Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தர்மபுரி கலவரம் : கொள்ளையுடன் நடந்த ஜாதிவெறி துவம்சம்.





[தர்மபுரி ஜாதிக்கொள்ளை குறித்த உண்மை அறியும் குழுவின் (கம்பீரன், யாக்கன், யாழன் ஆதி, கு. உமாதேவி, ஸ்ரீதர் கண்ணன், நீரை.மகேந்திரன்) அறிக்கை.]

“எப்படிங்கன்னா நாங்க ஒண்ணா படிப்போம்; எங்க பிரண்ட்ஸுங்க அம்மாங்கதான் அந்தச் சேரிக்காரனுங்க வீட்டயெல்லாம் கொளுத்துங்கடான்னு கெட்ட கெட்ட வார
்த்தாயா திட்டினு வந்தாங்க;எங்கூட படிக்கிற பசங்க எல்லாம் வந்து எங்கவீட்ட கொளுத்துனாங்க, பேச்சுப்போட்டியில நான் வாங்குன ப்ரைஸ் சர்டிபிக்கேட் எல்லாம் எரிஞ்சி போச்சு அதோ அந்த கொல்லையில நின்னுட்டுதான் நாங்க எல்லாத்தையும் பாத்தோம் .இப்ப எப்படி போய் ஸ்கூல்ல ஒண்ணா படிப்போம்”
- விசாலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ,9ம் வகுப்பு மாணவி,
அண்ணாநகர், தர்மபுரி ஜாதிக் கொள்ளையில் பாதிக்கப்பட்டவர்

கடந்த நவம்பர் 7, 2012 அன்று தர்மபுரி மாவட்டம், தர்மபுரி ஊராட்சியைச் சேர்ந்த நத்தம் காலனி. கொண்டாம்பட்டி ,அண்ணாநகர், ஆகிய பகுதிகளில் ஜாதி வெறியுடன் தலித் மக்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்டு அவற்றை சூரையாடி கொளுத்தி அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து ஜாதிவெறி வன்னியர்களால் நடத்தப்பட்ட அட்டூழியம் ஈழத்தில் தமிழர்கள் மேல் சிங்களவர்களால் நடத்தப்பட்டதைவிட கொடுமையானது. 250க்கும் மேற்பட்ட வீடுகள் மீண்டும் வாழமுடியாத இடங்களாக மாறியுள்ளன.

இத்தகைய தாக்குதலை ஜாதிமோதல் என்றும் ஏதோ இரண்டு மூன்று குடிசைகள் கொளுத்தப்பட்டது என்றும் பொதுபுத்தி இதழ்கள் செய்தி வெளியிடுயிடுகின்றன. அவை முற்றிலும் தவறானவை. இது ஜாதிமோதல் அல்ல. இரண்டு ஜாதிகளும் கைகலப்பில் ஈடுபட்டிருந்தால் அது ஜாதிமோதல்.ஆனால் இது ஆதிக்க ஜாதியினரின் திட்டமிடப்பட்ட தாக்குதல். திருப்பி அடிக்க ஆட்கள் இல்லாத தலித் பகுதியில் கனத்த ஆயுதங்களுடனும் பெட்ரோல் பாம்களுடனும் புகுந்த 1000க்கும் மேற்பட்ட வன்னியர்கள் அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் துரத்தி அடித்து அவர்களின் வீட்டைக் கொள்ளையிட்டு கொளுத்தி அழித்த கொடூரச்செயல்திட்டம்.

தாக்குதலுக்கானக் காரணம்

இதற்குக் காரணத்தை ஒரு கலப்புத்திருமணத்தின்மீது போட்டிருக்கிறார்கள் அவ்வளவுதான். திவ்யா என்னும் வன்னியர் சமூகப் பெண்ணும் இளவரசன் என்னும் தலித் இளைஞனும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு நாற்பது நாட்கள் ஆகின்றன. அவர்களைப் பிரித்துவிட வேண்டும் என எத்தனிக்கிறது ஆதிக்க வன்னிய சமூகம். அதற்கு வன்னிய அமைப்புகளும் துணை போயிருக்கின்றன.

திருமணம் செய்துகொண்டவர்களைப் பிரித்துவிட கட்டளையிட்ட வன்னிய சாதியினர் அது நடக்காமல் போனதால் திவ்யாவின் அப்பா திரு.நாகராஜ் அவர்கள் கடந்த 7ம் தேதி தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லி. வன்னியர்கள் இப்படி ஒரு தாக்குதலை அரங்கேற்றிவிட்டனர்.

திவ்யாவுக்கும் இளவரசனுக்கும் திருமணம் நடந்து 40 நாட்கள் ஆகிவிட்டன. திரு.நாகராஜ் அவர்கள் தலித் மக்களின் மீது அன்புகொண்டவர். ‘எம்மகதான் தப்பு பண்ணிட்டா அவங்களபோய் எதுவும் பண்ணிடாதீங்க’ என்று சொல்லியிருக்கிறார். அவர் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்பட்ட அன்று தன் மகளை சமாதானப்படுத்தி அழைத்துவர அவருடைய மனைவி சென்றுவிட நாகராஜ் அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. அவருடையப் பிணத்தை வைத்துக்கொண்டு சாலை மறியல் செய்யப்பட்டபோதுதான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

தாக்குதல் நடந்த விதம்

இளவரசன் இருந்த நத்தம் காலனிதான் தாக்குதலுக்கு இலக்கான முதல் தலித் பகுதி. நத்தம் காலனி வழியாகத்தான் திவ்யாவின் வாழிடமான வன்னியர்கள் வாழும் செல்லங்கொட்டாயிலிருந்து வரவேண்டும். நாகராஜின் பிணத்தை வீட்டிலிருந்து அந்த வழியாகத்தான் கொண்டுவந்து தர்மபுரி திருப்பத்தூர் முக்கிய சாலையை மறித்து சாலை மறியல் நடைபெற்றிருக்கிறது. அப்படி வரும்போதே இளவரசனின் வீடு அடித்து நொறுக்கப்பட்டு தீவைத்துக்கொளுத்தப்பட்டது. வீட்டிலிருக்கும் அனைத்துப் பொருட்களும் சூரையாடப்பட்டது. உணவுப் பொருட்கள் எடுத்து வெளியில் வீசப்பட்டிருக்கின்றன. துணிகள் எல்லாம் எடுத்துப் போடப்பட்டு பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டிருக்கிறது. அதுதான் பிரச்சினைக்குரியவர்களின் வீடு கோபத்தில் வன்னியர்கள் இப்படி செய்கிறார்கள் என்று எண்ணி நத்தம் காலனியில் இருந்தவர்கள் தற்காப்பு முயற்சிகள் ஏதும் செய்துகொள்ளாமல் இருந்திருக்கின்றனர். இது நடக்கும்போது சுமார் 4.30 மணி.

பிணத்தை வைத்துக்கொண்டு 50 பேர்தான் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதற்குள் நத்தம் காலணி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி ஆகிய தலித் பகுதிகளுக்கு வடக்கே சீராம்பட்டியில் பெரிய புளியமரம் ஒன்று மரம் அறுக்கும் எந்திரத்தால் அறுக்கப்படுகிறது. தெற்கே எஸ்.கொட்டாவூரில் ஒரு மரம் அறுக்கப்பட்டு சாலையின் குறுக்கே தள்ளப்படுகிறது. இருபுறமும் எந்த வாகனுமும் வர முடியாத சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது.

ஆனால் சுற்றுவட்டத்திலிருக்கும் வன்னியர்கள் பல ஊர்களிலிருந்து வந்து ஏற்கெனவே திரண்டு இருந்திருக்கின்றனர். சாலை மறியல் நடக்கும்போதே ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர்கள் பெட்ரோல் குண்டுகள்,சம்மட்டிகள், கடப்பாரைகள் தலித்துகள் வாழும்பகுதியான நத்தம் காலனியில் நுழைந்து வீடுகளைத் தாக்குகிறார்கள். அந்த நேரத்தில் குழந்தைகள் பள்ளிகளிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கின்றனர். 60க்கும் மேற்பட்ட பெண்கள் அருகில் இருக்கும் கொல்லையில் நிலக்கடலைப் பறிப்பதற்காகச் சென்றிருக்கின்றனர்.

முதல் வீடு தாக்கப்படுகிறது. கட்டுக்கற்களைப் பயன்படுத்தி வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே செல்கிறார்கள். உள்ளிருக்கும் பீரோதான் அவர்களின் முதல் இலக்கு. அதை உடைத்துத் துணிகளை வெளியெ எடுத்து போடுகின்றனர். லாக்கரை உடைத்து உள்ளிருக்கும் நகைகளை எடுத்துக்கொள்கின்றனர். பணமிருப்பின் பணத்தை எடுத்துக்கொள்கின்றனர். பத்திரங்கள், குழந்தைகள் படிக்கும் புத்தகங்கள், கல்விச்சான்றிதழ்கள்,ரேஷன் கார்டுகள் என எல்லாவற்றையும் எடுத்து வெளியே இருக்கும் துணி அல்லது கட்டிலின்மேல் போட்டுவிட்டு கையில் வைத்திருக்கும், பெட்ரோல் நிறைந்த, நன்றாக அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் ஓட்டைப் போட்டு வெளியே இருக்கும் எல்லா துண்மணி மற்றும் ஆவணங்கள்மீது பெட்ரோலைப் பீச்சி அடித்து நனைத்துவிட்டு வெளியே வந்து பெட்ரோல் குண்டுகளைக் கொளுத்தி அந்த வீட்டினுள் வீச அனைத்தும் தீ பிடித்து எரிகின்றது பெட்ரோல் குண்டுகள் வெடித்து மேலும் தீ பரவ வீட்டினுள் இருக்கும் எல்லாமே தீக்கிரையாகிறது.

இந்த முறையைத் தான் அனைத்து வீடுகளுக்கும் ஜாதிவெறி வன்னியர்கள் நிகழ்த்தி இருக்கின்றனர்.

சேட்டு (60) அவர்கள் கூறும்போது “இத்தகையத் தாக்குதல் இதுவரை நடந்ததில்லை. இதுதான் முதல் முறை. அவர்கள் அந்த வீட்டைக் கொளுத்தும்போது நான் இந்தவீட்டில் கட்டிலுக்கு அடியில் குழந்தைகளை வைத்துக்கொண்டு மறைந்திருந்தேன். அந்த வீட்டுக்காரரான் ஜெயராமன் தீயை அணைக்க முற்பட்ட போது அவரையும் தாக்கிவிடுவார்களோ என பயந்து அவர் ஓடிவிட்டார். அடுத்து என்னுடைய வீட்டில் பக்கத்தை அறையை அடித்துக்கொண்டிருக்கும்போது குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு நானும் தப்பித்து விட்டேன். அந்த ஜெயராமனின் பி.சி. ஜாதியைச் சேர்ந்த நண்பர்கள்தான் ‘இதுதான் ஜெயராமன் வீடு கொளுத்துங்க’ என்று சொல்லி கொளுத்தினார்கள்.” என்றார்.

அவருடைய மகன் காளியப்பன் பெங்களூரில் பழையபேப்பர்கள் விற்கும் கடை வைத்திருக்கிறார். அங்கு உழைத்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அவர் லாக்கரில் வைத்திருந்த 2 லட்சம் பணமும் 22 சவரன் நகையும் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன.

இப்படி எல்லா வீடுகளும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. பொடா பழனிச்சாமி வீட்டில் புகுந்து அங்கேயும் கொள்ளையிட்டு அவருடைய வண்டியைக் கொளுத்திவிட்டு சென்றிருக்கின்றனர். 5 சவரன் நகை கொள்ளையிடப்பட்டிருக்கிறது. வீட்டில் என்னென்னப் பொருட்கள் இருந்ததோ அனைத்தும் எரிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பெரியவர் அம்மாசி(60) திருக்க அது தெரியாமல் அவர் படுத்திருந்த வீடு கொளுத்தப்பட்டு தீப்பிடித்து எரிய அவர் கத்த ஆரம்பித்திருக்கிறார். உடனே அவரை வெளியே எடுத்துப் போட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

குழந்தைகள் வீடுகளிலிருந்து காடு கழனி வழியாக ஓடியிருக்கின்றனர். பக்கத்து ஊரான மாரவாடி மற்றும் மறைவிடங்களுக்குச் சென்றி விட்டிருக்கின்றனர். தீ எரிவதையும் வீடுகள் அடித்து நொறுக்குவதைப் பார்த்தும் குழந்தைகள் பயந்த மனநிலையிலேயே இருக்கின்றனர். அவர்களுடைய பாடபுத்தகங்கங்கள் எரிவதைப் பார்த்து அவர்கள் தேம்பி அழுது ஏங்கிப் போயிருக்கின்றனர்

பாட்டில்களில் செய்யப்பட்ட குண்டுகள் வெடித்துச்சிதறியிருக்கின்றன. வன்முறைக் கும்பலில் பெண்களும் வந்திருக்கின்றனர். அவர்கள் ஒரு குழந்தையை அடித்து விரட்டி இருக்கின்றனர். வன்னிய இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அந்தக் கும்பலில் வந்திருக்கின்றனர். தன் சக மாணவ மாணவிகளின் வீடுகளைக் கொளுத்தியிருக்கின்றனர்.

கொளுத்தப்பட்ட பிறகு கும்பல் அடுத்த இடத்திற்குச் செல்ல மறைந்திருந்த தலித் பெண்கள் அதை அணைக்க செல்ல திரும்பி வந்து அவர்களை விரட்டியிருக்கின்றனர். தண்ணீர் இருந்தால்தானே நீங்கள் அணைக்கிறீங்க என்று சொல்லி இருக்கின்ற தண்ணீர் டேங்குகளை எல்லாம் அவர்கள் உடைத்திருக்கிறார்கள்.

இப்படி நத்தம் காலனியில் இருக்கும் எல்லாவற்றையும் கொள்ளையிட்டுவிட்டு கொளுத்திவிட்டு அவர்கள் பக்கத்திலிருக்கும் அண்ணா நகருக்குள் புகுந்து தலித் வீடுகளைக் கொளுத்தி அதே போல செய்திருக்கின்றனர், அங்கிருக்கும் ஜோசப் என்பவர் வீடுதான் முற்றும்முழுதாக அழிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய வீட்டிலிருந்த எல்லாமே அழிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் போட்டிருக்கும் உடுப்பைத் தவிர அவர்களுக்கு வேறு ஒன்றும் கிடையாது. அவருடைய வீட்டின் இரும்புகேட்டை அவர்கள் அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்று சாலையில் பேட்டிருக்கின்றனர். அதைத் தூக்க சுமார் 100 பேராவது வேண்டும். அவ்வளவு பெரிய கேட் அது.

அந்த ஊரை முடித்துக்கொண்டு கொண்டாம்பட்டிக்குச்சென்று இதே மாதிரியான கொள்ளையை முடித்திருக்கின்றனர்.

ஒவ்வொரு வீட்டிலும் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. துணிகள் இல்லை. பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. அதன் மதிப்பு அரசாங்காத்தால் சரியாகக் கணக்கிடப்படவில்லை.அண்ணாநகர் ஜோசப் அவர்கள் வீட்டில் மட்டும் 60 சவரன் நகை கொள்ளை போயிருக்கிறது. லட்சக்கணக்கான பணம் இல்லாமல் போயிருக்கிறது.

எனவே ஒரு வீட்டுக்கு 5 சவரன் என சராசரியாக வைத்துக்கொண்டால் 260 வீடுகள் 1300 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய்கள் சொல்லலாம்.

கண்டறிந்தவைகள்

1. கலப்புத்திருமணம் செய்துகொண்ட இளவரசன் – திவ்யா ஆகியோருக்குத் திருமணம் நடந்து 40 நாட்களுக்குப் பிறகுதான் வன்னிய சமூகத்தை சேர்ந்த திவ்யாவின் தந்தை திரு நாகராஜ் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
2. அதற்கு முன்பு வரை அவர் தன்னுடைய மகள் தவறு செய்துவிட்டாள் போனால் போகட்டும் என்றுதான் கூறியிருந்திருக்கிறார். தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அவருக்கு இல்லை
3. அன்று கூட தன் மகளை சமாதானம் செய்து அழைத்துவர அவருடைய அம்மா தான் அனுப்பப்பட்டிருக்கிறார். தந்தையான நாகராஜனை ஏன் அனுப்பவில்லை.
4. போனால் போகட்டும் விடுங்கள் என்று சொன்ன நாகராஜனை வன்னியர்கள் இன்னைக்கு உன்னோட பொண்ணுக்கு நாளைக்கு எங்களுக்கும் இது நடக்கும் என்று சொல்லியிருக்கின்றனர்.
5. தற்கொலை செய்துகொண்டிருப்பவர் தன் மகள் ஓடிப்போன அன்றே அந்த முடிவை எடுக்காதது ஏன்?
6. மகளை சமாதானம் செய்ய தந்தையையும் அனுப்பாதது ஏன்
7. ஒருவேளை இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு என்றே அவரை வன்னியர்கள் கொன்றிருக்கலாம் என்றே சந்தேகம் வலுக்கிறது.
8. தூக்கு மாட்டிக்கொண்டவரை கீழிறக்கி சாலைக்கு உடலைக் கொண்டுவரும் அந்த நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர்கள் அந்த இடத்தில் கூடியிருக்கின்றனர். அவர்கள் அங்ஙனம் வந்ததெப்படி?
9. வடக்கே சீராம்பட்டியில் பெரிய புளியமரம் ஒன்று மரம் அறுக்கும் எந்திரத்தால் அறுக்கப்படுகிறது. தெற்கே எஸ்.கொட்டாவூரில் ஒரு மரம் அறுக்கப்பட்டு சாலையின் குறுக்கே தள்ளப்படுகிறது. இருபுறமும் எந்த வாகனுமும் வர முடியாத சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது. மரம் அறுக்கும் எந்திரங்கள் குறிப்பிட்ட தூரங்களில் மறும் அறுப்பது சாலையை மறிப்பது என்பது உடனே நடந்ததா?
10. மரம் வெட்டித் தள்ளப்பட்ட பகுதியில் அமைந்துள்ள 3 தலித்
குடியிருப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.
11. திருமணம் செய்துகொண்டவர்களின் பகுதி நத்தம் காலனி, ஆனால்
அண்ணா நகர், கொண்டாம்பட்டி ஆகிய இடங்களில் தாக்குதல்
நடத்தப்படக் காரணம் என்ன?
12. தாக்குதல் நடத்தப்பட்ட எல்லா வீடுகளிலும் பெட்ரோல் குண்டுகள் மண்னென்ணை பயன்படுத்தப்பட்டிருக்கிறத. 250 வீடுகள். ஒரு வீட்டிற்கு ஒரு லிட்டர் என்று வைத்துக்கொண்டாலும் இவ்வளவு பெட்ரோல் மண்ணெண்ணெய் ஆகியவை நாகராஜன் தற்கொலைக்குப் பிறகு உடனடியாக எப்படி கிடைத்தன?
13. இத்தனை பாட்டில்கள், தடிகள் கடப்பாரைகள் சம்மட்டிகள் எப்படி சேகரிக்கப்பட்டன.
14. தாக்குதல் நடத்தப்பட்ட நான்கு மணி நேரம் வரை காவல்துறை தீயணைப்புத் துறை எதுவுமே வரவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
ஆனால் தலித் மக்கள் காவல் துறைக்கும் மற்றவர்களுக்கும் தகவல்களைச் சொல்லி இருக்கின்றனர்.
15. வெட்டிச் சாய்க்கப்பட்ட மரங்களைத் தாண்டி இருபுறமும் காவல்துறையால் வரமுடியவில்லை என்பதினை ஏற்க முடியாது
16. அப்படியே அவர்கள் வரவேண்டும் என்று நினைத்திருந்தால் தர்மபுரி புறவழிச்சாலை வழியாக அவர்கள் நத்தம் காலனிக்குள் வந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் ஏன் தாமதம் செய்தார்கள்
17. இந்தத் தாக்குதலுக்கு இளவரசன் திவ்யா காதல் மட்டுந்தான் காரணமாக இருந்திருக்குமா? தங்களை விட பொருளாதாரத்தில் உயர்ந்துவிட்ட தலித்துகள் தங்களிடம் கூலி அடிமைகளாக இல்லாமல் இப்படிப் பொருளாதார விடுதலை அடைந்திருக்கின்றனர் என்ற உளவியல்தான்.
18. தாக்குதல்களை தொடர்ந்து நாம் ஆய்வு செய்கிறபோது தாக்கப்பட்ட எல்லா வீடுகளும் ஒரேமாதிரியான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லா வீடுகளிலும் பீரோக்கள் உடைக்கப்பட்டு முக்கியமான விலைமதிப்புள்ள பொருட்கள் களவாடப்பட்டு அவர்களின் ஆவணங்கள் எல்லாம் தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது.
19. ஒன்பதாம் வகுப்பு மாணவி மற்றும் மாணவர்களின் கருத்துப்படி அவருடன் படிக்கின்ற மாணவர்கள் இந்த தாக்குதலுக்கு வந்திருக்கிறார்கள். அடித்திருக்கிறார்கள். எரித்திருக்கிறார்கள்
20. தாக்க வந்தவர்கள் இது முப்பதாண்டு பகை இந்த தீபாவளி எங்கள் தலை தீபாவளி என்று கொக்கரித்திருக்கின்றனர்.
21. தாக்குதல் நடத்தியவர்கள் பெரும்பாலும் தலித்துகளின் நண்பர்களாக இருந்த வன்னீயர்கள் தான்.

பரிந்துரைகள்

1. இந்தத் தாக்குதலுக்கு அடிப்படைக் காரணம் கடந்த ஏப்ரல் 1012 ல்
மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் மாநாட்டில் மருத்துவர் ராம்தாஸ் முன்னிலையில் காடுவெட்டி குரு பேசிய பேச்சு.நம் ஜாதி பெண்களை யாராவது காதல் திருமணம் செய்தல் அவர்களை வெட்டிவிட்டு வா நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியது. எனவே அவர்மீதும் அந்தநேரத்தில் மேடையில் இருந்த மருத்துவர் ராமதாஸ்மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்
2. கொங்குபகுதியில் இருக்கும் பெரும்பான்மையான ஆதிக்கசாதியான
கொங்கு வேளாள கவுண்டர்களும் இதே கருத்தை வலியுறுத்தி மாநாடுகள் நடத்துகின்றனர். பள்ளிகளிலும் இது பரப்புரை நடத்தப்படுகிறது. இது தடை செய்யப்பட வேண்டும். அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் தலித்
வீடுகளில் கொள்ளையிடப்பட்ட நகைகள், பணம், அழிக்கப்பட்ட சொத்துகள் ஆகியவற்றைத் திரும்பக் கொடுக்க வேண்டும்.
4. அந்தப்பகுதியில் இருக்கும் குழந்தைகள் படிப்பதற்கான அனைத்து பாதுகாப்புகளையும் செலவினங்களையும் அரசே ஏற்க வேண்டும்.
5. இழப்பீடு என்றில்லாமல் அங்கே இருக்கக் கூடிய தாக்குதலுக்கு உட்பட்ட அனைத்து மக்களுக்கும் 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்
6. சாதியை முன் வைத்து நடந்த இத் தாக்குதல்களில் ஈடுபட்ட அனைவருக்கும் சட்டபூர்வமான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்
7. பள்ளிகளில் ஜாதி ஒழிப்பிற்கானப் பரப்புதல்களைச் செய்ய வேண்டும்.
8. சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களைப் போற்றுதலுக்குரியவர்களாக அரசு அறிவித்து அவர்களுக்கு சிறப்பு ஊக்கங்களைத் தர வேண்டும்
9. எய்ட்ஸ்/குடும்பக் கட்டுப்பாடு விளம்பரங்களைப் போல தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், ஆதிக்க சாதிகள் வாழும் பகுதிகள் ஆகியவற்றில் ஜாதி ஒழிப்பிற்கானப் பிரச்சாரத்தை அரசே ஏற்க வேண்டும்.
10. இத்தகைய தாக்குதல்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் தலித் மக்கள் வாழ்வதற்குத் தேவையான உளவியல்பூர்வமான வழிகாட்டுதல்கல் சிறப்பு கடனுதவிகள் ஆகியவற்றைத் தந்து அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
11. தற்காலிக நிவாரணங்களை வழங்குவது மட்டுமே அரசின் கடமை என்ற நிலைமாறி நிரந்தரத் தீர்வுகளை நோக்கி அரசு முனைய வேண்டும்.
12. அதற்கு தலித் மக்கள் அமைப்பாகத் திரளுதல் ஆயுதங்கள் வைத்துக்கொள்வதற்கான உரிமைகள் ஆகியவற்றை அரசே ஏற்பாடு செய்ய வேண்டும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...