Skip to main content

வேட்டை நாயும் காவல் நாயும்



கழிப்பறைக் கதவை
மூக்கால்
தள்ளித் திறந்து
பார்த்து விட்டுப் போகிறது
நாய்.
எப்போதும்
இந்த தன்னம்பிக்கை
என்னை ஆச்சரியப்படுத்தாமல் இருந்ததில்லை.

எவ்வளவு தான்
சமாதானப்படுத்தினாலும்
தன் கோபத்தை, எரிச்சலை
விட்டு அமைதியாக
மறுக்கிறது நாய்.
வருத்தப்படுகையில் கவனிக்கையில் யோசிக்கையில்
தோன்றும்
அதன் முகச்சுருக்கங்கள்
ஒவ்வொரு தடவை எண்ணும் போதும்
மாறுபடுகின்றன.

ஒரு அரசியல் விவாதத்தில் டி.வி ஒருங்கிணைப்பாளனைப் போல
தன் கோபத்தின் மீது ஆவேசத்தின் மீது தர்க்கத்தின் மீது
அபார கட்டுப்பாடுண்டு
அதற்கு
ஒரு பிரச்சனை என்பது
அதைத் தான் பிரச்சனை என்று
கருதும் வரையில் தான்.

கோபப்பட்டு கொந்தளிக்க துவங்கிய பின்
பிரச்சனை முக்கியமே அல்ல
பல சமயங்களில்
அது நாலா பக்கமும் ஓடிக் குரைக்கும் முன்
பிரச்சனை முடிந்தே போகிறது
அப்போது தான்
அதன் முகச்சுருக்கங்கள் ஒவ்வொன்றாய்
அதிகமாகின்றன.
பிறகு அது
களைத்து படுத்தபடி
தன் முகச்சுருக்கங்களைப் பற்றி
கவலைப்பட ஆரம்பிக்கிறது.

என் நாய் சரியாய்
தூங்குவதே இல்லை
என மருத்துவரிடம் காண்பித்தேன்.
அவர் ஒரு இருட்டறையில் கிடத்தி
போர்வையை போர்த்தினதும்
உடனே கண்ணை மூடியது.
டாக்டர் சுட்டினார்,
“பாருங்கள் நன்றாக தூங்குகிறது”.
ஒரு சிறு சலனம்,
கண் விழித்து பாய எத்தனித்தது.
டி.வி விவாதத்தில் ஒருவர்
சற்று உணர்ச்சிவசப்பட்டு
குரலை உயர்த்தி விட்டார்
என அதற்கு
புரிய வைக்க முடியவில்லை.
முறுக்கப்பட்ட நாண் போல்
அதன் உடல் அதிர
வாயை மூடியவாறே உறுமிக் கொண்டிருந்தது.

நரம்புகளை அமைதிப்படுத்த
மருந்தூட்டி விட்டு
நாங்கள் முன்னறைக்கு வந்து டி.வி பார்த்தோம்.
நான்கு பேர் மாறி மாறி
குதறிக் கொண்டிருந்தார்கள்
அவர்களை “அப்படியே இருங்கள்” என்று
நிறுத்தி விட்டு “விளம்பர இடைவேளை” சொன்னார்கள்.
“காவல் நாய். அதனால் தான் எப்போதும் பதற்றம்”,
மருத்துவர் சொன்னார்.
நான் கேட்டேன்
“டாக்டர் காவல் நாய்க்கும் வேட்டை நாய்க்கும் என்ன வித்தியாசம்?”
“இலக்கு தொலைவில் இருந்தால் வேட்டை நாய்
அருகில் என்றால் காவல் நாய்”,
என்றார் அவர்.

டி.வி விவாதம் துவங்கியது
விட்ட இடத்தில் இருந்து.
இடது பக்கம் இருப்பவர்
வலது பக்கம் இருப்பவரை தாக்கினார்
ஆனால் வலது பக்கம் இருப்பவர்
இடதுபக்க ஆளை ஆதரித்தார்
ஒருங்கிணைப்பாளர்
எங்களைப் போல் அல்லாது
எந்த குழப்பமும் இன்றி இருந்தார்;
இன்னும் இன்னும்
எதுவரை போகும் என்று
அவர் முயன்று கொண்டிருந்தார்
ஒரு கொலைக்களத்தில் இருந்து அகல விரும்பாத கொலைகாரனைப் போல்.

மின்னும் கண்களுடன்
அப்போது
நாய்
மெல்லிய தடுமாற்றத்துடன்
இருட்டில் இருந்து வெளியேறி
வாசலை அடைந்தது.
எங்களை சில நொடிகள் பார்த்து விட்டு
சட்டென்று கண்களை மூடி
படுத்தது.
முகத்தில்
ஒரு சுருக்கம் கூட
இல்லை.
நிகழ்ச்சி முடிவுற்றது.
அடுத்த விவாதம்
ஆரம்பிக்கும் முன்னான இடைவேளை.
“எவ்வளவு அழகாக தூங்குகிறது பாருங்கள்”,
டாக்டர் சொன்னார்.
நான் ஆமோதித்தேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...