முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மற்றொரு இனிய பயணமும் சுவையான உரையாடல்களும்



கடந்த சனிக்கிழமை (04-02-12) திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி பள்ளியில் நானும் முத்துக்கிருஷ்ணனும் உரையாற்றினோம். எனக்கு இது இரண்டாம் முறை. முத்துக்கிருஷ்ணன் ஊடகம் பற்றி நான் சிறுகதைகள் குறித்து. அந்த பள்ளியில் உள்ள இனிமையான உபசரிப்பு மற்றும் அமைதியான சூழல் ஒரு பயணியின் உல்லாசத்தை ஏற்படுத்தும். அங்குள்ள புத்திசாலியான மாணவர்கள் தொடர்ந்து இலக்கியம் படிப்பு மீது நமது நம்பிக்கையை வலுப்படுத்துவார்கள். இம்முறை பேசும் போது பெரிய கூட்டம். போன முறை கவிதை பட்டறையில் பார்த்த மாணவர்கள் அன்பாக ஆர்வமாக ஒளிதுலங்கும் கண்களுடன் கூட்டத்தின் நடுவில் இருந்து என்னை பார்த்துக் கொண்டிருந்தனர். நவீன சிறுகதைக்கான பண்புகள், பிரபலமான மேற்கோள்கள், ஏழு வகையான சிறுகதைகள் என அறிமுகப்படுத்தினேன். பின்னர் செக்கோவின் வான்கா கதையை வாசித்து உரையாடினோம். ஒன்றரை மணிநேரம் போனதே தெரியவில்லை.
கடந்த முறை பகலெல்லாம் விருந்தினர் அறையில் தனியாக அமர்ந்திருந்தேன். உள்ளே செல்போன் டவர் எடுக்காது. எந்த மனிதக் குரலும் மனித வாடையும் உணராமல் ஒரு நூதனமாக தனிமை இருக்கும். இம்முறை முத்துக்கிருஷ்ணன் கூட இருந்ததால் அவருடன் பேசி சிரித்துக் கொண்டே இருந்தேன். கல்லூரி விடுதி நினைவுகள் கிளர்வதை தடுக்க முடியவில்லை. மனதுக்கு வயதாவதில்லை என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். நன்றாக மனம் விட்டு சிரிக்க தடை நாம் வாழும் மாறாத இறுக்கமான சூழல்கள் தாம் என நினைத்துக் கொண்டேன்.
வரலாறு மற்றும் கணித ஆசிரியர்கள் முரளி மற்றும் ராதாகிருஷ்ணனை சந்தித்து போன முறை நிறுத்திய இடத்தில் இருந்து தொடர்வது போல் சரளமாக பேசிக் கொண்டிருந்தேன். முரளி தான் வாசிக்கும் நூல்கள் பற்றி சொன்னார். ராதாகிருஷ்ணன் தனக்கு ஒரு நாவல் எழுத திட்டம் உள்ளதாய் சொன்னார். எனது “கிரிக்கெட்டின் மாறும் நிறங்களை புத்தக கண்காட்சியில் வாங்கி வாசித்ததாய் சொன்னார். பொதுவாக கல்வி முறை, அதில் உள்ள ஊழல் என சுவாரசியமாக பேசினார். ஒரு அரசு உதவி பெறும் ஒரு பள்ளிக்கூடத்துக்கு externalஆக சென்றாராம். அங்கு மாணவர்கள் C++ நிரலை மனப்பாடமாய் ஒப்பிக்கிறார்களாம். ஆனால் லேபில் ஒரு கணினி கூட திறந்து பயன்படுத்தப்படாமல் உறைபிரிக்காமல் இருக்கிறதாம். புத்தம் புதுசாய் இருக்கும் கணினிகளை பார்த்து அவருக்கு வியப்பு. விசாரித்தால் கணினி ஆசிரியர்களை நியமிக்கவில்லை என்று தெரிய வந்ததாம். இப்போதைக்கு காம்ர்ஸ் வாத்தியார்கள் தாம் கணினிக்கும் பொறுப்பாம். இப்படி ஆரம்பித்து பள்ளிக்கு externalஆக வந்த உடனே ஒரு வார சாப்பாட்டுக்கான மெனு பட்டியலை அளிக்கும் நபர்கள் வரை குறிப்பிட்டு விரிவாக பேசினார். சமச்சீர் பாடத்திட்டம் மாணவர்களுக்கு மிக கவர்ச்சியாக உள்ளதாக நேரடி பயன்பாட்டு பயிற்சிகள் மிகுந்ததாக உள்ளதாக குறிப்பிட்டார். ஆனால் சற்று அதிகமாக எளிமைப்படுத்துப்படுவதாக, அதனால் தரம் தாழ்ந்து விட்டதாக விசனித்தார். மேலும் அப்பாடத்திட்டத்தின் படி பாடம் எடுக்க நிறைய உதவிக்கருவிகள் தேவைப்படுமாம். அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களே போதுமானதாக இல்லாத நிலையில் யார் கருவிகளை வாங்கப் போகிறார்கள் என்று அவநம்பிக்கை தெரிவித்தார்.
அங்குள்ள மெஸ் உணவில், குறிப்பாக பரோட்டா, நான் படித்த விடுதியின் அதே சுவை கொண்டிருந்தது. பொதுவாக விடுதி உணவு ஒரு சுவையில்லாத சுவையை கொண்டிருக்கும். ஒருவிதமாய் நாவு அதற்கு பழகிப் போய் விடும்.
அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் துளசிதாசன் ஒரு நல்ல இலக்கிய வாசகர், சமூக ஆர்வலர். அவர் எஸ்.ராவுடன் இணைந்து சிறுகதைகளை புதுமையாக கற்பிக்கும் ஒரு புது புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார். ஒரு சிறுகதை வாசிக்கப்பட்டு, நாடகமாக்கப்பட்டு, திரும்ப சொல்லப்பட்டு விளக்கப்படுவதே அந்த முறை. சிறு சிறு பிரிவுகளாய் மாணவர்களை பிரித்து ஒரே கதையில் வேறுபட்ட முறைகளில் இவ்வாறு இயங்க வைப்பார்கள். அவர் தனது புது திட்டங்களை சொல்ல சொல்ல கல்வித்துறை மீது எனக்குள்ள நம்பிக்கை மேலும் மேலும் வலுவானது. தனிநபர்களாலும் ஒரு சீரழிந்த சூழலை ஓரளவுக்கு சீர்திருத்த முடியும். முழுக்க கட்டமைப்புகளையே குற்றம் சொல்லி ஓய்வதில் பயனில்லை. எங்காவது ஓர் அணில் ஒரு சிறுகல்லை தூக்கிப் போட்டால் போதும். எதிர்காலம் நோக்கின பாலம் எழுந்து விடும்.
எஸ்.ஆர்.வி பள்ளியில் ஆண்டுமலரை பார்த்தேன். கனமான பிரம்மாண்ட இதழ். புரட்டியபோது அசோகமித்திரன் உள்ளிட்ட பல முன்னோடிகள் அங்கு வந்துள்ளதை கண்டேன். மிக நெகிழ்ச்சியாக இருந்தது. பள்ளிக்கு வந்த அனுபவத்தைக் குறிப்பாக எழுதுகையில் கூட அசோகமித்திரனின் நகைச்சுவையும் கூர்மையும் பளிச்சிடுகின்றன.
திரும்ப ஞாயிறு சென்னைக்கு திரும்பியதுமே எழுத வேண்டியவை, படிக்க வேண்டியவை, செய்ய வேண்டிய வேலைகள், சாப்பிட வேண்டிய உணவுகள், தூங்க வேண்டிய தூக்கம் என்று பரபரப்பு பழையபடி தொற்றிக் கொண்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...