துர்பலமான தற்காலிகமான
வேறொரு உறவு
இருக்க முடியுமா என்று கேட்கிறேன்
ஒரு புண்ணியவானால் போதையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணைப் போல்
அவர்கள் முன் நின்று
அவர்களின் பாத்யதையை
புரிய வைக்க முயல்கிறேன்

அவமானித்தவர்கள்
அது தாம் அல்ல
அப்படியே ஆனாலும்
அந்த துர்பாக்கியத்திற்கு தாம் பொறுப்பல்ல
மேலும்
அவமானிப்பது தம் இயல்பல்ல
என்று வாதிடுகிறார்கள்

நியாயமே
ஆனாலும்
அவ்வளவு அநிச்சையான ஒரு உறவு
எவ்வளவு நிச்சயமான
காரணங்களை
தந்து விடுகிறது
யார் யார் விலகிப் போனாலும்
ஒருமுறை அவமானித்தவர்
நம் கூடவே வருகிறார்கள்

அவமானித்ததை போலவே
திரும்ப அவமானிக்கவும்
மன்னிக்கவும்
நேசிக்கவும்
உதாசினிக்கவும்
வெறுக்கவும்
நாம் உரிமை எடுத்துக் கொள்ளலாம்

அப்போது
அவமானித்தவர்களை போலவே
அவமானிக்கப்பட்டவர்களுக்கும்
இயல்பற்ற ஒன்று
எவ்வளவு எளிதாக வருகிறது
என்று புரிய வரலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...