முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அலைச்சல்




BSNL broadband தொடர்பை துண்டிப்பதற்காக விசாரித்தால் தொலைபேசியை எடுத்துச் சென்று BSNL அலுவலகத்தில் கொடுத்து ஒரு closure விண்ணப்பம் கொடுத்தால் போதும் என்றார்கள். ஆக தொலைபேசியை சுமந்து கொண்டு போனேன்.
அங்கு சொன்னார்கள்: “போனை மட்டுமே நாங்க வாங்குவோம். விண்ணப்பம் நீங்க தரமணி BSNLக்கு போய்த் தான் கொடுக்கணும். சரி தான் என்று கிண்டியில் இருந்து தரமணிக்கு போனேன். அங்கு சொன்னார்கள் முதலில் பில் தொகையை கட்டி விடுங்கள் என்று. சரி கட்டுகிறேன் என்றால் பில் இன்னும் வரவில்லை. இரண்டு நாள் கழித்து பில் வந்ததும் வந்து கட்டி விட்டு போனை கிண்டி கிளைக்கு கொண்டு கொடுங்க என்று. இது கூட பரவாயில்லை, அங்கு கவுண்டரில் இருக்கும் மாமி “இப்பிடி போனை தூக்கீட்டு எல்லாம் அலையாதீங்க“ என்று நக்கல் வேறு பண்ணுகிறார்.

இப்பிடித் தான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் PhD விண்ணப்பிப்பது சம்மந்தமாய் விசாரித்தால் கீழ்த்தளத்தில் ஒரு இடத்துக்கு அனுப்பினார்கள். அங்கு சென்றால் இங்கில்லை மேலே D32 என்று ஏதோ ஒரு அறைக்கு போக சொன்னார்கள். அதை விசாரித்து நெருங்கும் முன் ஒரு பரோபகாரி வந்து PhD தானே இப்பிடியே திரும்பி கீழே ஸ்டெப்ஸ் தெரியும் இறங்கிப் போங்க என்று நன்றாக தன்னம்பிக்கை தெரிய சொன்னார். சரி என்று ஒரு தூசு மண்டிய அவ்வழியே ஏதோ கல்கி நாவல் ஒற்றன் போல் இறங்கி சென்றால் இதோ முதலில் நான் போன அதே இடம் வருகிறது. “உள்ளே போய் என்ன சார் யார்கிட்ட கேட்டாலும் உங்க கிட்டயே அனுப்பிறாங்க. ஆனால் நீங்க PhD இங்க இல்லேண்ணு அடம் பிடிக்கிறீங்க“ என்று அழாத குறையாக கேட்டேன். அவர் “இங்க நாங்க அட்மிஷனுக்கு பிறகான விசயங்களை தான் பார்ப்போம். ரெஜிஸ்டிரேஷன் வரை முதல் மாடிக்கு தான் போகணும். உங்களை மாதிரி நிறைய பேரை இப்படி தப்பா வழி சொல்லி இங்கே அனுப்பீடறானுங்க. என்ன செய்ய?. பிறகு மீண்டும் மலையேறி சரியான அலுவலகத்தை தேடிக் கண்டுபிடித்தால் அதன் வாயிலில் PhD சம்மந்தப்பட்ட எந்த அறிவிப்போ சிறு குறிப்போ கூட இல்லை. பல்கலைக்கழக உள்வட்டங்களில் மட்டும் தான் இந்த அலுவலக மார்க்கம் ரகசிய தகவலாக உலவுகிறது போலும். வெளியே யாரிடம் கேட்டாலும் கீழ்த்தளத்துக்கு அனுப்பி விடுகிறார்கள்.
இப்பிடி அரசாங்க விசயங்கள் எதுவென்றாலும் வால் ஓரிடத்திலும் தலை ஓரிடத்திலும் இருக்கிறது. அறிவிப்புப் பலகைகள் வால் இடத்தில் இருப்பது தான் விவகாரமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...