முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவில் ஆல்ரவுண்டர் சாத்தியமா?




இப்போதை மூன்று பேர் இருக்கிறார்கள். பதான், அஷ்வின், மற்றும் ஜடேஜா. ஆனாலும் அணித்தலைமையை பொறுத்தவரையில் இவர்கள் பந்து வீச்சாளர்கள் தாம். ஏனென்றால் நமக்கு அப்படி ஆல்ரவுண்டர்களின் பாரம்பரியம் இருந்ததில்லை. அவர்களின் அணியின் அவசியமான ஒரு பகுதியாக நாம் கருதுவதில்லை. அதனாலேயே கபில் தேவுக்கு பின் நாம் யாரையும் உருவாக்கவில்லை. அகார்க்கரும் ஜோஷியும் ராபின் சிங்கும் அப்படி வந்திருக்க வேண்டியயவர்கள். ஆனால் நாம் அவர்களை உதாசினப்படுத்தினோம்.
முதலில் இந்திய சீதோஷண நிலையில் ஆடுதளங்களில் ஆல்ரவுண்டராக இருப்பது மிக சிரமம். இங்கே பந்து வீசுவது கடின வேலை. மட்டையாடுவது கேளிக்கை. அதனால் கடின உழைப்புக்கு பதிலாக இந்தியர்கள் கேளிக்கையை தேர்கிறார்கள். அதனாலே ஆல்ரவுண்டர் என்ற கருத்தாக்கம் நமக்கு அந்நியமாக உள்ளது.
இவ்விசயத்தில் வரலாறும் முக்கியம்.

இருவகையான ஆல்ரவுண்டர்கள் உண்டு. Batting மற்றும் bowling. இங்கிலாந்து பவுலிங் ஆல்ரவுண்டர்களையும் ஆஸ்திரேலியா மட்டையாட்ட ஆல்ரவுண்டர்களையும் விளையாட வைப்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறார்கள். இயல்ஹம், ஹோலியோக், காலிங்வுட்டில் இருந்து இன்று சமீத் பட்டேல் வரை இத்தகைய வீரர்கள் இங்கிலாந்து அணியில் ஐந்து அல்லது ஆறாவது வரிசையில் ஆடுவார்கள். அவர்களை bits and pieces வீரர்கள் என்பார்கள். அதாவது இரண்டிலும் முழுமையானவர்கள் அல்ல. ஆனால் இத்தகையவர்கள் அணிக்கு ஒரு flexibility அளிப்பதால் அவர்களை அணியில் மதிப்புடன் வைத்திருக்கிறார்கள். நியுசிலாந்து முழுக்க துக்கடா ஆல்ரவுண்டர்களை நம்பின ஒரு காலம் உண்டு. ஆஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அற்புதமான பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு இது ஒரு கொள்கையாக இல்லை. ஹூப்பர், பிராவோ, ரஸல் போன்ற பலர் இருந்தாலும் மேற்கிந்திய தீவுகளும் ஆல்ரவுண்டர் விசயத்தில் ரொம்ப சீரியஸாக இருந்ததில்லை. தொண்ணூறுகளில் பொலாக், மெக்மில்லன், பொலாக், சிம்காக்ஸ், இப்போது ஏ.பி டிவில்லியர்ஸ் என முழுமையான ஆல்ரவுண்டர்களை கொண்டிருந்த ஒரே அணி தென்னாப்பிரிக்கா.

இந்திய சூழலில் ஆல்ரவுண்டர்களுக்கான இடம் உருவாக்கப்பட்டது கங்குலியின் காலத்தில். அப்போது ஸ்பின் ஆல்ரவுண்டர்களுக்கு மவுசு ஏற்பட்டது. பல மட்டையாளர்கள் பந்து வீச துவங்கினார்கள். சேப்பலின் பயிற்சியால் பதான் ஒரு நல்ல வேகவீச்சு ஆல்ரவுண்டராக பரிணமித்தார். ஆனால் அதற்குப் பின் சில வருடங்கள் நாம் வெளிநாடுகளில் ஆடியதாலும் பதான் பார்மில் இல்லாததாலும் ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் ஆடப்படவில்லை; தேவைப்படவில்லை. ஆக நாம் உலகக் கோப்பை இந்தியாவில் நடந்தது என்பதால் மட்டுமே ஜடேஜாவை ஆல்ரவுண்டராக வளர்த்தெடுத்தோம். யுவ்ராஜ் காயத்தில் இருந்து திரும்ப வேண்டும் என்று பிரார்த்தித்தோம். மட்டையாட்டத்துக்காக அல்ல, பந்து வீச்சுக்காக. அதற்குப் பின் மீண்டும் வெளிநாடுகளில் ஆட ஆரம்பித்ததும் ஆல்ரவுண்டரின் பாத்திரம் மீண்டும் தேவையா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது ஏனென்றால் நமக்கு தெளிவான நிரந்தரமான கொள்கை இல்லை என்பதே.
அஷ்வின் டெஸ்டிலும் ஒருநாளிலும் மிக நன்றாக மட்டையாடுகிறார். ஆனாலும் அவர் விலக்கப்பட்டார். பதான் சில வருடங்களுக்கு முன் அணியில் இருந்து விலக்கப்பட்ட போது அவர் மிக நன்றாக மட்டையாடி வந்தார். இங்கிலாந்து அணியில் என்றால் இந்த வீரர்கள் ஐந்து அல்லது ஆறாவது வரிசையில் கட்டாயம் ஆடியிருப்பார்கள். ஆனால் இந்தியாவில் நடக்காது. ஏனென்றால் நமக்கு ஆல்ரவுண்டர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெரிய விசயமில்லை.
இந்த மனநிலை மாற சற்று காலம் பிடிக்கும்.

சேவாக்கை அடுத்த அணித்தலைவர் ஆகலாமா?

சேவாக் இயல்பான ஒரு தலைவர் அல்ல. ஏனென்றால் சச்சினைப் போல் அவர் தனித்துவமானவர். அவருக்கு வெற்றிகரமான வழிமுறை அணியில் உள்ள அவரை விட வேறுபட்ட சற்று தரம் குறைந்த பிற வீரர்களுக்கு உதவாது. தலைவராக ஒரு தனித்தீவாக இருக்கிறார். அதே போல் ஒரு அணித்தலைவர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். மோசமான களத்தடுப்பாளரும், உடற்தகுதி கொண்டவருமான சேவாக் எப்படி கோலி, ஜடேஜா, ரெய்னாவை தலைமை தாங்க முடியும்? மேலும் அவருக்கு ஆட்டத்தின் போக்கில் மாற்றங்கள் பண்ண தெரியாது. ஒரே திட்டத்துடன் களத்துக்கு வருவார். அது சொதப்பினால் பின்னர் ஊருக்கு திரும்பும் பணத்தை தொலைத்த குழந்தை மாதிரி முழிப்பார். ஐ.பி.எல்லில் மற்றும் மே.இ தீவுகள் தொடரில் அவர் தலைமை கூட இப்படித் தான் இருந்தது. சேவாகின் தலைமை வெள்ளைக்காரர் ஸ்பூனால் தோசை சாப்பிடுவது மாதிரி. சாப்ஸ்டிக்கால் அல்வா சாப்பிடுவது மாதிரி. நியுசிலாந்து ஒருநாள் தொடரின் ஐந்து ஆட்டங்களையும் காம்பிர் மிக சிறப்பாக தலைமை தாங்கி வென்று தந்தார். அதற்கு பின் தேர்வாளர்கள் மே.இ தொடரில் சேவாகை மீண்டும் தலைவராக்கியது மிக பிற்போக்கான அசட்டுத்தனமான ஒரு முடிவு.

தோனி ஏன் மீண்டும் மீண்டும் தடை செய்யப்படுகிறார்?

தோனி தடை செய்யப்படுகிறாரா தடை வாங்குகிறாரா என்பது சற்று குழப்பமாக உள்ளது. இரண்டு முறையும் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசி தடை வாங்கியுள்ளதால் நமக்கிந்த சந்தேகம் தொடர்ந்து எழுகிறது. ஜடேஜாவுக்கு ரெண்டு ஓவர் கொடுத்திருந்தாலே பிரச்சனை முடிந்திருக்கும். ஆனால் அவர் வேண்டுமென்றே அணி மெத்தனமாக செயல்பட விட்டார். தடை வாங்கினார். ஏனென்றால் தோனிக்கு தலைமையில் முன்னிருந்த விருப்பம் இப்போதில்லை. அவரது செய்கை பரீட்சை பிடிக்காமல் குழந்தைகள் ஜுரம் வயிற்றுவலி என்று மட்டம் போடுவது போல் இது உள்ளது.
பொதுவாக அணித்தலைவர்கள் காயத்துடன் கூட ஓய்வு பெறாமல் ஆடுவார்கள். ஏனென்றால் தலைமை தாங்குவது அவ்வளவு முக்கியமாக அவர்களுக்கு இருக்கும். தேசிய அணி தனது சொந்த குடும்பமாக அவர்களுக்கு இருக்கும். தோனி கூட அப்படித் தான் முன்னர் இருந்தார். கடுமையான ஜுரத்துடன் ஆடியிருக்கிறார். உலகக்கோப்பை இறுதியின் போது அவருக்கு உடல்நலமில்லாமல் தான் இருந்தது. ஒருமுறை ரிக்கி பாண்டிங் ஓவர் ரேட்டை அதிகரிப்பதற்காக பங்களூரில் இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்டில் தனது அணி வெற்றி பெறும் நிலையில் இருந்த போது அபாயகரமாக வீசிக் கொண்டிருந்த வாட்சனை நீக்கி சுழலர்களை வீச வைத்தார். இந்தியா தோல்வியில் இருந்து தப்பித்தது. கடுமையான கண்டனங்கள் அவருக்கு எதிராக எழுந்தன. ஆனால் பாண்டிங் தடை வாங்குவதை விட அணி ஒரு ஆட்டம் தோற்பது மேல் என்று எண்ணினார். ஆனால் இன்று இந்த அவசிய தேவை தோனிக்கு இல்லை. ஏனென்றால் அணி தன்னில் இருந்து நழுவிப் போவதாய் உணர்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் அணி போல் உட்பூசல்களுடன் உள்ளது. சேவாக், சச்சின், காம்பிர் ஆகியோர் மெத்தனமானவர்கள் என்று வெளிப்படையாக விமர்சிக்கிறார். இது இந்திய கிரிக்கெட்டில் நடப்பது முதல் முறை. உலகக்கோப்பை வரை அவர் மூத்தவர்களை பொறுத்தார். இப்போது தோனி தனக்கே விசுவாசமான ஒரு அணியை உருவாக்க தெளிவாக விரும்புகிறார். அப்படி செய்வதற்கு அனுமதித்தால் அவர் தலைவராக தொடர்வார். அதுவே இந்திய அணிக்கு நல்லது அல்லாவிட்டால் இது போல் பல தமாஷான குழப்படிகளை அவர் பண்ணிக் கொண்டே இருப்பார். தோனி குழந்தை அல்ல, கிரிக்கெட்டும் வெறும் வேடிக்கை அல்ல.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...