முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அலைச்சல்




BSNL broadband தொடர்பை துண்டிப்பதற்காக விசாரித்தால் தொலைபேசியை எடுத்துச் சென்று BSNL அலுவலகத்தில் கொடுத்து ஒரு closure விண்ணப்பம் கொடுத்தால் போதும் என்றார்கள். ஆக தொலைபேசியை சுமந்து கொண்டு போனேன்.
அங்கு சொன்னார்கள்: “போனை மட்டுமே நாங்க வாங்குவோம். விண்ணப்பம் நீங்க தரமணி BSNLக்கு போய்த் தான் கொடுக்கணும். சரி தான் என்று கிண்டியில் இருந்து தரமணிக்கு போனேன். அங்கு சொன்னார்கள் முதலில் பில் தொகையை கட்டி விடுங்கள் என்று. சரி கட்டுகிறேன் என்றால் பில் இன்னும் வரவில்லை. இரண்டு நாள் கழித்து பில் வந்ததும் வந்து கட்டி விட்டு போனை கிண்டி கிளைக்கு கொண்டு கொடுங்க என்று. இது கூட பரவாயில்லை, அங்கு கவுண்டரில் இருக்கும் மாமி “இப்பிடி போனை தூக்கீட்டு எல்லாம் அலையாதீங்க“ என்று நக்கல் வேறு பண்ணுகிறார்.

இப்பிடித் தான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் PhD விண்ணப்பிப்பது சம்மந்தமாய் விசாரித்தால் கீழ்த்தளத்தில் ஒரு இடத்துக்கு அனுப்பினார்கள். அங்கு சென்றால் இங்கில்லை மேலே D32 என்று ஏதோ ஒரு அறைக்கு போக சொன்னார்கள். அதை விசாரித்து நெருங்கும் முன் ஒரு பரோபகாரி வந்து PhD தானே இப்பிடியே திரும்பி கீழே ஸ்டெப்ஸ் தெரியும் இறங்கிப் போங்க என்று நன்றாக தன்னம்பிக்கை தெரிய சொன்னார். சரி என்று ஒரு தூசு மண்டிய அவ்வழியே ஏதோ கல்கி நாவல் ஒற்றன் போல் இறங்கி சென்றால் இதோ முதலில் நான் போன அதே இடம் வருகிறது. “உள்ளே போய் என்ன சார் யார்கிட்ட கேட்டாலும் உங்க கிட்டயே அனுப்பிறாங்க. ஆனால் நீங்க PhD இங்க இல்லேண்ணு அடம் பிடிக்கிறீங்க“ என்று அழாத குறையாக கேட்டேன். அவர் “இங்க நாங்க அட்மிஷனுக்கு பிறகான விசயங்களை தான் பார்ப்போம். ரெஜிஸ்டிரேஷன் வரை முதல் மாடிக்கு தான் போகணும். உங்களை மாதிரி நிறைய பேரை இப்படி தப்பா வழி சொல்லி இங்கே அனுப்பீடறானுங்க. என்ன செய்ய?. பிறகு மீண்டும் மலையேறி சரியான அலுவலகத்தை தேடிக் கண்டுபிடித்தால் அதன் வாயிலில் PhD சம்மந்தப்பட்ட எந்த அறிவிப்போ சிறு குறிப்போ கூட இல்லை. பல்கலைக்கழக உள்வட்டங்களில் மட்டும் தான் இந்த அலுவலக மார்க்கம் ரகசிய தகவலாக உலவுகிறது போலும். வெளியே யாரிடம் கேட்டாலும் கீழ்த்தளத்துக்கு அனுப்பி விடுகிறார்கள்.
இப்பிடி அரசாங்க விசயங்கள் எதுவென்றாலும் வால் ஓரிடத்திலும் தலை ஓரிடத்திலும் இருக்கிறது. அறிவிப்புப் பலகைகள் வால் இடத்தில் இருப்பது தான் விவகாரமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.