Skip to main content

இந்தியாவில் ஆல்ரவுண்டர் சாத்தியமா?




இப்போதை மூன்று பேர் இருக்கிறார்கள். பதான், அஷ்வின், மற்றும் ஜடேஜா. ஆனாலும் அணித்தலைமையை பொறுத்தவரையில் இவர்கள் பந்து வீச்சாளர்கள் தாம். ஏனென்றால் நமக்கு அப்படி ஆல்ரவுண்டர்களின் பாரம்பரியம் இருந்ததில்லை. அவர்களின் அணியின் அவசியமான ஒரு பகுதியாக நாம் கருதுவதில்லை. அதனாலேயே கபில் தேவுக்கு பின் நாம் யாரையும் உருவாக்கவில்லை. அகார்க்கரும் ஜோஷியும் ராபின் சிங்கும் அப்படி வந்திருக்க வேண்டியயவர்கள். ஆனால் நாம் அவர்களை உதாசினப்படுத்தினோம்.
முதலில் இந்திய சீதோஷண நிலையில் ஆடுதளங்களில் ஆல்ரவுண்டராக இருப்பது மிக சிரமம். இங்கே பந்து வீசுவது கடின வேலை. மட்டையாடுவது கேளிக்கை. அதனால் கடின உழைப்புக்கு பதிலாக இந்தியர்கள் கேளிக்கையை தேர்கிறார்கள். அதனாலே ஆல்ரவுண்டர் என்ற கருத்தாக்கம் நமக்கு அந்நியமாக உள்ளது.
இவ்விசயத்தில் வரலாறும் முக்கியம்.

இருவகையான ஆல்ரவுண்டர்கள் உண்டு. Batting மற்றும் bowling. இங்கிலாந்து பவுலிங் ஆல்ரவுண்டர்களையும் ஆஸ்திரேலியா மட்டையாட்ட ஆல்ரவுண்டர்களையும் விளையாட வைப்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறார்கள். இயல்ஹம், ஹோலியோக், காலிங்வுட்டில் இருந்து இன்று சமீத் பட்டேல் வரை இத்தகைய வீரர்கள் இங்கிலாந்து அணியில் ஐந்து அல்லது ஆறாவது வரிசையில் ஆடுவார்கள். அவர்களை bits and pieces வீரர்கள் என்பார்கள். அதாவது இரண்டிலும் முழுமையானவர்கள் அல்ல. ஆனால் இத்தகையவர்கள் அணிக்கு ஒரு flexibility அளிப்பதால் அவர்களை அணியில் மதிப்புடன் வைத்திருக்கிறார்கள். நியுசிலாந்து முழுக்க துக்கடா ஆல்ரவுண்டர்களை நம்பின ஒரு காலம் உண்டு. ஆஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அற்புதமான பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு இது ஒரு கொள்கையாக இல்லை. ஹூப்பர், பிராவோ, ரஸல் போன்ற பலர் இருந்தாலும் மேற்கிந்திய தீவுகளும் ஆல்ரவுண்டர் விசயத்தில் ரொம்ப சீரியஸாக இருந்ததில்லை. தொண்ணூறுகளில் பொலாக், மெக்மில்லன், பொலாக், சிம்காக்ஸ், இப்போது ஏ.பி டிவில்லியர்ஸ் என முழுமையான ஆல்ரவுண்டர்களை கொண்டிருந்த ஒரே அணி தென்னாப்பிரிக்கா.

இந்திய சூழலில் ஆல்ரவுண்டர்களுக்கான இடம் உருவாக்கப்பட்டது கங்குலியின் காலத்தில். அப்போது ஸ்பின் ஆல்ரவுண்டர்களுக்கு மவுசு ஏற்பட்டது. பல மட்டையாளர்கள் பந்து வீச துவங்கினார்கள். சேப்பலின் பயிற்சியால் பதான் ஒரு நல்ல வேகவீச்சு ஆல்ரவுண்டராக பரிணமித்தார். ஆனால் அதற்குப் பின் சில வருடங்கள் நாம் வெளிநாடுகளில் ஆடியதாலும் பதான் பார்மில் இல்லாததாலும் ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் ஆடப்படவில்லை; தேவைப்படவில்லை. ஆக நாம் உலகக் கோப்பை இந்தியாவில் நடந்தது என்பதால் மட்டுமே ஜடேஜாவை ஆல்ரவுண்டராக வளர்த்தெடுத்தோம். யுவ்ராஜ் காயத்தில் இருந்து திரும்ப வேண்டும் என்று பிரார்த்தித்தோம். மட்டையாட்டத்துக்காக அல்ல, பந்து வீச்சுக்காக. அதற்குப் பின் மீண்டும் வெளிநாடுகளில் ஆட ஆரம்பித்ததும் ஆல்ரவுண்டரின் பாத்திரம் மீண்டும் தேவையா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது ஏனென்றால் நமக்கு தெளிவான நிரந்தரமான கொள்கை இல்லை என்பதே.
அஷ்வின் டெஸ்டிலும் ஒருநாளிலும் மிக நன்றாக மட்டையாடுகிறார். ஆனாலும் அவர் விலக்கப்பட்டார். பதான் சில வருடங்களுக்கு முன் அணியில் இருந்து விலக்கப்பட்ட போது அவர் மிக நன்றாக மட்டையாடி வந்தார். இங்கிலாந்து அணியில் என்றால் இந்த வீரர்கள் ஐந்து அல்லது ஆறாவது வரிசையில் கட்டாயம் ஆடியிருப்பார்கள். ஆனால் இந்தியாவில் நடக்காது. ஏனென்றால் நமக்கு ஆல்ரவுண்டர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெரிய விசயமில்லை.
இந்த மனநிலை மாற சற்று காலம் பிடிக்கும்.

சேவாக்கை அடுத்த அணித்தலைவர் ஆகலாமா?

சேவாக் இயல்பான ஒரு தலைவர் அல்ல. ஏனென்றால் சச்சினைப் போல் அவர் தனித்துவமானவர். அவருக்கு வெற்றிகரமான வழிமுறை அணியில் உள்ள அவரை விட வேறுபட்ட சற்று தரம் குறைந்த பிற வீரர்களுக்கு உதவாது. தலைவராக ஒரு தனித்தீவாக இருக்கிறார். அதே போல் ஒரு அணித்தலைவர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். மோசமான களத்தடுப்பாளரும், உடற்தகுதி கொண்டவருமான சேவாக் எப்படி கோலி, ஜடேஜா, ரெய்னாவை தலைமை தாங்க முடியும்? மேலும் அவருக்கு ஆட்டத்தின் போக்கில் மாற்றங்கள் பண்ண தெரியாது. ஒரே திட்டத்துடன் களத்துக்கு வருவார். அது சொதப்பினால் பின்னர் ஊருக்கு திரும்பும் பணத்தை தொலைத்த குழந்தை மாதிரி முழிப்பார். ஐ.பி.எல்லில் மற்றும் மே.இ தீவுகள் தொடரில் அவர் தலைமை கூட இப்படித் தான் இருந்தது. சேவாகின் தலைமை வெள்ளைக்காரர் ஸ்பூனால் தோசை சாப்பிடுவது மாதிரி. சாப்ஸ்டிக்கால் அல்வா சாப்பிடுவது மாதிரி. நியுசிலாந்து ஒருநாள் தொடரின் ஐந்து ஆட்டங்களையும் காம்பிர் மிக சிறப்பாக தலைமை தாங்கி வென்று தந்தார். அதற்கு பின் தேர்வாளர்கள் மே.இ தொடரில் சேவாகை மீண்டும் தலைவராக்கியது மிக பிற்போக்கான அசட்டுத்தனமான ஒரு முடிவு.

தோனி ஏன் மீண்டும் மீண்டும் தடை செய்யப்படுகிறார்?

தோனி தடை செய்யப்படுகிறாரா தடை வாங்குகிறாரா என்பது சற்று குழப்பமாக உள்ளது. இரண்டு முறையும் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசி தடை வாங்கியுள்ளதால் நமக்கிந்த சந்தேகம் தொடர்ந்து எழுகிறது. ஜடேஜாவுக்கு ரெண்டு ஓவர் கொடுத்திருந்தாலே பிரச்சனை முடிந்திருக்கும். ஆனால் அவர் வேண்டுமென்றே அணி மெத்தனமாக செயல்பட விட்டார். தடை வாங்கினார். ஏனென்றால் தோனிக்கு தலைமையில் முன்னிருந்த விருப்பம் இப்போதில்லை. அவரது செய்கை பரீட்சை பிடிக்காமல் குழந்தைகள் ஜுரம் வயிற்றுவலி என்று மட்டம் போடுவது போல் இது உள்ளது.
பொதுவாக அணித்தலைவர்கள் காயத்துடன் கூட ஓய்வு பெறாமல் ஆடுவார்கள். ஏனென்றால் தலைமை தாங்குவது அவ்வளவு முக்கியமாக அவர்களுக்கு இருக்கும். தேசிய அணி தனது சொந்த குடும்பமாக அவர்களுக்கு இருக்கும். தோனி கூட அப்படித் தான் முன்னர் இருந்தார். கடுமையான ஜுரத்துடன் ஆடியிருக்கிறார். உலகக்கோப்பை இறுதியின் போது அவருக்கு உடல்நலமில்லாமல் தான் இருந்தது. ஒருமுறை ரிக்கி பாண்டிங் ஓவர் ரேட்டை அதிகரிப்பதற்காக பங்களூரில் இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்டில் தனது அணி வெற்றி பெறும் நிலையில் இருந்த போது அபாயகரமாக வீசிக் கொண்டிருந்த வாட்சனை நீக்கி சுழலர்களை வீச வைத்தார். இந்தியா தோல்வியில் இருந்து தப்பித்தது. கடுமையான கண்டனங்கள் அவருக்கு எதிராக எழுந்தன. ஆனால் பாண்டிங் தடை வாங்குவதை விட அணி ஒரு ஆட்டம் தோற்பது மேல் என்று எண்ணினார். ஆனால் இன்று இந்த அவசிய தேவை தோனிக்கு இல்லை. ஏனென்றால் அணி தன்னில் இருந்து நழுவிப் போவதாய் உணர்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் அணி போல் உட்பூசல்களுடன் உள்ளது. சேவாக், சச்சின், காம்பிர் ஆகியோர் மெத்தனமானவர்கள் என்று வெளிப்படையாக விமர்சிக்கிறார். இது இந்திய கிரிக்கெட்டில் நடப்பது முதல் முறை. உலகக்கோப்பை வரை அவர் மூத்தவர்களை பொறுத்தார். இப்போது தோனி தனக்கே விசுவாசமான ஒரு அணியை உருவாக்க தெளிவாக விரும்புகிறார். அப்படி செய்வதற்கு அனுமதித்தால் அவர் தலைவராக தொடர்வார். அதுவே இந்திய அணிக்கு நல்லது அல்லாவிட்டால் இது போல் பல தமாஷான குழப்படிகளை அவர் பண்ணிக் கொண்டே இருப்பார். தோனி குழந்தை அல்ல, கிரிக்கெட்டும் வெறும் வேடிக்கை அல்ல.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...